குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
அஷ்டாஷ்ட திரு உருவங்கள் (64)
ஓம்நமசிவய!
கணபதி என்வினை களைவாய் ஜயஜய
ஙப்போல் மழுவொன்றேந்தியோய் ஜயஜய
சங்கரன் மகனே சதுரா ஜயஜய
ஞய நம்பினர்பாலாடியே ஜயஜய
இடம்படு விக்கின விநாயகா ஜயஜய
தட்ச யக்ஞஹத மூர்த்தி!
பிரமன் மகன் தக்கன் கடுந்தவம் செய்து சிவனே தனக்கு மருமகனாக வர வேண்டும் எனவரம் பெற்றான். தனக்குப் பிறந்த மகளை தாட்சாயணி எனப் பெயரிட்டு வளர்த்து சிவனுக்கு மணமுடித்து தந்தான். சிவன் தனக்கு மருமகன் ஆகி விட்டபடியால் எல்லோரும் தனக்கு கட்டுப் பட்டவர்களாக இருப்பர் என எண்ணியிருந்தான். இதை அறிந்த சிவன் தட்சாயணியை அழைத்துக் கொண்டு கயிலை சென்றுவிட்டார். மாமனார் என்ற மரியாதை இல்லாமல் சிவன் நடந்து கொண்டதாக கருதி சிவனை இகழந்து பேசத் தொடங்கினான். தேவர்கள் அவனுக்கு அறிவுறை கூறி கயிலை சென்று சிவனை தரிசனம் செய்யச் சொன்னார்கள். அதை ஏற்று கயிலை சென்ற தக்கனை நந்தியெம்பெருமான், முன்பு சிவனை இகழ்ந்ததால் உள்ளே சொல்ல அனுமதி மறுத்துவிட்டார். சிவனைக் காணமல் திரும்பிய தக்கனுக்கு மிகுந்த ஆத்திரம் உண்டாக மீண்டும் சிவனை பழித்து பேச ஆரம்பித்தான்.
பிரமதேவன் யாகம் ஒன்று நடத்த சிவபெருமானை அழைக்க அவர் அந்த யாகத்தில் கலந்து கொள்ள நந்தி தேவரை அனுப்பிவைத்தார். யாகம் நடக்க ஆரம்பிக்கும்போது அங்கிருந்த தக்கன் நந்திதேவர் வருவதைப் பார்த்ததும் கோபம் கொண்டான். தந்தை பிரமன் சிவனை அழைக்க அவருக்குப் பதிலாக நந்தி தேவரை அனுப்பியது அறிந்து கோபவயப்பட்டவன், பிரமனை நோக்கி நீ என் தந்தையாக இருப்பதால் உன் தலையை வெட்டாமல் விடுகின்றேன். சிவன் அவிர் பாகம் பெற தகுதியற்றவன். திருமாலே அதற்கு உரியவர் என கூறியதைக் கேட்ட நந்திதேவர் சினம் கொண்டு, மூடா! ஈசனை நிந்திக்கின்றாய். என் இறைவனை இகழ்ந்த நின் தலையொழிக சிவநிந்தனை செய்த உன்னோடு சேர்ந்த தேவர்கள் தீயோன் சூரபன்மனால் துன்புறுக எனச் சாபமிட்டு வெளியேறினார். பயந்த பிரமன் யாகத்தை நிறுத்தி விட்டான்.
இதனைக் கண்ட தக்கன் தானே ஒரு யாகத்தை ஆரம்பித்தான். அனைத்து தேவர்களுக்கும் அழைப்பு அனுப்பி சிவனை மட்டும் அழையாமல் விட்டான். அறிவுரை கூறவந்த தாட்சாயணியையும் அவமதிக்க சிவன் தக்கன் வேள்வியை அழிக்க வீரபத்திரரை தோற்றுவித்தார். வீரபத்திரர் யாகத்தை அழித்து அங்கிருந்த தேவர்களையெல்லாம் தண்டித்தார். மனம் வருந்திய பிரம்மன் தங்களையும் தக்கனையும் மன்னிக்க வேண்ட குறை உடலோடு ஆட்டின் தலை பொருத்தப்பட்டு தக்கன் உயிர்ப்பிக்கப் பட்டான். உயிர்தெழுந்த தக்கன் பெருமானைப் பணிந்தான்.
வீரபத்திரர் மூன்று கண்கள், நான்கு கைகள், அக்னிச்சடை, கோரைப்பற்கள், மணி, கபாலம், தேள்மாலை, நாக பூனூல், குறுகிய கால்சட்டை, பாதுகையுடன் இருக்கும் இவர் முகம் சினத்துடன் இருக்கும் கைகளில் கட்கம், கேடயம், வில், அம்பு ஆகியன வத்திருப்பார். வீரபத்திரர் அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர், சப்த மாதர்களுடன் வீரபத்திரர் என மூன்று வடிவமுடையவர்.
தன்னைப் பகைத்த தக்கனது யாகத்தை சங்கரிக்க எழுந்தருளிய வடிவமே தக்கவேள்வி தகர்த்த கோலம் தட்ச யக்ஞஹத மூர்த்தி. நிகழ்வு நடந்த தலம்: திருப்பறியலூர். காட்சி: தென்காசி-விசுவநாதர், கோவை-பட்டீசுவரர், திருநெல்வேலி –கிருஷ்ணாபுரம், மதுரை, மயிலாப்பூர், அனுமந்தபுரம், திருவண்னாமலை, பெரும்பேறுகண்டிகை, திருக்கடவூர், செம்பியமங்கலம், கும்பகோணம்-மகாமக பெரியமடம், தாராசுரம் சிதம்பரம் ஆகிய தலங்கள்.
#####
ஓம்நமசிவய!
ஐயா கணபதி நம்பியே ஜயஜய
ஒற்றை மருப்புடை வித்தகா ஜயஜய
ஓங்கிய ஆனைக் கன்றே ஜயஜய
ஒளவிய மில்லா அருளே ஜயஜய
அக்கரவஸ்த்து ஆனவா ஜயஜய
அகோர அத்திர மூர்த்தி!
சிவன் அருளால் பலவரங்கள் மூலம் உயர்ந்த பேரினையடைந்த சத்ததந்து தான் அடைந்த சிறப்புக்கு சிவனே காரணம் என்பதை மறந்து தனக்கு ஒருவரும் நிகரில்லை என்ற ஆணவத்துடன் ஓர் வேள்வி நடத்த முற்பட்டான். அவ்வேள்விக்கு பிரமன் முதலிய தேவர்களை அழைத்து சிவனை அழைக்காமல் யாகத்தை ஆரம்பிக்க சொன்னான். அங்கிருந்த திருமால் சிவனை வணங்கி நற்பேறுகளைப் பெற்ற நீ அவரில்லாமல் யாகத்தை நடத்துவது சரியன்று என்றார். அங்கிருந்த பிரமன் உள்பட ஏனைய தேவர்களும் அவனுக்கு அக்கருத்தையே வலியுறுத்தின போதிலும் சத்ததந்து அதை ஏற்கவில்லை. கோபங்கொண்ட அவனை சமாதானப்படுத்த பிரம்மன் யாகத்தை வேறுவழியில்லாமல் தொடங்கினான்.
நாரதர் திருக்கயிலைச் சென்று மகதி யாழ் மூலம் சாம வேதத்தை மீட்டினார். பின்னர் சிவபெருமானிடம் சத்ததந்து யாகம் பற்றி கூற பெருமான் மண்டலத்தை தேராகவும், உலகைச் சக்கரமாகவும், அக்னியை வில்லாகவும், சந்திரனை நாணாகவும் அமைத்து குமரனை அத்தேரை ஓட்டப்பணித்து வீரபத்திரரிடம் அக்கொடியவனை அழித்துவர ஆணயிட்டர்.
வீரபத்திரன் அகோர வடிவமெடுத்து பூத சேனைகள் புடைசூழ முருகன் தேரோட்ட யாகசாலையை அடைந்து இந்திரன் நான்முகன் சூரியன் ஆகியோரைத் தண்டித்து வருண அத்திரத்தால் யாகத்தை அழித்தார். எதிர்த்து போர் செய்யவந்த சத்ததந்துவை அகோர அஸ்த்திரத்தை ஏவிக் கொன்றார். சத்ததந்துவின் மனைவி கயிலை சென்று மாங்கல்ய பிச்சை கேட்க சிவன் அனைவரையும் மன்னித்து அவரவர்தம் பதவியில் இருக்க அருள் செய்தார்.
சிவனை அழைக்காமல் யாகம் நடத்திய சத்ததந்துவை வீரபத்திரர் மூலம் அகோர அஸ்த்திரத்தை ஏவி கொன்ற வடிவம் அகோர அத்திர மூர்த்தி
#####
ஓம்நமசிவய!
ஈசன் தந்தருள் மகனே ஜயஜய
உன்னிய கருமம் முடிப்பாய் ஜயஜய
ஊர்த்துவ சக்தி உகந்தாய் ஜயஜய
எம்பெருமானே இறைவா ஜயஜய
ஏழுலகுந்தொழ நின்றாய் ஜயஜய
க்ஷேத்ரபாலக மூர்த்தி!
