ஓம்நமசிவய!
அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!
#####
ஆத்துமலிங்கம்!
1753. அகாரமாகிய சிவம் எல்லாவற்றுக்கும் முதலாய் எல்லாவற்றுடன் கலந்தும் விளங்கும். உகாரமாகிய சத்தி யாவற்றுக்கும் முதலாய் அவை உயிர் பெற்று நிற்க உதவும். இங்ஙனம் அகரம் சிவம் என்றும் உகரம் சத்தி என்றும் அறிந்தால் அகர உகரங்களே சிவலிங்கம் என்பது தெரிய வரும்.
1754. அண்ட கோளத்தில் வடிவமான படைப்புக் காரணமாயும் அதனுள் நிலைத்ததாயும் உள்ள விந்துவும் மேதை முதலிய சோடச கலைகள் ஆகிய நாதமும் அடுக்கு அடுக்காக விரிந்தன. ஆதாரமான விந்து உயர்ந்த இடமாகக் கொண்டு நிலை பெற்றுள்ளது. இவ்வகையாக உயர்ந்து செல்வதில் விந்து நாதங்களின் புணர்ச்சி உள்ளது.
1755. இயங்க இயலாத மலை, நிலம், செடி, முதலியவை சத்திசிவ சேர்க்கையாம். அசையும் இயல்புடைய உயிர்ப் பொருள்களும் சத்தி சிவ சேர்க்கையாம். அறிவான வான மண்டல நாதனான சதாசிவமும் சத்தி சிவப் புணர்ச்சியாம். திருக்கோவிலில் உள்ள தாவரங்களும் சத்தி சிவப் புணர்ச்சியாம்.
1756. சிவசத்தி வடிவான ஆத்தும லிங்கத்தில் அழகான பேரொளியைக் காணலாம். வான் கூற்றில் ஐம்பது எழுத்துக்களும் தோன்றும் இடம் அதுவே ஆகும். சகசிர தளத்தில் பொருந்தி விளங்கும் பேரொளியில் சத்தியுடன் அகர வாச்சியப் பொருளான சிவமும் அழகோடு கலந்து விளங்கும்.
1757. ஆத்மாவிடம் பொருந்திய விந்துவும் நாதமும் ஆன்மலிங்கம் ஆகும், இந்த விந்துவே நாதத்துக்கு இடமாய் இவ்விரண்டும் பொருந்தி ஆன்ம லிங்கமாகும். இந்த இரண்டையும் ஆதாராமாய்க் கொண்டே நான்முகன் முதலிய மூவரும் படைத்தல் முதலிய ஐந்து தொழில்களையும் செய்கின்றனர்.
1758. நல்ல ஆன்ம தத்துவமே சத்திக்குப் பீடம். வித்தியாதத்துவம் சத்திக்கு நல்ல கண்டம் பொருந்தும் சிவதத்துவம். சத்திக்கு நல்ல இலிங்கமாக விளங்கும். வானக் கூறான சதாசிவம் தத்துவமே நல்ல சத்தி மண்டலம்.
1759. சிவன் என் உள்ளத்துள் புகுந்து எனது உயிர் நிலை பெறும் வாழ்வில் மனத்துள் பேரின்பம் சுரக்கும் காலத்து நன்மை பெருக நான் என்னையும் நாதனையும் நாடும்போது என் தலையின் உச்சியில் விளங்கி அவன் ஆட்கொள்வான்.
1760. மேலானவற்றுள் மேலானவனும் என் தந்தை போன்றவனும் குளிர்ந்தபிறை சூடியவனும் அடியார் மனதில் கோவில் கொண்டு விளங்குபவனும் தேவர்கள் தலையினுள் ஒளீமயமாக விளங்கும் குண்டலியான தலைவனும் ஆன சிவம் என் உள்ளத்துள் நீங்காமல் எழுந்தருள்வான்.
1761. பசுவின் தன்மை கொண்ட் என் உள்ளத்தை கோயிலாய்க் கொண்டவன் பாம்பு அணிந்த சடையை உடையவன் அக்கினி நீர் பொருந்தப் பெற்றவன் செய்யும் புண்ணியம் அனைத்துமானவன் இத்தகைய இயல்புடைய இறைவன் தலைவன் அல்லன். நானே தலைவன் எனக் கூறுபவர் அறியாமை உடையவர்.
1762. தேவர்கள் சிவபெருமான் அங்கு நின்றான். இங்கு கிடந்தான் என்று எட்டு திக்குகளிலும் சென்று வணங்குவார்கள். அவன் என் உயிர்க்கு உயிராய் என் மனத்தில் பொருந்தி நின்றான். அத்தகைய எம் தலைவன் என்றும் வணங்கிக் கொண்டிருப்பேன்.
#####