குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
குறை காண்பது!
Written by குருஸ்ரீ பகோராவடகலைப் பிரிவினர் ஆங்கில 'யு'வடிவத்தில் திருநாமம் இட்டிருப்பார்கள். தென்கலைப் பிரிவினர் அதன்கீழே ஒரு கோடு இழுத்து திருநாமம் இட்டிருப்பார்கள். வடகலைப் பெரியவர் ஒருவர் இரண்டு பிரிவுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் உடம்பின் வலது பக்கம் வடகலை நாமத்தையும், இடது பக்கம் தென் கலை நமத்தையும் இட்டுக் கொண்டார். எதிரில் வந்த தென் கலைப்பிரிவினர் குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கில் 'உன் வடகலை நாமத்தை மட்டும் வலது பக்கம் ஜம்மென்று போட்டுக் கொண்டாய், எங்களுக்கு இடப்பக்கம்தானே கொடுத்திருக்கின்றாய்' என்றனர். அதிர்ச்சியடைந்த பெரியவர் 'நண்பர்களே! நான் உங்கள் தென்கலை நாமத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வலது கையால் இட்டுக்கொண்டேன்! எங்கள் வடகலை நாமத்தை இடது கையால் இட்டுக் கொண்டேன்! புரிந்து கொள்ளுங்கள். எதற்கும் எப்படியும் குறை கண்டு துவேஷத்தை வளர்க்கும் மனப்பான்மை கொள்ளாதீர் என்றார். நீங்களும் அந்த குணம் அற்றவர்தானே!
உருவ வழிபாடு!
Written by குருஸ்ரீ பகோராஒரு மன்னர் இந்து மதத்தில் பக்தி கொண்டிருந்தார். ஆணால் அவருக்கு உருவ வழிபாட்டில் நம்பிகையில்லை. ஒரு சமயம் பக்திமான் ஒருவர் மன்னரின் அரன்மணையில் தங்க வேண்டியிருந்தது. அவரிடம் விக்ரக ஆராதனையை கண்டித்து பேசினார் அரசர். பொருமையாக கேட்டார் பக்திமான். மறுநாள் பக்திமானை பார்க்க வந்த ராஜவிசுவாசிகளிடம் என் மீது அன்பு வைத்திருக்கின்றீர்கள், எனக்காக எதுவும் செய்வீர்களா என்றுகேட்டு அவர்களிடம், என் மீது காறி எச்சிலை உமிழுங்கள் என்றார். அவர்கள் நீங்கள் அரசரின் மரியாதைக்கும் எங்கள் மரியாதைக்கும் உரியவர், நாங்கள் அவ்வாறு செய்ய முடியாது என்றனர். அவ்வாறு எனில் மனித உருவத்தை மதிக்கின்றீர்கள் மகிழ்ச்சி, உருவற்ற காகிதத்தில் துப்புவீர்களா எனக் கேட்டார். சரி என்ற அவர்களிடம் மன்னரின் படம் உள்ள ஒரு பேப்பரில் உமிழச்சொல்ல அவர்கள் திகைத்தனர். அதில் அரசர் உருவம் உள்ளது அதை அவமதிப்பதாகும் என்றனர். இதுகூடத் தெரியாமல் எப்படி கூறுகின்றீர்கள் என்றார்கள். அழியும் பேப்பரில் உள்ள உருவத்திற்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை பற்றி உங்கள் மன்னரிடம் கூறுங்கள் என்றார். இச்செய்தி கேட்ட மன்னர் அன்று முதல் உருவ வழிபாட்டை மனதார ஏற்றுக்கொண்டார்.
தன்னம்பிக்கை!
Written by குருஸ்ரீ பகோராமூன்று சீடர்கள் குருவிடம் உபதேசம் பெற்று காட்டு வழியாக ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். வழியில் புலி ஒன்று இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. நாம் குருவிடம் கற்றதெல்லாம் யாருக்கும் உபயோகப்படாமல் போய்விடும். அந்தபுலி நம்மை கொன்று தின்னப் போகிறது என்று திகைத்து நின்றான் ஒருவன். நாம் தரையில் படுத்துக் கண்ணை மூடியபடி கடவுளை நினைப்போம். அவர் காப்பாற்றுவார் என இரண்டாவது சீடன் படுத்துக் கொண்டான். மூன்றாவது சீடன் புலி நம்மிடம் வருவதற்குள் ஏதாவது முயற்சி செய்து நம்மை காப்பாற்றிக் கொள்ளப் பார்ப்போம், முடியாத பட்சத்தில் கடவுளிடம் வேண்டுவோம் என அருகில் இருந்த மரத்தில் எற எல்லோரையும் கூப்பிட அவர்கள் வராததால் தான் மட்டும் மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டான். தன்னம்பிகை யில்லாதவனையும், மூடநம்பிக்கை வைத்தவனையும் புலி அடித்துக் கொன்றது. கடவுள் நம்பிக்கையுடன் தன் முயற்சியில் நம்பிக்கை வைத்த பக்தன் தப்பித்தான்.
இருக்கும் இடத்தைவிட்டு...!
Written by குருஸ்ரீ பகோராசீட்டுக் கம்பெனி நடத்தும் ஒருவன் ஒர் ஊருக்கு சென்று அங்கிருப்பவர்களிடம் அந்த மாதத்திற்குரிய சீட்டுத் தொகையை வசூலித்துவிட்டு திருப்பும் வழியில் இருட்டிவிட அங்கிருந்த சத்திரம் ஒன்றில் தங்கினான். அச்சத்திரத்தில் ஒர் திருடன் இவனிடம் பணம் இருப்பதை அறிந்து கொண்டு இவன் உறங்கியதும் அபகரிக்க திட்டமிட்டான், சீட்டு பணம் வசூலித்தவனுக்கு அந்த நபரைப் பார்த்து சந்தேகம் வர என்ன செய்வது. எப்படி பணத்தை பாதுகாப்பது என நினைத்தான். சிறிது நேரத்தில் அசதியில் அயர்ந்தான். காலையில் கண் விழித்தபோது திருடன் இவனையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான். என்ன பார்க்கிறாய்? என கேட்க அதற்கு, 'நீ பணம் கொண்டு வந்ததைப் பார்த்தேன். நீ அசந்து தூங்கும்போது உன் சட்டைப்பையில், வேஷ்டியில், நீ கொண்டுவந்த பையில் எங்கும் காணவில்லை. பணம் கைக்கு கிடைக்க வில்லை. அதை நீ எப்படி எங்கு ஒளித்து வைத்தாய்' என்ற நினைவில் நான் அதிசயத்துக் கொண்டிருக்கின்றேன் என்றான். பணம் வசூலித்து வந்தவன் அது பத்திரமாக உன் தலையனைக்கு கீழ் இருக்கிறது என்றும் இரவு எனக்கு பாதுகாப்பாக இருந்ததிற்கு நன்றி எனக் கூறிப் பணத்தை எடுத்துச் சென்றான்.
நீ தேடுவது உன்னிடமே இருக்கின்றது, அறியாமல், புரியாமல் தேடிக்கொண்டிருக்கின்றாய் மனமே!
உண்மையான குரு!
Written by குருஸ்ரீ பகோராஒரு குருகுலப் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் ஒருவன் வேறொரு மாணவனின் பெருளை திருடி விட்டான். அவனை குரு முன் நிறுத்த அவர் அவனைத் தடவிக் கொடுத்து "திருட்டு தவறு" என அன்புடன் உரைக்கிறார். புரிந்ததா? எனக் கேட்டு இனி இவன் திருடமாட்டன்! என மற்ற மாணவர்களிடம் சமாதானம் கூறி அனுப்பி விட்டார். மீண்டும் இதே தவறை அவன் செய்ய மற்ற மாணாக்கர்கள் மடத்தை விட்டு வெளியேற்ற விரும்பினார்கள். அவனுக்கு குரு மீண்டும் அறிவுரை கூற இந்த அனுகுமுறையை இம்முறை ஏற்கத்தயாராக இல்லாத மாணவர்கள் அவனை வெளியேற்றாவிடில் அனைவரும் வெளியேறி விடுவதாக கூறினார்கள். சரி போங்கள் என அமைதியாக குரு சொன்னார். ஏன் திருடக்கூடாது என்பது உங்களுக்கு நன்கு புரிந்து விட்டது. நீங்கள் எங்கு சென்றாலும் சரியாக இருப்பீர்கள். உங்களுக்கு நான் அவசியமில்லை. இவனுக்கு நல்லது கெட்டது தெரியவில்லை. அதைப் புரியவைப்பதுதான் எனது கடமை. இவனுக்கு இதை நன்கு புரியவைக்க நான் அவசியம் தேவை. வெளியே அனுப்ப முடியாது என்ற குருவின் கருணை அன்பைக் கண்ட மாணவர்கள் மன்னிப்பு கேட்டனர். திருட்டு மாணவனின் மனதை குருவின் கருணை மாற்றியது. குரு எல்லாம் போதிப்பவர் மட்டுமல்ல, கனிவும் கருணையும் காட்டத் தெரிந்தவர்தான் உண்மையாண குரு.
அவர் ஒரு சமுத்திரம்!
Written by குருஸ்ரீ பகோராபெரியவர் ஒருவர் மேடையில் பேச தயாராகிக்கொண்டிருந்தார். அங்குவந்த பணக்காரர் அவரிடம், ஐயா, நீங்கள் கூட்டத்தில் பேசும்போது என்னைப் பற்றி ஏதாவது குறிப்பிட்டு ஒரு முறை சொல்லுங்கள் என்றார். பேச்சாளரும் இவர் பெரிய சமுத்திரம், அள்ள அள்ளக் குறையாத கடல் மாதிரி. பெரிய செல்வந்தர், சமுத்திரம்னா சமுத்திரம்தான், ஏரி, குளம் மாதிரி சின்ன ஆளு இல்லை. என்ற பாராட்டை கேட்டு மகிழ்ந்த பணக்காரர் அங்கிருந்து சென்றபின் பேச்சாளரின் சீடர் தயக்கத்துடன் "இந்த ஆள் பெரிய கஞ்சன். எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் உதவியது இல்லை, அவரை உங்களைப் போன்ற பெரியவர்கள் இப்படி பொய்யாக பாராட்டலாமா?” எனக் கேட்டார். அதற்கு பேச்சாளர், அதைத்தான் நானும் சொன்னேன். புரியலையா? சமுத்திரம் ரெம்பவும் பெரிசு, ஏகப்பட்ட தண்ணீர் வெச்சிருக்கு, ஒருவாய் தண்ணீர் ஒருவருக்கும் குடிக்க பயன் படாது. எவருடைய தாகத்தையும் தணிக்காது. இந்த நபர் சமுத்திரம் மாதிரி எவ்வளவு பணம், பெருள் வைத்திருந்தாலும் ஒருவருக்கும் பயன் பட உதவமாட்டார். புரிந்ததா என்றார்... நீங்கள் எப்படி! எல்லோருக்கும் பயன்பட நினைப்பவரா! செயல்படுபவரா!
6-3.பூக்கள் பூத்தபூமி!
Written by குருஸ்ரீ பகோராபூக்கள் பூத்தபூமி!
உலக உருண்டை பல கோடி விண்மீன்களுக்கிடையே எப்படி சுற்றிச் சுழலுகிறது. பருவங்கள் மாறி, இரவு பகல் என்று மாறி, மழை வெய்யில் என்று மாறி நிகழ்வுகளை பூமியில் அவ்வப்போது நிகழ்த்துகின்றது யார்! விதையிலிருந்து மரம், செடி கொடிகள் என வருவதும், ஓர் விந்திலிருந்து இத்தனை உறுப்புகளுடன் பலவிதமான உருவங்கள் தோன்றுவதும் எப்படி!
பிறப்புக்கும், இறப்புக்கும், அழிவுக்கும், தோற்றுவித்தலுக்கும் காரணம் என்ன! இன்பதுன்பங்கள் ஏன்! இதெல்லாம் இயற்கையா! அதன் பின்னனி எது! இவற்றுக்கொல்லாம் எளிய தெளிவான விளக்கங்கள் யாரிடம் உள்ளது! இந்த பிரபஞ்சத்தின் இரகசியம் அது. அதை முற்றிலும் அறிய முற்பட்டு ஒன்றும் பலனில்லை. அரிதிலும் அரிதான ஒன்று அது.
மனித சக்திக்கு மீறிய எல்லையில்லா அந்த பிரபஞ்ச ஆற்றலை சிறிதளவாவது தேர்ந்து தெளிய ஆன்மாக்களுக்கு ஞானம் வேண்டும். அது ஆத்மீகஞானம்.
ஆன்மாக்கள் ஞானத்துடன் வாழும் இடம் ஆனந்த பூமியாக, இன்பம் நிறைந்த உலகமாக, மாறவேண்டும். இந்த உலகில் ஆனந்தம் பூக்களாகப் பூத்துக் குலுங்கி இன்பம் மணமாக வீசவேண்டும்.
அதற்கு எல்லா ஆன்மாக்களும் அந்தந்த உடலுடன் செய்யும் செயல், எண்ணங்கள் பிற உயிர்க்கு பாதிப்புகள் வராமல் செயல்படவேண்டும். இத்தகைய இயக்கத்தை இப்புவி கொண்டால் தான் ஆனந்தபூமியின் அடையாளமாகும்.
‘நீ உலகின் அழகை தரிசிக்கும்போது நலமுடன் திகழ்கிறாய்’ என்கிறது வேதம். முதலில் தனக்கு சுகம் அளிக்கவேண்டும், இரண்டாவது அடுத்தவர் சிரமம் குறைக்கவேண்டும், மூன்றாவது மற்றவர் மகிழ்ச்சியை மகிழ்ச்சியாக காணவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
நீங்கள் ஒவ்வெருவரும் உங்கள் கர்மத்தின் பலனை உணர்ந்து, உங்கள் கோபத்தால் ஆவது என்ன! செயலால் மாறுவது என்ன! என்பதை புரிந்து கொண்டு நல்லதை நினைத்து, நீங்கள் சந்தோஷமாக இருக்க, மற்றவர்கள் சந்தோஷத்தை கெடுக்காமல் மனித நேயத்துடன் இருக்க பழகிக் கொள்ளுங்கள்.
மற்ற மனங்களை புண்படுத்தாமல் இருங்கள். கடுஞ்சொற்களை அள்ளி வீசாமல் இருங்கள். வெறுப்புகலந்த பார்வையை, பேச்சை விட்டு கனிவுடன் நோக்கப் பழகுங்கள். அன்புடன் மனித நேயம் கொண்டு நோக்குங்கள். அனைவருக்கும் உங்களால் முடிந்த அளவிற்கு ஆதரவு கரம்நீட்டி பிறர் நலம் பேனுங்கள்.
கோபம், பொறாமை, பதற்றம், எரிச்சல், ஆத்திரம், சந்தேகம், பயம், இவைகளின் தாக்கங்கள் உங்களுள் ஏற்படும்போது நீங்கள் நரகத்தின் விளிம்பிற்குச் சென்றுவிடுவீர்கள். அன்பு, அடக்கம், ஆனந்தம், அமைதி, நிம்மதி, சந்தோஷம் இவற்றில் நீங்கள் அமிழ்ந்து இருக்கும்போது சொர்க்கத்தின் இன்பத்தினை உணரமுடியும்.
இந்த பூமியில் கிடைக்காத அற்புதம் ஏதும் சொர்க்கத்தில் இல்லவே இல்லை! இருப்பதாக எங்கும் கூறப்படவில்லை.
மனதில் செயல்களை நிரப்பிக் குழம்பாதீர்கள். அவ்வப்போது தோன்றும் பிரச்சனைகளை அப்போதே சிந்தித்து தீர்த்துக் கொள்ளுங்கள். மனதில் நிகழ்வுகளின் உலைச்சலின்றி நிம்மதி இருந்தால் உங்களுக்கு சந்தோஷம்.
இதே நிலை அனைவருக்கும் ஏற்பட்டால் எங்கும் சந்தோஷம். ஆனந்த பூக்கள் பூக்கும் உலகமெங்கும். ஆனந்த நிலையடைந்து இன்பம் நிறைந்த உலகமாக மாறும் இப் பூ உலகம்.
அந்த ஊரின் ஓரிடத்தில் காலைப்பொழுதில் தூரத்திலுள்ள ஒரு நிலையான பொருளைப்பார்த்து நின்றால் கீழேவிழும் உன் நிழலுக்கு அடியில் ஒரு பொக்கிஷம் உள்ளது எனக் கேள்விப்பட்டவன் ஒருகாலைப்பொழுதில் அந்த இடத்தை அடைந்தான். குறிப்பிட்ட இடத்திலிருந்து தூரத்தில் தெரிந்த நிலையான மலையைப்பார்த்து நின்றான். அவன் நிழல் அவனுக்குப்பின்னால் நீண்டு விழுந்திருந்தது. நிழல் பகுதியை நன்கு அடையாளம் கொண்டு தோண்ட ஆரம்பித்தான்.
தோண்டத் தோண்ட சூரியன் மேலெழுவதால் நிழல் சுருங்கிக்கொண்டு வந்தது. நண்பகலில் அவன் காலடியில் நுழைந்தது. வேறு நிழலே இல்லை. தோண்டித் தோண்டி களைப்புதான் அடைந்தான். ஏமாற்றம் அழுகையை வரவழைத்தது. அவ்வழிவந்த பெரியவர் ஏன் அழுகின்றாய் எனக்கேட்டபோது அவரிடம் இது பற்றிக்கூறினான். அவர் நீ கேள்விப்பட்டது சரி. உன் நிழல் பொக்கிஷம் இருக்கும் சரியான இடத்தைதான் காண்பித்துள்ளது.
நீதான் அதை சரியாக புரிந்து கொள்ளவில்லை. நீதான் அந்தபொக்கிஷம். அது உன்னுள்ளேதான் இருக்கின்றது என்றார். ஆன்மாக்களே! நீங்கள் தேடும் எல்லாம் உங்களிடமே இருக்கின்றது. புரிந்து கொள்வதில் தான் சிரமம் உள்ளது.