பிரபஞ்சத்தில் அண்ட சராசரங்களும் இறைவனின் ஆணைப்படியே இயங்குகின்றன. பல கோடி உயிர்களை நான்முகனாகிப் படைப்பதும், திருமாலாகிக் காப்பதும், உருத்திரனாகி அழிப்பதும், மகேசுவரனாகி மறைப்பதும், சதாசிவனாகி அருள்வதும் இறைவன் சிவபெருமானே. ஆக்கல், காத்தல் அழித்தல் மறைத்தல், அருளுதல் ஆகிய ஐந்தொழில்களையும் பலவடிவங்களெடுத்து இயங்குகின்றார்.
பிரபஞ்சத்தில் உலகம் என்பது நாம் வாழும் பூமி மட்டுமல்ல. அதைப் போன்ற பல்வேறு வகையான உலகங்கள் உழலுகின்றன.
நாவலந்தீவு, உவர்க்கடல் இரண்டும் தனித்தனியே இலட்சம் யோசனை விரிவாகவும்,
இறலித்தீ, கருப்பஞ்சாறு கடல் இரண்டும் தனித்தனியே இரண்டு இலட்சம் யோசனை விரிவாகவும்,
இலவுத்தீவு, மதுக்கடல் இரண்டும் தனித்தனியே நான்கு இலட்சம் யோசனை விரிவாகவும்,
நெய்க்கடல், குசைத்தீவு இரண்டும் தனித்தனியே எட்டு இலட்சம் யோசனை விரிவாகவும்,
கிரவுஞ்சத் தீவு, தயிர்க்கடல் இரண்டும் தனித்தனியே பதினாறு இலட்சம் யோசனை விரிவாகவும்,
சாகத்தீவும், பாற்கடலும் இரண்டும் தனித்தனியே முப்பத்திரண்டு இலட்சம் யோசனை விரிவாகவும்,
புட்கரத்தீவும், சுத்த நீர்க்கடலும் இரண்டும் தனித்தனியே அறுபத்தி நான்கு இலட்சம் யோசனை விரிவாகவும்,
பொன்மயமான போக பூமியும் பத்துக்கோடி யோசனை விரிவாகவும்,
சக்கரவாள மலை பதினாயிரம் கோடி யோசனை விரிவாகவும்,
பெரும்புறக் கடல் ஒரு கோடியே இருபத்தேழு இலட்சம் யோசனை விரிவாகவும்,
இருளுலகம் கோடி யோசனை விரிவாகவும் இருக்கும்
அதில் நாற்பத்தொன்பது இலட்சம் யோசனை விரிவும், ஒரு கோடி யோசனை கனமும் கொண்ட அண்டச் சுவர்களை உடையது நம்அண்டம்.
மேருமலையின் நடுவிலிருந்து அண்டச் சுவர் வரையில் ஐம்பது கோடி யோசனையாகக் கீழ்த்திசை எல்லை விரிவாகவும் மற்ற மூன்று திசைகளும் இதைப்போன்றே அளவிற்கு விரிவானது. அகலம், நீளம், உயரம் அகிய மூன்றும் தனித்தனியே நூறு கோடி யோசனை அளாவாக உள்ள அண்டத்தில் ஊழிக்காலத்தில் மலையைப் போல் அலைகள் தோன்ற உலகத்தை வெள்ளம் சூழ்ந்தது.
நெடுங்காலம் ஆயுள் கொண்ட எட்டு மகா நாகங்களும், நவக்கிரகங்களும், தேவர்களும், இந்திரன் முதல் எண்திசை தெய்வங்களும், கற்பக மரமும், சூரியன், சந்திரன், அக்கினி ஆகியவரும், ஊர்வன, நீரில் வாழ்வன, பறப்பன, நாற்கால் விலங்குகள், தாவரங்கள், மானுடர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி இருளில் மூழ்கியது.
எல்லாம் அழிவுறும் நிலையில் பிரணவமே தோணி வடிவாக நிற்க அதில் சிவனும் உமையும் இருக்க அறமொன்று தவிர மற்றனைத்தும் அழியும் என்ற தத்துவத்தின்படி வருணன் சிவனைப் பணிந்தான். உலகைச் சூழ்ந்த நீரை தன்நுதல் வழியாக விலக்கினார் சிவபெருமான். மீண்டும் திசைக் காவலர்களை நிறுவி அனைவரையும் படைத்து அவரவர் பதவியில் இறுத்தினார்.
ஊழிக்காலத்தில் உலகை காத்தருளிய மூர்த்தி. உலகத்திற்கு ஊழிக்காலத்தில் உற்ற துன்பத்தை நீக்கி அருளிய வடிவம் க்ஷேத்ரபாலக மூர்த்தி. க்ஷேத்திரம்-பூமி. பாலகர்- காப்பவர்.
#####
ஓம்நமசிவய!
சிந்தித்தவர்கருள் கணபதி ஜயஜய
சீரிய ஆனைக்கன்றே ஜயஜய
அன்புடை அமரர்கள் காப்பாய் ஜயஜய
ஆவித் துணையே கணபதி ஜயஜய
இண்டைச் சடைமுடி இறைவா ஜயஜய
வடுக மூர்த்தி!
துந்துபிவின் மகன் முண்டாசுரன் தன் இளமைப் பருவத்தில் மழை, பனி, நீரிலும், கோடையில் பஞ்சாக்கினி மத்தியிலும் நின்று ஐம்புலன்களை அடக்கி பசி, தாகம் தூக்கம் ஒழித்து பல காலம் தவம் செய்து சிவனின் காட்சி கண்டு எளியோனாகிய என்னையும் ஒரு பொருட்டாகக் கருதி காட்சி தந்த பெருமானே! தேவ அசுரர்களால் வெல்ல முடியாத வலிமையும் தங்களைத்தவிர வேறு எவராலும் என்னைக் கொல்லமுடியாத வரம் வேண்டும் எனக் கேட்டுப் பெற்றான்.
அசுரர்களை எல்லாம் வென்றவன் தேவர்களையும் வென்று அவர்களுடைய உடைமைகளை தனதாக்கிக் கொண்டான். .இந்திரனை வென்று ஐராவதம், அரம்பையர், சங்கநிதி, பதுமநிதி, காமதேனு, கற்பகத்தரு ஆகிய வளங்களைக் கைப்பற்ற இந்திரன் நான்முகனிடம் அடைக்கலம் புகுந்தான். என்னைவிட நான்முகன் வலியவனா என அங்கும் சென்று நான்முகனுடன் போர் தொடுத்தான். நீண்டநாள் ஆகியும் முண்டாசுரனை நான்முகனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மனம் வருந்திய நான்முகன் சிவனிடம் முறையிட்டான்.
சிவபெருமான் தன்னிடமிருந்து வடுக மூர்த்தியை தோற்றுவித்து முண்டாசூரனை ஒழித்து திசைமுகன் துயர் துடைத்து வா என்றனுப்பினார். வடுக மூர்த்தி முண்டாசூரனை கொன்றார். இந்திரனை பதவியில் அமர்த்தி திருக்கயிலை சென்று சிவபிரானிடம் நடந்தவற்றைக் கூறினார்.
ஆசையை வென்று வாழ அருள். முண்டாசுரனை அழித்து மலரோன்- நான்முகன் துயர் தீர்த்த வடிவம் வடுக மூர்த்தி.
#####
ஓம்நமசிவய!
விண்மழை தந்து களிப்பாய் போற்றி!
கண்ணிய நலமே காப்பாய்போற்றி!
ஞாலத் துயர்கள் தீர்ப்பாய் போற்றி!
கோல நல் வாழ்வே குறிப்பாய் போற்றி!
ஆற்றல் நல்ல வழி அருள்வாய் போற்றி!
போற்றி! போற்றி! உன் அடைக்கலம் போற்றி!
ஆபதோத்தாரண மூர்த்தி!
உலகத்து உயிர்களுக்கு ஏற்படும் துன்பங்களை அவ்வப்பொது எழுந்தருளிப் போக்க வல்ல சிவபெருமானைச் சுற்றிலும் தேவர்கள், சித்தர், அசுரர், தைத்தியர், கருடர், கிங்கரர், நிருதர், கிம்புருடர், காந்தருவர், இயக்கர், விஞ்ஞையர், பூதர், பைசாசர், அந்தரர், முனிவர், உரகர், ஆகாயவாசிகள், போக பூமியர் எனும் பதினெண் கணங்களும், நூல்களில் சொல்வதை உணர்ந்து இறைவனோடு ஒன்றி நிற்கின்ற பக்தி நிலைப் பரஞானர், அபர ஞானர்-பர ஞானத்திற்கு எதிர்ப்பு நிலையினர், யானை முகத்தான், .ஆறுபடை ஏந்திய தேவர் படைத்தலைவன் முருகன், அபிராமி, மகேசுவரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, காளி, மற்றும் சங்கு, சக்கரம், கதை, கட்கம், கோதண்டம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கிய திருமால், தாமரை இருக்கையில் இருந்து உயிர் ஆன்மாக்களை உருவாக்கும் பிரமதேவன், எண்ணிலா தெய்வப் பெண்டிர் குழாமும், சூரியன், சந்திரன், அங்கார்கன், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு, கேது ஆகிய கோள்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும், அகத்தியர், ஆங்கிரசர், கௌதமர், காசிபர், புலத்தியர், மார்க்கண்டேயர், வசிட்டர், ஆகிய முனிவர்களும் மற்றுமுள்ள முனி புங்கவர்களும் நாற்புறமும் கூடம் கூட்டமாக் கூடிப் பணிந்து துன்பம் நேர்ந்த காலத்தில் அருள் பெறக் கருதி தொழுத போதெல்லாம் உருவெடுத்து தக்க சமயத்தில் ஆபத்திலிருந்து விடிவிப்பார்.ஆபதோத்தாரண மூர்த்தி!
