ஓம்நமசிவய!
களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க் குதவும் - அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்!
#*#*#*#*#
53.சகுனங்கள்!
சகுனங்கள் இறைவன் ஆத்மாக்களுக்கு காட்டும் முன்னறிவிப்புகளாகும். பறவைகள் தென்படும் நேரம், திசை, இடம், சத்தம், ஓசையின் இயல்பு, பறவையினம் ஆகியன கொண்டு சகுனங்கள் தெரிந்து கொள்ளலாம்.
நல்ல சகுனங்கள்-
ஆணின் வலது கண், தோள் துடிப்பதும், பெண்ணுக்கு இடது கண், தோள் துடிப்பதும் நல்லது நடக்கப்போகிறது என்பதன் முன்னறிவிப்பாகும்.
வீட்டை விட்டு வெளியில் முக்கியமான காரியத்திற்கு செல்லும்போது கறுப்பு நிறமில்லதா தானியங்கள், பஞ்சு, வைக்கோல், சாணம், நாணயங்கள் பார்த்துச் செல்லல் நல்ல சகுனம். எதிரில் திருமணமான சுமங்கலிகள், பசு, பால்விற்பவர்கள் இவர்களைப் பார்த்தால் நல்லது.
வெளியில் புறப்படும்போது எதிரிலோ, இடது புறத்திலோ மயில் வந்தால் நல்ல சகுனம் வெற்றி நிச்சயம்.
வெளியில் புறப்படும்போது காக்கையின் குரல் இடது புறம் கேட்டால் நன்மை.
காக்கை சேற்றில் மண்ணை கிளறுவது, அசுத்தங்களைக் கொத்திக் கொண்டுவந்து அருகில் போடுவது நன்மை பயக்கும் சகுனங்கள்.
ஒரு வீட்டின் முன் காக்கை அமர்ந்து கரைந்தாலோ அல்லது நடை பயின்றாலோ அது விருந்தாளிகள் வருவதைக் குறிக்கும் சகுனம்.
சிவப்பு அல்லது மஞ்சள் நிறப் பொருளை காக்கை கொண்டுவந்து வீட்டின் முன் போட்டால் அது பணம் அல்லது பொருள் வரவுக்கான சகுனம்.
இரவு நேரத்தில் வீட்டின் எருமை உறுமினால் நன்மை.
கறவைப் பசுவும், எருமையும் தன் முன்னங்கால் குளம்புகளால் பூமியைத் தோண்டுவதும் கொம்புகளில் மண் ஒட்டிக் கொண்டிருத்தலும் நன்மை பயக்கும்.
குதிரை உடலைச் சிலிர்த்து தலையை உதறி உக்கிரமாகப் பார்த்தல் நன்மை.
வெளியில் புறப்படுபவர்கள் எதிரே வரும் அல்லது பார்க்கும் வெண்ணிற மலர்கள், நீர்க் குடங்கள், வயோதிகர்கள், ஆடு, பசு, காளைமாடு, கன்றுடன் கூடிய பசு, சவம், சந்தனம், தானியம், பொரி, எள், சலவைத் துணி, மாமிசம், நெய், குதிரை, யானை, தீப்பந்தம், பசும்புல், பணிவான உறவுகள், தங்கம், வெள்ளி, ரத்தினங்கள், பழங்கள், தயிர், கண்ணாடி, பால், கரும்பு சங்குசப்தம், கருடன் சத்தம் கேட்டாலும், காடை, காக்கை இடமாக பறந்தாலும், ஆகியவற்றை காண்பது நல்ல சகுனம்.
ஒருவன் தூங்கி எழுந்ததும் தாமரைப்பூ தீபம், தணல், தன்னுடைய உள்ளங்கை, மனைவி, மிருதங்கம், கருங்குரங்கு, கண்ணாடி, சூரியன், கோபுரம், சிவலிங்கம், சந்தனம், கடல், வயல், மலை ஆகியன பார்ப்பது மிகமிக நன்மை பயக்கும்.
தீய சகுனங்கள்- அப சகுணங்கள்
ஆணுக்கு இடது கண், தோள் துடிப்பதும், பெண்ணுக்கு வலது கண், தோள் துடிப்பதும் என மாறினால் அது கெட்ட சகுனமாகும்.
வெளியில் செல்வோரை எங்கே போகிறாய் என்று கேட்கக்கூடாது. அபசகுனம்.