அன்பார்ந்த ஆன்மாக்களே! நான் சொல்லும் நல்ல விஷயங்களைக் கேட்க ஒருவர் முழுமனதுடன் இருந்தால் கூடப்போதும். பெரிய கூட்டம் கூட்டி சொற்பொழிவு நடத்த வேண்டும், எல்லோரும் கேட்கவேண்டும் என்பதுமில்லை. கூட்டத்தில் ஒருவர் கவனித்து கேட்டாலும், புரிந்து கொண்டாலும், இந்த கருத்துக்களைச் சொல்லியதின் பயன் உண்டு. புராண நிகழ்வுகளைப்போல் பலநிகழ்வுகள் உலக வாழ்வில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் அந்தப் பகுதி அல்லது அது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும் என்பதாலும், புராண இதிகாச நிகழ்வுகள் எல்லோராலும் அறியப்பட்டவை என்பதாலும், அதிலிருந்து மேற்கோள்கள் சொல்லப்பட்டுள்ளன.
பாரதப்போரில் கண்ணபிரான் அர்ச்சுனனுக்கு கீதா உபதேசம் சொல்வதாக வருகின்றது. அது எவ்வளவு பெரிய உயர்ந்த தத்துவம் அது, அந்த விஷயத்தைக் கண்ணன் ஒரு கூட்டத்தைக் கூட்டிவைத்துக் கொண்டு சொல்லவில்லை. அப்போதைக்கு அந்த உபதேசம் அர்ச்சுனனுக்கு தேவையாயிருந்தது. அது அர்ச்சுனனை அடைந்தது. அவர் மனம் வாங்கிய அந்த நிகழ்வு இன்று நம் எல்லோருக்கும் தெரியவந்துள்ளது. உண்மைகளைப் புரிந்து போற்றி பாராட்டி ஏற்றுக் கொள்கின்றோம்.
ஒரு நல்ல விஷயத்தைச் சொல்ல ஒரு பெரிய கூட்டமல்ல ஒருசிலர் இருந்தாலே போதுமானது. என்ற எண்ணத்தில் எழுதிய இப்புத்தகம் எத்தனை கைகளில் தவழ்ந்தது, எத்தனை உள்ளங்களில் உண்மைகளை உணர்த்தியது, எத்தனை உயிரின் ஆன்மாக்களுக்கு வாழ்வின் பயணத்தின் பாதையைப் பற்றி புரியவைத்தது, என்பது போதுமானது.
அவர்கள் மூலம் இந்த மனித குலத்தின் மற்றவர்க்கு பரவட்டும். கேட்டாலும் கேட்காவிட்டாலும் தெரிந்ததை ஆன்மாக்களுக்கு ஏன் சொல்லவில்லை என்ற எண்ணம் வரக்கூடாது. கடமையை நான் செய்ய வேண்டும். எனவே கேட்ட, படித்த அனைவரும் 'சந்தோஷப் பூக்களாய் மலரட்டும்’, ஆனந்தத்தை அனுபவிக்ககூடும் என்ற நம்பிக்கையில் ஆசிரியன் முடிவுரை கொள்கின்றான்.
“ஆனந்த பூக்கள் பூத்த பூமியாக மாற்ற வாருங்கள்”, நீங்களும் மாறுங்கள், மற்றவர்களையும் மாற்றுங்கள். வாருங்கள் புதிய ‘சந்தோஷ பூக்கள்’ பூத்த உலகிற்கு. அடையுங்கள் பிறவியின் பயனாகிய ‘’சந்தோஷத்தை”. வாழ்க சந்தோஷ வளமுடன்!-அன்புடன் குருஸ்ரீ பகோரா
6-2.இறுதியானஉரை!
Written by குருஸ்ரீ பகோராஇறுதியானஉரை!
உலகியல் வாழ்வில் வெயில் மழை இரண்டும் வேண்டும். மழையை உள்வாங்கி மண் மலர்கின்றது. மரம், செடி, கொடிகள் உயிர்ப்பிக்கின்றன. அதே மண் வெப்பத்தையும் உள்வாங்கி அந்த மரம், செடி, கொடிகள் உயிர் வாழ உதவுகின்றது.
கனியைத் தரவும், உயிர்களுக்கு உலகத்தை காணவும், ரசிக்கவும் காரணமான வெய்யிலில்தான் மனிதன் நடமாடுகின்றான், மழைக்கு ஒதுங்குகின்றான். எப்படியிருந்தபோதும் ஒன்றுடன் ஒன்று இனைந்து செயல்படும் இரண்டின் சேர்க்கையில்தான் உலகின் உயிர்களுக்கு எல்லா நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.
அழகாக இருக்கின்ற பொருளை நீங்கள் விரும்புகின்றீர்கள் என்பதல்ல, நீங்கள் விருப்புகின்ற பொருள் உங்களுக்கு அழகாய் இருக்கின்றது- அவ்வளவுதான் எனக்கருதவேண்டும். வாழ்வில் பலவீனங்கள் இருக்கும். விருப்பு, வெறுப்புகளும் இருக்கும். எல்லாம் கலந்த கலவைதான் வாழ்வு.
உங்கள் வாழ்வு சிறக்க உங்களுக்கு வேண்டியதை இந்த உலகிலிருந்து நீங்கள்தான் உங்கள் தேவைக்கேற்ப எடுத்து கலந்து கலவையாக்கி உபயோகிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் “உங்கள் எண்ணம், செயல்பாடுகள் அடங்கிய வாழ்க்கைப் பாதையின் வெற்றி இரகசியம்.”
இதைத்தான், “ஓர் கிழவனுடைய அறிவு முதிர்ச்சியும், நடுவயதினனுக்குள்ள மனத்திடமும், இளைஞனுடைய உற்சாகமும், குழந்தையின் இதயத்தன்மையும், தேவர்களே எனக்கு அருளுங்கள். என்றும் எப்போதும் நிலைத்திருக்கும்படிச் செய்யுங்கள்” என புரட்சிக்கவி பாரதியார் பிரார்த்தனை செய்துள்ளார்.
புயல் சின்னத்தால் மழை பெய்து சிறிது ஓய்ந்திருந்தகாலை- இப்பகுதியை நான் எழுதிக்கொண்டிருந்த வேளை- அப்போது ஜன்னல்வழி நான் கண்ட காட்சியின் களையிது: “எதிர்வீட்டில் ஜாதி முல்லை மழை, வெய்யில் ஆதிக்கத்தில் வளர்ந்து, மலர்ந்து, வீட்டின் வெளிப்புறச் சுவரைத்தாண்டி வெளியே நன்கு பரப்பி வளர்ந்து, பாதையில் செல்வோரை தன்மணத்தினால் கவர்ந்து கொண்டிருந்திருக்கின்றது. அவ்வழி சென்ற 60வயது மதிக்கத்தக்க வெண்மையாடை உடுத்திய ஓர் பெண் ஓர் நிமிடம் அவ்விடத்தில் நின்றாள். அப்பூக்களில் இரண்டைப் பறித்து முகர்ந்து ரசித்தாள். பின் சென்றாள். இந்த நிகழ்வைக்கண்ட நான் இயற்கையின் மகிழ்வு, வளர்ச்சி, வனப்பு, மணம் இவ்வுலக மக்களை எந்தளவுக்கு ஈர்க்கின்றது என வியந்தேன்.
அந்த ஒரு நிமிடங்கள் அந்த முதிர்ந்த பெண்ணின் எண்ணங்கள் எவ்வளவு சந்தோஷத்தை அடைந்திருக்கும். அவரின் இனிமை நிறைந்த, பசுமையாண எண்ணங்கள் எத்தனை எத்தனை அவரின் நினைவுக்குள் மலர்ந்திருக்கும். மனம் மகிழ்வுற்றிருக்கும். அந்த இளமையின் எண்ணத்தோடு அவர் சில அடிகள் நடந்ததாகக்கூட நினைக்கின்றேன்.
எப்போதும் இனிமையான எண்ணங்கள் உங்களுக்கு இளமை உணர்வை ஏற்படுத்தும் என புரிந்து கொள்ளுங்கள். வண்ண வண்ண பூச்சிகள்! வண்ணத்துப் பூச்சிகளைக் கண்டால் எல்லோருக்கும் ஆசைபிறக்கும். அவைகள் பறக்கும் போது தெரியும் அழகில் மனம் லயிக்கும். அந்த அழகு ஒரு நிமிடம் உலக நினைவுகளை மறக்கச்செய்யும்.
வண்ணத்துப் பூச்சிகளை சுதந்திரமாக அதன் போக்கில் உலவவிட்டால்தான் அந்த நிகழ்வு. அது அமர்ந்திருந்தாலும், பறந்தாலும் நாம் ரசிக்கலாம். அதை விடுத்து அவைகளை கையில் பிடித்து அழகு பார்க்க நினைத்தால் அதன் வண்ணங்கள் சிதைந்துவிடும். அதன்பிறகு அது கலையிழந்துவிடும்.
நாம் ரசிக்கின்றோம் என்ற ஆவலில் இதை செய்யக்கூடாது எனத் தெரிந்திருந்தும் நம் மனம் அழகில் மயங்கி அதை விரலில் பிடிக்க முயலும் செயலை செய்கின்றது. கட்டுப்பாடில்லா செயல். அழகை ரசிக்கலாம். அதற்கு தடைபோடக்கூடாது. அவைகள் சுதந்திரமாக உலவுவது என்பது உலகை அழகு மயமாக்கும் ஓர் இயற்கையான செயல். நம் எண்ணங்களால் அந்த நிகழ்விற்கு பங்கம் விளைவிக்கக்கூடாது.
இதுபோன்றே நம்மோடு உறவாடும் உறவுகளையும் அதனதன் போக்கில் உலவவிட்டு அதன் அழகைகண்டு ரசிக்க தெரிந்த மனமாக இருத்தல் வேண்டும். அதன் செயல்களைப் பாராட்ட வேண்டும். பிடிக்கவில்லை எனில் விட்டு விடுங்கள். துன்புறுத்தாதீர்கள். நம் செயலை இவ்வாறு வரையறுத்திக்கொண்டால் உறவுகளிடையே நம் நினைவுகள் உறுதியாகி இறுதியாக நல்லெண்ணபாலம் அமையும். அன்பு தோன்றும்.
முளைவிட்ட அன்பு வளரும், மலரும், பூக்கும், காய்க்கும். நிச்சயம் அதன் பலன் உங்களுக்கு கிடைக்கும். அப்படி உங்களுக்கு கிடைக்கவில்லை என்றாலும் உங்கள் வாரிசுகளுக்கு, சந்ததியினருக்கு அதன் பலன் போய்ச்சேரும். கர்மபலன்கள் நன்மையாக மாறட்டும். எதிர்மறை எண்ணங்களைவிட்டு, அந்த எண்ணங்களை ஏற்படுத்தும் வார்த்தைகளை பேசவேண்டாம் என்பது வேதம் சொல்லும் அறிவுரை.
நான் நன்றாக இருக்கின்றேன். என் நல்ல எண்ணங்களால் மனம், ஆன்மா, உயிரின் உடல் அனைத்தும் நன்றாக நலமுடன் இருக்கின்றது. என் செயல்கள் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. அது மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கின்றது. என்னால் எங்கும் ஆனந்தத்தை பூரணமாக உணரமுடிகிறது என்ற எண்ணங்களுக்கு தினமும் நினைவூட்டல் நடந்தால் உனக்குள் ஓர் ஒப்பற்ற மாற்றம் உருவாகி நீ மேனிலையடைவாய் என்கிறது வேதம்.
நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இயற்கையும், உலகின் உயிர்களையும் சார்ந்தே நம் வாழ்வின் இயக்கம் உள்ளது. நம் உபயோகத்திறக்கு எல்லாம் கொடுத்த, கொடுக்கின்ற உயிரினங்களுக்கு, இயற்கைக்கு நாம் நன்றி சொல்லவேண்டும். முதன்மையாக அவைகளை அனுபவிக்க நல்ல ஆரோக்கிய உடலை கொடுத்த இறைக்கு நன்றி சொல்லுங்கள்.
வாழ்கையை வாழ்வை அனுபவி! அது எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் சரி! ஆன்மாவே நீ மனம்விட்டுச் சிரிக்கும்போது உன்னைப் பார்த்த உலகம் நீ சிரித்த காரணம் கண்டு ஆராய்ந்து பங்கு கொள்ளும்!
வாழ்க்கை ஆயிரம் காரணங்கள், நிகழ்வுகள் தரலாம், நீ அழுவதற்கு! நீ அழுதால் உலகம் அதில் பங்கு கொள்ளாது! நீ தனியாய்தான் அழவேண்டும்! ஆனால் நீ வாழப்பிறந்தவன்! வாழ்வை அனுபவிக்க பிறந்தவன்!
அழுவதற்கான காரணங்களை நீக்கிவிட்டு, இந்த உலகிற்கு ஆயிரம் காரணங்கள் சொல்ல முடியும், உன் சந்தோஷத்திற்கு! உன் புன்னகைக்கு! உன் வாழ்விற்கு!
எனவே நீ எப்போதும் சந்தோஷத்தையே நினை! சந்தோஷமாகப் பேசு! சந்தோஷமாகச் செயல்படு! சந்தோஷத்தை விதை! சந்தோஷத்தை வளர்! சந்தோஷத்தை அறுவடை செய்து பயன்பெறு! ஆனந்தம்கொள்!
அதுவே உன் நோக்கமாக இருக்கட்டும்! உன் பயணத்தில் வண்ணமயமான “சந்தோஷப்பூக்களை” கண்ட நிம்மதி உன்னுள் தோன்றட்டும்-குருஸ்ரீ பகோரா
6-1.கல்பகவிருஷம்!
Written by குருஸ்ரீ பகோராகல்பகவிருஷம்!
ஒவ்வொரு மனித ஆன்மாவின் உடலும் சிறப்பான தன்மைகளைக் கொண்டது. பஞ்ச பூதங்கள் எனக் கூறப்படும், நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு ஆகிய அனைத்தின் தன்மைகளை உள்ளடக்கியது ஆன்மாவின் உடல். அந்த ஆன்மாவின் மூளை பலசிறப்புக்களைக் கொண்டது.
ஒரு வெற்றிக்குத் தேவையான சிந்தனை, செயலாக்கத் திட்டம், மேற்பார்வைத்திறன் ஆகிய மெச்சத்தக்க, ஒரு தலைவனுக்கு வேண்டிய அனைத்தையும் கொண்டுள்ளது. ஒரு தொடர்ச்சியான வெற்றிகூடிய ஆன்மாவாக இருக்கவிரும்பினால் அதன் செயல்பாடுகள் சிறப்பாக இருத்தல் வேண்டும். நேர்மறை எண்ணங்களை கொண்டிருத்தல் அவசியம்.
காலம் கனிந்துவரக் காத்திருந்து அந்தச் சந்தர்ப்பத்தில் தனது நினைவு திறனைத் தீட்டி செயல் வெளிப்பாடுகளை கவனமாக, நேர்மையாக வெளியிட்டு வெற்றிகாண முயலவேண்டும். வெற்றிக்காண வழிகளைக் கையாண்டு, தொடர்ந்து முயற்சி செய்தல் நன்று. படிப்படியாக திட்டம் நன்கு செயல்பட்டால் வெற்றியின் கனியை விரைவில் ருசித்து ஆனந்தம் அடையலாம்.
சந்தர்ப்பங்களை குறிவைத்து. திட்டங்களை வரிசைபடுத்தி, செயல் துரிதமாக, கடின உழைப்புடன், சூழ்நிலையின் மாற்றங்களுக்கு ஏற்றவாறு, திறந்த மனதுடன் நேர்மையாக செயல்பட்டால் பாதை, வெற்றியின்பாதை தெளிவாக புலப்படும். கடுமையான உழைப்பிலும் தடைகள் தாண்டி பெற்ற வெற்றியே ஆனந்தமானதாகும்.
இந்த வெற்றியை நாம் பெற்று ஆனந்திக்க நம் மூளையின் பல பகுதிகள் நமக்கு ஒன்பது வகை குணாதிசயங்களாக இயங்கி செயலாற்றம் காண்கிறது.
1.ஒரு செயலுக்காண உரிய, நல்ல தருணத்தை கண்டுபிடிக்க உதவும் திறமை. அந்த தருணம் எது என்பதை பகுத்து ஆராயும் பகுதி. இது ‘முத்து’ -ன் தன்மையைக் கொண்டது.
2.வாழ்வின் போட்டிக் களத்தை சீர்படுத்தி சுறுசுறுப்பாகக் குவியும் மையப்புள்ளியாக உறுதியாக தீர்மாணிக்கும் இந்தப்பகுதி ‘மரகதம்’ -ன் தன்மையைக் கொண்டது.
3.தொழிலின் நிலைகளை முதன்மையாக வரிசைப்படுத்தி சரியாக தயார் நிலையில் கண்ணுக்குப் புலப்படும் பார்வையில் வைப்பது. இது ‘புஷ்பராகம்’ -ன் தன்மையாகும்.
4.சமர்த்தியமான ஒழுங்கான விழிப்புணர்வுடன் அருகில் நெருங்கி நடை முறைப்படுத்தி விருத்தி செய்தல். இது ‘கோமேதகம்’ -ன் தன்மையாகும்.
5.தீவிர உணர்ச்சியுடன் வெற்றியடைய ஆவல்கொண்டு, பெருவிருப்பத்துடன் பண்படுத்தி விருத்தி செய்தல். இது ‘வைடுரியம்’ -ன் தன்மையாகும்.
6.தீர்க்கதரிசிபோல உந்துசக்தியை இயங்கவைத்தல். இது ‘நீலம்’ -ன் தன்மையுடையது.
7.எவ்வளவு தடைகள் வந்தாலும் தொடர்ந்து உறுதியாக முன்னேற்றம் காண மீண்டும் மீண்டும் முயற்சித்தல். இது ‘பவளம்’ -ன் தன்மையாகும்.