கர்ம காரணங்களால் துன்பங்கள் நேர்கின்றன. அதை மாற்ற முடியாது என ஆன்மாக்களை கொண்ட மனிதர்கள் எந்த முயற்சியும் செய்யாது சும்மா இருந்து விடுகின்றனர். இது சரியன்று. கர்ம வினைகளுக்குத் தகுந்தவாறு துன்பங்கள் நேர்ந்தாலும் எந்த வினைக்கு எந்த பலன் என்பதை அறியாத நாம் அதை அறிந்த சர்வேசுவரனிடம் இறைவா என்னைக் காப்பாற்று என உளம் உருகி வேண்டினால் நம் இடுக்கண்களை களைந்து ஆபத்திலிருந்து விடுவிப்பார். அவரது பலவகைத் திருவுருவங்களையும் இத்தன்மையானது என விவரிக்க முடியாது. முனிவர் முதலானோர் ஆபத்துக் காலத்தில் தம் துயர் கூறி யாசிக்க அவர்கள் துன்பத்தை தொலைத்து அருள எழுந்த வடிவமே ஆபதோத்தாரண மூர்த்தி. முனிவர்கள் இடர் களைந்த வடிவம்.
#####
ஓம்நமசிவய!
தழையும் நல் இன்பங்கள் தருவாய் போற்றி!
தனக்கு ஒப்பில்லாத தலைவா போற்றி!
எனக்கு அருள் தருவாய் இனியா போற்றி!
நூறு வயதும் தருவாய் போற்றி!
நவக்கிரக தோஷங்கள் நீக்குவாய் போற்றி!
பேறுகள் யாவும் தருவாய் போற்றி!
பைரவ மூர்த்தி!
கரிய மேகம் போன்ற பெரிய உடலும், சுருண்டு நெரிந்து செந்நிறம் வாய்ந்த தலை மயிரும், யானைத்துதிக்கை போன்ற கரங்களும், தீயைச் சொரியும் செவ்விய கண்களும் பிறைச் சந்திரன் போன்ற வக்கிர தந்தங்களும் கண்டோர் கண்கள் கூசத்தக்க காட்சியும் உள்ள அசுரன் அந்தகன் சிவபெருமானை வணங்கி பஞ்சாக்கினியில் பலகாலம் தவம் செய்து, அரி, அயன் முதலிய அமர்களால் ஆவிசோராமையும், அகற்றவொண்ணாத ஆற்றலும் வேண்டும் என வேண்டிப் பெற்றான்.
வரம் பெற்ற ஆணவத்தில் அந்தகாசுரன் தேவர்களுடன் போரிட்டு வென்று தேவர்கள் அனைவரும் பெண்களைப் போல் கண்களில் மையிட்டு சேலையுடுத்தி தொலை தூரத்தில் வசிக்கவும் ஆடவர் உருவில் யாரும் கண்ணில் தென்படக்கூடாது என ஆணையிட்டான். அப்போதும் அந்தகாசுரனின் துன்பங்கள் தொடர, தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். நீங்கள் அனைவரும் பெண் வேடத்துடனே பார்வதியின் கணங்களுடன் மந்தரமலையில் வசித்துவர ஆலோசனை கூரினார். இது தெரிய வந்த அந்தகாசுரன் படைகளுடன் வர தேவர்கள் அனைவரும் மந்தர மலையிலிருந்து கயிலை அடைந்தனர். அங்கும் அந்தகாசுரன் தொடர்ந்துவர பைரவக் கடவுளைத் தோற்றுவித்து அந்தகாசுரனை அழிக்கும் வழிமுறையை தெரிவித்து அனுப்பினார் சிவபெருமான். கடுமையான போர் நடந்து அந்தகாசுரன் படைகள் தோற்று ஓடியது. ஆயுதங்கள் அனைத்தும் நாசமாயின.
அசுரர்களின் குரு வெள்ளியாகிய சுக்கிரன் அமுத சஞ்சீவினி மந்திரத்தை உச்சரித்து அந்தகாசுரனின் படையில் இறந்தவர்களை உயிர் எழுப்ப மீண்டும் போர் நடக்க தகவல் அறிந்த சிவபெருமான் சுக்கிரனை விழுங்கிவிட்டார். அப்போது பைரவர் அசுரனின் படைகளை அடியோடு அழித்தார். அந்தகாசுரனின் தலையை தன் முத்தலை வேலின்ல் குத்தி மேலே தூக்கியெடுத்து சிவபெருமானின் சன்னதி அடைந்தார். அந்தகாசுரனைன் அகந்தை நீங்க அவன் விரும்பியபடி அவனை பூதகணங்களுக்குத் தலைவனாக்கினார். பின் ஒரு காலத்தில் சுக்கிரன் சுக்கிலத்துடன் வெளிவந்து சுக்கிரன் என்ற பெயருடன் இருந்தான்.
ஆலயங்களில் வடகிழக்கு மூலையில் திருமேனி வடிவத்தை ஆடையின்றி நாய் வாகனத்துடன் உக்கிர பார்வையுடன் நின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் டமருகம், பாசம், சூலம், கபாலம் கைகளில் கொண்டு காணலாம். இவரே ஊரினையும் திருக்கோவிலையும் பாதுகாப்பவர். பைரவ மூர்த்தங்கள் 64 என ஆகமங்கள் கூறினாலும் அவற்றில் சிறப்பானவை எட்டுத் திருமேனிகள். அவை அசிதாங்கன், குரு, சண்டன், உன்மத்தன், கபாலன், பீஷணன், குரோதன், சம்மாரன் ஆகியன.
அஷ்டபைரவர்கள் அநேக வீரச்செயல்களை உலக நன்மைக்காகச் செய்தாலும் அதனால் பல உயிர்கள் துன்புற்றதால் அவர்களுக்கும் பாவங்கள் உண்டாயின. அது நீங்கும் பொருட்டு அவர்கள் காஞ்சி, காசி தலங்களில் லிங்கம் அமைத்து வழிபட அவ்விடங்கள் அஷ்ட பைரவேச்சரங்கள் என அழைக்கப்பட்டது. ஆசையை வென்று வாழ அருள் செய்வார்.
சூரியனாலயத்தில் உள்ள பைரவர் மார்த்தாண்ட பைரவர், முருகன் ஆலயத்தில் உள்ள பைரவர் குமார பைரவர், விநாயகர் ஆலய பைரவர் பிரமோத பைரவர், திருமால் தலங்களில் முகுந்த பைரவர் என்று அழைக்கப்படுவர். பைரவர் திகம்பராகத் திகழ்ந்தாலும் பொன்னையும் பொருளையும் அள்ளித் தருபவர் என்பதால் பண்டைக் காலத்தில் பொக்கிஷ சாலைகளில் பைரவரை நிறுவி சுவர்ணாகர்ஷ்ண பைரவர் என்று சிறப்பு பூசைகள் செய்தனர்.
இரணியாட்சன் மகன் அந்தகாசுரனை சங்கரித்து தேவர் துன்பம் அகற்ற எழுந்தருளிய பைரவ மூர்த்தம். காட்சி: காஞ்சி வைரவேச்சுவரம், அழிபடைதாங்கி (காஞ்சி), பிரான்மலை, வடுகன்பட்டி, திருப்பத்தூர், இராமேசுவரம். திருவொற்றியூர், வயிரவன்பட்டி, இலுப்பைக்குடி, நெடுமரம், காரையூர், திருமெய்ஞானபுரம், பெருச்சிக்கோவில், அழகாபுரி, வடுகூர், அம்பர், அம்பர்மாகாளம், காவேரிப்பாக்கம், சிதம்பரம், சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் வலம்புரி மண்டபத்தில் எட்டு பைரவர்கள் வழிபாடு. காசியில் அனுமன்காட்டில் குரு, துர்கா மந்திரில் சண்டன், விருத்த காளேசுவரர் ஆலயத்தில் அசிதாங்கன், பட்பைரவர் கோவிலில் கபாலன், காமாச்சாவில் வடுக (குரோதன்), தேவரா கிராமத்தில் உன்மத்தன், திரிலோன கஞ்ச்-ல் சம்மாரன், காசிபுராவில் பீஷணன் என எட்டு பைரவர் வழிபாடு. மெகபூப்நகர் (ஆந்திரா), ராமகிரி (நாகலாபுரம்-ஆந்திரா), சீதப்பெட்டா (கர்நாடகம்),
#####
ஓம்நமசிவய!
தடையிலாது என் செயல் முடிப்பாய் போற்றி!
எம்மை தஞ்சமாய் ஏற்பாய் போற்றி!
எம்பால் அன்பே இனிதருள் போற்றி!
ஏழை எமக்கு அருள் ஈவாய் போற்றி!
