ஓம்நமசிவய!
பாரதம் எழுதிய பரூஉக்கர மாரதம் அச்சொடி
மதவலி மாங்கனி அரன்பால் வாங்கினோய்
ஈங்கினி எம்பால் எழுந்தருள் கரும்பாயிரங்கொள்
கள்வா அரும்பொருளே எம் ஐயா போற்றி!
#####
முக்குண நிர்க்குணம்!
2296. பல நிலைகளில் பொருந்திய உயிர்க்கு நனவினில் சாத்துவிகக்குணம் பொருந்தும். கனவு எனப்படுவது அதற்குரிய இராசத குணம் பொருந்துவதாம். கருவி கரணங்களையும் செயற்படாது வைத்திடுதல் தாமதகுணம் பொருந்திய உறக்கம் ஆகும். ஐம்பொறிகளையும் உபகர்ணங்களையும் செயற்படாமல் அழித்திடும் நிலையே குற்றம் இல்லாத துரியம் ஆகும்.
#####
அண்டாதிபேதம்!
2297. அண்டத்தை இருக்கையாகக் கொண்டு அதன்மேல் வீற்றிருக்கின்றான் தேவர் தலைவன் சிவன். விரும்பிப் பெரும் பேரண்டத்தில் வேறு வேறாக உள்ள அண்ட கோசங்களில் அலை வீசுகின்ற கடல் ஏழிலும் உள்ள மணலின் அளவாக ஒளிக்கிரணங்களில் பொன் அணியில் பொன் செறிந்து ஒளிர்வது போல் ஒளிர்வான்.
2298. அண்ட கோசத்துக்குரிய ஆன்மா அண்டத்தை இருக்கையாககொண்டு ஆனந்தமாகத் தத்துவம் கடந்து உள்ளான். அந்த ஆன்மனுக்கு உதவும் பொருட்டாகச் சத்தியானவள் ஐந்தாக அண்டத்துள்ளே முப்பத்து ஆறு தத்துவங்களாகவும் அனந்த சத்தியாகவும் அண்டத்தில் எட்டு மடங்கு அளவு கொண்டதாகவும் விளங்குகின்றது.
#####