8.முழு வெற்றிக்காக தன்னை முழுவதும் ஈடுபடுத்திக் கொள்வது. தலைமையேற்று உறுதி எடுத்துக்கொள்வது. இது ‘வைரம்’ -ன் தன்மையாகும்.
9.இந்த எல்லா செயல்களையும் முன்னின்று நடத்தி வெற்றிகொள்ளும் தன்மை. இது ‘மாணிக்கம்’ -ன் தன்மை. மனிதனை, மனித ஆன்மாவை மனிதருள் மாணிக்கம் எனக்கூறும் வண்ணம் இந்தப் பகுதியின் செயல் இருக்கும்.
இப்படி ஒன்பது நவரத்தினங்களின் தன்மைகளை உள்ளடக்கிய, ஒன்பது ஒப்புயர்வற்ற செயலாற்றல்களால் ஆன்மா தனித்தன்மை பெறக்கூடியப் பகுதிகளை நம்முள்ளே, நம் மூளை கொண்டு செயல்படுவதால் அதை ஏன் கற்பக விருஷம் எனக் கூறக்கூடாது.
இந்த ஒன்பது குணாதிசயங்களை ஒன்றுகூட்டி செயல் பட்டால் மனித ஆன்மாவின் உடலே நீயும் ஓர் கற்பகவிருஷமே.
எந்த மரத்திலோ, செடியிலோ தோன்றிய விதை காற்றால், நீரினால் எங்கோ கொண்டு செல்லப்பட்டு, பலநாட்கள் புதையுண்டு, காத்திருந்து, முளைவிட்டு கிளர்த்தெழுகின்றது போல மனித ஆன்மாவே! நீ எங்கு தோன்றினாலும், எங்கு இருந்தாலும் உன்னுள் ஓர் அபரிதமானசக்தி இருக்கின்றது. அதை உணர், புரிந்துகொள். அதை வெளிக்கொணர முயற்சிசெய். மேன்மையடைவாய். வெற்றி கொள்வாய் வாழ்வில்.
ஒன்பது குணாதிசயங்களை தன்னுள்ளே கொண்டுள்ள உடலில் ஒன்பது துவாரங்களும் உள்ளது. இத்தனை ஓட்டைகள் உள்ள பாத்திரமாயிருந்தால் அனைத்தும் வெளியேறியிருக்கும். ஆனால் உடலில் உயிர் உடன் போகாமல், ஆன்மாவின் செயலுக்காக தங்கி இயங்குவதுதான் ஆச்சரியம். அது முற்றிலும் அருளாளனின் செயல்-குருஸ்ரீ பகோரா.
6.இறுதி உரை:
Written by குருஸ்ரீ பகோரா6. இறுதி உரை:
6.1. கல்பகவிருஷம்
6.2. இறுதியானஉரை
6.3. பூக்கள் பூத்த பூமி
More...
5-9.நிலையாமை! காலத்தை வீணடிக்காதீர்!
Written by குருஸ்ரீ பகோராநிலையாமை-காலத்தை-வீணடிக்காதீர்
இயற்கையின் கருணை நம்மை வாழவைக்கும். இயற்கையிலிருந்து நாம் பல நிகழ்வுகளை கற்றுக்கொள்ளலாம். அழகை ரசிக்கலாம். மனம் ஆனந்தப்படலாம். மணத்தை நுகர்ந்து அனுபவித்து பரவசப்படலாம். பலநிகழ்வுகளிலிருந்து வாழ்க்கைக்குப் பல பாடங்களை கற்றுத்தரும் முன்னுதாரணமாக திகழ்வதை கண்டு அதிசயிக்கலாம். எல்லாம் வீண் என்ற பொருளில் மண் என்கின்றோம். ஆனால் அதனுள் என்ன? என்ன? பிரமிப்புக்கள் இருக்கின்றன தெரியுமா?
மண்ணுக்குள்தான் ஓர் செடி, மரம், முளைவிட்டு உயிர்பித்து வளரமுடிகிறது. விதைக்குரிய ஈரம் உஷ்ணம் தந்து விதைக்கு உயிர் தந்து முளைத்து உலகில் வளர உதவிபுரிகின்றது. ஊர்வன, பறப்பன முதலியவற்றிற்கும் இந்தமண்ணே, மண்ணில் தோன்றியவையே ஜீவாதாரம். களிமண் என்கிறோம். அதிலிருந்து பாணை செய்கிறோம். அது உடைந்தால் மண்ணாகி மீண்டும் பாணை செய்யப் பயன்படுகின்றது.
ஆனால் மனிதா நீ தோன்றி வளர்ந்து வாழ்ந்து பின் இறந்தால் மண்னோடு மறைகிறாய். சாம்பலாய் கரைகிறாய். மீண்டும் உன் உடலிருந்து உடல் தோன்றுவதில்லை. மண் எல்லாவற்றையும் தன்னுள் வாங்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் பயன் தருகின்றது.
இயற்கையின் அனைத்து அங்கங்களும் நடத்தும் பாடங்களை நாம் புரிந்து கொண்டு, நம்மைச் சுற்றியுள்ள இயற்கையின் எழில்மிகுந்த, வர்ணணைக்குள் கட்டுக்கடங்காத அழகை வாரி இறைத்திருக்கும் அதன் கருணையை நன்றியுடன் போற்றி புரிந்து ஏற்றுக்கொண்டால் மண்ணில் இருக்கும்வரை வளமாக வாழ நம் எண்ணங்கள் உதவும்.
அகன்ற வானம், பரந்தகடல், வீசும் தென்றல், சுடர்விடும் ஓளி, உஷ்ணம்தரும் நெருப்பு, பாயும்நதி, கனிதரும் மரங்கள், பூத்துக்குலுங்கும் செடிகள் எல்லாவற்றையும் ஊன்றிப்பார்த்து உள்ளத்தோடு உறவாடினால் எத்தனையோ வாழ்வியல் பாடங்களை அங்கிருந்து நம்மால் பெறமுடியும்.
ஓர் சுணையிலிருந்து உற்பத்தியாகும் நீர் தன்வாழ்வுப் பாதையில் பிரவாகமாக ஓடும் நதியாக மாறிவிடுகின்றது. ஒவ்வொரு அடியாய் நகர்ந்து முன்னேறி பலசுனைகள், ஓடைகள், நீர்நிலைகளை தன்னுடன் சேர்த்து வளர்ந்து ஓரிடத்தில் சங்கமம் ஆகின்றது.
செல்லும் வழியெல்லாம் வளமளிக்கின்றது. தன் கடமையை செய்து தடையின்றி பயணிக்கின்றது. மலையும், மடுவும் சோதனையாக வந்தபோதும் அதைத்தாண்டி பிராவாகமாக பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கின்றது. தன் ஆற்றலை பயணத்தில் அதிகரித்துக் கொண்டு தடைகளை கடந்து தன் வழி பயணம் தொடர்கிறது.
எந்த நதியும் தடைகளைக்கண்டு திரும்ப நினைப்பதில்லை, தாண்டத்தான் முயலுகின்றது. முடிவு எனும்போது கடலில் ஐக்கியமாகிறது. மனிதனும் நதியைப்போன்றே பயணத்தை தொடர்கின்றான். வழியில் ஏற்படும் தடைகளைகடந்து சங்கமத்தை குறிக்கோளாகக் கொண்டு இலக்கையடையும் வரை தயங்காமல் பயணிக்கவேண்டும். நதியின் பயணத்திலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் பலப்பல.
நதியில் ஓரிடத்தில் நாம் நின்றால் நம்மை கடந்து நீர் சென்று கொண்டேயிருக்கும். நாம் நிற்க ஆரம்பித்தபோது இருந்த நீர் மீண்டும் கண்களுக்கோ, கைக்கோ வரா! பார்த்த நீரை எடுத்தால் அது அப்போதைய நீர், அவ்வளவுதான்.
அதை கீழேவிட்டால் மீண்டும் அதே நீர் கிடைக்காது. நதியின் போக்கில்வேறு நீர் கிடைக்கும். சென்ற நிமிடத்தில் எங்கோ ஓர் இலை உதிர்ந்திருக்கும், ஓர் விதை முளைத்திருக்கும், ஓர் பூ பூத்திருக்கும் அதை இந்த நிமிடத்தில் உணர இயலாது. கடந்தது கடந்ததுதான். இதுவே வாழ்வில் உணரவேண்டியது.
கடந்த அல்லது இறந்த கால நினைவுகளை நிகழ்காலத்தில் நினைத்துக் கொண்டிருந்தால் காலம் நிழல் காலமாகிவிடும். நிகழ்வுகள் இறந்த காலத்தினுடையதாக இருக்கும். இறந்தகாலத்தை நினைத்து இல்லாத ஒன்றுக்கு உயிர்கொடுக்க முயற்சித்து உயிரோடு இருப்பதை உயிரற்றதாக்கி விடாதீர்கள்.
அந்த காலத்தின் ஆன்மாக்கள் இப்போது இருக்கமாட்டார்கள். நம்மால் எதையும் செயல்படமுடியாது. அதன் தாக்கம் நம்மை வெகுவாக பாதிக்கும். இந்த முறன்பாட்டில் மனம் இயங்கினால் செயலாக்கம் சரிவராது. செயல்களில் குழப்பம் ஏற்படும். வெற்றிகள் வெகுதூரம் போய்விடும்.
கையில் கிடைத்த நேரங்கள், சந்தர்ப்பங்களை வீணடித்து விடாதீர்கள். அதை உங்களுக்கு, உங்கள் எண்ணங்களுக்கு, நண்பர்களுக்கு, உற்றார் உறவினர்களுக்கு, மனித சமுதாயத்திற்கு உதவும்படி செய்யுங்கள். அந்த நேரத்தை விட்டு விட்டால், நதியில் நம்மைக் கடந்த நீரைப்போல அது கடந்த காலமாகிவிடும். மீண்டும் அந்தநேரம் வரா. வேறுகாலம் தான் வரும். அதே பயனைத் தருமா என்பது யாருக்குத் தெரியும்!
அழகான ஓர் பெண். அவளை பலர் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தனர். ஆனால் அவர்களிடம் ஏதாவது ஓர்குறை கண்டு தவிர்த்துவிட்டாள். தான் மிகவும் புத்திசாலி. தான் செய்தது சரி என்றும் நினைத்தாள். காலம் கரைந்தது. அழகு குறைந்தது. உலகில் தனித்து இருப்பதாக உணர்ந்தாள்.
ஓர்காலத்தில் அழகால் எல்லோரையும் வசீகரப் படுத்தியிருந்த அவளுக்கு, தற்போது தனக்கு மட்டுமே அழகாகத் தோன்றினாள். அவளுக்குத் தெரிந்த அவள் அழகோ, புத்திசாலித்தனமோ எந்த வகையிலும் அவளுக்கு உதவவில்லை. மற்றவர்களிடமிருந்து பிரித்துதான் வைத்துவிட்டது.
ஓர்நாள் அவள் தோழியை சந்தித்தாள். கணவன், குழந்தைகளுடன் சந்தோஷமாக இருப்பது கண்டு அதிசயப்பட்டாள். அதுபற்றி அவள் தோழியிடம் கேட்க, ‘உன் வாழ்வில் யாரைச் சந்தித்தாலும் அவர்களின் நிறைவுகளைப் பார். குறைகளைத் தேடாதே! அவர்களிடம் அன்பு கொண்டு நட்புடன் பழகு! மற்றவர்களை வசீகரிப்பாய்! வாழ்வு ஆனந்தமயமாகும்,’ என்றாள்!
அதன் பிறகு அவளை அவள் திருத்திக் கொண்டாள்! ஆனால் அவள் இழந்தது இழந்ததுதான்! கரைந்த காலம் இறந்தகாலம், அது நிகழ்காலமாகாது! இனிவராது!
அதைப்போல நாளைப் பார்த்துக் கொள்ளலாம் எனவும் இருந்து விடாதீர்கள். நாளை என்பது நிச்சயமில்லா ஒன்று. எதுவும் இடையில் நடக்கலாம். அது யாருக்குச் சொந்தம்! உங்களால் உறுதியாக கூறமுடியுமா? மகாபாரத நிகழ்வு ஒன்று. தருமனிடம் வந்த பிச்சைக்காரனை நாளை வா எனக்கூறி அனுப்பினான். இதைக்கண்ட பீமன் முரசையறைந்து “என் தமையன் தருமன் காலத்தை வென்றுவிட்டான்” என்றான்.
தருமன் அவன் செயலுக்கு விளக்கம் கேட்க, ‘அண்ணா, நாளை நீ நிச்சயம் இருப்பாயா? பிச்சைக்காரன் நிச்சயம் இருப்பானா? உன்னைச் சந்திப்பானா? நாளை அந்த பிச்சையிடும் மனோபாவம் உன்னிடம் இருக்குமா? நாளைவரை அந்த பிச்சைக்காரன் அப்படியே பிச்சைக்காரனாக இருப்பான் என்பது என்ன நிச்சயம்? நீ இருப்பதும், பிச்சைக்காரன் அப்படியே இருப்பதும் உன் கூற்றினால் உண்மை என்றால், நீ காலத்தை வென்று விட்டாய் என்றுதானே பொருள்” என்றான். தர்மன் தன் தவறை உணர்ந்து அந்த பிச்சைக்காரனை வரவழைத்து இயன்றதை அப்போதே கொடுத்து அனுப்பினான்.
நாளை என்பது நம் கையில் இல்லை. எனவே இன்றே இப்போதே செய்ய வேண்டியதை செய்க என்பதை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும். “உறங்கும் போது விடுகின்ற மூச்சு சுழி மாறிப்போனாலும் போச்சு” என சித்தர்கள் நிலையாமை குறித்து சொன்னது, நிகழ்காலத்தில் ஒவ்வொரு கணமும் முறையான எண்ணங்கள் முறையான செயல்பாடுகளுடன் நம் வாழ்வுப் பாதையை அமைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
மூச்சுக்காற்றாக உள்வாங்குகின்றோம். வெளியே விடுகின்றோம். வெளியே போன மூச்சுக்காற்று உள்ளே திரும்பவும் வரவேண்டும். உள்வாங்கும் நிகழ்வு இல்லையெனில் மரணம் என்கின்றோம். ஒவ்வொரு சுவாசத்திற்கும் மூச்சுக்காற்று உள்ளேயும் வெளியேயும் சென்று வருகின்றது. அப்படியானல் உயிர் இருப்பதற்கு அறிகுறியான அடிப்படை உள்ளேயும் வெளியேயும் நீக்கமற எங்கும் நிறைந்துள்ளது.
ஒரு மனிதனின் வாழ்நாள் என்பது “ஒரு மூச்சு விடும் நேரம்” என புத்தர் சொல்லியுள்ளார். அதாவது வாழ்வில் ஒவ்வொரு நொடிப்பொழுதும் மனிதனின் வாழ்வை சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என உணர்த்தியுள்ளார். நாளை பலா கிடைக்கும் என, கிடைத்த களாவின் ருசியை உதறிவிடாதீர்கள்! நாளை கிடைக்கும் பலா, கஞ்சி பலாவாகக் கூட இருக்கலாம்.
எனவே எதையும் நாளை என்றோ, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றோ ஒத்திப் போடாதீர்கள். கிடைத்ததை எப்படி சந்தோஷமாக அனுபவிக்கலாம் என்ற விழிப்புணர்வுடன் இன்றே, இப்போதே, இக்கணமே, இந்த நொடியிலிருந்து வாழ்வின் பயண ஓட்டத்தில் சுவைகளை அனுபவிக்க துடிப்புடன் செயல்பட்டு சந்தோஷம் காண முயலுங்கள்.
நீங்கள் இப்போது அமைதியாக இருந்துவிட்டால் எதையும் காணமுடியாது. தெரிந்தாலும் புரிந்து கொள்ள இயலாநிலையில் இருப்பீர்கள். நடப்பவை நடக்கட்டும் என சாதாரணமாகவும் விட்டுச் செல்லமுடியாது.
அப்படிச் சென்றால், ஓர் நிலையில் வாழ்வில் எல்லாம் அலுத்து கசப்பாகி போகும், அப்போது இது என்ன வாழ்க்கை, தேடிவந்த சந்தோஷங்களை இழந்து விட்டோமே என குமுறி நீங்கள் திசைமாறி செல்வீர்கள். அதில் என்ன பயன்!
பதவி, பெண் போகமும், சுகங்களும் உண்மையான சந்தோஷத்தை தொடர்ந்து தருவதில்லை. வேதனையைத்தான் விட்டுவைக்கின்றன. அதற்காக இவற்றை விட்டுவிடுவது சரிஎன்று அர்த்தமில்லை. வாழ்வில் ஈடுபட்டு அனுபவிக்கும்போது உங்களை, உங்களின் உள்ளே தேடிப்பாருங்கள்.
உண்மையை உணருங்கள். எல்லா நிகழ்வுகளுக்கும், எண்ணங்களுக்கும் அடுத்தது என்ன? அடுத்தது என்ன? என நினைவுகூறுங்கள். நீங்கள் ஒவ்வொரு நிலையிலும் சந்தோஷமாக இருந்தால்தான் உங்களுக்குள் சீராண எண்ண ஓட்டம் நடைபெறும்.
ஓர் நிகழ்வுக்குப்பின் நீங்கள் இருக்கமாட்டீர்கள் என்ற உண்மையை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். இதுதான் பயணத்தின் கடைசி என நினைத்து அந்த நிகழ்வை செய்ய முயலுங்கள்! அந்த பக்குவம் தோன்ற வேண்டும். அடுத்த ஒவ்வொரு நிகழ்வையும் கடைசி என நினைத்து செய்யுங்கள். நீங்கள் பக்குவப்படுவீர்கள். உண்மையை உணர்வீர்.