எய்ப்பினில் வைப்பாய் இருப்பாய் போற்றி!
விழையும் நலங்கள் தருவாய் போற்றி!
இலகுளேசுவர மூர்த்தி!
அண்டவிரிவு தத்துவம்
திரிசரேணு எட்டு கொண்டது இலீகை
இலீகை எட்டு கொண்டது யூகை
யூகை எட்டு கொண்டது யவை
யவை எட்டு கொண்டது மாநாங்குலம்
மாநாங்குலம் இருபத்திநான்கு கொண்டது முழம்
முழம் நான்கு கொண்டது வில்
வில் இரண்டு கொண்டது தண்டம்
தண்டம் இரண்டாயிரம் கொண்டது குரோசம்
குரோசம் இரண்டு கொண்டது கெவியூதி
கெவியூதி இரண்டு கொண்டது யோசனை
யோசனை நூறு கோடி கொண்டது பிருதிவி .தத்துவத்திலுள்ள ஓர் விரிவு. உயரமும் அதே அளவு.
இந்த பிரிதிவி தத்துவத்தில் 1000 கோடி அண்டங்கள் உண்டு. இதைக் கடந்த அப்பு தத்துவம் பன்மடங்கு விரிவும் உயர்ச்சியும் ஏற்றமும் உடையது. அப்பு தத்துவத்தைப் பற்ற தேயு முதல் பிரகிருதி வரை அண்டங்கள் பதின்மடங்கு விரிவும் உயர்ச்சியும் மிகுந்திருக்கும்.
பிரகிருதியைப் பற்ற இராகம் நூறுபாகம் விரிவும் உயர்ச்சியும் ஏற்றமும் கொண்டிருக்கும்.
இராகத்தைப் பற்ற வித்யா தத்துவம் நூறு மடங்கு விரிவும் உயர்ச்சியும் கொண்டிருக்கும்.
வித்யாதத்துவ வித்தையைப் பற்ற நியதி தத்துவம் நூறு மடங்கு விரிவும் உயர்ச்சியும் ஏற்றமும் கொண்டிருக்கும்.
நியதி தத்துவத்தைப் பற்ற காலத் தத்துவம் நூறு மடங்கு விரிவும் உயர்ச்சியும் கொண்டிருக்கும்.
காலத் தத்துவத்தைப் பற்ற கலா தத்துவம் 101 பதினாயிரம் விரிவும் உயர்ச்சியும் பெற்றிருக்கும்
கலா தத்துவத்தைப் பற்ற மாயை தத்துவம் கோடி விரிவும் உயர்ச்சியும் பெற்றிருக்கும்
மாயை தத்துவத்தைப் பற்ற சுத்தவித்தை தத்துவம் கோடியே பதினாயிரம் விரிவும் உயர்ச்சியும் பெற்றிருக்கும்
சுத்தவித்தை தத்துவத்தைப் பற்ற ஈச்சுரம் தத்துவம் இரண்டு இலட்சம் பாகங்கள் விரிவும் உயர்ச்சியும் பெற்றிருக்கும்
ஈச்சுரம் தத்துவத்தைப் பற்ற சாதாக்கியம் தத்துவம் மூன்று இலட்சம் பாகங்கள் விரிவும் உயர்ச்சியும் பெற்றிருக்கும்
நம் கண்ணுக்குத் தெரியாத எண்ணெற்ற அண்டங்கள் நம்மைச் சுற்றி இருக்கின்றன. இந்த அண்ட விரிவில் பிருதிவி தத்துவமாகிய நிவர்த்திக் கலையின் ஒரு தட்டில் தேங்காய் பரப்பியதுபோல் ஆயிரங்கோடி அண்டங்கள் இருக்கும்.
இந்த 108 புவனங்களுள் முதல் இரண்டு புவனங்கள் பிரம்மாண்டத்தின் மேல் இருக்கும். அடுத்த 10 புவனங்கள் புவியின்மேல் உயர இருக்கும். அடுத்த 10 புவனங்கள் புவியின் கீழ் இருக்கும். அடுத்த 10 புவனங்கள் புவியின் ஈசானத்தின்மேல் இருக்கும். அடுத்த 10 புவனங்கள் புவியின் வடக்கிலும், அடுத்த 10 புவனங்கள் புவியின் வாயு மூலையிலும் அடுத்த 10 புவனங்கள் புவியின் மேற்கிலும், அடுத்த 10 புவனங்கள் புவியின் நிருதி திக்கிலும், அடுத்த 10 புவனங்கள் புவியின் தெற்கிலும், அடுத்த 10 புவனங்கள் புவியின் அக்னி திக்கிலும், அடுத்த 10 புவனங்கள் புவியின் கிழக்கிலும் இருக்கும் இந்த பத்து திசைகளிலும் உள்ள நூறு புவனத்தில் நூறு உருத்திரர்களும், அவர்கள் புவனத்திற்கு மேல் காலாக்கினி உருத்திரர் புவனங்கள் ஆறும். அவற்றின்மேல் இரண்டுமாக நிவர்த்திக் கலையில் நூற்றெட்டு புவனங்கள் உண்டு.
இதன்மேல் பிரதிஷ்டா கலையில் பிரகிருதியினும் குணதத்துவத்தினும் இருக்கும் எட்டு புவனங்களுக்கும், புத்தி தத்துவத்திலிருக்கும் எட்டு புவனங்களுக்கும், அகங்கார தத்துவத்தில் இருக்கும் எட்டுப் புவனங்களுக்கும், மனதத்துவத்திலிருக்கும் புவனத்திற்கும், ஞானேந்திரியத்திலிருக்கும் புவனத்திற்கும் கன்மேந்திரியத்திலிருக்கும் புவனத்திற்கும், பூததன்மாத்திரையிலிருக்கும் எட்டு புவனங்களுக்கும் ஆகாய தத்துவத்திலிருக்கும் எட்டு புவனங்களுக்கும், வாயு தத்துவத்திலிருக்கும் எட்டு புவனங்களுக்கும், தேஜஸ் தத்துவத்திலிருக்கும் எட்டு புவனங்களுக்கும், இடையில் அப்பு தத்துவத்தில் பாரபூத டிண்டி முண்டி ஆஷாட புஷ்கர நைமிச பிரபாச அமரேசுவர புவனங்களின் மத்தகத்தில் இலகுளேசுவர புவனம் ஒளிமயமுற்றதாய் பிரகாசித்துக் கொண்டிருக்கும்.
இத்தகைய பெருமைமிகு சிவன் ஒவ்வொரு புவனத்திற்கும் ஒவ்வொரு மூர்த்தியாய் எழுந்தருளி அங்குள்ள உயிரினங்களுக்கு தக்கபடி திருவருள் புரிகின்றார். புவனங்கள் தோறும் எழுந்தருளும் வடிவம் இலகுளேசுவர மூர்த்தம்..
#####
ஓம்நமசிவய!
தாதை வலத்தால் அருள் கைக் கனியோய் போற்றி!
அன்பர் தமக்கான நிலைப் பொருளே போற்றி!
ஐந்துகரத்தனை முகப்பெருமாள் போற்றி!
நம்பியாண்டார்க்கு அருள் நலமே போற்றி!
கற்பகமே என் கருத்தே போற்றி!
கடைகண் அருள் நீ தருவாய் போற்றி!
வீணாதட்சிணாமூர்த்தி!
சிவபெருமான் தட்சிணாமூர்த்தியாய் எழுந்தருளியிருக்கும்போது யாழிசையில் வல்லவர்களாகிய தும்புரு, நாரதர், சுகர் ஆகியோர் திருக்கயிலைச் சென்று நந்தியம்பெருமானின் அனுமதி பெற்றுச் சிவனை வணங்கினர். சிவனின் பெருமைதனைக் கூறும் சாமவேதத்தை வீணையில் இயைந்து வாசிக்கவும், பாடவும், இன்னிசை ஞானத்தின் உண்மைகளை தங்களுக்குத் தெளிவுபெற விளக்கிட வேண்டினர்.
வில்லில் இழுத்துக் கட்டப்பட்ட நானினைச் சுண்டி கூட்டிக் குணத்தொனி எழுப்ப அதிலிருந்து தோன்றிய இசை இனிமையாக இருந்தது. பின் பெரிது சிறிதுமான விற்களை நானேற்றி மீட்ட பலவகையான இன்னோசைகள் உண்டாயின. படிப்படியாக வில்லை மாற்றம் செய்து யாழாக்கி இசை பொழிந்தான். யாழ் முதிர்ந்து வீணை வடிவம் பெற்றது. இசைக்குப் பிறப்பிடமாகிய யாழ் பேரியாழ் (21நரம்புகள்), மகரயாழ் (பத்தொன்பது நரம்புகள்), சகோடயாழ் (பதினான்கு நரம்புகள்), செங்கோட்டியாழ் (ஏழு நரம்புகள்) என நான்கு வகைப் படும். யாழின் உறுப்பாகிய 1.கோட்டுக்கு கருங்காலியும் கொன்றையும், 2.பத்தர்க்கு குமிழ், தணக்கு, முருக்கு ஆகியன சிறந்த மரங்கள். நீர்நிலை அருகில் இருக்கும் மரத்தில் மந்த சுரமும், மேட்டுப்பாங்கான பாலையில் இருந்த மரத்தில் மேல் ஸ்தாயில் ஏறிய சுரத்தையும், மருதம், குறிஞ்சி ஆகிய இடங்களில் உள்ள மரங்கள் நல்ல இனிய நாதத்தை வழங்கும். யாழ் நரம்புகள் தூய்மையுடையனவாக மயிர் தொகுதிகள் இல்லாதனவாக இருத்தலே நன்று.