மருந்து கடைக்காரன், மருந்து வாங்கி வருபவன், கசாப்புக் கடைக்காரன் எதிரில் வருவது அபசகுனம்.
ஆடை நழுவுதல், குடை விழுதல், கால் தடுக்குதல், தடுமாறுதல், இழுத்துக் கொள்ளுதல் ஆகியன எதோ பிரச்சனை நிகழப்போகிறது என்பதை முன்னரே அறிவிப்பவை.
பறவைகள் இயல்பிற்கு மாறாக இயங்குவது தவறான சகுனமாகும். இரவில் கத்தும் ஆந்தை பகலில் கத்துவதும் பகலில் கத்தும் காக்கை இரவில் கரைவதும் தீய சகுனங்கள்.
வெளியில் புறப்படும்போது மயில் அகவல் குரல் கேட்டால் உடமைகள் களவு போகும் என்பது சகுனமாகும். காக்கையின் குரல் வலது புறம் கேட்டால் அது தீமை. தவளை கண்டபடி கத்தினால் தீமை. மான் வந்து குதித்து விட்டுச் சென்றால் மரணம் வருவதைக் குறிப்பதாகும்.
அண்டங்காக்கை ஒருவரது நிழலையோ அல்லது அவரது துணியையோ கொத்தினால் அது அபசகுனம். தீமைகள் ஏற்படும். கவனமுடன் இருக்க வேண்டும்.
மான், கிளி, நாய், மூஞ்சுறு, ஆகியன வலமிருந்து இடம் போனால் அபசகுனம்.
நரி, குரங்கு, மாடு, எறுமை ஆகியன இடமிருந்து வலம் போனால் அபசகுனம்.
நாய் ஊளையிடுவது அபசகுனம்.
வெளியில் செல்லும்போது வளர்ப்பு நாய் இடது கையையோ, வலது பக்கத்தையோ முகர்ந்து பார்த்தல் அபசகுனம். எதிரில் விறகு வண்டி ஒற்றை பிராமணன் வந்தால் சகுனம் சரியில்லை.
வளர்க்கும் பசு அபயகரமாக அலறினால் அது கெடுதல்.
குதிரை நீரில் மூழ்கினாலோ, கால் தடுக்கி விழுந்தாலோ, கண்களில் நீர் வடிய எஜமானின் காலை நக்கினாலோ அபசகுனம்.
யானை மதம் கொண்டு ஓடுதல் அரசுக்கு அபசகுனம்.
பாம்பு, பன்றி, முயல், எண்ணெய்த்தலை, அவிழ்ந்த தலை, சதா திரிபவன், ஈரத்துணி, அரளி/கனகாம்பரம் போன்ற சிவந்த புஷ்பங்கள், உப்பு, இடருதல், துணியவிழ்தல், அழுகை, கலகம், தும்மல், தடைவார்த்தை கேட்டல் ஆகிய சகுணங்கள் கண்டால் காரியம் ஜயம் உண்டாகாது.
ஆபரணங்கள்-சகுணம்!
ரத்தினங்கள், முத்து, நீலம், வைடூர்யம், இந்திர நீலம், சந்திரகாந்தக் கல், சூர்ய காந்தக் கல், ஸ்படிகம், புஷ்பராகம், ராஜபட்டம், ராஜமயம், ஜோதிராம் ஆகிய ரத்தின வகைகள் அணிந்தால் செழிப்பான வாழ்க்கை அமையும். அவை நல்ல நீரோட்டத்துடன் உட்புறம் ஒளி வீசுவதாகவும், குற்ற மற்றதாகவும், நன்கு பதிக்கப்பட்டிருத்தலும் வேண்டும். பிளவு பட்டிருத்தலோ, ஒளி மங்கியதாகவோ, சொர சொரப்பான தன்மை உடையதாகவோ இருக்கக்கூடாது.
கந்தகம், முத்துச் சிப்பி, கோமேதகம், ருத்திராட்சம், பவளம், மாணிக்கம் ஆகியவற்றை தங்கத்தில் பதித்து அணிந்தால் வெற்றிகள் கிட்டும்.
மரகதக் கல் கிளியைப் போன்ற நிறத்துடன் குளிர்ச்சியானதாக இருக்க வேண்டும். பத்ம ராகம் பிரகாசமானதாயும் முத்துக்கள் உருண்டையாயும் வெண்மை நிறத்துடனும் இருந்தால் மிக விசேஷம்.
#*#*#*#*#