ஓம்நமசிவய!
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்-
கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ
எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!
#####
போதன்!
2017. சீவன் என்றும் சிவன் என்றும் இரு பொருள் இல்லை. சீவன் சீவத்தனமையில் உள்ளவரையில் சிவனை அறிய இயலாது. சீவன் சீவத்தன்மை மாறி அகண்ட ஞானம் பெற்ற பின்பு சீவன் என்ற பேரைப் பெறாமல் சிவன் என்ற பெயரைப் பெறும்.
2018. அறிவு ஒளியாய் விளங்கும் கூத்தப் பெருமானும் மனத்தை விளக்காகக் கொண்டு வாழும் உயிர்களுக்கு எல்லாம் பல த்லைகளையுடைய பாம்பின் படத்தலையில் உள்ள மணிகளைப் போன்று உயிர்க் கூட்டத்துக்கு விளக்கம் தரும் மேற்பார்வையாளர் ஆவர்.
2019. சிவத்தைக் கொண்டு தன் அறியாமை நீங்கியவனே ஐம்பொறிகளால் சுட்டியறியும் அறிவைப் விடுத்து எங்கெங்கும் உள்ளனவற்றை அங்கங்கு இருந்து காணும் ஆற்றலைப் பெற்றவன் ஆவான். அவனே அறிவு வடிவாய் எல்லா உயிர்களிடத்தும் அறிவாக நின்று அறிவன். அறிவில் பொருந்தி நின்ற சிவனும் ஆவான்.
2020. முப்பத்தாறு தத்துவங்களை அறியாதிருந்த எனக்கு அவற்றின் இய்ல்பை என் ஆசான் எனக்கு உணர்த்தினான். இறைவன் அருளால் அதனை அறிந்த பின்பு அவன் அத்தத்துவங்களைக் கடந்த பொருளாய்க் காட்சி தந்தான்.
2021. சிவத்துடன் பிரிவின்றி நிற்கும் திருவருளில் நின்று அறிந்து தெளிய மாட்டார். தீமையைச் செய்யும் ஐந்து மலங்களும் எவ்வறு நம்மிடம் பொருந்துகின்றன என்பதையும் அறிய மாட்டார். உடலை வருந்தித் தவங்கள் செய்து தம் அறிவைப் பாழாக்குகின்றனர். தோழமை நெறியில் விளங்கும் சிவத்தை அறிய மாட்டார். என்னே அவர் அறியாமை.
2022. நாளும் வினை செய்பவர் இறைவன் உயிர்களாகிய நமக்குச் செய்யும் அருட் செயலை எண்ண மாட்டார். நாள்தோறும் தம் வினைகளுக்கு ஏற்றப் பயன்களை நளினமாய் இறைவன் ஊட்டுவதையும் அறிய மாட்டார். இறைவன் நல்லவர்க்கே நாள்தோறும் வழங்குகின்றான் இதை வினை செய்பவர் எண்ணிப் பார்க்க மாட்டார்.
#####