தட்சிணாமூர்த்தியின் கரத்தில் உள்ளது வீணையாகும். நாரதரின் வீணை மகந்தி எனப்படும். கலைமகள் வீணை கச்சபீ எனப்படும். இவ்வீணைகளில் ஏழிசையை கூட்டி எழுப்புவதே பண்ணிசையாகும். எழிசை என்பது குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன. இவற்றின் இசை சங்கு, குயில், யாணை, மயில், புரவி, அன்னம், காடை முதலியன எழுப்பும் ஓசைக்கு இனையானதாக இருக்கும். இவற்றிற்குரிய தெய்வங்கள் பிரமன், ஆதிரையான், பாரத்துவாசன், முருகன், அங்காரகன், பாற்கரன், காசிபன் ஆகியோர்.
இவ்வாறு தோன்றும் இசையை பண்ணில் அமைத்து யாழிலும் வீணையிலும் இசைத்தால் கல்லும் உருகும். எனவே ஏழிசை இறைவனோடு இசைவிப்பதற்கு உரியது. இறைவன் இசைமயமானவன். கயிலைநாதர் உணர்த்தியருளிய பண்ணிசைகளின் இலக்கணத்தின்படி நாரதர், தும்புரு, சுகர் முதலான முனிவர்கள் வீணாகானத்தினால் சாமவேதம் பாடி மகிழ்ந்தனர்.
வீணையை வைத்துக் கொள்வதற்கேற்ப வீணையின் தலை பகுதியை இடது கையினால் பற்றி, இடக்கரத்தை உயர்த்தி கீழ்ப் பகுதியை வலது கையில் பற்றி வலக்கரத்தை தாழ்த்தி வைத்திருப்பார். வீணையின் ஒலி எழுப்பும் பகுதியை வலது தொடையின் மீது வைத்து பின் வலக்கரம் வீணையை மீட்ட, முகம் சந்தர்ஷ்ண முத்திரையுடைய கரத்தை நோக்கியிருக்க பல்வேறு விலங்குகள், பிராணிகள், சித்தர், வித்தியாதரர், கின்னரர், பூதங்கள் பலரும் சூழ்ந்திருக்க ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருப்பர். இடக்கால் உக்குடிகாசன அமைப்பும் வலக்கால் தொங்கியும் அதனடியில் முயலகன் படுத்திருக்க இருப்பர். வீணாதட்சிணாமூர்த்தி!
வீணையேந்திய தென்முகக் கடவுள். காட்சி: திருமறைக்காடு, நாகலாபுரம், மேலப் பெரும்பள்ளம், ஓரத்தநாடு, காஞ்சி கயிலாசநாதர், நஞ்சன்கூடு (கர்நாடகம்) சீரங்கப் பட்டிணம் (கர்நாடகா) ஆகிய கோவில்கள்.
#####
ஓம்நமசிவய!
காப்பாய் மூலப்பொருளே போற்றி!
பிறர்க்கெலாம் புகலிடம் ஆளாய் போற்றி!
புகல்தனக்கு இல்லா பொருளே போற்றி!
வித்தைகள் பிறக்கும் இடமே போற்றி!
விக்கின சமர்த்த விநாயகர் போற்றி!
தம்பி தனக்காக வனத்தணைந்தாய் போற்றி!
யோகதட்சினாமூர்த்தி!
சிவபெருமான் பிரம புத்திரர்கள் சனகன், சனந்தனன், சனாதனன், சனத்குமாரன் ஆகிய நான்கு முனிபுங்கவர்களுக்கும் மெய்ப் பொருளைச் சொல்லாமல் சொல்லி சின்முத்திரையால் விளக்க சிவஞானபோதத்தை உணர்ந்து இன்புற்று புலனடக்கமும், மன அமைதியும் பெற்று மேலும் சிவபோதம் வேண்டுமென்று பெருமானிடம் கேட்டு ஒரே நிலையில் மனம் நிற்பதற்குரிய யோகமார்க்கத்தை போதிக்க வேண்டினர்.
ஆன்மாவாகிய அரசன் வாழ்ந்து வரும் தூல உடல் ஐம்பூதங்களாலாகிய ஒரு தேரில் மனம் என்ற குதிரையால் கட்டப்பட்டுள்ளது. குதிரையின் கடிவாளத்தை அறியாமை எனும் சாரதியிடம் கொடுத்தால் அவன் அத்தேரையும் அதில் அமர்ந்திருக்கும் ஆன்மா என்ற அரசனையும் ஐம்புலன்களாகிய ஆழ்ந்த குழிகளில் தள்ளி துன்பத்தில் ஆழ்த்திவிடுவான். அறிவு எனும் நல்ல சாரதியிடம் கொடுத்தால் தேர் இனிமையாக மேடு பள்ளங்களில் துயர்ப்படாமலும் அமைதியாக செல்வதால் மன அரசன் இன்புறுவான்.
மனத்தை தீய வழிகளில் செலுத்தாமல் நல்ல வழியில் செலுத்தினால் ஆன்மா பேரின்பப் பெருவாழ்வில் திளைத்து மகிழும். அதற்கு யோக வழி சிறந்தது. சிறந்த பயிற்சியினால் மட்டுமே அது சாத்தியம். உலக நடப்புகளில் ஈடுபடத் துடிக்கும் மனத்தை வலிய இழுத்து தனக்கு விருப்பமுடைய ஒரு பொருளில் நிலையாக நிறுத்துவது யோகம். பயிற்சி முதிர்ச்சியடைந்தால் அது மேன்மையடையும். யோகம் இமயம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை தியானம், சாமதி என எட்டு வகைப்படும். இவை எல்லாவற்றையும் பயில குருவின் ஆசியும் ஆலோசனையும் அவசியம் தேவை.
இயமம்- ஐம்பொறிகளையும், மனத்தையும் கொல்லாமை, உண்மை, கள்ளாமை, காமம், இன்மை, பொறுமை, உறுதியுடைமை, தயை, நேர்மை, அளவறிந்து உண்ணல், தூய்மை ஆகிய பத்தையும் கடைபிடித்து தீய வழிகளில் செல்லவிடாமல் நல்ல வழியில் செலுத்துவதாகும்.
நியமம்- இயமத்தால் ஏற்படும் நற்செயல்கலைச் செய்து கொண்டு தவம், மகிழ்ச்சி, இறை நம்பிக்கை, தானம், சிவபூசை, சித்தாந்த சிரவணம் (குருவிடமிருந்து சமய கருத்துக்களைக் கேட்டுச் சிந்திப்பது). வெட்கம், நற்புத்தி, ஜபம், விரதம் ஆகியவற்றிற்கு கட்டுப்படுதல் நியமம் எனப்படும். .
ஆசனம்- இறைவனைத் தியானிக்க உடல் அசையாமலும் வளையாமலும் இருக்க உடலைக் கட்டுப் படுத்திக் கொண்டு வீற்றிருப்பது 108 வகையாக இருந்தாலும் மிகச் சிறந்தது சுகாசனம், வீராசனம், பத்மாசனம், வீரபத்மாசனம், சிம்மாசனம், குக்குடாசனம், மயூராசனம், சுவஸ்திகம் ஆகிய 8 ஆசனங்கள்.
பிராணாயாமம்- உடலுக்கு இயன்ற ஆசனத்தை அமைத்துக் கொண்டு முறைப்படி சுவாசத்தின் இயற்கையான போக்குவரத்துகளை தடுத்து அடக்குவது பிராணாயாமம். அது ரேசக, பூரக, கும்பகம் எனப்படும்.
பிரத்தியாகாரம்- மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகளின் செயல்களான சுவை, ஒளி, ஊறு. ஓசை. நாற்றம் ஆகியவற்றில் செல்லும் அறிவை அவ்வாறு செல்லவொட்டாமல் தடுத்து திருப்பி மனத்திடம் சேர்த்து முன்பு அடக்கப்பட்ட பிராணவாயுவையும் அசையாமல் இருக்கும்படி பயிற்சி செய்தல் பிரத்தியாகாரம்..
தாரணை- மனத்தின் எண்ணங்களை விலக்கி அதனை உடம்பில் சக்தி வடிவமாக விளங்குகின்ற ஏழு சக்கரங்களில் நிலைப் பெறச்செய்து அவற்றில் இறைவடிவத்தை தோன்றச் செய்து ஆனந்த மடைதல் தாரணை.
தியானம்- புலன்களை வெளியே செல்ல விடாமல் மனத்துடன் சேர்த்து அந்த மனத்தினால் இதய தாமரையில் வீற்றிருக்கும் இறைவடிவத்தை சிந்திப்பது தியானம்.
சமாதி- புறப்பொருள்களின் மேலுள்ள ஆசைகளை ஒடுக்கி இறைவன் மேல் அன்பைச் செலுத்தி சுழுமுனை நாடிவழி சென்று கும்பகம் செய்து சிவத்துடன் இரண்டறக் கலத்தலே சமாதி. இது கைகூடினால் பிறப்புமில்லை. இறப்புமில்லை.
