ஓம்நமசிவய!
தேவர் தொழுங் கருணைச் செல்வனே சிறந்தொளிரும்
மங்கள சொரூபனே ஓவறு சித்திகளனைத்தும்
உதவுவோய் ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்
மேவியொளிர் சரணே மததாரை விரவியதிண் கபோலனே
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!
#*#*#*#*#
45.தானம் ஏன் செய்ய வேண்டும்!
தானம் செய்வதை நாளை நாளை என தள்ளிப் போடக்கூடாது.
நீச்சமான நடத்தை உள்ளவர்களிடம் தானம் பெறக்கூடாது. தன்னுடைய ஆச்சாரியர், குரு மற்றும் வேலைக்காரன் ஆகியோரிடமிருந்து தானம் பெறக்கூடாது.
நல்வழியில் ஈட்டிய பொருட்களையே தானம் அளிக்க வேண்டும்.
தானம் கொடுப்பவன் கிழக்கு நோக்கியும் வாங்குபவன் வடக்கு நோக்கியும் இருக்க வேண்டும்.
பூதானம் என்பது மிகவும் உன்னதமானது. வேதம் விதித்த கர்மங்களை விதிமுறைப்படி அனுஷ்டித்து வரும் ஒரு நல்ல அந்தணனுக்கு தனக்குள்ள பூமியில் சாணளவாவது தானமாகக் கொடுப்பவன் சிவலோகத்தை அடைவான். பயிர்கள் விளைந்திருக்கும் பூமியைத் தானம் செய்பவன் அந்த பூமியில் எவ்வளவு அணுக்கள் உண்டோ அவ்வளவு காலத்திற்கு சொர்க்கத்தில் வாழ்வான்.
தேவதைகள பூஜித்து முன்னோர்களை வணங்கி தானம் அளிக்கவேண்டும். தானம் கொடுப்பவர், வாங்குபவர் ஆகிய இருவரின் கோத்திரம், தகப்பனார், பாட்டனார், முபாட்டனார் ஆகியோரின் பெயரைக்கூறிச் செய்தால் இரு சாராரின் ஆயுள் பெருகும்.
குறிப்பறிந்து செய்யும் தானமும் தர்மமும் பலமடங்கு புண்னிய பலனைத் தரும். பசி என ஒரு உயிர் யாசித்தலுக்குமுன் உணவளித்தல் உத்தமம். உணவு கேட்டபின் அளிப்பது மத்திமம். கேட்டும் கொடுக்காமல் இருப்பது அதர்மம். ஏழ்மையின் பிடியில் ஒரூஉயிர் துன்பப்படும்போது வலியச் சென்று உதவுவது பிறவியில் ஐஸ்வர்யத்தைக் கொடுக்கும். வசதியின்றி நோயால் துன்பப்படும் உயிர்க்கு செய்கின்ற உதவி அந்த உயிர்க்கு பல பிறவிகளுக்கு ஆரோக்கிய ஆனந்தத்தைக் கொடுக்கும்.
தானம் கொடுப்பது பெருமைக்கு அல்ல. தானம் பெற்ற பொருளை சரியாக உபயோகிக்க வேண்டும். உதாரணமாக பசுக்களைப் பெறுபவன் அதை விற்கவோ பட்டினி போடவோ கூடாது. நன்கு பராமரிக்க வேண்டும். உரியவர் பார்த்து தானம் அளித்தல் சிறப்பு. தகுந்தவனுக்கு தகுந்த காலத்தில் நல்ல ஷேத்திரத் தலத்தில் தானம் செய்ய வேண்டும்.
நல்ல ஞானம் உடையவன், நற்குணங்களை உடையவன், தரும சிந்தனை உடையவன், எந்த பிராணிக்கும் இம்சை செய்யாதவன் ஆகியவர்களே தானம் பெறத் தகுதியுடையவர்கள்.
திருமணத்தின்போது மணமகனுக்கு பெண்ணுடன், சொர்ணம், எள்ளு, யானை, பணிப்பெண்கள், வீடு, வாகனம், சிவப்பு நிறப்பசுக்கள், குதிரைகள், பட்டாடைகள் வழங்குவது தசமகா தானம் எனப்படும்.
பசு(கோதானம்), தங்கம்(சொர்ணதானம்), எள்(திலதானம்), உப்பு(லவணதானம்), தான்யங்கள்(தானியதானம்), காலணி, சந்தனக் கட்டை, நீர்ப்பாத்திரங்கள், உணவருந்தும் பாத்திரங்கள், நிலம்(புவிதானம்), குடை, விசிறி, கட்டில், ஜோடியான ஆடைகள் ஆகியவற்றைத் தானமாகக் கொடுக்கலாம். புடவை கொடுக்கும்பொது இரவிக்கையுடனும் வேஷ்டி கொடுக்கும்போது துண்டும் கொடுக்க வேண்டும்.