நேற்று இருந்த ஒருவன், இன்று இல்லாமல் போனான் என்று நிலையாமை பெருமைதனை உடையது இப்பூவுலகம். மனித வாழ்வின் நிலையாமைபற்றி குண்டலகேசியில், ‘நமக்கு நாமே தினந்தோறும் செத்துக் கொண்டிருக்கின்றோமே, நாம் ஏன் அழவில்லை என்கிறது’.
‘பாளயாம் தன்மை செத்தும், பாலனாம் தன்மை செத்தும், காளையாம் தன்மை செத்தும், காமுறும் இளமை செத்தும் மூப்பும் முதுமையும் வருவதற்குள் ஒர் உடலில் எத்தனை சாவுகள்! குழந்தைப்பருவம், வாலிபப்பருவம், நடுவயது பருவம், என நம் வாழ்க்கைப்பயணத்தில் நாம் இறந்து கொண்டுதான் இருக்கின்றோம்.
விஞ்ஞான ரீதியில் பார்த்தால் உடலில் ஒவ்வொரு கணமும் ஆயிரக்கணக்காண செல்கள் இறப்பைச் சந்திக்கின்றன். புதிய செல்கள் பிறக்கின்றன. மாற்றங்கள் உனக்குத் தெரிவதில்லை மனிதா. தெரியாமல் எத்தனையோ மரணங்கள் உடலில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. தெரியும் மரணத்திற்கு ஏன் பயம் கொள்கின்றாய்.
கடவுளுடன் மனிதன் கொள்ளும் உறவைத்தவிர மீதி எந்த உறவும் நிரந்தரமல்ல. உறவுகள் என்றால் பிரிவு என்பது நியதி. உறவு தோன்றும் போதே அந்த உறவை பிரிவது என்பதும் தோன்றிவிடும்.
ஒரு உடல் மற்றொரு உடலை என்றேனும் பிரிந்தாக வேண்டும் இதுவும் நியதி. உங்கள் உள்ளே ஓர் ஒளி, ஓர் சக்தி தெரியும். அதைப் புரிந்துகொண்டு செயல்படுவீர். ‘தன்னை அறிதல்’ நிகழ்ந்து விட்டால் எது குறித்தும் அச்சமில்லை. பயம் என்ற சொல்லுக்கு இடமில்லை.
என்றும் உங்களிடமிருக்கும். உங்களுக்குள் ஓர் மறு மலர்ச்சி ஏற்படும். நீங்கள் உங்களை அறிந்ததால் மரணம் என்ற பயமில்லை. உயிரின் தன்மை புரிந்துகொள்ள வேண்டும்.
விழிப்புணர்ச்சியுடனிருந்தால் உங்களுக்குள்ளே பிறப்பும், இறப்பும் நிகழ்வதை அறியமுடியும். எந்த கணத்தில் உயிர் பிரியும் எனத்தெரிந்தாலும் ஆனந்தமாக ஓர் ஆன்மாவால் இருக்கமுடிந்தால், அது அந்த ஆன்மா மேன்நிலையை எட்டியுள்ளது என அறியப்படும்.
என்றென்றும் கடலுக்குள்ளே உள்ள மீன் தண்ணீரில்தானே இருக்கிறோம். கடல் எங்கே என்று தேடியதைப்போல், நம் உள்ளே அருள் உருவத்தை வைத்துக்கொண்டு அதை தேடிக் கொண்டிருக்கின்றோம்.
பார்வையற்றவனுக்கு சூரியனும், சந்திரனும் ஒன்றுதான். எந்த ஒளியும் தெரியாது. ஆன்மா உடலுடன் சேர்ந்து உலகைப் பார்க்கின்றது. அருள்பற்றி தெரியவேண்டும் என்ற உணர்வு இல்லை. அருட்கண் தானாக தோன்றுவதில்லை.
ஆன்மா படிப்படியாக பக்குவமடைந்து அருள் ஒளிபெற வேண்டும், காணவேண்டும் எனத்தீவிரமாக விரும்பும்போது திருஅருள்சேர்ந்து அருள் அனுபவத்தை அனுபவிக்கின்றது.
சம்பந்தர் பெருமான், “உள்ளத்தே அருள் புகுந்த காரணத்தால் கிரகங்களும், யமனும், கொடியவிலங்குகளும், நோய்களும், காலமும், நேரமும், எல்லாமும் நல்லதே செய்யும்,” எனப் பாடியுள்ளார்.
மனிதன் தனக்கு தேவையான உணவு, உடை, இருப்பிடம் இவைகளைச் சேகரித்தபின் தன் குடும்பத்திற்கு, தன் எதிர்காலத்திற்கு, தன்னை சார்ந்தவர்களுக்கு எனச் சேகரித்தான். இவ்வளவு செய்த மனிதன் தான் எப்போதும் இறப்பதில்லை. தன் உடம்புதான் இறக்கின்றது. என்ற நினைவுடன் தான் எப்போதும் ஆனந்தத்துடன் இருக்க எதையும் செய்வதில்லை.
இறந்தபின் என்ன சரணாகதி ? உடலில் உயிர்கொண்டு சேகரித்த பணம், உடலைவிட்டு உயிர் சென்றபின் எவ்வளவு தூரத்திற்கு உதவும். சற்று நிதானமாக சிந்தியுங்கள்.
நமக்கு தற்போதுள்ள திறமை, பண்பு, மனம், சக்தி இவைகளைவைத்து நம் உற்றார் உறவினர் குடும்பத்தினர் எல்லோருக்கும் பாதுகாப்பாக உபயோகமான காரியங்களைச் செய்து கொண்டதுபோல் நமக்கும் செய்து கொள்ளவேண்டும். நமக்கு என செய்யும் செயல்கள் அநாவசியமாக தோன்றும், ஆனால் அவைகள் அவசியமான செயல்களாகும். இறப்பு ஒரு ஆன்மாவிற்கு தூக்கம் போன்றது. பிறப்பு உறங்கி விழித்தலைப் போன்றது. பிறப்பு, இறப்பின் தன்மைகளை உணர்ந்தவராயிருந்தால் உங்களுக்கு அழுகை வராது. ஆனால் இறப்பின் தன்மை அதிர்ச்சி தரும். இதுபோன்ற வேதனை ஒவ்வொரு மனித உயிருக்கும் தேவையா! இறைவா! என்ற கேள்வி எழும்.
அவரது நினைவுகள் காலப்போக்கில் கரைந்திருந்தாலும், நீங்கா நினைவுகள் எழுந்து உங்கள் நினைவுகளில் குடிகொள்ளும். ஏதோவொரு துக்கம் வேதனை உங்கள் நெஞ்சை பிசையவைத்து துன்பம் தரும்.
இந்த ஜென்மத்தில் அவரின் சந்திப்பு முடிந்தது. மீண்டும் அவரை எந்த ரூபத்தில் எப்போது பார்க்கப்போகிறோம் என்ற நினைவு அழுந்தும். ஆன்மாக்கள் ஒரு வயப்பட்டிருந்தால் எந்த ரூபத்திலாவது மீண்டும் மீண்டும் சந்திப்புகளும் பிரிவுகளும் நடந்து கொண்டேயிருக்கும். உலகின் மாயை இது.
“ஊனாலும், உயிராலும் உள்ள பயன் கொளல்” என்று நாவுக்கரசர் சொல்லியருளியுள்ளார். உடம்புக்கும் பயன் உண்டு. உயிருக்கும் பயன் உண்டு. உயிரை நீங்கள் தனியாக காணமுடியாது. உடலோடு சேர்ந்து இருக்கும் போதுதான் உணரமுடியும்.
உயிருடன் கூடிய உடலைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளின் தாக்கங்களை உடல் உள்வாங்கி உயிராகிய ஆன்மாவிற்கு அளித்து அதை செயல்படவைக்கின்றது. உடலிலிருந்து உயிர் நீங்கினால் அது ஜடமாகிறது. சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை உணரமுடியா நிலையில் இருக்கிறது. அதைபிணம் என்று மண்ணுக்குச் சமர்பிக்கின்றோம். மண்ணோடு மண்ணாகிறது.
மூச்சுக் காற்று என்கின்றோம். மூச்சு நின்றுவிட்டது என்கின்றோம். உயிர் உடலை விட்டு நீங்கியதா என்பதை அறிய மூச்சு இருக்கின்றதா என சோதனைச்செய்கின்றோம். அதனால் மூச்சு காற்றுதான் ஆன்மாவா! இல்லை உயிரா! ஏதுமில்லை.
உயிர் போனபின்னும் உள்ளே சென்ற மூச்சு காற்று உடலில் நிரம்பிதான் இருக்கின்றது. ஆனால் வெளியே வந்து உள்ளே செல்லும் செயல் இல்லை. இந்த செயல் ஆன்மாவினுடையது. ஒரு கருவியாக காற்று மூச்சாக வந்து செல்வது ஆன்மா இயக்கத்தில் இருக்கின்றது என நம்மை உணரவைப்பதற்காக. ஆன்மா செயல்பட ஓர் கருவியாக துனைபுரிவது காற்று.
நிகழ்வுகளின் சாதகபாதகங்கள் உயிரின் ஆன்மாவிற்கே! உயிரால் உடம்பு இயங்குகின்றது. உடம்பால் உயிர் உணர்ச்சிகளையும், எழுச்சியும் பெறுகின்றது. எனவே ஆன்மாவின் உயிர் என்றும் எப்போதும் நல்லநிலையில் உலவ நல்ல எண்ணங்கள் நல்ல செயல்கள் செய்து ஆன்மாவின் நலம் பேனுங்கள்.
ஆன்மாவின் ஆதாரம் உயிர். அந்த உயிர் தங்குவதற்கு, உடல் ஆரோக்கியம் வேண்டும். ஆரோக்கியத்திற்கு மௌனம் அவசியமானது. சலனமற்ற மௌனம் பல அர்த்தங்கள் கொண்டது-குருஸ்ரீ பகோரா
5-8.ஆத்மஞானம்!
Written by குருஸ்ரீ பகோராஆத்மஞானம்!
ஒரு விதிக்குட்பட்டு அண்டசராசரமே இயங்குகின்றது என்ற ஞானம் வேண்டும். பேரண்டத்தின் இயக்கத்தை மாற்றமுடியும் என நினைப்பது அஞ்ஞானம். ஒரு பேராற்றலின் நியதிப்படி எல்லாம் நடக்கின்றது. யாரும் அதில் குறுக்கிட முடியாது. ஆசை அடங்கிய மனதிலிருந்துதான் ஒளி பிறக்கின்றது. ஞானம் தெரிகின்றது. ஆசையில்லை எனில் பாவச் செயல்களில்லை.
உடலைவிட்டு ஆன்மா சென்றபின் என்ன ஞானம் வேண்டியிருக்கின்றது! ஒருவன் உயிரோடு இருப்பதே ஞானம் பெறத்தகுதியாகும்! ஞானம் பெற நல்லவனாக இரு! நன்மை செய்! மனிதநேயம் கொண்டிரு! அனைவரிடமும் அன்பாயிரு! அன்பான, மிருதுவான, இனிய, ஆறுதல் தரக்கூடிய எளிய பேச்சுக்கள் பேசு!
கர்வம் கொள்ளாதே! கடுமையான, கோபமான இழிந்த சொற்களைப் பேசாதே! எல்லா உயிர்களிடமும் கருணை உள்ளவனாயிரு! கருணை ஒரு தெய்வீக உயர் குணம். அந்த நற்குணத்தை உயிர்களுக்குத் தொண்டு செய்வதன் மூலம் கொண்டிரு! உண்மையைத்தவிர வேரொன்றிலும் ஆசை வைக்கக்கூடாது. உண்மைக்காகவே உண்மையை விரும்பவேண்டும்.
இவையெல்லாம் ஒருவன் ஞானம்- அத்வைத ஞானம் - ஆத்ம ஞானம் அடைவதற்கு போதுமான படிகள். எல்லா தீர்க்கதரிசிகளும் இதைத்தான் சொல்லி இருக்கின்றார்கள் அவர்தம் பாணியில். மற்றவரின் கருத்துக்கள், ஆலோசனைகள், நம் கையில் கட்டும் கடியாரம்போல மற்றவரின் கடியாரத்துடனும், கருத்துக்களுடனும் ஒத்துப்போக வேண்டும் என்று அவசியமில்லை. நம் கையில் உள்ள கடியாரம் காட்டும் காலம் சரியானது என நாம் நினைப்பதுபோல், நம் கடியாரத்துடன் ஒத்துப்போகும் கடியாரம்போல், நம்மோடு ஒன்றிய கருத்துக்கள், ஒத்துப்போகும் மனிதர்களை கண்டு கொள்! வாழ்வு சுவராஸ்யமாகும்.
ஞானத்திற்குரிய லட்சணங்கள் எட்டாகும். 1.சொல்வதை, கேட்பதை, பார்ப்பதை உடனே கிரகிப்பது, 2. அதை உடனே புத்தியில் நிலை நிறுத்துவது, 3.அதை என்றும் மறவாமல் இருப்பது, 4.கிரகித்ததை பிறருக்கு எடுத்துரைத்தல், 5.அதை புதிய யுக்திகளுடன் சிறப்புடன் கூறுவது, 6.அடுத்தவரின் யுக்திகளை மறுப்பது, 7.ஒருவரின் பேச்சின் பின்னனியில் உள்ள உண்மைகளை புரிவது, 8.அதன் உண்மை நோக்கத்தை உணர்வது என்பனவாகும்.
ஒருவனுக்கு ஞானமடைய நிறைய பயிற்சிகள் தேவைப்படுகின்றது. அதற்கு பல காலம் ஆகலாம். ஆனால் பலகாலம் பயிற்சி என்பது அவரின் உள்ளத்தின் கண்களைத்திறக்க கொடுக்கப்படும் பயிற்சிதான். ஏனெனில் விழி இமைகளை திறந்துவிட்டால் பார்ப்பது என்பது ஒரு கணத்தில் நடந்துவிடும். ஞானம் உதிக்கும்போது உருவங்கள் மறையும். பிரபஞ்சத்தின் உருவமற்ற நிலைகள் உணரப்படும்.
இவ்வுலகில், “அடைவதற்கு ஏதுமில்லை என்பதே ஞானம்! இழப்பதற்கு ஏதுமில்லை என்பதே அறிவு!” அறியாமை சிறிதும் கலக்காத அறிவுதான் ஞானம்.
ஒருவர் இறப்பது எப்படி! அந்த நிகழ்வு எப்படி இருக்கும்! அனுபவித்தவர் யாருமில்லை! அவர்தம் அனுபவத்தை உங்களுக்குக்கூற. உடலிலிருந்து உயிர் எப்படி, எப்போது, எங்கிருந்து பிரியும், யாருக்கும் ஒன்றும் தெரியது. அது புரியாத புதிர்.
இறந்தபின் ஏற்படும் அசையாதன்மை கொண்டுதான் நாம் உணர்கிறோம். எல்லாம் கொண்டிருந்த உடல், அது ஏதுமற்ற நிலையில் இருக்கும்போதுதான் அறிகிறோம். எந்தவித பந்தபாசமும், துயர துக்கங்களும் இல்லா நிலை. சும்மா இருத்தலில், கிடத்தலில் ஓர்சுகம் என்று உயிர்போகும் தருணம் எது? யார் அறிவார்!
நடப்பதை முன்கூட்டி சொல்வது மட்டுமல்ல ஞானம். அதனால் பாதிப்புகள் ஏதும் நடக்காமல், விதியின் வலியை குறைத்து முன்னெச்சரிக்கையாக வேதனையை அகற்ற முயலுதலே ஞானம்.
பந்தயத்தில் ஓடுகின்ற அனைவரும் முதலாவதாக வருவதில்லை. வரவும் முடியாது. யாராவது ஒருவர்தான் வரமுடியும். தேடுபவர்கள் அனைவருக்கும் தெரிவதில்லை. அதற்காக தேடாமலும் இருக்க முடியாது. ஆகவேதான் “தேடுங்கள் கிடைக்கும்” என்றார்கள். தேடுபவர்களுக்குத்தான் தேடல் புரியும், தெரியும், கிடைக்கும். ஞானதாகம், வேட்கையில் வெற்றி என்பது சாதனை அருள்.
எதையெல்லாம் விரும்புகின்றீர்களோ அதையெல்லாம் வெறுத்து ஒதுக்குங்கள். எதையெல்லாம் வெறுக்கின்றீர்களோ அதையெல்லாம் விரும்புங்கள். அப்போதுதான் ஞானம் பிறக்கும், உண்மையில் எதை நேசிக்கின்றீர்கள், எதை வெறுக்கின்றீர்கள் என்று.
உன்னோடு இருக்கும் உயிருள்ள, உயிரற்ற எல்லாவற்றையும் உன்னுடையது என்று நீ நினைக்கும் வரை எதையும் விட்டுக்கொடுக்க நீ தயாரில்லை என பொருள். உலகில் உள்ள எதுவும் உங்களது இல்லை என்று உணரும் நிலையை நீங்கள் அடைந்தால், அந்த பக்குவம் வரும்போது, நீங்கள் விட்டுக்கொடுக்க ஏதும் இருக்காது.
மனிதன் சுயநினைவு, மற்றும் சிந்தனைகளையிழந்து, அவனது கர்மபலன்கள் பிரதானமாகி துன்பம், துயரம், நோய், நொடி, அகாலமரணம் போன்ற அனுபவங்களால் ஒரு சாரமும் இல்லா வாழ்க்கையில் உழன்றுகொண்டு இருக்கின்றான். இது அவனின் வாழ்க்கைப் பயனத்தில் வெளிச்சம் அல்லாத அதாவது ஒரு துளியும் சந்தோஷம் இல்லாத இருண்ட வாழ்க்கைப் பகுதியாகும்.
தன்னைப்பற்றிய உண்மைகளை மனித வாழ்வின் பயணத்தின் முடிவுகளை புரிந்தும் புரியாமலும், அறிந்தும் அறிந்து கொள்ள முயலாதவனாகி வாழ்கின்றான். இந்த அறியாமை எனும் இருள் அகற்றி வாழ்வில் மீண்டும் அல்லது மீதமிருக்கும் பகுதியை அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கையாக வாழ முயற்சிக்கவேண்டும். மனித பிறப்பின் நோக்கங்களை சந்தோஷங்களை அடைய வேண்டும்.
