இறைவனை உணர்வது எப்படி!
கடவுள் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்து இருப்பவர். உன்னுள்ளேயும் இருக்கின்றார் என்று தான் சொன்னதை புரிந்து கொள்ள இயலாத சீடனுக்கு விளக்கங்கள் எதைச் சொல்லியும் புரியவைக்க முடியவில்லை ஆதலால் தன் ஞானக் குருவிடம் அந்த சீடனை அனுப்பி வைத்தார் குரு. குருவின் குருவிடம் சென்ற சீடன் கடவுளைப் பற்றிய சந்தேகங்களை அறிந்து கொள்ள என்னை என் குருநாதர் அனுப்பிவைத்தார் என்றான்.
குருவின் குரு அவனிடம் தண்ணீரில் இருக்கும் மீனுக்கு பல நாட்களாக தாகம் தீரவில்லை ஏன் என்பதுபற்றி உனக்குத் தெரியுமா என்றார்.
மீன் தன்னைச் சுற்றி இருக்கும் நீரைக் குடிக்க வேண்டியதுதானே என்றான். சீடன்.
குருவின் குரு சொன்னார். உன்னை சுற்றியுள்ள எல்லாவற்றிலும் இறைவன் இருக்கின்றார். ஏன் உன்னுள்ளேயும் இருக்கின்றார். தண்ணீரிலே உள்ள மீனுக்கு தன்னைச் சுற்றி நீர் இருப்பது தெரியாததுபோல உன்னைச் சுற்றியிருக்கும் இறைவனை அறிந்து கொள்ள முடியவில்லை உன்னால். கடவுளை உணர நீ முயற்சிக்க வேண்டும். உலக ஆசைகளைத் திசை திருப்பி கடவுளின்மேல் செலுத்து. உலக விஷயங்கள்மேல் இருக்கும் எண்ணத்தை இறைவன்மேல் திருப்பு நீ கடவுளை உணர்வாய் என்று கூறி ஆசி புரிந்தார்.-குருஸ்ரீ
######