ஓம்நமசிவய!
விநாயகனே வல்வினையை வேர் அறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து!
#####
பசுவிலக்கணம்- பிராணன்.!
2005. துதித்த அளவிலே உணரப்படும் ஒருவனைப் பன்னிப் பன்னிப் பேசும் வேதங்கள் இடைவிடாமல் சொல்லிக்கொண்டிருக்கும் பரம் பொருளை என் மனத்தில் தூண்டா விளக்காய் உள்ளவனை அம்ச வடிவினன் என்பதை நான் அறிந்து கொண்டேன்.
2006. சீவனின் வாழ்வில் இரண்டு அன்னங்கள் உள்ளன. இரண்டும் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாதவை. அவ்விரண்டுள் தன்னிலையில் நிற்கும் சிவமான அன்னம் தனக்கு வேறானது என்று எண்னினால் வேறுபட்ட அறியாமையுடன் கூடிய சீவனான அன்னத்துக்கு எப்பொதும் சிவப்பேறு கிட்டாதாகும்.
#####
புருடன்!
2007. வைகரி மத்திமை, பைசந்தி, சூக்குமை என்னும் வாக்குகளும் மாயை முதலிய மலங்களும் பொய்யான இன்பங்களை அனுபவிக்கச் செய்யும் புருடன் முதலான வித்தியா தத்துவமும் பிறப்பை ஒழிக்கும் ஞானமும் என்னும் இவற்றைச் சான்றாய் உள்ள ஈசன் உயிர்கள் உய்வு பெறும் பொருட்டு முன்பே அமைத்து வைத்தவையாகும்.
2008. அணுவுக்கும் அனுவாய் உள்ளதை ஆயிரம் கூறிட்டு அந்த ஆயிரத்தில் ஒரு கூற்றை நெருங்க வல்லர்க்கும் அணுவுக்கு அணுவானவனும் பழமை உடையவனும் மிகச் சூட்சமம் ஆனவனும் ஆகிய பரம் பொருளை அடையவும் கூடும்.
2009. எங்கும் பரவிப் படர்ந்து வளரும் தன்மையைத் தன்னிடம் கொண்ட ஆலம் விதையைப் போன்ற ஆன்மாவைத் திருவருள் கொண்டு தன்னெறிப்படுத்த அறியாமையை உண்டாக்கித் துன்பத்தைப் பெருக்கி நிற்கும் இருளை முற்றும் கெடுத்துச் சிவன் அமைத்து தந்த சிவகதியை விரும்பவும் கூடும்.
2010. ஆன்மாவுள் சிவனும் சிவத்துள் ஆன்மாவும் பிரிவு இல்லாது கலந்துள்ளதை உணரார். ஒப்பில்லாத இறைவன் எங்கும் நிறைந்து இடையில் பொருந்தி இயங்குபவை நிற்பவை ஆகிய அனைத்துப் பொருள்களிலும் வியாபித்திருக்கின்றனன்.
####