அமைதிக்கு அடிப்படை மனதை ஓர் நிலைப்படுத்துதலே. அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு மனதை அலை பாயவிடாமல் நிலைப்படுத்தப் பழகிக் கொள்ளவேண்டும். அப்போதுதான் உருவமில்லா மனம் உருவத்தின் உள்ளே உள்ள ஆன்மா ஞானம் பெற உதவும்.
இருள் நீங்கி வெளிச்சம் நிறைந்த ஞானம் பெற்ற ஆன்மா- ஆத்மஞானம் அடைய முன்னேறி இறுதியில் அந்த ஆத்மார்த்தமான ஞானம், ஒளிமயமான மகிழ்வுடன்கூடிய அற்புத ஆனந்த சந்தோஷத்தை அடைகின்றது. அதுதான் எல்லை. அதற்குமேல் வேறு என்ன வேண்டும், இந்த பூ உடலின் ஆன்மாவிற்கு! ஒன்றுமில்லை!
சுதந்திரமான உணர்வு நிலைகளுடன், மரணபயமின்றி, எல்லாம் நிறைந்திருக்கின்ற இச்சைகளே இல்லாத சீரான செழிப்புமிகுந்த வளமையுடன் கூடிய வாழ்க்கையில் சந்தோஷம்தவிர வேறு என்ன வேண்டியிருக்கின்றது. தன்னிடமுள்ள அசுர குணங்களை தன் ஞான அறிவால் பஸ்பம் செய்து, அன்பையும், அஹிம்சையையும், அமைதியையும் கொண்டு பிறருக்கு வழிகாட்டியாக விளங்கும்போது அந்த பூத உடலின் ஆன்மா சிறப்படைகின்றது. பூத உடலை நீக்கும்போது அதன் முழுபயனும் அந்த ஆன்மாவிற்கு கிடைக்கின்றது.
ஞானமில்லா மனதையே அசுர பழக்கவழக்கங்கள் ஆக்ரமிக்கின்றன. இந்த தேகசுகங்களை. தேகதர்மத்தை கடந்து வெற்றிபெற முயலுங்கள். எப்படியும் இந்த தேகம் பூமிக்குப் போய்விடும். அப்போது உடலிலிருந்த ஆத்மா நல்வழிக்குச் செல்ல இப்போதிருந்தே உங்கள் உணர்வுகளை விழிப்படையச்செய்து உரிய பாதையை கண்டுகொள்ளுங்கள்.
தனிமை என்ற ஓர் நிலையில்தான் ஓர் ஆன்மா மௌனம் என்ற நிலையை அடையும். அப்போதுதான் மனம் சிறிது சிறிதாக வாழ்வு குறித்த ஞானத்தை அடைய வழிகிடைக்கும். காற்றுக்கு செடி, கொடி, மரங்கள் அசைந்து அதன் பலவீனத்தை காட்டுகிறது, மலை அசையாது உறுதியை காட்டும்.
அதிகம் பேசுபவன் அவனது பலவீனத்தை எல்லோருக்கும் தெரியப்படுத்துகிறான். மௌனியாக இருப்பவன் அவனின் உறுதியை பலத்தைக் காண்பிக்கிறான். பேசாமல் இருப்பது பெரும் திறமையாக இருந்தாலும், தேவைக்கு சுருங்கச் சொல்லி தெளிவுபடுத்தி பெருமையடைகிறான். ஞானிகள் கூறும் சிறு விஷயங்கள்கூட வாழ்வின் ஆதாரமாகிவிடும்.
மரணம் என்ற நிகழ்வை ஏற்றுக் கொள்பவர்களால்தான் இருக்கும் வாழ்வை முழுமையாக ரசிக்கமுடியும். எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற ஞானநிலை புரிந்திருந்தால் அந்த ஆன்மா அதன் ஒவ்வொரு சுவாசத்தையும் அதன் மதிப்பையும் உணர்ந்து அனுபவிக்கமுடியும். உண்ணும் உணவையும், அருந்தும் நீரையும், அதை சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும் அதனால் ரசிக்க முடியும்.
இந்த நிமிடத்தில் நடந்தது, கிடைத்தது, அடைந்தது எதுவும் நிலையானது இல்லை என்று புரிந்தால்தான் கிடைத்ததை அனுபவித்த ரசனையின் ஆழம் புரியும். நீங்கள் வாழும் வீடு, சுற்றியிருக்கும் சுற்றம், நடக்கும் பாதை, தழுவும் காற்று, மேல்படும் வெயில், மழை, பார்த்து ரசிக்கும் சூரிய, சந்திர இயற்கையெல்லாம் இந்த ஆத்மாவின் உடலுக்கு தற்காலிகமானதுதான். அதுபுரிந்தால்தான் அந்த உணர்வு வாழ்வு பயணத்தில் சந்தோஷத்தைக் கண்ட ஆனந்தத்தை ஏற்படுத்தும்.
கரும்பிலிருந்து பெறவேண்டிய நண்மைகள் அனைத்தும் பெற்றுவிட்டால் அதன்பின் கரும்பு சக்கை எனப்படும். அது எரிந்தால் உரியவனுக்கு நஷ்டம் ஏதுமில்லை. அதைப்போன்றே இந்த ஆத்மாவின் உடம்பின் மூலம் பெறவேண்டியதை, ஞானத்தை ஓர் ஆத்மா பெற்றுவிட்டால் அல்லது உணர்ந்துவிட்டால் இந்த உடம்பு என்ன ஆனால் என்ன!
அதற்கு மரண பயமிருக்காது. தன்னை உணர்ந்து கொண்டவன் மரணத்திலிருந்து விடுதலை பெறுகிறான். அவன் இறந்தான் என்றால் அவனின் உடம்பு அசைவற்றுவிட்டது. ஆன்மா இறக்கவில்லை என்பதாகும்.
ஞானம் பெறாதவர்கள்தான் பயப்படுகின்றார்கள். அஞ்சி துடித் துடிக்கின்றனர். மரணம் என்பது முற்றுப்புள்ளியல்ல. ஆன்மா அடுத்து வேறு ஓர் உடலைத் தேடுகின்றது. பலபிறவிகளின் தொடர்ச்சி இப்பிறவி. புதிய சூழலில் தொடர்ச்சி தொடரத்தான் போகிறது. மரணம் துக்கமில்லை. அதில் துயரமில்லை, அது ஒரு புதிய வாசல், வழியோடு காத்திருக்கின்றது, இதில் வருத்தப்பட, துக்கப்பட என்ன இருக்கின்றது.
மரணம் ஓர் உருமாற்றம். உடலின் உயிர்- ஆன்மா வேறு உடலைத் தேடும் நிகழ்வு. ஒரு மார்பிலிருந்து பாலூட்டுதலை தாய் நிறுத்தியதும் அழும் குழந்தைக்கு அடுத்த மார்பைக் காட்டுகின்றபோது அதன் அழுகை நின்றுவிடுகின்றது. இதைப்போன்றதே மரணம். அதன் துயரம். இங்கு ஒர் சிறு இடைவெளியில் எல்லாம் மறந்த நிலையில் மீண்டும் பிறப்பு. அங்கு ஆனந்தத்தை ஏற்படுத்துகின்றது. ஆனால் பிறப்பு எங்கு என்பதுதான் யாருக்கும் தெரிவதில்லை.
எந்த நிலையிலும் மனம் கலங்காமல் மகிழ்ச்சியாக வாழும் ஞானமே உண்மையான ஞானம். மனித மனம் ஞானம் என்ற பக்குவத்தை அடையவேண்டும். நீர் நிரம்பிய குடத்தை கிணற்றுள்ளிருந்து இறைக்கும்போது கணம் தெரிவதில்லை. தண்ணீர் மட்டத்திற்குமேல் வந்தபின் அதன் கணம் நம்மால் உணரப்படுகின்றது. இதுபோன்றே நமது துக்கங்களை ஞானம் என்ற கிணற்றில் அமுக்கிவிட்டால், நமது துக்கம் நீரினுள் இருக்கும் குடத்தைப்போல் கணம் தெரியாமல் பரமலேசாகிவிடும்.
பொதுவாக எல்லோரும் என்றாவது ஓர்நாள் ஓர் விலாசத்தை தேடி அலைந்தவராகத்தான் இருப்பர். அவர்களுக்கு தாங்கள் எங்கிருந்து வந்திருக்கின்றோம், எங்கு இருக்கின்றோம், எங்கு செல்ல வேண்டும் என்பது அனைத்தும் தெரிந்தும் போகுமிடத்திற்கு வழிதெரியாமல் தவிப்பர். ஒரே உண்மை என்னெவெனில் எல்லாம் தெரிந்த அவருக்கு எதோ ஓரு காரணத்தினால் அவர் செல்லும் வழிதான் எது என்று புரியவில்லை.
எந்த வழியில் சென்றால் ஒரு பிரயோஜனமும் இல்லையோ, அந்த வழியில் தெரிந்தே செல்வது கூடாது என்பதுதான் ஞானம். ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் சுய அறிவு ஒளிர்ந்து பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. கண் புலனால் பார்ப்பதை ஆத்மாவிற்கு ஏற்றதா என ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை. அதைக் கவனம் என்ற ஞானமின்றி விட்டு விடுகின்றனர். காண்பது அறிவூட்டும், அந்த அறிவு நமது அனுபவம் மூலமாக, ஆத்மாவின் உணர்வுகளை, செயல்களாக மாற்றிக் கொண்டிருக்கின்றது. அறிவால் ஞானத்தை பெறலாம்.
இறையைத்தேடி அலையும், அடைய நினைக்கும் ஆன்மாக்கள் வழியை தொலைத்து விட்டுத்தான் விழித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் வழியேதும் தவறி விடவில்லை. அவர்கள் வழிகாட்டப்பட வேண்டியவர்கள்! தண்ணீரில் பார்த்து தன்னை தெரிந்து கொள்பவன் தான் என்ற எண்ணமுடையவன். அவனால் விரைவில் ஞானம் அடைய முடியாது. தண்ணீரில் பார்த்தால் அதனுள்ளே ஜீவராசிகளைப் காண்பவனே ஞானம் விரைவில் அடைவான்.
அருள் பெற பக்தனாக இருப்பது சிறப்பு. அந்த பக்தியே அகங்காரமாகித் தன்னைத் தவிர வேறு சிறந்த பக்தர் இல்லை என நினைப்பது ஆணவத்தின் அறிகுறி. எல்லோரையும் போற்றுவதும், நம்மைவிடச் சிறந்த பண்புகள் அவர்களிடம் இருக்கும் என பணிவு கொள்வதுதான் ஞானத்தின் ஓர்நிலை.
ஒருவன் ஞானியாக, யோகியாக ஆகிவிட்டன் என்றால் அவனுக்கு துக்கம் என்று எதுவுமில்லை. இது வேண்டும் அது வேண்டும் என்ற நிலையில்லா ஆனந்த நிலை.அது. எது செய்தாலும் தான், நான், எனக்கு என்ற எண்ணங்களில்லா செயல்பாடுகளை அடைந்திருப்பர். எல்லா செயல்களிலும், பரம காருண்ய உணர்ச்சி, மனிதநேயம் தென்படும். எனவே நிம்மதியற்ற மனித வாழ்வில் உழலாமல் ஒரு ஞானியாக, யோகியாக மாற முயற்சியுங்கள். சமுதாயத்தில் துன்பத்தில் உழலும் மக்களுக்கு உதவி புரியுங்கள். உள்ளத்தில் உண்மையை புரிவதற்கு வழிகாட்டியாக செயல்படுங்கள். மனிதநேயம் மிக்கவராக மாறுங்கள்.
சாஸ்திரங்கள் விவேகம், வைராக்யம், சமம், தமம், முமுக்ஷுத்வம் முதலியனவற்றை ஆத்ம ஞானம் கிடைக்க அடிப்படைத் தகுதிகளாகச் சொல்கின்றன. ஞானம் ஓர் இயல்பான நிலை. புலி வேஷமிட்டவன் புலியைப்போல் நடித்துக் காண்பிப்பான். நிஜப்புலி அதன் போக்கில் செல்லும். ஞானியாக நினைப்பவனின் செயல்கள் மாறுபட்டிருக்கும். உண்மையான ஞானி எந்த ஆர்பாட்டமும் இன்றி உணர்வுமயத்துடன் இயங்குபவராக இருப்பர்.
அந்த ஊர் மக்களின் குறைகளை எல்லாம் தீர்த்து வைக்கப் போவதாக கூறிய ஞானியை சந்தித்தார் யோகி, ஞானியிடம் சுவாமி நீங்கள் நிறைய தவம் செய்து சித்திகள் அடைந்ததாகக் கேள்விப்பட்டேன். அதனால் உங்களைப் பார்த்துப் போக வந்தேன் என்றார். ஞானி உற்சாகத்துடன் என்னைப் பற்றி இந்த ஊருக்கே தெரியும் என தற்புகழ்ச்சி கொண்டார்.
சுவாமி, எதிரே வரும் அந்த மாட்டை கொல்ல முடியுமா! என்றதைக் கேட்ட ஞானி தன் கமண்டலத்திலிருந்து சிறிது ஜலத்தை எடுத்து மந்திரம் உச்சாடனம் செய்து அந்த மாட்டின் மீது தெளிக்க அது அப்படியே சுருண்டு வீழ்ந்தது. யோகி, உங்களுக்கு நிறைய சக்தி உள்ளது, இப்போது அந்த இறந்த மாட்டை உயிர்ப்பிக்க முடியுமா! என்றவுடன் மீண்டும் மந்திரம் உச்சரித்து நீர் தெளித்து அந்த மாட்டை உயிர்ப்பித்தார்.
அப்போது யோகி ஞானியைப் பார்த்து கேட்டார், சுவாமி, நீங்கள் ஒரு மாட்டை இறக்க வைத்தீர், பின்னர் அதையே உயிர் பிழைக்க வைத்தீர், அபரிதமான சக்தியைக் கொண்டுள்ள நீங்கள் அடைந்த பலன் என்ன! மாடு, இந்த மக்கள் அடைந்தது என்ன! என்றதை கேட்டவுடன் ஞானிக்கு சாட்டையால் யாரோ அடித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. தற்புகழ்வுக்காக தன் சக்திகளை விரயமாக்கியது விளங்கியது. ஞானி என்பவர் கூட்டம் சேர்ப்பவராக இருத்தல் கூடாது. வழிகாட்டுபவராக இருத்தல் வேண்டும் என மீண்டும் தெளிவு கொண்டார்.
பொதுவாக சத்தியத்தை எப்போதும் நினைத்துப்பேசி, தர்மங்களை ஆதரித்து, பரமத்தை அறியமுயலுதலே மனிதனில் தேவன் எனச்சொல்வதற்கு உரியவன். பரந்து விரிந்து நிற்கும் அருளின் தன்மையை உணர்ந்தவன், ஞானம் தெளிந்தவன், அதில் இறங்கி நீந்தத் தொடங்கினால் ஆனந்தம். என்றும் எப்போதும் ஆனந்தம். ஆனந்தமான சந்தோஷம்.
அதை புரிந்துகொள்ள, அந்த ஞானத்தை நம்முள் நிலைநிறுத்த பாவனை அவசியமானது. எங்கும் எல்லாமுமாய் காணப்படுகிறான். எல்லாமுமாய் இருக்கின்றான். உணர்வுகளின் உள்ளே புலன்களினால் காணமுடியா நிலையில் இருக்கின்றான். உயிருடன் சாட்சியாக இருக்கின்றான். இப்படி பாவனை செய்தால் இறைவனை அடையலாம் என்கிறது திவ்யபிரபந்தம். இதை பிரம்ம பாவனை என்பர் வேதாந்திகள்.
இந்துமதத்தில் இறைவனை தாய், தந்தையாக பாவித்து, பாவனை செய்து ஞானமடைய வழிகாட்டியுள்ளனர். அபிராமியின் மைந்தனாக தன்னை பாவனை செய்து வழிபடுகிறார் அபிராமிபட்டர். ஞானயோகம் பயின்றுவிட்டால் இன்பம்தரும் மயக்கமும், துன்பம் தரும் துக்க கலக்கங்களும் ஒரு ஆன்மாவை விட்டு விலகிவிடும் என்கிறது பகவத்கீதை.
வேதசாஸ்திரங்களில் தேர்ந்தவரும், தவசீலருமான அந்த குரு தன் சீடர்களிடம், காசியைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லி, தான் காசியில் இறக்க விரும்புவதாகவும் தன் அந்திமக் காலம் நெருங்கிவிட்டது எனவும் கூறினார். உடனே சீடர்கள் அவரை ஒரு பல்லக்கில் தூக்கிக் கொண்டு காசி செல்லும் வழியில், ஓர் ஊரின் பெயரைக் கேட்டவுடன் அவரின் உயிர் பிரிந்தது. அதன் பலனாக மறுபிறவியில் அந்த ஊரில் பறையறைபவனின் மகனாகப் பிறந்தார்.
முன்ஜன்ம பலன்களால் நல்லறிவுடன் குழந்தை வளர்ந்தது வயது 10ஐ அடைந்தது. அந்த ஊர் வழக்கப்படி வீட்டிற்கு ஓருவர் அரண்மனைக்கு பறையறைந்து ஓர் இரவு காவல் காக்கச் செல்ல வேண்டும். அன்று அவர்கள் முறை. அவனின் தந்தை வெளியில் சென்றபோது மழை பெய்து ஆற்றில் வெள்ளம் பெருகவே வீட்டிற்கு வரமுடியவில்லை. தந்தை பணிக்குச் செல்ல வில்லை என்றால் அது, அரண்மணைக் குற்றம் ஆகும் என்பதால் சிறுவன் பணிக்குச் சென்று பறையுடன் சுலோகங்களையும் பாடினான். நடுநிசியில் அதைக்கேட்ட மன்னரின் மனம் மகிழ்வுற்று, அவனுக்கு அரசாங்கவேலை தர ஆனையிட்டார். அச்சிறுவனோ மரணதண்டனை நிறைவேற்றும் பணியைக் கேட்டு, மேற்கொண்டு, தண்டனை பெறும் கைதிகளை இறை படங்களுக்குமுன் நிறுத்தி தெய்வச் சிந்தனைப் பாடல்களைப் பாடும்போது, அவர்கள் மெய்மறந்திருக்கும் வேளையில் தண்டணையை நிறவேற்றி விடுவான்.
