ஓம்நமசிவய!
தேவர் தொழுங் கருணைச் செல்வனே சிறந்தொளிரும்
மங்கள சொரூபனே ஓவறு சித்திகளனைத்தும்
உதவுவோய் ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்
மேவியொளிர் சரணே மததாரை விரவியதிண் கபோலனே
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!
#####
தத்துவங்கள்!
ஒருவரின் உடல் அவரவர் கையினால் 8 சாண் அளவு நீளமும், 4 சாண் அளவு பருமனும், 96 விரற்கடைப் பிரமாணமும் உள்ளதாகும். இதில் 68 தத்துவங்கள் சேர்கின்றன. உடம்பின் 24 ஆன்ம தத்துவங்களும் (பூதங்கள்-5, ஞானேந்திரியங்கள்-5, கர்மேந்திரியங்கள்-5, தன் மாத்திரைகள்-5, அந்தக் கரணங்கள்-4) வித்யா தத்துவங்கள் ஏழும் (கலை, காலம், நியதி, வித்தை, அராகம், புருடன், மாயை) சிவதத்துவங்கள் ஐந்தும் (சுத்தவித்தை-தூய நினைவு, ஈசுரம்-தலைமை, சதாக்கியம்-அருள் நிலை, சத்தி-அன்னை, சிவம்-அத்தன்) ஆக 36 தத்துவங்கள். இந்த 36 தத்துவங்கள் விரிந்தால் தொன்னூற்று ஆறாகும். அவற்றில் தெய்வப்பகுதிகள், அண்டப்பகுதிகள் 28 நீக்கினால் எஞ்சிய 68 பகுதிகள்- தத்துவங்கள் நம் உடம்பு இங்கு புவியில் வாழ்வதற்கு தேவைப்படுகின்றன. மேலே சொல்லப்பட்ட 24 தத்துவங்களும் சேர்ந்து உடல் பிறந்தாலும் உடலின் இயக்கத்திற்கு மொத்த தத்துவங்கள் 96 ஆகும். அவையாவன:-
தத்துவங்கள் 96
அந்தக் கரணங்கள்-4
1.மணஸ்-மனம், 2.புத்தி-அறிவு, 3.சித்தம்-நினைவு, 4.அகங்காரம்-முனைப்பு
அவத்தைகள்-5
1.சாக்கிரம்-நனவு, 2.சொப்பனம்-கனவு, 3.சுழுத்தி(ஸுஷுப்தி)-உறக்கம், 4.துரியம்-பேருறக்கம்(நிட்டை), 5.துரியாதீதம்-உயிர்ப்படக்கம்,
ஆதாரங்கள்-6
1.மூலாதாரம்- மூலம், 2.சுவாதிஷ்டானம்- கொப்பூழ், 3.மணிபூரகம்- மேல்வயிறு, 4. அநாதகம்- நெஞ்சம், 5.விசுத்தம்- மிடறு, 6.ஆக்ஞேயம்- புருவ நடு
உடலின் வாசல்கள்-9
1&2.கண்கள்-2, 3&4.செவிகள்-2, 5&6.மூக்குத்துவாரங்கள்-2, 7.வாய்-1, 8.குய்யம் எனப்படும் ஆண்/பெண் குறி-1, 9.குதம் எனும் மலவாய்-1
கர்மேந்திரியங்கள்-5
1.பாயுரு-குதம்/மலவாய், 2.வாக்கு-நாக்கு/வாய், 3.பாணி-கை, 4.பாதம்-கால், 5.உபஸ்தம்-கருவாய்/குய்யம்
குணங்கள்-3
1.ராஜஸம்-எழுச்சி, 2.தாமஸம்-மயல்(மயக்கம்), 3.ஸாத்வீகம்-நன்மை(அமைதி)
கோசங்கள்-5
1.அன்னமயகோசம்- உணவுடம்பு/ பருவுடம்பு,(ஐவுடம்புகள்) 2.பிராணமயகோசம்- காற்றுடம்பு/ வளியுடம்பு, 3.மனோமயகோசம்- மனவுடம்பு, 4.விஞ்ஞானமயகோசம்- அறிவுடம்பு, 5.ஆனந்தமயகோசம்- இன்பவுடம்பு.
தன்மாத்திரைகள்-5
1.சுவை-ரசம், 2.ஒளி-ரூபம், 3.ஊறு-ஸ்பரிசம், 4.ஓசை-சப்தம், 5.நாற்றம்-கந்தம்
தாதுக்கள்-7
1.இரசம்/சாரம், 2.இரத்தம்/உதிரம்/செந்நீர், 3.மாமிசம்/ஊன், 4.மேதஸ்/கொழுப்பு, 5.அஸ்தி/எலும்பு, 6.மச்சை/மூளை, 7.ஆணின் சுக்கிலம் அல்லது பெண்ணின் சுரோணிதம் (ஆண், பெண் இன்பச் சுரப்பு) / வெண்ணீர்.
நாடிகள்-10
1.இடைகலை, 2.பிங்கலை, 3.சுழுமுனை, 4.சிகுவை, 5.புருடன், 6.காந்தாரி, 7.அத்தி, 8.அலம்புடை, 9.சங்கினி, 10.குகு
பஞ்சபூதங்கள்-5
1.நிலம்-பிருதிவி, 2.நீர்-அப்பு, 3.நெருப்பு-தேயு, 4.காற்று-வாயு, 5.விசும்பு-ஆகாயம்
பிணி/வியாதி-3
1.வாதம், 2.பித்தம், 3.சிலேத்துமம்(கபம்) (ரோகங்கள்)
ஞானேந்திரியங்கள்-5
1.மெய்-தொக்கு, 2.வாய்-சிங்குவை, 3.கண்-சட்சு, 4.மூக்கு-ஆக்கிராணம், 5.செவி-சோத்திரம்
மண்டலங்கள்-3
1.அக்னிமண்டலம், 2.ஆதித்த மண்டலம், 3.சந்திரமண்டலம்
மலங்கள்-3
1.ஆணவம், 2.மாயை, 3.கன்மம்-காமியம்-வினை
ராகம்/விகாரங்கள்-8
1.காமம், 2.குரோதம், 3.லோபம், 4.மோகம், 5.மதம், 6.மார்சரியம், 7.இடம்பம், 8.தர்ப்பம்
வாயுக்கள்-10
1.பிராணன், 2.அபானன், 3.வியானன், 4.உதானன், 5.சமானன், 6.நாகன், 7.கூர்மன், 8.கிருகரன், 9.தேவதத்தன், 10.தனஞ்சயன்.
ஆக மொத்தம்-96 தத்துவங்கள் எனப்படும். இந்த 96 தத்துவங்கள்தான் உடலின் முழுமையான செயல்பாட்டிற்கான சிறப்பான தத்துவங்கள்.
இந்த 96 தத்துவங்களால் 96 வகையான வேதியல் தொழில்கள் உடலில் நடைபெறுகின்றது என்பதை கண்டறிந்தவர்கள் சித்தர்கள். இந்த தத்துவங்களில் மாற்றம் ஏற்படும் போதுதான் உடலில் நோய் ஏற்படும். பொதுவாக ஐம்பூதங்களும் சரிவர இயங்க வேண்டும். இந்த 96 தத்துவங்களில் உள்ள 7வகைத் தாதுக்களும் 3வகை தோஷங்களையும் பிரதானப்படுத்தியதே சித்த மருத்துவம். தாதுக்களையும் தோஷங்களையும் யோக முறையில் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்பதே சித்தர்களின் கண்டுபிடிப்பாகும்.
#####