தர்மத்தின் கணக்கு!
அன்று பலத்த மழை. வழிப்போக்கர்கள் மூவர் அங்கிருந்த சத்திரத்தில் தங்கினர். இரவு வெகு நேரமாகியும் மழை விட வில்லை. அருகில் உணவிற்கு ஏதும் வழியில்லை. அப்போது ஒருவன் 3 ரொட்டிகளும் இன்னெருவன் 5 ரொட்டிகளும் கொண்டு வந்திருந்தனர். மூன்றாவது நபர் வீட்டிற்குச் சென்று விடலாம் என்று நினைத்து வந்தவன் எதிர்பார மழையில் மாட்டிக் கொண்டான். அப்போது 5 ரொட்டி வைத்திருப்பவன் என்னிடமுள்ள ரொட்டிகளை 3 துண்டாகப் போட்டால் 15 துண்டுகள் வரும் உன்னிடம் இருப்பதை 3 துண்டுகளாகப் போட்டால் 9 துண்டுகள் வரும். மொத்தம் 24 துண்டுகள். அதை சமமாகப் பிரித்து ஆளுக்கு 8 துண்டுகள் எனப் பங்கிச் சாப்பிடலாம் என்ற யோசனையை ஏற்று மூவரும் பசியாறினர். அப்படியே அசதியில் உறங்கினர். மழை விட்டிருந்தது. காலையில் எழுந்ததும் அவரவர் வீட்டிற்கு செல்லத் தயாரானார்கள். அப்போது ரொட்டி கொண்டு வராதவன் அன்பர்களே நீங்கள் எனக்கு எட்டு ரொட்டித் துண்டுகளை அளித்தீர்கள். சமயத்தில் நீங்கள் மனதாரச் செய்த உதவியை நான் மறக்க மாட்டேன். இருந்தாலும் என் நினைவாக இந்த காசுகளை வைத்துக் கொள்ளுங்கள் என எட்டு காசுகளை அவர்களிடம் தந்தான். அப்போதுதான் குழப்பம் உருவாயிற்று 3 ரொட்டிகள் கொடுத்தவர் ஆளுக்குச் சமமாக 4 காசுகள் எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்ல மற்றவர் 3 ரொட்டி கொடுத்தவருக்கு 3 காசுகள் 5 ரொட்டி கொடுத்தவருக்கு 5 காசுகள் என்றார், இருவரும் ஒத்துப் போகாததால் குழப்பம் நீடித்தது,
அப்போது அந்தப் பக்கம் ஒரு ஞானி வந்தார். அவரிடம் முறையிட்டனர். நடந்ததைக் கேட்டறிந்தவர் சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு 3 ரொட்டிகள் தந்தவருக்கு 1 காசும், 5 ரொட்டிகள் தந்தவருக்கு 7 காசும் கொடுக்க வேண்டும் என்றார். இதைக் கேட்ட 3 ரொட்டி கொடுத்தவன் இது அநியாயம் என்றான். ஞானி சொன்னார், உன்னிடம் இருந்தது 3 ரொட்டிகள் அதை 3 ஆக பிரித்தால் மொத்தம் 9 துண்டுகள். அதில் 8 துண்டுகள் உன்னிடம் வந்து நீ உண்டாய். ஆக நீ தானம் அளித்தது ஒரு துண்டுதான் அதற்கு ஒரு காசு போதும். அவர் தானம் அளித்தது 7 துண்டுகள் அதற்கு 7 காசுகள் என்று கூறி அனைவரையும் சமாதனப்படுத்தி .இதுவே தர்மம் என்றார்.-குருஸ்ரீ
&&&&&