தெய்வச் சிந்தனையில் இருக்கும்போது உயிர் நீத்தவரெல்லாம் சொர்க்கம் சென்றனர். இதனால் நரகத்தின் வேலைப்பளு குறைந்தது. எமன் மும்மூர்த்திகளிடம் முறையிட, அவர்கள் சிறுவனிடம் அவன் செயலுக்குக் காரணம் கேட்க அவன், தன் முற்பிறவியில் இறக்கும்போது இறை சிந்தனையின்றி ஓர் ஊரின் பெயரைக்கேட்டபடி இறந்ததால் அந்த ஊரில் பிறக்க நேர்ந்தது. அதுபோன்ற நிலை இவர்களுக்கு வேண்டாம்,
இறக்கும் தருவாயில் இறை நாமங்களைக்கேட்டு நற்கதியடையட்டுமே என்பதால்தான் இப்படிச்செய்தேன் என்றான். மும்மூர்த்திகள் அவனுக்கு மேட்சம் அளித்தனர். வாழ்வில் ஞானம் ஏற்படவில்லை என்றாலும் இறக்கும்போதாவது ஒருவன் இறையை நினைத்தால் அதன் பலன் அந்த ஆத்மாவிற்கு கிடைக்கும்.
நாம் அனைவரும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை பார்த்திருப்போம். எப்படி சாய்த்தாலும் அது நிமிர்ந்துவிடும். அதன் அமைப்பு அப்படி. அதுசரி. அதில் நாம் தெரிந்து கொள்ள ஓர் உண்மை மறைந்து இருக்கின்றது. உலகம் எவ்வளவு உருண்டாலும், அதை யார் எப்படிக் கவிழ்த்தாலும், எவர் உதவியும் இன்றி நிமிர்ந்து தன் நிலைக்கு திரும்பிவிடும் உண்மையது. நிலையானது, நிலையில்லாதது, நடுநிலையானது என மூன்று நிலைகளிலிருந்தாலும் முடிவில் ஓர் சமநிலைக்கு வரவேண்டும்.
அதைப்போன்றே யார் எப்படிக் கவிழ்த்தாலும், துன்ப துயரங்களை அளித்தாலும், எப்படிப்பட்ட பாதிப்புகள் இருந்தாலும், அதிலிருந்து விடுபட்டு, ஆன்மாவின் மனமும், எண்ணங்களும் சமநிலைக்கு வரவேண்டும். மனதினை ஓர் நிலைப்படுத்தவேண்டும் என்ற தத்துவம் அதில் உள்ளது.
எரியும் தீக்குச்சிமேல் பெரிய மரக்கட்டையை வைத்தால் தீ பற்றாது. அனைந்துவிடும். ஆனால் ஒருகாடே பற்றி எரியும்போது அதில் வாழை மரம் கூட எரிந்துவிடும். அப்படித்தான் ஒருவரிடம் ஆன்மீக ஞானம் மலரும்போது உணவில் இருந்து எல்லா விஷயங்களிலும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். விதிமுறைகள், குரு, அனுஷ்டானம் ஆகியவைகளை மதித்து கடைபிடிக்க வேண்டும். இல்லையெனில் தீக்குச்சிமேல் மரக்கட்டை விழுந்ததுபோலாகிவிடும். ஆன்மீகதாகம் மலர்ந்து இறை ஒளி பிழம்பாக ஒளிரும்போது எல்லாம் மறைந்துவிடும். பாரம்பர்ய பழக்க வழக்கங்களைக் கடைபிடிக்க வேண்டியிருக்காது. ஞானம் இறையை காண்பதற்கு மட்டும், அதற்குப்பின் அருளாளனின் பொறுப்பு உனக்கு என்ன வேண்டும் என்பது.
ஒருவர் அவரின் செய்கையால் அவரே தனக்குத்தானே ஏற்படுத்திக் கொள்ளும் நிலைதான் விதி எனப்படும். இதை அறியும் ஞானமே ஞானத்திலெல்லாம் உயர்ந்த ஞானம்! இந்த ஞானத்தை பெற்றபின் ஒருவர் இனிமேலும் அடைய வேண்டிய ஞானம் வேறு இல்லை என்பது திண்ணம். எனவே உங்கள் செயல்கள் செயல்பாடாக மாறுமுன் சிந்தியுங்கள்-குருஸ்ரீ பகோரா.
5-7,பிரார்த்தணை!
Written by குருஸ்ரீ பகோராபிரார்த்தணை
பிரார்த்தனை மூலம் எதையும் கேட்டுப்பெறுவது அன்று, சுற்றுச்சூழலால் குழம்பியுள்ள மனம் அமைதி தேடுவதாகும். குழப்பத்திலிருந்து விடுபட மன உளைச்சலற்ற உறுதியான எண்ணங்கள், செயல்களுக்கு பிரார்த்தனையானது நம்பிக்கைதனை, வலிமைதனை தரும், அதிர்வுகள் எல்லா இடங்களிலும் பரவியுள்ளன.
கடந்த, நிகழ், எதிர்காலம் என அதிர்வுகள் நிறைந்துள்ள மண்டலத்தில் நம் மனம் ஓர் நிலைப்பட்டால்தான் நமக்கு தேவையான நம் பிரச்சனைக்குரிய சரியான அதிர்வுகள் முறையான செய்திகளாக நமக்கு கிடைக்கும். நம்மனம் சிந்திக்க செயல் வடிவம் பிடிக்கும்.
பொதுவாக கோவில்களை அதிர்வுகள் அதிகமுள்ள இடங்களாக நம் முன்னோர்கள் அமைத்துள்ளனர். கோவில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்வதால் மனம் அமைதி பெறும். அப்போது நமக்கு வேண்டிய அதிர்வுகள் நம்மை வந்தடையும்.
நாம் செயல் பட நிம்மதியும் அதனால் சந்தோஷமும் கிடைக்கும். மனிதகுலத்திற்கு தேவையான இந்தப்பணி கோவில்களில் சிறப்பாக நடைபெறுவதால்தான் “கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என பகன்றுள்ளனர்.
முன்செய்தவினைகளின் தீயகர்மபலன்களை, நானே அனுபவிக்க வேண்டும், அந்த பலன்கள் என் சந்ததியினருக்கு செல்ல வேண்டாம், அதன் தாக்கங்களின் வேதனையை குறைத்து, அதை தாங்கும் சக்தியை அளிக்கவேண்டும் என உளமொன்றி பிரார்த்தனை செய்தால் அதற்குரிய பலன் கிடைக்கும்.
ஒரு விவசாயி விநாயகப் பெருமானிடம் வந்து 'பகவானே, மழையை நம்பி பயிர் விதைத்திருக்கின்றேன். மழை பெய்யச் செய்யுங்கள். மழை பெய்தால் தேங்காய் உடைக்கின்றேன்' என வேண்டினார்.
சிறிது நேரத்தில் இன்னெருவர் வந்து 'பகவானே செங்கல் சூளை போட்டிருக்கின்றேன், மழைபெய்தால் என் வியாபாரம் கெட்டு விடும், ஒரு வாரத்திற்கு மழை பெய்யக்கூடாது, மழை பெய்யாவிடில் உங்களுக்கு தேங்காய் உடைக்கின்றேன்' என வேண்டினான்.
இருவிதமான வேண்டுகோள்கள். பிள்ளையார் யாருக்கு சாதகமாகச் செய்வார். அவர் மனைவி சித்தி, புத்தி இருவருக்கும் கருத்துவேறுபாடு. ஆளுக்கு ஒருவரை சார்ந்து பேசினர். பிள்ளையார் மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் எனக்கு எப்படியும் தேங்காய் கிடைத்து விடும் எனச் சிரித்தார்,
கடவுளை பொதுவானவராக அன்றி, தன்னைச் சுற்றியிருக்கின்ற கூட்டத்திற்கு வேண்டியது செய்யும் கட்சித்தலைவராக நினைக்கக் கூடாது. 'எல்லோரையும் வாழ்விக்க ஒருபொது நியதி உண்டு, விவசாயி சம்பாதிக்க மழைக்காலம் உள்ளது. சூளைக்காரன் சம்பாதிக்க வெய்யில் காலம் உள்ளது.
அந்தந்த காலத்தை அவரவர்கள் பயன்படுத்தாமல் பேராசையினால் காலமற்ற காலத்தில் காரியங்கள் நடைபெற கடவுளின் துணை நாடுவது சரியன்று, 'எல்லோருக்கும் பொதுவானவர் கடவுள்' என்ற உண்மையை புரிந்து பிரார்த்தனைகளும் வேண்டுகோள்களும் நியாயமானவைகளாக இருக்க வேண்டும்.
என்றைக்கு உண்மையான பிரார்த்திக்கும் திறமை உங்களுக்கு வந்துவிடுகிறதோ, அப்போது நீங்கள் கோயில் தேடிப்போவதில்லை, நீங்கள் இருக்குமிடத்தில் கோயில் இருக்கும். கோவில் உங்களைச் சுற்றி சுழன்று, உங்களுக்கான ஒளிமண்டலமாகத் திகழும். உண்மையான பக்தன் கால்பதிக்கும் இடம் இறை இல்லமாக மாறும். மனதிற்குள் கடவுள் இருக்கிறார் என்று உணர்ந்தால் உங்கள் சக்தி புலப்படும்.
யுத்தமோ! விளையாட்டோ! போட்டி என வந்துவிட்டால் இரண்டில் ஒன்றுதான். ஒருவெற்றி! அடுத்து இரண்டாம் இடம். முதலிடத்தினின்று தோல்வி! வெற்றிக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டால் பிரார்த்தனையின் ஆழம், ஈடுபாடு, நீடித்தநேரம் ஆகியவற்றின் அடிப்படையிலோ, எளிய வேண்டுதலின் அடிப்படையிலோ, படோபடமான ஆரவார பிரார்த்தனையிலோ அருள் கிடைப்பதில்லை. பிரார்த்தனை செய்பவரின் நிலைப்பாடு குறித்து ஆராய்ப்படுகின்றது. அவரின் நியாயம், தர்மங்களின் படி தராசின் முள் சாய்ந்து தீர்ப்பு பிரார்த்தனைதாரர்களுக்கு அருளப்படுகின்றது.
எனக்கு அதைக்கொடு, இதைக் கொடு, என்று கோரிக்கைகள் வைத்து பிரார்த்தனையின்போது வேண்டுவது உண்மையான பிரார்த்தனை இல்லை. அது தன்னலம் கருதி பிச்சை எடுப்பதற்கு சமம். மனிதநேயத்துடன் மற்றவர் நலம், மனநலம் கேட்டு மணமுருகி வேண்டுவது தான் பிரார்த்தனை. இறைவனிடம் பக்தி கொள். யாசிக்காதே. உலக உயிர்களின்மேல் அன்பை பொழிவதே பிரார்த்தனையின் சிறப்பு.
ஸ்ரீ கண்ணனை, நடக்கும் போரில் தங்கள் பக்கம் இருக்க வேண்டும் எனகேட்டுக் கொள்வதற்காக, துரியோதணன் சார்பில் துரியோதனும், தருமன் சார்பில் விஜயனும் சென்றனர். முன் சென்ற துரியோதணன் கிருஷ்ணன் துயில் கொண்டிருப்பதால் முழித்ததும் தன்னைதான் முதலில் பார்க்கவேண்டும் என்ற நினைவில் தலையருகில் அமர்ந்திருந்தான். பின் சென்ற பார்த்திபன் காலடியில் அமர்ந்து கொண்டான். மாயக் கண்ணன் இதை உணர்ந்து துயிலில் இருந்து எழுந்து அமருவதுபோல் அமர்ந்து முதலில் அர்ச்சுனனை நோக்கினார். பின்னர் துரியோதணனை நோக்கினார்.
நான் கண்டது முதலில் அர்ச்சுணனை எனவே, அர்ச்சுணா வந்த விபரம்சொல்! என்றார். அவனும் போரில் தாங்கள் எங்களுடன் இருக்க வேண்டும் என்றான். ஆனால் துரியோதணன் அவரின் பலம் பொருந்திய சேனைகளைத் தந்து உதவுமாறு கேட்டான்.
இருவரின் கோரிக்கைகளையும் ஏற்று சம்மதம் சொன்னார் ஸ்ரீகிருஷ்ணர். போரில் ஸ்ரீகிருஷ்ணரது சேனைகளைவிட அவரது பிரசண்ணம் எந்த அளவிற்கு பாண்டவர்களுக்கு பயன்பட்டது, தர்மங்களும், நியாயங்களும் வெற்றிபெற உதவியது என்பதை ‘மகாபாரதம்’ நமக்கு புரியவைக்கின்றது. எனவே உங்கள் பிரார்த்தனைகளில் உண்மை, நியாயங்கள் இருக்கவேண்டும். அப்போதுதான் பிரார்த்தனைகளின் பலன் கிட்டும்.
ஒருவரின் வளர்ச்சியில் பொறாமைகொண்டு நாம் பிரார்த்தனையில் ஈடுபாடு கொள்ளக்கூடாது. ஒருவரின் வளர்ச்சிக்குப் பின்னால் எத்தனையோ காரணகாரியங்கள் நிகழ்வுகள் அவரின் வெற்றிக்கு வழிவகுக்கின்றன. அவைகளை ஆராயாமல் போட்டியின் காரணமாக பொறாமைகொண்டு நோக்கினால் உண்மைகள் புலப்படாது. அவரின் வெற்றியின் ரகசியம் புலன்களுக்கு புரியாமல் போய்விடும்.
ஒருவரின் நல்லெண்ணங்கள், தீவிர சிந்தனைகள், கர்மபலன், செயல்பாடுகளில் தீவிரமுனைப்பு எனப்பல காரணங்களால் வெற்றிகள் கிடைத்திருக்கலாம். அந்த வெற்றிக்காண வழிமுறைகளைப் பற்றி யோசனை செய்து அதைப் பின்பற்ற முயற்சி செய்யவேண்டும். அதற்குப்பின்தான் பிரார்த்தனையில் ஈடுபாடும் அதன் பலாபலன்களும்.
பிரார்த்தனை என்பது அருளாளரை நம் பக்கம் ஈர்ப்பது என்று நினையாமல், நாம் கடவுளின் அருகில் இருக்க பிரார்த்திக்க வேண்டும். மேலும் பிரார்த்தனையில் இது வேண்டும் அது வேண்டும் என கோரிக்கைகள் வைப்பதைவிடுத்து, மரணத்திற்கு நான் தயார், அதுவரை எனக்கு வேண்டியதை நீயே கொடு எனக்கேட்பது சிறப்பு. உன்கையினால் பொருள்களை அள்ளும்போது உன்கைக்குள் இருப்பதைவிட, ஒருவர் அதே பொருளை அள்ளி உன்கைநிறைய வைப்பது, கொடுப்பது உன்கையில் அதிகமாக இருக்கும். அதேபோன்றுதான் அருளாளர் அருள்வதும். உனக்கு தேவையானது தேவையான சமயத்தில், ஏன் தேவைக்கு அதிகமாகவே கிடைக்கும்.
நீங்கள் விழித்திருக்கும்போது கனவுகள் பொய்யாகிறது. கனவு கானும்போது விழிப்பு பொய்யாகிறது. ஆழ்ந்த தூக்கத்தில் கனவு, விழிப்பு இரண்டுமே பொய்யாகிறது. பொதுவாக வாழ்வு பொய்மையில் மெய்மைகான விழைகிறது. மெய்யான உண்மைகளைக் காண அனுபவிக்க தினமும் பிரார்த்தனை உதவும். பிரார்த்தனை மெய்யான வாழ்வுக்காக முழு நம்பிக்கையுடன் நடை பெறவேண்டும். அப்போதுதான் அதன் பலன் தெரியவரும்.
துன்பங்களும், சோதனைகளும் நெருங்கும்போதும், உங்கள் உணர்வுகள் கோபத்தின் வயப்படும்போதும், பிரார்த்தனை செய்யுங்கள். முக்கியமாக நீங்கள் அடைந்த சந்தோஷத்திற்கு நன்றி செலுத்தி, சந்தோஷம் மீண்டும் மீண்டும் கிடைத்திட வணங்குங்கள்.
மூடநம்பிக்கை: மனிதனை மனிதன் வணங்குகின்றான். ஏன்! மதிப்புள்ள பெரியோர்களை ஞானிகளை வணங்குதல் முறையே! எல்லோரிடமும் வணக்கம்கூறி பணிவுடன் இருத்தலும் நன்றே! ஆனால் மறைமுக எண்ணங்களுடன் தன் சுயலாபத்துக்காக ஒருவரைத் துதிப்பதால் தனக்கு பெரும் நன்மை கிடைக்கும் என்றநோக்கில் மனிதனை மனிதன் வணங்குதல் கூடாது! அது முற்றிலும் தவறு.
ஓர் அரசன் ஓர் ஞானியின் காலில் விழுந்து தன்தலை அவர் பாதத்தில் படியும் படி வணங்கினான். ஏதும் புரியாத சேனாபதி இதைப்பற்றி கேட்க, மன்னர் தனக்கு ஓர் ஆட்டின் தலை, ஓர் புலித்தலை, ஓர் மனிதத் தலை கொண்டுவர பணித்தார்.