இந்த உலகிலுள்ள இயங்கியற் பொருள், நிலையியற் பொருள் ஆகிய எல்லாவற்றிலும் எல்லா புவனங்களிலும் வியாபித்திருக்கும் இறைவனை உணர்ந்து யோக சாதனங்களைப் புரிந்து அவற்றால் அறிவானந்தமாக விளங்குவீர்கள் என அருள்புரிந்தார். சனகாதி முனிவர்களுக்கு புரியும்படியாக யோக முறையைக் கற்பிக்கத் தானே யோகநிலை காட்டிய திருவுருவமே யோகதட்சிணாமூர்த்தி தவநிலைக் கடவுள்.
முதல்வகையாக சுவஸ்திகாசன அமைப்பில் இரு காலகளும். முன்இடக்கை மடிமீது யோக அமைப்பில். முன் வலக்கை மார்புக்கருகில் யோக முத்திரையுடன். பின் வலக்கை உருத்திராக்கமாலையுடன், பின் இடக்கையில் தாமரையுடன் அவரது பார்வை மூக்கின் நுனியில் பதிந்திருக்கும். முனிவர்கள் சுற்றி அமர்ந்திருப்பர்.
இரண்டாம்வகை- இடக்காலை வளைத்து உத்குடிகாசனத்தில், உடலையும் இடக்காலையும் யோக பட்டம் மூடியிருக்கும். வலக்கால் கீழே தொங்கியிருக்கும். இடக்காலின் வளைந்த முழங்கால்மீது முன் இடக்கரத்தை நீட்டி அமர்ந்திருப்பர்.
மூன்றாம்வகை- இரு கால்களும் வளைந்து குறுக்கே செங்குத்தாக அதனைச் சுற்றி யோகப் பட்டம். இரு கைகளையும் நீட்டி முழங்கால்கள் மீது வைதிருப்பார். பின் வலக்கரத்தில் உத்திராக்க மாலையும், பின் இடக்கரத்தில் கமண்டலமும் இருக்கும். சடைகள் சடாமண்டலமாக பிறை, நாகத்துடன் அமைந்திருக்கும்.
காட்சி: தக்கோலம் (அரக்கோணம்-வட்டம்), யோகதட்சிணாமூர்த்தி (மயிலாடுதுறை), ஹேமாவதி (ஆந்திரா), எலிமியன் கோட்டூர், மயூரநாதசுவாமி (மயிலாடுதுறை), எறும்பூர் (சேத்தியா தோப்பு)
#####
சரப மூர்த்தி- சிம்மக்ன மூர்த்தி / நரசிம்ம சம்ஹாரர்!
Written by குருஸ்ரீ பகோராஓம்நமசிவய!
அருள்வழி காட்டி ஆட்கொள் போற்றி!
தத்துவ நிலையைத் தருவாய் போற்றி!
வித்தக விநாயக விரை கழல் போற்றி!
பால்நிலா மருப்புக் கரத்தானே போற்றி!
பாசாங்குசப் படை தாங்குவாய் போற்றி!
கரிசினேற் இரண்டு கரத்தனே போற்றி!
சரப மூர்த்தி- சிம்மக்ன மூர்த்தி / நரசிம்ம சம்ஹாரர்!
இரணயகசிபு என்ற அசுரன் சிவபிரானை நோக்கித் தவமிருந்து, சுரர்கள், நரர்கள், யட்சகர்கள், தேவர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் மற்றும் பஞ்ச பூதங்களாலும் பகலிலும், இரவிலும், வானத்திலும், பூமியிலும், வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் எவ்வித ஆயுதங்களாலும் மரணமடையாத வரம் வேண்டிப்பெற்றான்.
இப்படி வரம் பெற்றதனால் செருக்குற்று தன்னைத் தவிர யாரையும் தெய்வமாக வணங்கக் கூடாது என்று மக்களை துன்புறுத்தினான். மறுத்த தன் மகன் பிரகலாதனை பலவாறாக துன்புறுத்தலானான். அவற்றில் தோல்விகண்டதால் அவன் வணங்கும் கடவுளைத் தனக்கு காட்ட கேட்க பிரகலாதன் அங்கிருந்த தூண் ஒன்றைக் காட்டி தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்றான். சினம் கொண்ட இரணியகசிபு கதையால் தூணைத்தட்ட அத்தூணிலிருந்து கூரிய நகங்களுடன் அழல் உமிழும் விழிகளுடன் மனித விலங்காய் நரசிம்மர் வெளிவந்தார்.
இரவும் பகலும் அல்லாத அந்திப் பொழுதில் வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் இல்லாமல் வீட்டு வாயிற்படியில் வானமும் பூமியும் அல்லாத மடிமீது இருத்தி மனிதர்களும் விலங்குகளும், பறவைகளும் அல்லாத மனித மிருகவடிவில் எந்த விதமான ஆயுதங்களின்றி தன் கூரிய நகங்களால் இரணியகசிபுவின் வயிற்றைக் கிழித்து அவைனைக் கொன்றார். அதன் பின்னரும் அந்த உக்கிரம் தனியாமல் இருக்க உயிர்களுக்கு துன்பமானது.
இதை நான்முகன் சிவபிரானுக்குச் சொல்ல அவர் பல்வேரு வழிகளை கடைப் பிடித்தும் நரசிம்மரின் ஆவேசம் அடங்காததால் பறவை, விலங்கு, மனிதன் ஆகிய மூன்றின் கலவையாக சர்வ வல்லமை பொருந்திய சரபப்பறவை உருவம் கொண்டு நரசிம்மரை அடக்கினார்.
திருமேனி பொன் நிறமுடைய பறவை, மேல் நோக்கிய இரு இறக்கைகள், சிவந்த இரு கண்கள், எட்டு கால்கள், விலங்கினுடைய வால், மனித உடல், சிம்மத்தின் தலை, மகுடத்துடன் பத்து தந்தங்களையும், மடியில் நரசிம்மத்தின் உடலைத் தாங்கி காண்போருக்கு அச்சம் விளைவிக்கும் தோற்றத்தில் காட்சி. ஸ்ரீசரபரின் மூன்று கண்கள் சூரியன், சந்திரன், அக்னி. நாக்கு பாதவலை, இறக்கை காளி மற்றும் துர்க்கை, நகங்கள் இந்திரன், வயிறு காலாக்கினி, தொடை காலன் மிருத்யு, இதயத்தில் பைரவரும், தலையில் கங்கை, தொடையில் நரசிம்மரை கிடத்தியவாறு காட்சி.
தீ, நில நடுக்கம், மண்மாரி, இடி, புயல், மின்னல், ஆகிய சீற்றங்கள் பேராபத்துக்கள் நீங்கவும், பரிகாரம் செய்ய முடியாத துன்பம், மருத்துவர்களால் குணப்படுத்த முடியா நோய் நீங்கவும், பைத்தியம், விஷபயம், பூத –பிரேத- பைசாச உபாதைகள் நீங்கவும் ஸ்ரீ சரபரை வழிபடுதல் சிறப்பு.
மாயையும் தீவினைகள் நீங்கச் செய்பவர். இரண்யகசிபை கொன்ற நரசிம்மரின் ஆவேசம் அடங்க சர்வ வல்லமை பொருந்திய சரபப்பறவை வடிவம்-சரப மூர்த்தி- சிம்மக்ன மூர்த்தி / நரசிம்ம சம்ஹாரர்!. காட்சி: துக்காச்சி (குடந்தை) தாராசுரம், திருபுவனம், மாடம்பாக்கம் (சென்னை), பூவிருந்தவல்லி- வைத்திய நாதசுவாமி. சோழிங்கநல்லூர், சிதம்பரம், கபாலீசுவரர் (சென்னை), திருவண்னாமலை, மதுரை, குமரன்குன்றம் (சென்னை) சேலையூர்- கந்தாஸ்ரமம். ஆகிய கோவில்கள்.
#####
More...
ஓம்நமசிவய!
எண் முகமாம் இனிதருள் போற்றி!
இருத்தி முத்தி இனிதருள் போற்றி!
என்னை அறிவித்து எனக்கருள் போற்றி!
முன்னை வினையின் முதல்களைப் போற்றி!
அருள்தரும் ஆனந்தத்துள் அழுத்துக போற்றி!
அல்லல் களையும் அரசே போற்றி!
பாசுபத மூர்த்தி!
பாண்டு புத்திரர்களான பஞ்ச பாண்டவர் தரப்பிற்கும் திருதராட்டிரர் மக்கள் தரப்பிற்கும் நடந்த பாரதப் போரின் 13ம் நாள் போர்க்களத்தில் சக்ரவியுகம் என்ற ஒருவித படைவகுப்பு முறையை துரோணாச்சாரியார் தலைமையில் வகுக்கப்பட்டது. அதை உடைத்து உள்ளே போகவும் திரும்பி வரவதற்கான வழிமுறைகளையும் கற்றவன் அர்ச்சுனன். வஞ்சகமாக அர்ச்சுனனை திசை திருப்பியிருந்தான் துரியோதனன். பாண்டவர்களால் அந்த படை வியூகத்தை உடைக்க முடியவில்லை. தருமன் அர்ச்சுனன் மகன் அபிமன்யுவை அழைத்து அதை உடைக்க ஆலோசிக்க அவன் என்னால் அந்த வியூகத்தை உடைக்க முடியும் ஆனால் அதிலிருந்து மீண்டு வர இயலாது என உரைத்தான். தருமன் நீ உடைத்த வழி செல்கையில் நாங்களும் உன்னுடன் வந்து விடுவோம் என்றார்.
