புதிய பாதை!
இறைவனைக் காண விரும்பி வேண்டி நின்றவரிடம் அடர்ந்த காட்டின் ஓர் வழியைக் காட்டி அதனுள் சென்று திரும்பிவர வாழ்த்துச் சொல்லி அனுப்பினார் முனிவர். காட்டினுள் செல்லச் செல்ல அதன் அடர்த்தியான குழுமை செழுமை அவன் மனதை கவர்ந்தது. சிறிது நேரத்தில் பசி எடுக்கத் தொடங்கியது. நறுமணம் கமழும் மாம்பழங்களை ருசித்த அவனுக்கு குரங்கள் உடைத்துப்போட்ட பலாப் பழங்கள் சுவையாக கிடைத்தது. அடுத்து வாழைத் தார்களில் பழுத்த பழங்களை உண்டு தன் பசி தீர்த்தான்.
சிறிது தூரம் சென்றதும் ஒர் புலி அவனைக் கண்டு உறும அதனிடமிருந்து தப்பி ஓட அச்சமயத்தில் வேடன் ஒருவன் அங்கு வந்து புலியிடமிருந்து காப்பாற்றினான். புலியிடமிருந்து தப்பித்தாலும் சோர்வு மிகுதியால் இறைவனைக் காணவேண்டும் என்ற ஆர்வம் குறைந்து இக்காட்டிலிருந்து வெளியேறினால் போதும் என்ற நிலையைக் கொண்டான்.
சோர்வுடன் நடந்தவனுக்கு காட்டில் ஓர் கோவில் தெரிய அங்கு படையல் போட்டிருந்ததை உண்டு அங்கேயே படுத்து உறங்கினான். காலையில் எழுந்து தென்பட்ட பாதயில் சொல்ல அது சுற்றி சுற்றி ஊருக்கு வந்து சேர்ந்தது. துறவியை சந்தித்து நடந்ததைச் சொன்னான்,
அவன் சொன்னதைக் கேட்ட துறவி உன்னைப்போல் யாரும் ஓர் நாளில் இறைவனை இத்தனைமுறை கண்டிருக்க முடியாது என்றார். மேலும் சொன்னார். இறைவனின் ஐந்து தொழில்களில் நீ காட்டுக்குள் சென்றபோது உனக்கு பசியை தோன்றுவித்து நீ உண்பதற்கு கனிகளைப் படைத்தார். அது படைத்தல் தொழில். புலியிடமிருந்து உன்னைக் காத்தது வேடன். அது காத்தல் தொழில். காட்டைவிட்டு வெளியேறினால் போதும் என்று நீ நினைத்தாய். அது உன் ஆணவத்தை அழித்தல் தொழில். கோவிலில் படையலை உண்டு உறங்கினாய். ஈசன் அங்கிருந்தும் உன்னால் உணரமுடியவில்லை. அது மறைத்தல் தொழில். நீ பத்திரமாய் திரும்பிவந்து என்னிடம் சொல்லி இந்த விளக்கங்களை கேட்கின்றாய் அல்லவா இதுவே இறையின் அருளல் தொழில்.
அன்பனே இறைவன் அனுபவங்களில் வாழ்கின்றான். வாழ்க்கையின் பாடங்கள் நமக்கு அனுபவங்கள். அந்த அனுபவ பாடங்கள் இன்பம், துன்பம் தரலாம். ஆனால் அவற்றை நீ மறக்காமல் நினைவில் கொண்டு வாழ்க்கையில் வழிநடக்க பயன் படுத்திக் கொள். அந்த அனுபவங்கள் ஓர் புதிய பாதையாக இருக்கும் -குருஸ்ரீ பகோரா