குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
ஞானஅகவல் யோகம்
Written by குருஸ்ரீ பகோராஓம் நமசிவாய!
ஏத்தி எனதுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல் போல்
செக்கர் திருமேனிச் செம்பொற் கழலைங்கை
முக்கட் கடாயானை முன்!
******
ஞானஅகவல் யோகம்
தத்துவங்கள் எல்லா கலைகளுடன் ஞானமாக இணைந்துள்ளது. ஓம், பிரணவம், குண்டலினி எல்லாம் ஒரே தன்மையுடையது. அட்டாங்க யோக முறைகள், தெரிந்து பழகியபின் ஞானஅகவல் யோகம் பயின்றால் நலமாகும். இங்கு ஞானஅகவல் யோகம் மூலம் சிவாகமத்தில் கூறியுள்ள 16 கலைகளைப் பற்றி ஓரளவு புரிந்து கொள்ள முயல்வோம். இந்த யோகத்தை ஞானமாலை யோகம், ஞானசட்க யோகம் பயின்றபின் பயிலவும்.
சுழுமுனைநாடி மற்றும் இடம்வலம் நாடிகள்
போற்றிய தலமை நாற் சதுரத்துள்
ஓங்காரம் சேர் ரீங்காரத்து
மூலை இரண்டிலும் சாலத் தோன்றி
இடை பிங்கலைகள் இடம்வலம் நிற்கும்.
மூலாதாரம் ஆறு ஆதாரங்களில் முதலும் தலையானதுமாகும். இது நான்கு இதழ் தாமரையாகும். மூலாதாரம் சதுரம் அடையாளமாவதால் நாற்சதுரத்துள் எனப்படும். 1.நடுப்பகுதி சுழுமுனை நாடி தோன்றுமிடம் (ஓம்), 2.வலப்பக்கமூலை பிங்களநாடி தோன்றுமிடம் (ஹ்ரீம்), 3. இடப்பக்க மூலை இடாநாடி தோன்றுமிடம் (ஹோம்)
மேலை மூலை மூலமாகச்
சுழுமுனை சித்திரம் வழுவில் வச்சிரம்
ஒன்றுக்கு ஒன்று சென்று உள்வாங்கி
உரைசெய் கோணத்து ஒருதலை செருகி
இருதலை திரண்ட ஒருவேய் போலக்
கோணற நிற்கும் வீணா தண்டின்
ஊடே ஓடி நாடி மூன்றும்
பிரம்மரந்திரம் உருவி நிற்கும்.
மூலாதாரத்தின் நடுவே உள்ள முக்கோணத்தில் சுழுமுனைநாடி துவங்குகின்றது, வச்சிர நாடியுள் சித்ர நாடி, சித்ரநாடியுள் சுழுமுனைநாடியுமாக முன்றும் ஒன்றில் ஒன்றாக உள்ளடங்கி இருக்கின்றது. மூங்கிலில் இருகொம்புகளைப்போல் தண்டுவடத்தில் இம்மூன்றும் தலை உச்சியாகிய பிரம்மத் துளைவரை செல்கிறது, ஒவ்வொரு ஆதாரத்தையும் கடக்கும்போது இடம்வலம் என தமக்குள் மாறிக்கொள்ளும்.
இடைபிங் கலைகள் நடுவு தண்டுடனே
தொடர்வுறப் பின்னி அடைவா தாரம்
ஆறினும் கூடி வேறு வேறாகிப்
புருவ மத்திமம் மருவி நாசிக்கு
இடமும் வலமும் இடமென நிற்கும்
ஆறு ஆதாரத்திலும் தமக்குள் பின்னிப் பின்னிப் போகும், ஒவ்வொரு ஆதாரத்தின் முன்னும் வேறுபக்கமாகப் பிரியும், இப்படி புருவ மத்திவரைப் போகும் என்பதாகும். வலது மூக்கில் சுவாசம் நடக்கும்போது பிங்கள நாடி செயல்படுகிறது. இடது மூக்கில் சுவாசம் நடைபெறும்போது இடாநாடி செயல்படும். சுழுமுனைநாடி எப்போதும் நடுவில் தண்டுவடத்தில் போகும்.
உந்தியம் தாமரைக் கந்தம் மேவி
இடையிலும் கலையினும் எழுந்து ஐந்துநாடி
இடமும் வலமும் நடுவும் மேல்போய்க்
கண்வாய் செவிஎனக் கண்ணி நிற்கும்.