தீபத்தில் நல்லெண்ணெய் ஊற்றி தீபத்தை ஏற்றிச் சுடர்விட்டுப் பிரகாசிக்கும்போது தானமாகக் கொடுத்தல் உலகத்தில் நல்ல வாழ்கையுடன் முக்தியையும் தர வல்லது.
கோதானம் செய்தால் ஒருவன் இப்பிறவியில் வளமான வாழ்வையும், நீண்ட ஆயுளையும் பெறுவதுடன், மரணத்துக்குப்பின் சொர்க்க வாசம் பெறுவான்.
பூணூலுக்கும், மங்கல சரட்டிற்கும், ஆடைக்கும் பருத்தியே சிறந்தது. எனவே பருத்தி ஆடையைத் தானம் செய்வது –வஸ்திர தானம் சிறப்புடையதாகும்.
பலவகையான தானங்கள் அளிப்பவர் இப்பிறவியில் உலக சுகங்களைப் பெற்று அடுத்த பிறவியில் முக்தியடைவர்.
கிருத யுகத்தில் ஒருவனைத் தேடிச் சென்று தானம் அளிக்கப்பட்டது.
திரோதயுகத்தில் அந்தணர்களை வரவழைத்து திருப்தியாக தானம் அளிக்கப்பட்டது.
துவாபரயுகத்தில் தானம் கேட்பவர்களுக்குத் தானம் அளிக்கப்பட்டது.
கலியுகத்தில் தானம் அளிப்பவர்களைத் தேடிச் சென்று தானம் பெறப்படுகின்றது.
கயை, பிரயாகை, கங்கை போன்ற புண்ணிய இடங்களில் தானம் பெறுபவர்களைத் தேடிச் சென்று தானம் அளிக்க வேண்டும்.
இஷ்ட தானங்கள்(அக்னி ஹோமம், தவ விரதங்கள் கடைப்பிடிப்பது, வேத நெறியில் நடப்பது, உண்மை பேசுவது, கர்மாக்கள் செய்வது),
பூர்த்தி தானங்கள்(நீர் நிலைகள் உண்டாக்குதல், அன்னசத்திரம் அமைத்தல், யாத்திரிகர் தங்குவதற்கு சத்திரம் கட்டுதல், பழமரங்கள் நடுதல்),
பருத்தி தானம் மகாதானம். பருத்தி தானம் மரித்தபின் சிவலோகம் வாசம் கிடைக்கும்.
மேலும் கன்யாதனம், சிரார்த்த தானம், ஹிரண்ய கர்ப்ப தானம், கோதானம், லவணதானம் (உப்பு), குளாத்ரிதானம் (வெல்லப்பாகு), திலதானம் (எள்ளு), ஸ்வக்ணதானம், பூதானம் (பூமி) ஆகிய தானங்கள் செய்தால் பாவங்கள் அனைத்தும் விலகிவிடும்.
தன் மகளை கன்னிகா தானம் செய்துகொடுப்பதால் அவளது தந்தை சிரேஷ்ட பலன்களை அடைவார். அவருக்குப் பதில் வேறொருவர் கன்னிகா தானம் செய்தாலும் அவர் அப்பலன் பெறுவர்.
எல்லா தானங்களிலும் சிறந்தது அன்னதானம். வறுமையில் வாடுபவர்களுக்கும், பசியால் தவிப்பவர்களுக்கும் அன்னமளிக்கும் இந்த இணையற்ற தானத்தில் பதினாறில் ஒரு பங்கு அளவுகூட மற்ற தானங்கள் பலனளிப்பதில்லை.
ஒரு ஜீவன் மரிக்கும் சமயம் திலம் (எள்) லவணம் (உப்பு), பருத்தி, தான்யம், இரும்பு, பொன், பசு, பூமி என தானம் தரலாம்.
எள், இரும்பு தானம் யமனை மகிழ்ச்சியடையச் செய்யும். லவண தானம் யமபயத்தைப் போக்கும். தானிய தானம் யம தூதர்களை மகிழ்விக்கும். செர்ணம், கோ தானங்கள் பாவங்களைப் போக்கும்.
சாஸ்திரப்படி யாகங்கள் செய்தாலும் யாகம் நடத்தியவருக்கு தட்சினை கொடுக்க வேண்டும். அப்போதுதான் யாகத்தின் முழுப்பலன் கிட்டும்
தானம், தட்சினை என்பதைப் பிறர்வாழக் கொடுப்பதாகக் கருத வேண்டும்.
வறியோர் வாழ வளத்தைக் கொடுப்பதுதான் உண்மையான தவம். நீண்ட ஆயுளும் ஆரோக்கியமான் உடம்பு மட்டும் இருந்தால் போதும் என நினைக்கக்கூடாது.
அறவழியில் நில்லாதவர்கள் தானம்பெறத் தகுதியில்லாதவர்கள்.
#*#*#*#*#