வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் விளையாட்டின் ஆர்வத்தில் விளையாடிக் கொண்டே அருகில் இருந்த காட்டிற்குள் சென்றுவிட்டனர். தாங்கள் வந்த வழி மறந்து, தாங்கள் செல்லும் வழி வீட்டிற்குச் சென்றுவிடும் என நினைத்து செல்ல இறுதில் அடர்ந்த காட்டின் உட்பகுதியை அடைந்தனர். வழி தெரியவில்லை. நேரம் கடந்தது. காட்டின் உயிர்ப்பு ஓசைகள் அச்சத்தை ஏற்படுத்தியது.
கொடிய மிருகங்களின் ஓசை மிக அருகில் கேட்க பதறிய சிறுவர்களில் ஒருவன் நம்மை கடவுளிடம் ஒப்படைத்து விடுவோம். அவர் காப்பாற்றுவார் என்றான். அடுத்தவன் எல்லாவற்
றிற்கும் அவரை ஏன் கஷ்டப்படுத்தவேண்டும். அவர் கொடுத்த ஆற்றலில் நம் அறிவை உபயோகப்படுத்துவோம். இறுதியில் அவரிடம் உதவி கேட்போம் என்றான்.
இருவரும் அருகில் இருந்த மரத்தில் எந்த உயரத்திற்கு செல்ல முடியுமோ அந்த உயரத்திற்கு சென்றார்கள். மரத்தின் அருகில் வந்த மிருகங்கள் அந்த உயரம் ஏறமுடியாமல் திரும்பியது. உச்சியில் இருந்து பார்த்தபோது அவர்களின் வீடு தெரிந்தது. அப்போது அவர்களிருக்கும் இடத்திலிருந்து வீட்டிற்கு செல்லும் வழியும் புலப்பட்டது. இதுவரை அவர்கள் வீடு இருக்கும் திசைக்கு எதிர் திசையில் சென்றுவிட்டதை புரிந்தார்கள்,
மரத்திலிருந்து கீழிறங்கி வீட்டை அடைந்தார்கள். நம்மை படைத்த கடவுள் எல்லாப் பிரச்சனைகளிலிருந்தும் நம்மை பாதுகாக்க நமக்குள் திறனை வைத்துள்ளார், அதை சரியாக நாம் உணர்ந்து செயல் படுத்தவேண்டும். அதைவிடுத்து தேவையில்லாமல் நாம் யாரையும் தொந்திரவு செய்யக்கூடாது என்பதை புரிந்து கொண்டனர்.