ஓம்நமசிவய!
மங்களத்து நாயகனே மண்ணாளும் முதல் இறைவா!
பொங்குதன வயிற்றானே பொற்புடைய ரத்தினனே!
சங்கரனார் தருமதலாய்ச் சங்கடத்தைச் சங்கரிக்கும்
எங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!
#*#*#*#*#
24.நீராடல் எப்படி!
மனித உடல் மிகவும் அழுக்கானது. தோல் துவாரங்களிலிருந்து உடல் கழிவுகள் வெளியேறி தோலின் மேல் பகுதியில் தங்கியிருக்கும். உடலின் ஒன்பது துவாரங்களிலும் ஒன்பது விதமான மலங்கள் இருக்கும். இந்த மல சுத்திக்காக விடியற்காலம் ஸ்நானம் செய்து உடலை தூய்மைப் படுத்திக் கொள்ள வேண்டும் என நியமிக்கப்பட்டுள்ளது. புணரக் கூடாத உறவுகளுடன் புணர்ந்த பாபமும், தானம் வாங்குவதால் விளையும் பாபமும், ரகசியச் செயல்களால் விளையும் பாபமும் ஸ்நானம் செய்வதால் நீங்கி விடும். குளிக்காமல் அழுக்கு, பாவச் சுமைகளுடன் செய்யும் அன்றாட கர்மங்கள் யாவும் பயனற்றதாக மாறிவிடும்.
தினசரிக் கடமைகளில் ஒன்றான குளியல் –நித்தியம் எனப்படும்.
தீட்டுகளால் ஏற்படும் அசுத்தியைப் போக்க நீராடுவது நைமித்திகம்.
விழாக்களுக்காக நீராடுவது காமியம்.
சிரார்த்தம், தர்ப்பணம் ஆகியவற்றிற்காக நீராடுவது கிரியாங்கம்.
உடல் சுத்திக்காக நீராடுவது மலாபகர்ஷ்ணம்.
புண்ணிய நதிகளில் நீராடுவது க்ரியா ஸ்நானம்.
நீராடுமுன் சிறுநீர் கழிக்க அதற்கென்றிருக்கும் இடத்தில் சிருநீர் கழித்துவிட்டு வந்து நீராடல் வேண்டும். நீராடும்போது எல்லா உறுப்புகளும் நீரில் நனைய குளிக்கவேண்டும்.
நதிகளில் நீராடினால் நீரில் உடல் அமுங்கி மறையும்வரை நீராடல் சிறப்பு. ஆற்றுக்குப் போனோம் இரண்டு முங்கு முங்கி எழுந்தால் போதும் என்றவாறு குளியல் இருக்கக் கூடாது. பொதுவாக சூரிய உதயத்திற்குமுன் அருணோதய வேளையில் நதிகளில், தீர்த்தங்களில் குளிப்பது சிறப்பு. நீராடும்போது பிரவாகங்களுக்கு எதிராகவும், குளங்களில் நீராடும்போது சூரியன் இருக்கும் திசை நோக்கி நின்று நீராடல் வேண்டும். நீரில் இறங்கியதும் உடனேயே தலை முழுவதும் நனையும்படி மூழ்கி எழுதல் சிறப்பு. அவ்வாறு மூன்று முறை செய்தபின் கைகளால் நீரை எடுத்து இறைவனை நினைத்து ஆதித்தனை நோக்கி நீரை கீழே விட வேண்டும். இதுவே அர்க்கியம்-மந்திர நீரிறைத்தல் விடும் முறை எனப்படும். பிதுர்களை நினைத்துக் கொண்டு இதை செய்யலாம். தண்ணீரில் நின்றபடியே நம் குறைகளை நிவர்த்திக்க இறைவனிடம் வேண்டுதல் செய்யலாம். நீராடி முடிந்ததும் நீரைக் கைகளில் நிரப்பிக் கொண்டு என் உடலிலுள்ள அழுக்குகளை இந்நீரில் கழுவி தோஷம் செய்திருக்கின்றேன். அந்த தோஷங்கள் அனைத்தும் நீங்க வேண்டும் எனச் சொல்லி கையில் உள்ள நீரை விட்டுக் கரை ஏறவும்.