அபிமன்யு அந்த வியூகத்தை உடைத்து உள்ளே சென்றதும் துரியோதனன் திட்டப்படி திருதராட்டிரரின் மருமகன் ஜயத்ரதன் அந்த பாதையை மிக விரைவாக பாண்டவர்கள் உள்ளே புக முடியாமல் அடைத்து விட்டான். இதை சிறிதும் எதிர்பார்க்காத பாண்டவர்கள் அபிமன்யு மட்டும் எதிர்களிடம் மாட்டிக் கொண்டதைக் கண்டு செய்வது அறியாமல் தவித்தனர். கர்ணன், துரோணர், அசுவத்தாமன் அனைவரும் ஒன்று சேர்ந்து அபிமன்யுவை கொன்றனர். அபிமன்யு கொல்லப்பட்டதற்கு மூல காரணம் ஜெயத்ரதன் என்பதை உணர்ந்த அர்ச்சுனன் தன் மகன் இறப்பிற்கு காரணமாயிருந்த ஜெயத்ரதனை நாளை சூரிய அத்துமனத்திற்குள் கொல்வேன் எனச் சபதமிட்டான்.
ஜயத்ரதனை அழிக்க பாசுபத அத்திரம் பெற வேண்டும் என அர்ச்சுனனை அழைத்துக் கொண்டு கயிலை அடைந்தார் கண்ணபிரான். இதை அறிந்த ஜயத்ரதன் போரிலிருந்து விலகி தன் நாட்டிற்குப் போவதாக தெரிவிக்க துரியோதனன் எவரும் அணுக முடியாத இடத்தில் உன்னை பாதுகாப்பேன் என்றும் உன்னைச் சுற்றி துரோணர், கர்ணன், அசுவத்தாமன், நான் எல்லோரும் இருப்போம். உன்னை கொல்ல முடியாமல் அர்ச்சுனன் தீயில் விழுவான். பாண்டவர்கள் நாளையே தோற்று விடுவர். நீ இருந்து இதைக்காண வேண்டும் என்றான். எனினும் பயத்துடன் துரோணரிடம் சென்றவன் என்னை கொல்லும் ஆற்றல் அர்ச்சுனனுக்கு இருக்கின்றதா எனக் கேட்டான். உன்னை விடச் சிறந்த வில்லாளன் அர்ச்சுனன். இருப்பினும் உன் பாது காப்பிற்கு நாங்கள் அனைவரும் இருக்கின்றோம் கவலைப்படாதே என்றார்.
நந்தி தேவரின் அனுமதியுடன் சிவனைச் இரவில் சந்தித்த கண்ணனும் அர்ச்சுனனும், அபிமன்யு கொல்லப்பட்ட விதம் சொல்லி ஜயத்ரதனை அழிக்க பாசுபதம் தந்தருள வேண்டி நிற்க திருஉள்ளம் கொண்ட சிவன் பாசுபதத்தினை வரவழைத்து அர்ச்சுனனிடம் கொடுத்து அதை உபயோகிக்கும் மந்திரமுறை பற்றியும் அர்ச்சுனனுக்கு உபதேசித்தார்.
மறுநாள் போரில் ஜயத்ரதனை அடைய கடுமையாக போர் புரிந்த அர்ச்சுனன் மாலை நெருங்கியும் ஜயத்ரதனை காணமுடியவில்லை. துரியோதனால் ஒளித்து வைக்கப்பட்ட ஜயத்ரதனை வெளிக்கொணர கண்ணன் தன் சக்ராயுதத்தால் ஆதவனை மறைக்க சூரியன் மறைந்து விட்டது எனக்கருதி ஜயத்ரதன் வெளிவர சிவனின் பாசுபதக் கணையால் ஜயத்ரதனைக் கொன்று தன் சபதத்தை அர்ச்சுனன் நிறைவேற்றினான். அவசரத் தேவைக்காக அர்ச்சுனன் கண்ணபிரானுடன் கயிலை சென்று பெற்ற பாசுபதம் இது. அர்சுனன் காட்டிலே தவமிருந்து வேடுவன் உருவில் வந்த சிவனுடன் மோதி பெற்ற பாசுபதம் வேறு.
கண்ணபிரானும் அர்சுனனும் வணங்கி நிற்க சிவபெருமான் அர்ச்சுனனுக்கு பாசுபதக் கணையை அளித்த வடிவம். பாசுபத மூர்த்தி. காட்சி: கொள்ளம்புதூர் (குடவாசல் அருகில்).
#####
ஓம்நமசிவய!
தெவிட்டாத ஞானத்தெளி அருள் போற்றி!
இன்புறு கருணையின் இனிதருள் போற்றி!
இருவினை தம்மை அறுப்பாய் போற்றி!
இருள் கடிந்தென்னை ஏந்துக போற்றி!
நலம் ஒரு நான்கும் தந்தருள் போற்றி!
மலம் ஒரு மூன்றின் மயக்கறு போற்றி!
சார்த்தூலஹர மூர்த்தி!
தவத்தில் சிறந்த தருகாவன முனிவர்கள் தவமே எல்லாவற்றிலும் சிறந்தது என்ற ஆணவத்தால் சிவத்தை மறந்தனர். அவரின் மனைவியர் கற்பில் சிறந்து விளங்கினாலும் கற்பே சிறந்தது என்று அவர்களும் சிவனை மறந்தனர். ஊழ்வினை காரணமாக இவ்வாறு மறந்த அவர்களின் கருத்தை மாற்ற இறைவன் திருவுளம் கொண்டு திருமாலை மோகினி உருவமெடுத்துவரச் செய்து பெருமான் அழகிற் சிறந்த ஆணுருக் கொண்டார். நிருவாண உருவுடன் சூலம், பிச்சைப் பாத்திரம், ஆகியவற்றுடன் மோகினி உடன்வர தாருகாவனம் அடைந்தார்.
மோகினியின் அழகைக் கண்ட தாருகாவன முனிவர்கள் மனவலிமை குன்றி அவள் பின் சென்றனர். சிவனின் நிருவாண வடிவம் கண்ட முனிவர்களின் மனைவியர் கற்பினை இழந்தனர். அவர்மீது ஆசைக்கொண்டு அவர்பின் சென்றனர். உண்மையறிந்த முனிவர்கள் அபிசார வேள்வி நடத்தி அதில் தோன்றிய புலி, மழு, மான் கன்று ஆகியவற்றை ஏவினர். புலியைக் கொன்று ஆடையாக அணிந்தார். புலி மாண்டு போனதைக் கண்ட முனிவர்கள் யானை, மான், பாம்புகள், விலங்குகள், பூதங்கள், மழு முதலியவற்றை ஏவ சிவன் விலங்குகளைக் கொன்றார், மழுவை படைக்கலமாக மாற்றினார், பூதங்களை சிவபூதகணங்களாக மாற்றினார், முயலகன் சிவனின் காலடியில் தள்ளப்பட இவற்றையெல்லாம் கண்ட முனிவர்கள் நிலை தடுமாற அவர்கள்பால் இரக்கம் கொண்டு அவர்களுக்கு ஞானத்தை அளித்து அவர்கள் உள்ளத்தில் உள்ள மாசினை அகற்றினார். மயக்கம் தெளிந்த முனிவர்கள் இறைவனை வணங்கினர்.
புலியைக் கொன்று அதன் தோலை உரித்து அணிந்த வடிவமே- சார்த்துலஹரமூர்த்தி
#####
ஓம்நமசிவய!
பொருந்தவே வந்தேன் உளம்புகு போற்றி!
குருவடிவாகி ஆட்கொள் போற்றி!
திருவடி வைத்தே அருள்வாய் போற்றி!
வாடா வகைதான் வழங்குக போற்றி!
கோடயுதத்தால் வினைதீர் போற்றி!
உவட்டா உபதேசம் புகட்டுக போற்றி!
ஜ்வரபக்ன மூர்த்தி-சுரகண்டீசர்!
வாணாசுரன் மாபலிச் சக்கரவர்த்தியின் மகன் சிறந்த சிவபக்தன். சிவனை நோக்கித் தவமிருந்து அக்னிமதிலும், உலகம் முழுமையும் ஆட்சிபுரியும் ஆற்றலும், அழியாமையும், தங்களின் அடித் தாமரையில் அன்பும் வேண்டும் என்று வேண்டி பெற்றான். வரம் பெற்று மிகுந்த வலிமையுடையோனாய் இருந்தவன் மீண்டும் சிவனை நோக்கித்தவமிருந்து விநாயகர், முருகன், அன்னை அம்பிகை மூவருடன் சிவபெருமான் தன்னுடைய மாளிகையில் எழுந்தருளி வீற்றிருக்க வரம் பெற்றான். எல்லோரும் தன் இல்லத்தில் இருந்ததால் வலிமை பெற்று அனைவரையும் போரில் வென்று இனி போரிட யாருமில்லை என்ற நிலையில் சிவபெருமானைப் பார்த்து என்னுடன் தாங்கள் போர் புரிய வேண்டும் என வேண்டுகோள் விடுக்க சிவன் கண்ணன் துவாரகையிலிருந்து வந்து உன் தோள் தினவைத் தீர்ப்பான் என்றார். கண்ணன் என்னிடம் பலமுறை தோற்றவன் எனக்கூற இப்போது அவர் முன்னைவிட பலசாலியாக இருக்கின்றார் என்றார் சிவன்.