ஆட்டின் தலை சுலபமாகக் கிடைத்தது. புலியின் தலையை வேட்டையாடி பெற்றார். மனிதத்தலை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மயானத்தில் இறந்து கிடந்த ஓர் உடலிலிருந்து தலையைப் பெற்றார். அதை மன்னரிடம் காட்ட அவர் அவைகளை விற்று வரும்படி கூறினார்.
ஆட்டுத்தலை விரைவில் உணவுக்காக விற்றது. புலியின் தலை அலங்காரத்திற்காக வாங்கப்பட்டது. மனிதனின் தலையை யாரும் வாங்கவில்லை. இத்தகவலை அரசனிடம் கூற அவர் அதை வாங்குபவருக்கு பணம் என அறிவித்தும் யாரும் வாங்க முன் வரவில்லை. மன்னர், சேனாதிபதியாரிடம், ‘யாரும் வாங்க முன்வராத மதிப்பில்லாத இந்த மனிதத் தலை மாபொரும் துறவிகளின், ஞானிகளின் காலடியில் வைத்து வணங்குவதே அதற்குரிய சிறப்பு’ என்றார்.
அழியும், மண்ணாகிப்போகும் மனித உடலை வணங்கும்போது அதிர்வுகளைக் கொண்ட ஓர் கல்லை வணங்குவதில் தவறில்லை. அதுவும் அந்த அதிர்வுகள் மனிதனுக்கு மிகவும் பயனுள்ளவையாக நன்மைகள் பயப்பனவாக இருக்கும்போது அங்கு சென்று அந்த கல்லுருவை மதித்து வணங்குவதில் தவறில்லை.
ஒரு மன்னர் இந்து மதத்தில் பக்தி கொண்டிருந்தார். ஆணால் அவருக்கு உருவ வழிபாட்டில் நம்பிக்கையில்லை. ஒரு சமயம் பக்திமான் ஒருவர் மன்னரின் அரன்மணையில் தங்க வேண்டியிருந்தது. அவரிடம் விக்ரக ஆராதனையைக் கண்டித்து பேசினார் அரசர். பொறுமையாகக் கேட்டார் பக்திமான்.
மறுநாள் பக்திமானை பார்க்க வந்த ராஜவிசுவாசிகளிடம் என் மீது அன்பு வைத்திருக்கின்றீர்கள், எனக்காக எதுவும் செய்வீர்களா என்று கேட்டு அவர்களிடம், என் மீது காறி எச்சிலை உமியுங்கள் என்றார். அவர்கள் நீங்கள் அரசரின் மரியாதைக்கும் எங்கள் மரியாதைக்கும் உரியவர், நாங்கள் அவ்வாறு செய்ய முடியாது என்றனர். அவ்வாறு எனில் மனித உருவத்தை மதிக்கின்றீர்கள் மகிழ்ச்சி!
உருவமற்ற காகிதத்தில் துப்புவீர்களா எனக் கேட்டார். சரி! என்ற அவர்களிடம் மன்னரின் படம் உள்ள ஒரு பேப்பரில் உமிழச்சொல்ல அவர்கள் திகைத்தனர். அதில் அரசர் உருவம் உள்ளது. அதை அவமதிப்பதாகும் என்றனர். இதுகூடத் தெரியாமல் எப்படி கூறுகின்றீர்கள் என்றார்கள். அழியும் பேப்பரில் உள்ள உருவத்திற்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை பற்றி உங்கள் மன்னரிடம் கூறுங்கள் என்றார். இச்செய்தி கேட்ட மன்னர் அன்று முதல் உருவ வழிபாட்டை மனதார ஏற்றுக்கொண்டார்.
எங்கும் நிறைந்திருக்கும் இறைவனுக்கு ஆலயங்கள் எதற்கு! நிம்மதிக்காக சொத்து, மனைவி, நிலம், வீடு, பொருள் சேர்த்தாலும், மனிதனுக்கு தன் மனதை ஓர்நிலைப்படுத்த ஓர் இடம், தன் துயரங்களைப் பொறுமையாகக் கேட்க ஓர் உருவம் தேவைப்படுகின்றது. நிலத்தின் நீரோட்டங்கள் எல்லா இடத்தில் இருந்தாலும், ஒரு இடத்தின் வழியாக ஊற்றாக வெளிப்படுகின்றது, தாய்ப்பால் சுரக்கும் உடம்பில் இரத்த ஓட்டமிருந்தாலும் மடிவழியே வரும்போதுதான் பாலாக வெளிவருகின்றது.
அன்பு, கருணை சுரக்குமிடம் ஆலயங்கள். எல்லா மதத்திலும் இந்த பொது கொள்கை பின்பற்றப் படுகின்றது. புனிதம் எனக்கருதி ஓர் இடத்தை தேர்ந்தெடுத்து, ஓர் உருவத்தை நிலைநிறுத்தினால், மனித சமுதாயத்தின் அங்கங்கள் தன் மனம் குழம்பியபோது தெளிவுபெற, ஆறுதல் அடைய அந்த புனிதத்தை நாடுகின்றது. அது ஒரு புகழிடமாகிவிடுகிறது.
எந்த கோணத்தில் இருந்தாலும் மனித ஆன்மாவிற்கு பயணம் முடியும்வரை துன்பமாகத் தெரிகின்றது. அதிலிருந்து விடுபட ஓர் புகழிடம் தேடுகிறான். தனக்கு அடைக்கலம், ஆறுதல்தர யாராவது இருக்கின்றார்களா எனத் தேடுகின்றான்.
தன்னை சுற்றியுள்ள ஆன்மாக்களிடமிருந்து ஏதும் கிடைக்காது என்ற ஓர் நிலையில் அவன் இறையைத் தேடுகின்றான். அங்கு அவன் குறைகளை சொல்லி விடுதலிலேயே நிம்மதி காண்கின்றான். மூடநம்பிக்கை என்றும், மதபேதங்கள் என்றும் இதில் ஏதுமில்லை. எல்லாம் ஓர் நம்பிக்கையே! உடலும் மனமும் உள்ளத்தின் சக்தியோடு கூர்ந்து சிந்தித்து செயல்படும்போது வேறுபரிமாணத்திற்கு சென்றுவிடுவீர்கள்-குருஸ்ரீ பகோரா.
5-6.தவம்,பக்தி!
Written by குருஸ்ரீ பகோராதவம்,பக்தி!
ஒரு சாலையில் ஆடுமாடுகளை வழிநடத்தி கட்டுக்கோப்புடன் செல்வது போல சிரமமானது தவம் செய்வது! அதே சாலையில் ஒர் பசுமாட்டை எவ்வளவு சுலபமாக அழைத்துச் செல்லமுடியுமோ அதைப் போன்றது பக்தி மார்க்கம்! அன்பான இறைவனை அடைய பக்தி மார்க்கமே சிறந்தது! மழையையும், காற்றையும், வெய்யிலையும் ரசிக்கத் தெரிய வேண்டும். நான் எந்த இடத்திற்கும் யாருக்கும் சொந்தமில்லை என எண்ணத் தொடங்குதலே பேரின்ப பேற்றின் முதல்படி. நாம் (ஆன்மா) வாழ்ந்த வீடு (உடல்) விட்டு அகலும்போது வீடு (பேறு) நமக்கு கிடைக்கின்றது.
தாய்ப்பூனை தன் குட்டிகளை அவ்வப்போது சூழ்நிலைக்கு தகுந்தவாறு இடமாற்றம் செய்யும். எங்கிருந்தாலும் தன் குட்டியின் அழைப்புக்கு வந்துவிடும். அதைப்போலவே இறைவன் நம்மை ஆங்காங்கே வைத்துள்ளான். நாம் நம் கடமையைச் செய்து இறைவனை மனத்தால் ஒன்றி அழைத்தால் நிச்சயம் அந்த குரலுக்கு பலன் உண்டு!
மனுசாஸ்திரம் மனித ஆன்மாக்கள் செய்ய வேண்டியது 1.தேவயக்ஞம்- இறைவனுக்கு பூஜை, 2.ரிஷியக்ஞம்- சாஸ்திரங்களைப் படித்து போதித்தல், 3.பித்ருயக்ஞம்- முன்னோர்களுக்கு தர்பணம், 4.நரயக்ஞம்- மனிதத்தொண்டு, 5.பூதயக்ஞம்-பிற உயிர்களுக்கு உதவுதல் என பட்டியலிட்டுள்ளது.
வேதங்களை படித்தவர்களால், உண்மையை உணர்ந்தவர்களால் உருவாக்கப்பட்டது வழிபாட்டு முறைகள், அனுஷ்டானங்கள். அவைகள் பொய்யன்று. ஒருவர் சொன்னார் என்பதற்காக வழிபாட்டினை விருப்பப்படி மேற்கொள்ளக்கூடாது. சாத்திர பூர்வமற்ற சம்பிரதாயம் தவறிய வழிபாடுகள் உருவாகி விடுகின்றது. சரியான வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி தூய்மையான அன்புடன் கடவுளை நெருங்குவது, அறிந்து கொள்வது ஒவ்வொருவர் கடமை. எல்லா உயிர்களுக்கும் இந்த தாக்கம் ஓர் நிலையில் ஏற்படுகின்றது.
எல்லா உயிர்களிலும் உள்ளது ஆன்மாவே! அவைகள் ஓர்நிலையில் அருள் பெற விரும்புகின்றன. அதை நாடி அருள் பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆந்தை-கூகையூரிலும், ஆமை-காஞ்சியிலும். உடும்பு-மாகறலிலும். எறும்புகள்-திருவெறும்பூரிலும், ஒட்டகம்-நெடுங்களத்திலும், கரிக்குருவி(வலியன்)-திருவலிதாயத்திலும். கிளி-சேலத்திலும், குதிரை-மங்கலக்குடியிலும். குயில்-திருக்கோழம்பத்திலும், குரங்கு-தென்குரங்காடுதுறை, குரக்குத்தளி, குரங்கனில் முட்டம், வடகுரங்காடுதுறையிலும், கீரி-ஈழநாட்டிலும் (கீரிமலை). சக்ரவாகப்பறவைகள்-சக்கரப்பள்ளியிலும்,சிலந்தி+ யாணை+ பாம்பு-திருக்காளத்தியிலும். சேவல்-உறையூரிலும். தேனீக்கள்-நன்னிலத்திலும், நண்டு-திருந்துதேவன்குடியிலும். பறவைகூட்டம்-புறவார் பனங்காட்டூர், திருவோத்தூர், எறும்பூரிலும். முத்துசிப்பி- காஞ்சியிலும், மான்- மப்பேட்டிலும், மீன்-காஞ்சியிலும், மயில்-மயிலாப்பூரிலும், யாணையும், சிலந்தியும் திருவாணைக்காவிலும் வழிபட்டு அருள் பெற்றதாக வரலாறு தெரிவிக்கின்றது.
உயிர்கள் எல்லாவற்றிலும் கடவுளின் அம்சம் உள்ளது. உடலில் உள்ளே கடவுள் இருப்பதால் அவரின் அம்சம் நம் உடலில் இருப்பது சரிதானே! முன்னோர்களின் அம்சம்போல! இதைப் புரிந்துகொள்ள நாட்கள் ஆகின்றது. “புகை தெரிந்தால் அங்கு நெருப்பு இருக்கவேண்டும் என்பது நியதி.” அதைப்போன்றே ஓர் அனுமானம் கடவுளைப்பற்றி தெரியவரும்.
ஆனால் அனுஷ்டானங்களை, வழிபாட்டு முறைகளை அறியாமல் அவற்றிற்கு முற்றிலும் எதிர்மறையாக செயல்பட்டு இறைவனை அடைந்துள்ளார்கள் என்பதற்கு கண்ணப்பநாயனார் சரித்திரம் சான்று. எந்த விதமான பக்தி உயர்ந்தது என உண்மையான பக்தி சோதித்து பார்க்காது. பக்தி என்பது சத்யத்தின் வாசல். குழைந்து, கனிந்து, பரமானந்தமாக நிற்கின்ற நிலை. அந்த நிலையில் கண்ணப்பருக்கு இறை தரிசனம் கிடைத்தது. இறைவனுக்கு கொடுக்கின்ற பொருள் முக்கியமல்ல. கொடுக்கின்ற மனோநிலை மிகமிக முக்கியமானது.
அங்கே தூய்மையான தன்னலமற்ற அன்பு, மனிதநேயம் தெரிந்தது. அந்த சரித்திரம் போல் எல்லோரும் கடைபிடிக்கமுடியுமா? என்பது சந்தேகமே! எனவேதான் வழிமுறைகள் படிப்படியாக இறைவனை நெருங்க அனுஷ்டானங்கள் தோன்றியது எனலாம். ஆசார அனுஷ்டானங்களைப் புரிந்து என்ன செய்கின்றோம் என உணர்ந்து, எதைச் செய்தாலும் மனம் ஒன்றிச் செய்தல் சிறப்பாகும்.
சிறுதொண்டநாயனாரும், அவர் மனைவி திருவெண்காட்டு நங்கையாரும் தங்கள் மகனை அரிந்து கறிசமைத்து அடியவராக வந்து பிள்ளைக்கறிக்கேட்ட பெருமானுக்கு படைத்தது யாராலும் மறக்கமுடியாத நிகழ்வு. உலகத் தந்தையான இறை தங்கள் குழைந்தையையும் காப்பான் என நம்பினார்கள். நம்பினோர் கைவிடப்படார். சொந்தக் குழந்தை பாலகனை அரிந்து சமைக்கும் செயல் எவ்வளவு பெரிய அரிய பக்தி நம்பிக்கை இறைமேல் என்பதை விளக்குகின்றது.
அறிவினால் சாதனை படைக்கும்போது, மகிழ்ச்சியும் பெருமையும் தோன்றுவது இயற்கை. ஆனால் நமக்கு வேண்டுவது நிறைவும் அமைதியும் தரும் இன்பம். கவர்ச்சியை மனம் நாடக்கூடாது. நம் அனுபவத்திற்கு அப்பால் உள்ள ஒன்றை நாம் தேடக்குறிக்கோள் கொள்ளவேண்டும். நமக்கு அருகில், நம்மைச்சுற்றியுள்ள நிகழ்வுகளிருந்து வெற்றிபெருவது மட்டும் குறிக்கோள் அல்ல. வெகுதூரத்தில் நாம் அடையமுடியாத நிலையில் இருப்பதை அடைய முயற்சி செய்வதுதான் சிறந்த குறிக்கோளாகும்.
உலகப் பொருள்களை எல்லாம் உங்கள் முயற்சியால் எளிதில் அடையலாம். எளிதில் அடையமுடியாதது இறையருள். அதற்காக முடியவே முடியாது என்று அர்த்தமில்லை. முயற்சி, கடினமான முயற்சிகளால் சாதனை படைக்கமுடியும். இறக்கை முளைக்காத பறவைக் குஞ்சுகள் தாய் பறவைக்காகவும், கட்டிப்போட்ட இளங்கன்றுக்குட்டி தாய்ப் பசுவின் மடிக்காகவும் காத்திருப்பதுபோல் அருளாளின் அருள் கிடைக்க எதிர்பார்த்திருப்பதே ஞானத்தை தேடலின் அறிகுறி.
மந்திர, யாகங்கள் செய்ய முடியாதவர்கள் எளியமுறையான, உயிர்களிடத்தில் இரக்கம் காட்டுதல், எளிமையாக வாழுதல், பொய் பேசாதிருத்தல், சுத்தமாக இருத்தல், சுறுசுறுப்பாக இயங்குதல், பிறருக்கு உதவி நன்மை செய்தல், பொருளில் பற்றற்று இருத்தல் ஆகிய செயல்களினாலும் இறையை அடையலாம் என அக்னிபுராணம் கூறுகின்றது.
“எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான்” எனப் பிரகலாதன் கூறியபோது இந்தத் தூணில் உள்ளானா? என இரண்யன் கேட்டது அறிவோம். பின் இரண்யவதம் நடந்ததும் அறிவோம். எங்கும் உள்ள இறைவன் ஏன் உன்னுள்ளும் இருக்கின்றார். நம் அனைவரின் உள்ளேயும் இருக்கிறார். அதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். ஆன்மீகம் என்பது ஆன்மாபற்றியது. உடலின் உயிரை முழுமையாகப் புரிந்து கொள்ள உள்நோக்கி பார்த்தால்தான் தெரியும்.
உடலையும் மனத்தையும் புரிந்தால் மட்டும் வாழ்க்கை வாழ்க்கையல்ல! உடலையும் மனதையும் இயக்கும் சக்தி எது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். “நம்முள்ளே இருக்கும் இறைவனை நாம்தான் தேடிக்கண்டு கொள்ளவேண்டும்” ‘என்னுள்ளே தேடிக் கண்டு கொண்டேனே’ என திருநாவுக்கரசர் பெருமான் கூறுகிறார். அறிவினால் கடவுளை அறிந்து கொள்ளமுடியாது, உணர்வினால்தான் புரிந்து கொள்ள முடியும். நாம் தேடுவதற்கு வழிமுறைகள் உண்டு. அதற்கான உணர்வுகளை நாம் வழி முறைகளிலிருந்து அடையவேண்டும். அந்த அறிவுப்பூர்வமான செயலை செய்வதற்குத்தான் வழிமுறைகள், அனுஷ்டானங்கள்.
சீன மூங்கில்கள் விதைபோட்டு தண்ணீர் ஊற்றினால் ஒருவருடத்தில் ஒரு அங்குலம் தான் வளரும். இப்படி ஐந்து வருடங்கள் வளர்ந்த பின் ஆறாவது வருடத்தில் 90 அடிக்கு வளர்ந்துவிடும். ஒருவருடத்தில் 90அடி வளரும் மூங்கில் அந்த உயரத்தை தாங்க ஐந்து வருடங்களுக்கு வேர்பரப்பி தன்னை தயார் செய்து கொள்கின்றது. இதுபோல் மனம் தளராமல் அமைதியுடன் ஆனால் உறுதியுடன் இருந்து நீங்களும் தயாராகுங்கள் உங்கள் மனம் அருள் வயப்பட்டு பேரானந்தம் அடைய.