தீர்த்தயாத்திரை செய்வது நமது கலாசாரத்தின் அரிய உயர்ந்த பண்பாகும். புண்ணிய தலங்களுக்குச் சென்று புனித தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட வேண்டும். புண்ணிய நதிகளில் நீராடும்போது தியானம் செய்தல் கூடுதல் நலன். நதிகளிலும் குளங்களிலும் நீராடிய பின் அந்தக் கரையினிலேயே கிழக்கு நோக்கி அமர்ந்து ஆசமனம், பிராணாயாமம் செய்து தியானம், ஜபம் செய்யலாம். முறைப்படி கர நியாசம், அங்க நியாச முறைகளால் இறைவனை ஆராதித்து வணங்கி பின் முத்திரைகளைக் காட்டி உபசாரம் செய்ய வேண்டும்.
மழை நீரில் நீராடும்போது இரண்டு கைகளை உயரத்தூக்கி மழைவரும் திசை நோக்கி மழைச்சாரல் மேனியில் படும் வண்ணம் கண்களை மூடியபடி இருக்கும்போது மழைச்சாரல் ஸ்பரிசம் மேனியில் படுவது தேகத்திற்கு சில சக்திகளைத் தரவல்லது. இந்த மழை ஸ்நானத்தை ‘அக்னைக’ ஸ்நானம் என்கிறது சாஸ்திரம்.
உடம்மை மண்ணைக் கொண்டு தூய்மை செய்வது ‘மலஸ்நானம்’ எனப்படும். இதற்குப்பின் நீரில் நீராடவேண்டும். இது ‘விதிஸ்நானம்’ எனப்படும். கோதூளி கொண்டு ஸ்நானம் செய்வது மிகப்புனிதமாதாகும். இது ‘மகேந்திரஸ்நானம்’ எனப்படும்.
பொதுவாக எந்தக் குளியலாக இருந்தாலும் குளித்தபின் ஆடையணிந்து நெற்றியில் விபூதி, ருத்திரம் தரிக்க வேண்டும் நெற்றி வெறுமனே இருக்கக்கூடாது. காணப்படாததைக் காண்பதாலும், கேட்கப்படாததைக் கேட்பதாலும், முகரப்படாததை முகர்வதாலும், உண்ணப்படாததை உண்பதாலும், சொல்லத்தகாதை சொல்வதாலும் செய்யத்தகாததை செய்வதாலும், எண்ணக்கூடாதை எண்ணுவதாலும், நடக்கக்கூடாததை நடத்துவதாலும், கொடுக்கக்கூடாததை கொடுப்பதாலும் ஏற்படும் பாவ பேதங்கள் எல்லாம் ருத்திராட்சம் அணிவதால் தொலைந்து போகும்.
வேதங்கள், சாஸ்திரம், புராணங்கள், இதிகாசங்கள், சம்பிரதாயம், பண்பாடு எல்லாம் ஆத்மவின் உடல் உள்ளம் இரண்டையும் தூய்மையாக்கும் நல்லுரைகளை வழங்குபவை. எத்தனை உயிர்கள் அவற்றை சரியாகப் பின்பற்றுகின்றோம். கலியுகத்தில் உயிர்கள் அவைகளை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கின்றன. விஞ்ஞானத்தால் ஆடம்பர வாழ்கை முறைகளை தன் வாழ்க்கையில் புகுத்திக் கொண்டாலும் துன்பம் நேரிடும்போது ஆத்மா வேதங்களின் பாதையில் செல்ல விழைகின்றது.
குளம், குட்டை, ஆறுகளில் சிறுநீர் மலம் கழித்தல் தவறு, ஆடையில்லாமல் நீர் நிலைகளில் நீராடாதே. இது வேதம் சொல்வது.
நீர் வாழ் இனங்கள் நச்சுப் பிராணிகள் நமது உடல் உறுப்புகளை தீண்ட வாய்ப்புண்டு. அது அந்த உயிர்க்கு ஊறு விளைவிக்கும். ஊனக் கண்களினால் ஊனத்தை பார்க்கும் நாம் அறிவுக் கண்ணால் ஞானத்தைப் பார்க்க வேண்டும்.
நீராடி ஈர உடையுடன் இல்லங்களில் பூஜை செய்தல் கூடாது. உலர்ந்த தூய ஆடையுடன்தான் வழிபடல் வேண்டும். முன்னோர் வழிபாடு மற்றும் பித்ரு காரியங்கள் செய்யும் போதுதான் ஈர ஆடையுடன் இருக்கவேண்டும்.
#*#*#*#*#