வாணாசூரனின் மகள் உசை கண்ணபிரானனின் மகன் அநிருத்தன் தன்னோடு கலந்ததாக கனவு கண்டு கருவுற்றாள். தன் மகளின் நிறைவான நிலையை அழிந்தது கண்ட வாணாசுரன் அநிருத்தனைச் சிறையிலிட கண்ணபிரான் அநிருத்தனை மீட்க படையுடன் வந்தார். முதல் வாயிலில் விநாயகரும் இரண்டாம் வாயிலில் முருகனும், மூன்றாம் வாயிலில் உமாதேவியரும் காட்சியளிக்க அனைவரையும் பணிந்து வணங்கிய கண்ணபிரான் அடுத்த வாயிலில் சிவனைக் கண்டு பணிந்து வணங்க சிவனின் குடும்பமே இங்கு இருக்கும்போது எப்படி போரிட்டு வெல்வது என்ற திகைப்பில் இருந்த கண்ணபிரானிடம் சிவன் எங்களை வெல்லாமல் வாணாசூரனை வெல்ல முடியாது என்றார். இருப்பினும் அவனிடம் நீ வருவதை முன்பே சொல்லியனுப்பிவிட்டேன். நீ விளையாட்டாய் என்னுடன் போர் புரிக என்றார் சிவபெருமான்.
சிவனுக்கும் திருமாலுக்கும் போர் தொடங்கியது. ஓர் நிலையில் திருமால் ஐயனே என் சக்தி எல்லாம் திரட்டி போர் செய்து விட்டேன் இனி என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்றார். கண்ணன் வெற்றி பெற வேண்டும் என நினைத்த சிவபெருமான் வாணாசூரன் என்னை வணங்கிய இரு கரங்களைத் தவிர மற்றவைகளை வெட்டிச் சாய்திடுக என அறிவுரை கூறி போரிலிருந்து விலகினார். அவ்வாறே கண்ணன் வாணாசூரனிடம் போர் புரிந்து அவனது இரு கரங்களைத் தவிர மற்ற கரங்களை வெட்டி வீழ்த்தினார். வாணாசூரனின் ஆணவம் அடங்கியது. என்ன வாணாசுர உன் போர் வெறியின் தினவு நீங்கியதா எனச் சிவன் கேட்டார். தன் தவறைப் பொறுத்தருளுமாறு வேண்டினான் வாணாசூரன். அவனுடைய கைகள் மீண்டும் பெற அருள் புரிந்து அநிருத்தனை விடுவித்து அவனுக்கும் வாணாசுரனின் மகள் உசைக்கும் திருமணம் நட்த்தினார் பெருமான்.
சிவபெருமானுக்கும் கண்ணபிரானுக்கும் இடையில் போர் நட்ந்தபோது கண்ணன் சிவனுக்கெதிராக குளிர் சுரத்தை ஏவினார். அதை அழிக்க சிவன் வெம்மைச் சுரத்தை ஏவினார். வெம்மைச்சுர மூர்த்திக்கு 3 தலைகள், 3 கைகள், 9 விழிகள், 3 கால்கள் இருக்கும். இடது காலைத்தூக்கி நடன கோலத்தில் இருப்பார். மற்ற இரு கால்கள் நிலத்தில் இருக்கும். இடப்பக்கம் இரண்டு கைகள் ஒன்று வீசிய கை. மற்றொரு கையில் படைக்கலம். வலக்கை காக்கும் கை. 3 தலைகளுக்கு மேல் தீச்சுடர். கால்களுக்கு கீழே ஸ்ரீ சக்கரம்.
குளிர் சுரத்தை நீக்க வெம்மை சுரத்தை ஏவிய சுரம் நீக்கும் பரமன் வடிவம்-ஜ்வரபக்ன மூர்த்தி-சுரகண்டீசர்!. காட்சி: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி; சாட்டியாங்குடி (திருவாரூர் அருகில்), பவானி சங்கமேஸ்வரர். திருவில்லி புத்தூர் வைத்திய நாத சுவாமி.
#####
ஓம்நமசிவய!
செயப்படு பொருளும் நீயே போற்றி!
சொந்தாமரைப் பூம்பாதம் போற்றி!
அற்புதக் கற்பகக் களிறே போற்றி!
முப்பழம் நுகரும் அப்பனே போற்றி!
இப்பொழுது என்னை ஆட்கொள் போற்றி!
தாயாய் எனக்கும் எழுந்தருள் போற்றி!
கங்காவிசர்ச்சனர்!
அயோத்தி மன்னன் சகரன் அசுவமேதயாகம் செய்ய அதனால் தன் பதவிக்கு ஆபத்து வரும் என அஞ்சிய இந்திரன் அசுவமேதக் குதிரையை கபில முனிவர் தவம் செய்யும் பாதாளக் குகையில் கட்டிப் போட்டான். சகரனின் மக்கள் அறுபதினாயிரம் பேர் தன் தந்தையின் கட்டளைப்படி குதிரையைத் தேடி இறுதியில் பாதாள லோகத்தில் கண்டு பிடித்து அச்செயலுக்கு காரணம் கபிலமுனி எனத் தவறாக நினைத்து அவரை துன்புறுத்த கபில முனி அனைவரையும் எரித்து சாமபலாக்கினார். தன் புதல்வர்கள் இறந்ததை அறிந்த சகரன் மிகவும் வருந்தினாலும் யாகத்தை முடிக்க தன் பேரன் அஞ்சுமானை கபில முனியிடம் அனுப்பி யாகம் நிறைவடைய உதவுமாறு பணிந்து கேட்க யாகம் நல்லபடியாக முடிந்தது.
இந்த மன்னன் மரபில் தோன்றிய பகீரதன் மூதாதையர் முனிவர் சாபத்தால் சாம்பலாகி நரகத்தில் உழல்வது அறிந்து அவர்களை நற்கதி அடைய நான்முகனை நோக்கி கோகர்ணத்தில் தவமிருந்தான். வானுலகிலிருந்து ஆகாய கங்கையை பூமிக்கு கொண்டுவந்தால் நரகத்தில் இருக்கும் உன் முன்னோர்கள் நற்கதி அடைவர் என பிரம்மன் கூறினார். உடன் ஆகாய கங்கையை நோக்கி பகீரதன் தவமிருக்க தோன்றிய கங்கை தன் பாரத்தையும் வேகத்தையும் பூமி தாங்காது. அதை தாங்கக் கூடியவர் சிவபெருமான். அவர் மனம் வைத்தால்தான் நீ நினைத்த செயல் கைகூடும் என்றாள்.
பகீரதன் சிவனை நோக்கி கடும் தவம் மேற்கொண்டான். சிவன் திருவுள்ளம் கொண்டு வேகம் கொண்ட கங்கையைத் தன்சடை முடியில் தாங்கிக் அதன் ஒரு பகுதியை பூமியின் மீது விடுவித்தார். பகீரதன் வழிகாட்ட கங்கை பூமியில் பாயத் தொடங்கினாள். வழியில் ஜானவி முனிவர் ஆசிரமத்தை கங்கை மூழ்கடிக்க முனிவர் கங்கையை அள்ளிக் குடித்து கங்கையை தன்னுள் சிறைப்படுத்தினார். இதைக் கண்ட பகீரதன் கலங்கி தன் நிலைப் பற்றி முனிவரிடம் எடுத்துச் சொல்லி அதற்கு உதவ வேண்டுகோள் விடுக்க ஜானவி முனிவர் கங்கையை விடுவித்தார். பின் கங்கையை பகீரதன் பாதாள உலகத்திற்கு அழைத்துச் சென்று கபிலமுனிவரின் ஆசியுடன் மூதாதையரின் எலும்பு மற்றும் சாம்பலை கங்கை நீரில் நனைத்து புனிதப்படுத்தி சகர புத்திரகள் அனைவரும் செர்க்கம் செல்ல வழி வகுத்தான்.
இது பகீரதப் பிரயத்தினம் என வழங்கப்பட்டது. பகீரதனால் கொண்டு வரப்பட்ட கங்கை பாகீரதி எனப் பெயர் பெற்றது. ஆகாய கங்கையை செஞ்சடையில் தாங்கி அதனைப் பூமியில் விடுவித்த கோலம் கங்கா விசர்ச்சன மூர்த்தி வடிவம். சடை, கொன்றை, கூவிளமாலை, மதியம் சூடி கங்கையை ஏற்று அருள் குறிப்புடன் விளங்கும் வடிவம். காட்சி, மயிலாடுதுறை, திருக்கடவூர், திருப்பனந்தாள், திருமீயச்சூர் ஆகிய ஆலய தேவகோட்டத்தில். கேதாரம். வைத்திச்சுவரன் கோவில்.
#####
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.