உந்தியில் உள்ள மணிபூரகமாகிய பத்து இதழ் தாமரையை அடைந்து இடை பிங்களையுடன் ஐந்து நாடிகளாய் மாறி, இடம் வலம் நடு என்று பிரிந்து கண்ணிலும் நாக்கிலும் செவியுலும் பொருந்தி நிற்பதாகும். கந்தம்- தாமரையின் கீழ். காந்தாரி- இடாநாடியில் இருநாடிகள் தோன்றி கண்ணில் நிற்பன. அலம்புடை- பிங்களையில் இருநாடிகள் தோன்றி செவிகளில் நிற்பது, சிங்+குவை=சிகுவை- சுழுமுனையில் ஒருநாடி தோன்றி நாவின் அடியில் நிற்பது ஆகும்.
முன்னர்ச் சொன்ன அந்நிலை தன்னில்
மூன்றுநாடி தோன்றிக் கீழ்போய்க்
குதத்தும் இலிங்கத்தும் பகுத்துடன் நிற்கும்.
முன்பு சொன்ன மூன்று நாடிகளில் மேலும் இருநாடிகள் தோன்றிக் கீழே போகும். ஒன்று எருவாயில் நிற்கும் அதைக் குரு நாடி என்பர். மற்றது ஆண்பெண் குறியில்- லிங்கம் போய் நிற்கும் இது சங்கினி நாடி எனப்படும்.
யோக ஆதாரங்களின் பெயர்கள், தாமரை இதழ் எண்ணிக்கை மற்றும் நிறம்
மன்னும் அபானம் இலிங்கம் உந்தி
உன்னும் மார்பு களம்நுதல் உச்சி
சொன்ன தானம் தன்னின் நாமம்
மூலாதாரம் சுவாதிட்டானம்
மேல்மணி பூரகம் அனாகதம் விசுத்தி
ஆக்கினை பிரம்ம ரந்திரம் இதனின்
மேற் சொல் வள்ளிதழ் விளம்பும் காலை
நாலாறு ஐந்து நண்ணும் ஈராறு
ஏழும் ஈரெட்டு இரண்டு ஒன்று ஆயிரம்
மறுவறு தாமரை நிறமது நிகழ்த்தில்
வெண்மை பொன்மை செம்மை படிகம்
உண்மைதரு குருத்து புகைத்திரன் பளிங்குமுன்.
1.குறிக்குகீழ்- மூலாதாரம்- நான்கு இதழ் தாமரை-வெண்மை, 2.குறிக்குமேல்- சுவாதிட்டானம்- ஆறு இதழ் தாமரை-பொன்மை. 3.தொப்புள்- மணிபூரகம்- பத்து இதழ் தாமரை-செம்மை, 4.மார்பு- அநாதகம்- பன்னிரண்டு இதழ் தாமரை-படிகம், 5.கண்டம்- விசுக்தி- பதினாறு இதழ் தாமரை-பச்சை. 6.புருவமத்தி- ஆக்ஞா- இரண்டு இதழ் தாமரை-புகைநிறம். 7.தலைஉச்சி- ஸஹஸ்ராரம் அல்லது பிரம்மரந்திரம்- ஆயிரம் இதழ் தாமரை-படிகம். என்ற ஆதாரங்களில் அபான வாயு நிற்கும் என்பதாகும். அனைத்தும் முதுகுத் தண்டு வடத்திலேயே உணரப்படும். இந்த நிறங்கள் மட்டும் பிறர் கூறியதிலிருந்து சிறிது மாறுபடும்.
தியான வடிவம்
சொன்னதானம் சொரிதழல் தியானம்
சித் + அக்னி = சிதக்கனி. சிதக்கணி குண்டம்- சித்தமாகிய நெருப்பு. எரியும் தழல் நிறத்தில் மூலாதார முக்கோணத்தை நினைத்து தியானம் செய்யவும்.
சுவாசம் மற்றும் மூச்சுகள்
மன்னும் முக்கோணம் வயங்கும் நாப்பண்
இயங்கும் அசபை நயந்து இனிது உரைக்கில்
இருபத்து ஒராயிரத்து அறுநூறு
மருவிய வாயு வலம் இடமாக
மாறி மாறி வேறு பாடாகிப்
பூதம் ஐந்தினும் தோன்றும் நாழிகை
ஒன்றுக்கு ஒன்று குன்றாது எழுந்து
பன்னிரண்டு அங்குலம் முன்னி ஒடி
இருநாலு மீண்டங்கு ஒருநால் ஒழியும்
இந்தக் கருத்தைச் சிந்தித்து அறிவால்
அந்த ஆதாரம் அசைவுஓர் ஏழினும்
பற்றற நிற்கும் பவனம் அறுநூறு
மூன்றாயிரம் மூன்றிடம் மருவி
ஒன்றிட மூவாயிரம் என நிறுத்தி
மந்திரம் ஆம் எனத் தந்திரம் சொல்லும்.