“உன்னை உணரும் அறிவைக் கொடு” என அப்பர் பெருமான் இறைவனிடம் இறைஞ்சுகின்றார். தேடும் அறிவினால் மீண்டும் மீண்டும் முயற்சித்து எண்ணங்களை, செயலை, கருத்தை, நினைவை ஒருமித்து உள்ளே இருக்கும் அருளைத்தேடிக் கண்டுபிடித்து வெற்றி பெற்றவர் திருமூலர் பெருமான் அவர்கள்.
“எங்கேயல்லாம் ஓடித்திரிந்த என் அறிவை, முயற்சிசெய்து என்னோடு ஒன்றாகி நிற்கவைத்த அறிவை உள்ளே செலுத்தி, பரம்பொருள் அனுபவம் கண்டேன், திருவருள் தன்மை புலப்பட்டது, இந்த உணர்வு உடனே எனக்கு கிடைக்கவில்லை. இதற்காக நான் பலபிறவிகள் எடுத்ததாக நினைக்கிறேன்.” என்றார் திருமூலர்.
‘பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்’ என்கிறது ஓர் பழமொழி. பிள்ளைகள் பாசமின்றி ஓர் கல்லைப்போல் நடந்து கொண்டாலும், அவன் தாய் குற்றம் செய்த மகனை மன்னித்து அவன் வளமுடன் ஆயுளுடனும் வாழவேண்டும் என நினைக்கின்றது. செய்த குற்றங்களை பெரிதுபடுத்தாமல் மன்னித்து வாழ்த்துகின்ற கருணைதனைக் கொண்டிருப்பவரை பித்து எனக்கூறுதல் வழக்கம்.
ஆன்மாக்கள் புரிகின்ற பல பிழைகளைத் தாயுள்ளம் கொண்டு பொறுத்து அருள் புரிகின்ற அருளாளனும் பித்தன்தான். எனவேதான் “பித்தா பிறைசூடி பெருமானே அருளாள” என சுந்தரர் தேவாரத்தில் பாடியுள்ளார். இறைவனும் அதை ஏற்றுக்கொண்டு சுந்தரரிடம் வழக்கு தொடுத்தபோது காட்டிய பத்திரத்தில் பித்தன் எனக்குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகின்றது. பிரபஞ்சம் ஓர் நியதிக்குட்பட்டு இயங்குகிறது. நியதிக்கு ஆதாரம் திரு அருள்தான். இது அதிசயம், அற்புதமும்கூட.
அதிசயம், அற்புதம் இரண்டுமே வியப்பின் மேலீட்டால் தோன்றும் உணர்வாகும். நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஓர் நிகழ்வை பார்க்கும் போதும், நினைக்கும் போதும் வியப்பு ஏற்படுகின்றது, நாம் அதிசயிக்கிறோம். அற்புதம் என மகிழ்கின்றோம். உலக இயக்கத்தில் அதிசயப்பட்டு, பல அற்புதங்களை நாம் உணரலாம்.
வறுமையின் உச்சத்தில் இருந்த குசேலர் தன் நண்பனை பார்க்க அவலோடும் ஆவலோடும் போனார். அவலை உரிமையோடு எடுத்து உண்டார் கிருஷ்ணர். குசேலர் கிருஷ்ணனிடம் எதுவுமே கேட்கவில்லை. கிருஷ்ணரும் ஏதும் தரவுமில்லை. வறுமையுடன் சென்றவர் கிருழ்ணரை பார்த்து வெறும் கையராய் திரும்பியதற்கு வருத்தப்படவில்லை. ஏனெனில் அவரின் நோக்கம் தன் நண்பன் கிருஷ்ணனை பார்க்க வேண்டும் என்பதே! பார்த்தார். கிரிஷ்ணனின் அருள் பெற்றார். எதையும் கேட்காமலே எல்லாம் அடைந்தார்.
ஓர் சூழலில் நாம் அனைவரும் அருள்பெற விழைகின்றோம். அதற்காக நாம் பல இடங்களுக்குச் செல்கின்றோம். அங்கெல்லாம் இருக்கும் உண்டியலில் நம் வேண்டுதல் முடிந்து காணிக்கை செலுத்துகின்றோம். இதுதவறு? செய்யாதீர்கள் என யாராவது கூறியிருக்கின்றார்களா! இல்லை! ஏன்? நமக்கு எதற்கு இந்த வம்பு என ஒதுங்கி கொள்கின்றார்கள். ஏன்?
அருள்தரும் இறை நம் கோரிக்கைகளில் நியாயம் தர்மம் பார்த்து அருள் புரிதல் நடைபெற்று வருகின்றது. அது அவர் கடமை. தன்னை நாடி வருபவர்களுக்கு அருளச்செய்வது தான் அருள். பொருள் பெற்றுக்கொண்டு அருளுவதும், அருளியபின் பெற்றுக் கொள்வதும் ஓருவகை வியாபாரம். வியாபாரமாக நடைபெற்றால் அது அருள் இல்லை. பின் ஏன் இவ்வாறு உண்டியல் போட்டு வசூலிக்கின்றார்கள். அருள் தரும், பெரும் இடங்களை சீர்படுத்தி சுத்தமாகப் பேணி பாதுகாக்க பெருள் தேவைப் படுகின்றது. அதற்கான நிதியை சேர்த்தவே உண்டியல்கள். அந்தநோக்கில் உள்ள உண்டியல்களை நிரப்ப முன்வரலாம். உண்டியல்களில் பணம் செலுத்துமுன் அது உங்கள் பிரார்த்தனை பலிக்க வேண்டும் என்ற நோக்கில் செலுத்தாதீர்கள்.
உண்டியல்கள் இருக்கும் சூழல் கண்டு நம் செயல்பாடு இருக்க வேண்டும். ஏதோ ஓர் மரத்தில் கட்டிய உண்டியல்களுக்கு எல்லாம் மதி மயங்கி ஆதரவு தந்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டாம். பொதுவாக நம் கோரிக்கைகளை நிறைவேற்ற, எந்த முறையானாலும் வழிபட்டு அருள்பெறவேண்டி அதற்கு ஈடாக நம்மால் முடிந்தது எனக்காணிக்கை அளிப்பது அருள் புரிபவருக்கு ஊதியம் அளிப்பது போலாகும்.
அவர் உங்களிடம் சம்பளம் அல்லது வேறு ஏதும் பெறும் ஊழியரில்லை. உங்கள் பாவங்களிலிருந்து, செயல்களின் தாக்கத்திலிருந்து பாதுகாத்து நல்வழியில் மனம் செயல்பட மட்டும் உதவுபவர் என்பதை புரிந்து கொள்ளுங்கள். வேண்டுதல் நிறைவேறாவிடின் ஏமாற்றம் அடைந்து கோபமும் வெறுப்பும் அடைகிறோம். இது தவறு. “வேண்டுதல் வேண்டாமைக்கு அப்பாற்பட்டவன் அருள்புரிபவன்.” உங்கள் விருப்பங்களை நிறைவேற்ற பக்தியை கருவியாக நினைக்கக்கூடாது.
தவம், ஜபம் காம்யார்த்தமாயின்றி (காரணங்களை உத்தேசித்தவை) ஆத்மார்தமானவையாக இருக்கவேண்டும். வேண்டுபவர்கள் நல்லதை மட்டும் வேண்டுவதில்லை. ஆசையினால் எல்லாவற்றிற்கும் அருள் பெறவிரும்புகின்றோம். ஒவ்வொன்றிற்கும் ஓர் நியதி உண்டு. கர்மபலன் உண்டு. அந்த வினைகளைச் செய்து அதற்கான பலன்களை அனுபவிக்க வேண்டும். நீங்கள் அந்த பலன்களை அனுபவிக்காவிடில் அது உங்கள் சந்ததியினரைத் தொடரும். அதற்காக வெறுமனே வணங்கி வேண்டுதல் விடுத்து காணிக்கை செலுத்தி கர்ம பலன்களை அடையவோ, அதன் பாதிப்புகளை நீக்கவோ முடியாது.
சந்தோஷமும், துக்கமும் அவரவர் கர்ம வினையின் பலன்கள். வினைகளை நாம் செய்திருந்தாலும் பயன்கள் சேருமிடம் வேறுஓர் இடத்தில். அங்குதான் கர்மபலன்கள் நிர்ணயக்கப்படுகின்றன. உடலில் இருக்கும் உயிர், ஆன்மா உடலின் வழியாக அதன் வினைப்பயன்களை அனுபவிக்கவே நிகழ்வுகள் நடைபெறுகின்றன். அருள் நம்பிக்கை சந்தோஷத்தை அதிகமாக அனுபவிக்கவும், துக்கங்களை தாங்கும் மனவலிமைதனையும் தரவல்லது. நம்பிக்கையில்லாதவர் சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் அவர் நியாயத்தையும் நேர்மையையும் கடைபிடிப்பவராக இருக்கக் கூடும்.
உண்மையில் தவம் என்பது எளிமையான வாழ்க்கைமுறையைக் கொண்டதாகும். ஏழ்மை வேறு, எளிமை வேறு. மனை, வாசல் என்றில்லாமல் சாலை ஓரத்திட்டுகளில் வாழ்ந்திருப்பது ஏழ்மையாக இருக்கலாம். சோம்பேறித்தனத்தினால் வந்திருக்கலாம். உழைத்து எல்லா வசதிகளுடன், அனுபவிக்க இருந்தபோதும், ஒன்றும் இல்லாதவன் போன்று ஆடம்பரமின்றி, சமூக கௌரவம் பற்றி கவலையின்றி, மாய சிந்தனைகளில் உழலாமல், உங்களுக்காக, உங்கள் சந்தோஷத்திற்காக தேவைகளைக் குறைத்து அளவுடன் அனுபவித்து, எளிமையுடன் பிறர் நலன் காத்து வாழ்வதே உண்மையான தவம்.
தனக்கு ஏற்பட்ட துன்பங்களைப் பொறுத்துக் கொண்டாகிலும், மற்ற உயிர்களுக்குத் துன்பம் தராச் செயல்களை செய்யாதிருப்பது தவத்தின் மகிமையாகும். தவவலிமையுடைய ஆன்மாவின் உடலை மற்ற ஆன்மாக்கள் தொழும். சுட்ட தங்கம்போல், தவம் செய்வோரை துன்பங்கள் அடையாமல், மேலும் மெய்யுணர்வு அடைவர். ஆத்மாக்களில் தவம் செய்பவரே ஆற்றல் மிக்கவர்.
எது அதுவாகும்: நாம் என்ன நினைக்கின்றோமோ அதையே மீண்டும் மீண்டும் நினைத்து செயல்பட்டால் நாம் அதுவாகவே ஆகிவிடுவோம். அந்த செயலுடன் ஒன்றிவிடுவோம். இந்த நிகழ்வுகள் இராமாயணத்திலும் சொல்லப் பட்டுள்ளது. இலங்கேஸ்வரனால் சிறை பிடிக்கப்பட்டு அசோக வனத்தில் இருந்த சீதை அங்கு தன்மீது பரிவுகொண்ட திரிசடை என்பவளிடம் ராமனையே எப்போதும் நினைக்கும் நான் இராமனாகி விடுவேனோ! என்கதி என்ன! அப்போது நான் எப்படி அவருக்கு உபயோகமாகுவேன். நான் சீதையாகவே இருந்தால்தானே நல்லது என வருந்தி புலம்புகின்றாள்.
அப்போது திரிசடை, அம்மா! கவலைப்படாதீர்கள். தாங்கள் இராமனை எண்ணி, எண்ணி ராமர் ஆனாலும் கவலையில்லை. ஏனெனில் ராமரும் உங்களை எண்ணி எண்ணி சீதையாக மாறியிருப்பார். எப்படிப் பார்தாலும் ஒரு ராமர், ஒரு சீதைதான். என சீதைக்கு ஆறுதல் சொல்லியதாக கூறப்படுகின்றது.
இந்த நிகழ்வு இந்து மதத்தின் அழகான தத்துவத்தை, “எதை எண்ணுகிறாயோ! அதுவாகவே ஆகிறாய்” என்பதை உணர்த்துகின்றது.
காந்தத்தில் இனைந்த இரும்பு, காந்த தன்மையைப் பெற்று காந்தம் ஆகிறது. கடவுளை நினைத்து இனைந்த ஆன்மா கடவுளாகிறது. இனைதல் என்பது இடைவிடாது நினைத்தல் என்பதை புரிந்து கொள்ளல் வேண்டும். அப்போதுதான் எதை எண்ணுகிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பதன் உண்மை புரியும்.
கோவில் உபன்யாசத்திற்கு சென்ற யாரும் அவர் கூறியதை அப்படியே நினைவு கொள்ளமுடியாது. அந்த குறிப்பிட்ட நேரங்களில் அவர்கூறியதை மனம் ஒன்றிக் கேட்டாலும் ஒரு சில நிகழ்வுகளில் மனம் லயித்துவிட்டால் அது ஓர் ஆனந்த அனுபவம். மொத்தமாக நன்றாயிருந்தது எனத்தான் சொல்கின்றோம். என்ன நினைத்து அந்த நிகழ்விற்கு சென்றோமோ அதன் தாக்கம் நம்மை அடைகின்றது. கூடையில் தண்ணீர் பிடித்தால் சில நிமிடங்களில் சல்லடைவழியாக வெளியேறி கூடை சுத்தமாகி விடுவதுபோல உபன்யாச செய்திகள் நம் உள்ளே தங்காவிடினும், அதைக்கேட்ட அந்த நேரங்களில் நம் மனது லயித்திருந்த நிமிடங்கள் நம் மனது, ஆத்மா சுத்தமாகி ஆனந்தம் அடைகின்றது.
கருனை: கடவுளின் கருணை சிறிதளவு கிடைத்ததும், அகங்காரம் கொண்டு மனம்போனப் போக்கில் தாறுமாறாக நடந்துகொள்கின்றனர். தொடர்ந்து அவ்வாறு நடக்கும்போது கடவுளின் கருணையை முற்றிலும் இழந்து பழையநிலைக்கே திரும்பி விடப்படுகின்றார்கள்.
ஒரு சக்தி மிக்க முனியின் ஆசிரமத்தில் ஓர் எலி வாழ்ந்தது. அங்கிருந்த பூனையினால் அடிக்கடி தொந்தரவு ஏற்பட அது முனிவரை நாடியது. அவர் அதை பூனையாக மாற்றினார். பூனைவெளியில் சென்றபோது நாய்கள் அதை துரத்திவர, முனிவர் உதவியை நாட, அவர் அந்தபூனையை ஓர் நாயாக மாற்றினார். அந்த நாயை பசியுடன் இருந்த சிறுத்தைபுலி வேட்டையாட துரத்த முனிவரிடம் ஓடிவர, அவர் அதை புலியாக மாற்றினார். புலியாக மாறிய எலிக்கு பசிஎடுக்க அது முனிவர்மேல் பாயத்தயாரானது. அந்தப்புலி எலி-பூனை-நாய்-புலி ஆகிய மாற்றங்களை மறந்திருந்தது. புலியின் நிலையிலிருந்து அது பாயத்தயாராகவே அதை மீண்டும் எலியாகவே மாற்றினார்.
இந்த கதை நிகழ்வு, கருணை நமக்கு கிடைத்தால் அதை சரியாக உபயோகித்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நம்மையடைந்த கருணை நம்மைவிட்டு விலகிவிடும். நாம் மீண்டும் பழைய நிலையடைந்து வருந்துவோம் என்பதை உணர்த்துகின்றது.
பள்ளியில் படிக்கும் மாணவர்களில் ஒருவன் வேறொரு மாணவனின் பொருளைத் திருடி விட்டான். அவனை ஆசிரியன் முன் நிறுத்த அவர் அவனைத் தடவிக் கொடுத்து "திருட்டு தவறு" என அன்புடன் உரைக்கிறார். புரிந்ததா? எனக் கேட்டு இனி இவன் திருடமாட்டான்! என மற்ற மாணவர்களிடம் சமாதானம் கூறி அனுப்பி விட்டார்.மீண்டும் இதே தவறை அவன் மீண்டும் செய்ய மற்ற மாணாக்கர்கள், அவனைப் பள்ளியை விட்டு வெளியேற்ற விரும்பினார்கள். அவனுக்கு ஆசிரியர் மீண்டும் அறிவுரை கூற, இந்த அனுகுமுறையை இம்முறை ஏற்கத்தயாராக இல்லாத மாணவர்கள் அவனை வெளியேற்றாவிடில் அனைவரும் வெளியேறி விடுவதாக கூறினார்கள். சரி போங்கள் என அமைதியாக சொன்னார் ஆசிரியர்.
ஏன் திருடக்கூடாது என்பது உங்களுக்கு நன்கு புரிந்து விட்டது. நீங்கள் எங்கு சென்றாலும் சரியாக இருப்பீர்கள். உங்களுக்கு நான் அவசியமில்லை. இவனுக்கு நல்லது கெட்டது தெரியவில்லை. அதைப் புரியவைப்பதுதான் எனது கடமை. இவனுக்கு இதை நன்கு புரியவைக்க நான் அவசியம் தேவை. வெளியே அனுப்ப முடியாது என்ற ஆசிரியரின் கருணை அன்பைக் கண்ட மாணவர்கள் மன்னிப்பு கேட்டனர்.
திருட்டு மாணவனின் மனதை ஆசிரியரின் மனிதநேய கருணை மாற்றியது. ஆசிரியர் எல்லாம் போதிப்பவராக மட்டுமல்லாமல், கண்டிப்பும், கனிவும், கருணையும் காட்டத் தெரிந்தவராக இருந்தால் தான் நல்ல உள்ளம் கொண்டவர்களை உருவாக்க முடியும். அவரே உண்மையாண ஆசிரியர், போதகர், குரு, ஞானி எல்லாம்-குருஸ்ரீ பகோரா.
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.