ஆன்மீக அளவு!
ஆன்மீக அளவு என்பது தூய்மை- நன்மை செய்யும் மனித நேயம்- சுயநலமற்ற தன்மை- சரணாகதி- பணிவு- பிரார்த்தனை ஆகியவை நிறைந்தது.
ஒருவன் குளித்துவிட்டு கோவிலுக்குப் போனால் மட்டும் போதாது. உடலுடன் மனமும் தூய்மையுடன் இருக்கவேண்டும். அப்படி இருப்பவனின் பிரார்த்தனையே இறைவன் நிறைவேற்றுவார். அகவழிபாட்டின் அடையாளமே புறவழிபாடு. எனவே அகவழிபாடும் மனத்தூய்மையும்தான் உண்மையான வழிபாடு. இவையின்றி செய்யப்படும் புறவழிபாட்டில் பயன் ஏதுமில்லை. இதை எல்லோரும் நினைவில் வைத்துக் கொள்வது நலம்.
எதையும் எப்படி வேண்டுமானாலும் செய்து விட்டு ஒரு தலத்திற்கு சென்று வழிபட்டு பரிகாரம் செய்தால் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்படும் என்று கீழான நிலையில் இருந்து சிந்திப்பவர்கள் கலியில் நிறைய இருக்கின்றனர்.
தூய்மையின்று கோவிலுக்குச் செல்லும் ஒருவன் தன்னிடம் இருக்கும் பாவங்களுடன் மேலும் ஒன்றைச் சேர்த்துக் கொள்கின்றான். அவன் நிலை கோவிலுக்குச் செல்லும்போது இருந்ததைவிட மேலும் மோசமானவனாகவே வீடு திரும்புவான்.
கோவில்கள் மகான்களும் புனித பொருட்களாலும் நிரம்பியிருப்பவை.. கோவில்களில் புனித தன்மையில்லை என்றால் தெய்வீகம் தோன்றாது. மறைந்துவிடும்.. திருத்தலங்களில் செய்யும் பாவங்களைப் போக்கிக்கொள்வது கடினமாகும்.
எல்லா மதவழிபாடுகளிலும் தூய்மை, பிறருக்கு நன்மை செய்தல் என்பதுதான் சொல்லப்பட்டுள்ளது. ஏழை, எளியவர், பலவீனமானவர், நோயாளிகள், துன்ப துயரத்தில் உழல்வோர் ஆகியோரிடம் அன்பு கொள்பவரே உண்மையாக கடவுளை வழிபடுபவன். வெறும் விக்ரகத்தில் மட்டும் தெய்வத்தை நினைப்பவன் வழிபாடு எத்தனை காலம் ஆனாலும் ஆரம்ப நிலையாகும்.
கோவிலில் தன்னை தினமும் காண்பவனைவிட மனித நேயத்துடன் மற்ற ஆத்மாவிற்கு அன்பு செய்யும் அன்பனிடம் இறைவன் மகிழ்வு கொள்கின்றார். தந்தையாகிய கடவுளுக்குச் சேவை செய்ய நினைப்பவர்கள் முதலில் அவரின் குழந்தைகளாகிய உலக உயிர்களுக்குச் சேவை செய்யவும். இறைவனின் தொண்டர்களுக்கு சேவை செய்வபவனே இறைவனின் மிகச் சிறந்த தொண்டன்.
நல்லன நினையுங்கள் நல்லது செய்யுங்கள். பலனாக இதயம் தூய்மையடையும். அப்போது உங்கள் உள்ளே இருக்கும் இறைவனை நீங்கள் உணர்வீர். அழுக்கடைந்த கண்ணாடியில் நம் உருவத்தை சரியாகப் பார்க்க முடியாததுபோல் அஞ்ஞானமும் தீய குணங்களும் உள்ள மனத்தினால் இறைவனின் ஒளியைக் காணமுடியாது.-குருஸ்ரீ பகோரா
நமது நண்மையை மட்டுமே பார்க்கும் சுயநலம் பாவங்களில் முதன்மையானது. சுயநலமற்ற தன்மைதான் ஆன்மிகம். சுயநலம் இல்லாதவனே மேலான ஆன்மீகவாதி. அவனே கடவுளுக்கருகில் இருப்பான். சுயநலத்துடன் ஒருவன் எத்தனைக் கோவில்களுக்குச் சென்று புண்ணிய தலங்களில் நீராடி இறைவனைத் தரிசித்திருந்தாலும் அவனால் தெய்வத்தை நெருங்க முடியாது. விலகியே இருப்பான்.
இறைவணக்கம் வெறும் சம்பிரதாயமல்ல. அது ஒர் சரணாகதி தத்துவம். அவ்வழியே சென்றால்தான் நாம் விரும்பிய இடத்தை எளிதில் அடைய முடியும். கட்டாயப்படுத்தலின் மூலம் எதையும் கைப்பற்ற முடியாது. பணிவு என்ற கதவுதான் வாழ்வின் விந்தைகளைக் திறந்து காட்டும். பணிவுடன் பிரார்த்தனையில் நம்பிக்கை வைத்தால் அன்பின் மையப் பகுதியை அடைந்துவிடலாம். இந்த எண்ணம் உங்கள் உள்மனதிலிருந்து வெளிப்பட வேண்டும். அன்பினுக்கு எல்லை கிடையாது. நீங்கள் நேசிக்க நேசிக்க அதன்மீது பிரேமை உங்களுக்குள் விரிவாக்கம் காணும். நீங்கள் அதில் ஆழ்ந்து போனால் அங்கே இன்னும் நிறைய விஷயங்கள் இருப்பது புலனாகும். அதை ருசித்து அனுபவிக்கப் பழகுங்கள். அப்போதுதான் உங்களிடமிருக்கும் அன்பான பண்பிற்கும் உங்கள் இதயத்திற்கும் உள்ள இடைவெளி குறைந்து இதயம் அன்பினால் நிறையும். அன்பும் இதயமும் ஒன்றிவிடவேண்டும்.
வெறுப்பு, பொறாமை, விரோத மனப்பான்மையுடன் வாழும் ஒருவர் மொழியின் வார்த்தைகள் தெரிந்திருப்பதால் படிக்கலாம். ஆனால் ஆழமான உள்ளார்த்தமான அன்பை புரிந்துகொள்ள முடியாது.
ஒரு மரத்திலிருந்து தழைகளைப் பறித்துவரச் சொன்னார் ஞானி தன் சீடனிடம். அவன் கைகொள்ளும் அளவு இலைகளைப் பறித்து வந்தான். எனக்குத் தெரிந்ததும் நான் உனக்குப் போதித்ததும் உன் கையில் இருக்கின்றது. எனக்குத் தெரியாததும் உனக்குப் போதிக்காததும் நீ தெரிந்து கொள்ளவேண்டியதும் மீதி இலைகள் மரத்தில் இருப்பது போல் உலகில் உள்ளது. கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு. இதுவே ஆன்மீகத்தின் அளவின் தன்மை. -குருஸ்ரீ பகோரா