அ + ஜபா= அஜபா- அசபை- இயற்கையாகவே ஜபம் போலிருக்கும். மூலாதாரப் பகுதியில் முக்கோண உச்சியில் அசபை என்ற மந்திரம் இயல்பாக அசைந்தபடி இருக்கும். ஹம் – ஸம் என்ற இரு மந்திரங்களே அசபை. மூச்சை இழுக்கும்போது ‘ஹம்’ என்றும் விடும்போது ‘ஸம்’ என்றும் சொல்வது ‘ஹம்ஸ’ மந்திரம் ஆகும். ஹம்ஸ மந்திரத்தை மூலாதாரத்தை நினைத்துச் சொல்ல வேண்டும். அது ஸோஹம் என்றபாவனையில் ‘சிவஹோம்’ எனப்படுவதாகும். “ஹம்ஸஸ் ஸோஹம் ஸோஹம் ஹம்ஸஸ்” எனத் தொடர்ந்து கூறலாம். இந்த அசபையால் பிராணன் செயல்படத் தொடங்கி மூச்சை இழுப்பதும் விடுவதும் நடைபெறுகிறது. பிரபஞ்சம் முழுவது உள்ள உயிர்கள் மூச்சுவிடுவது இப்பாவனையில்தான்.
ஒருநாளைக்கு இடம் வலமாக மாறி 21600 மூச்சுகள் ஐந்து பூதங்களுக்கும் சேர்த்து நாம் விடுகிறோம். மொத்தம் 60 நாழிகையில் பகல் 30 இரவு 30 அதில் ஐந்து பூதங்களுக்கும் பிரித்தால் பகலில் 6ம் இரவில் 6ம் வரும். 1 நாழிகை = 24 நிமிஷம். ஆக 6 நாழிகைக்கு 144 நிமிஷம். அது 2 மணி 24 நிமிடங்களாகும்.
காலை 06.00 முதல் 08.24 வரை-ஆகாச பூதப்பகுதி, காலை 08.25 முதல் 10.48 வரை-காற்றுப் பூதப்பகுதி. காலை 10.49 முதல் 01.12 வரை-அக்னிப் பூதப்பகுதி. காலை 01.13 முதல் 03.36 வரை-நீர்ப் பூதப்பகுதி. காலை 03.37 முதல் 06.00 வரை-நிலப் பூதப்பகுதி. இதே போன்று இரவுக்கும் கணக்கிடவும்.
இந்த சுவாசம் மூச்சு விடும்போது 12 அங்குலமாகவும் மூச்சை உள் இழுக்கும்போது 8 அங்குலமாகவும் இதன் வித்தியாசம் 4 அங்குலம் அளவிலும் வேகத்திலும் உள்ளதாகும். 21,600 மூச்சையும் ஏழு ஆதாரங்களுக்கு உரிய முறையில் பகுத்து அந்த எண்வரை அந்த ஆதாரத்தை பாவித்து பிராணாயாமம் செய்ய வேண்டும்.
1.மூலாதாரம்- 600 மூச்சுகள், 2.சுவாதிட்டானம்- 6000 மூச்சுகள், 3.மணிப்பூரகம்- 6000 மூச்சுகள், 4.அநாகதம்- 6000 மூச்சுகள், 5.விசுத்தி- 1000 மூச்சுகள், 6.ஆக்ஞா- 1000 மூச்சுகள், 7.ஸகஸ்ராரம்- 1000 மூச்சுகள். மொத்தம் 21,600 மூச்சுகளாகும் இவை அந்தந்த ஆதரத்தின் அதிதேவர்களுக்குரிய மூச்சு என நினைத்து செய்க.
கோடகலை- குண்டலினி
உன்னும் அசபை ஓங்காரத்து
மன்னும் தாபரம் காமியம் மலமாம்
குண்டலினி என்பது பராசக்தி வடிவமாம். எங்கும் பரவியுள்ள சக்தியாதலால் கால கணக்கு, பஞ்சபூதப்பகுப்பு, நீள அகல கணக்கு, கலைகளின் பகுதி கிடையாது. பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ள சக்தி நிர்விகார குண்டலினி அதாவது பகுத்து உணர முடியாத குண்டலினி ஆகும். அந்த குண்டலியின் ஒருபகுதி தானாகப் பகிர்ந்து நம் பிறப்பினால் நமக்குள்ளே இருக்கின்றது, இது விகாரக் குண்டலினி ஆகும். இது பிரபஞ்ச நிர்விகாரக் குண்டலியுடன் எப்போதும் உறக்க நிலையில் தொடர்பு கொண்டிருக்கும். விழித்த நிலயில் தொடர்பு கொள்வதே சமாதி நிலையாகும். நாம் செய்த முன்பிறவிக் கர்மங்களே காமிய மலம் எனப்படும்.
1.மேதை-அகாரக்கலை
உந்தி மேல்நால் அங்குலி அகாரம்
வந்த தெய்வம் மலரயன் மூன்று
சிறந்த மாத்திரை; நிறம்தழல் கொழுந்து
ஆனது பிண்டம்; அண்டம் பிருதிவி
பகரில் நூறாயிர கோடி யோசனை
அகலம் உயரம் கனம் ஒரு கோடி
புவித் திறமான நிவிர்த்தி கலையே
மணிப்பூர ஆதாரமாகிய தொப்புள் உந்திக்குமேல் 4விரல் அளவு
1. அதிதேவர்-பிரமன், 2. மாத்திரை-மூன்று, 3. நிறம் -தழல் கொழுந்து நிறம், 4. இருப்பிடம்-உடம்பிற்குள் பகுதி(பிண்டம்) இதுவரை நம் உடம்பிற்குள் உள்பகுதி, 5. பஞ்சபூதப்பகுதி-நிலம் (பிருதிவி). 6. நீள,அகல,கனம்(பரப்பளவு)-இலட்சம் கோடி யோசனை தூரம். 7. பஞ்ச கலைப் பகுதியில்-நிவர்த்திக் கலை. 8. உடம்பிள் உள்ள பகுதி-4விரல் உந்திக்கு மேல்- இது அண்டத்தில் உள்ள பகுதி)
2.அருக்கீசம்-உகாரக்கலை
அகாரத் துக்கு மேலெட் டங்குலி
உகாரம் ஆகும்; உயர்தெய்வம் விஷ்ணு
இரண்டு மாத்திரை; இருகதிர் நிறமே;
யோனி ஊர்வன; இழுக்கு மலமாம்;
பிண்டம் சேரும் அப்பிண்டம் செப்பில்
பத்து நூறாயிர கோடி யோசனை
ஒத்த அகலம் உயரம் கனமே
இரண்டு கோடி என்பது; இதுவே
பரந்து நிற்கும் பிரதிட்டா கலையே.
அகரக் கலையின் எல்லைக்கு அப்பால் எட்டு அங்குல அளவு வரை உகாரக் கலையின் பரப்பாகும்.
1. அதிதேவர்- விஷ்ணு, 2. மாத்திரை- இரண்டு, 3. நிறம்- சூரிய சந்திரர் இணைந்த ஒளியாம். 4. (யோனி) பிறப்புவகை- ஊர்வன. 5. மலம்-மூலப்பிரகிருதி (இதுவரைஉடலில் பிண்டத்தில் இருப்பது) 6. பஞ்சபூதம்- அப்பு அண்டம் (நீர்). 7. நீள, அகல, (உயரம்)- பத்து இலட்சம் கோடி யோசனை. 8. கனம்-இரண்டு கோடி யோசனை. 9. பஞ்ச கலை-பிரதிட்டா கலை
3.விடம்-மகரக்கலை
உகாரம் மீதே மகாரம் எட்டங்குலி;
நிகரில் தெய்வம் உருத்திரன்; மாத்திரை ஒன்று
மெய் இருள் விலக்கும் மின்னிறம்; பிண்டம்
தேயு அண்டம் தெரியும் காலை
இருபது நூறாயிரகோடி யோசனை
கருதிய அகலம் உயரம் ஆகும்
ஆன்ற கனம் ஒரு மூன்று கோடி
சுத்த மான் வித்தியா கலையே.
உகாரக்கலைக்குப்பின் எட்டங்குலப் பகுதி மகரக் கலையின் பரப்பாகும்.
1. அதிதேவர்- உருத்திரன், 2. மாத்திரை- ஒன்று, 3. நிறம்- மின்னல் ஒளி (இதுவரை உடலில் பிண்டத்தில் இருப்பது), 4. பஞ்சபூதம்- நெருப்பு, 5. நீளமும் உயரமும்- 20 இலட்சம் கோடி யோசனை, 6. அதன் கனம்- மூன்று கோடி, 7. அகலமும் உயரமும்- 30 இலட்சம் கோடி யோசனை, 8. கனம்- 4 கோடி யோசனை, 9. பஞ்ச கலை - சாந்திக் கலை இவை அண்டத்தில் உள்ளவை.
அகரம்-3 + உகரம்-2 + மகரம்- 1 மொத்தம் 6 மாத்திரை. தனித்தனியே உச்சரிக்காமல் ‘ஓம்’ என்று உச்சரிக்க 6 நொடி ஒலி அளவாகும். உந்திலிருந்து தொண்டைக் குழிவரை 6 நொடி அளவு ஓம் நீட்டி சொல்லும்போது புருவ மத்தியில் அது அரை மாத்திரையாக செல்லும். இது மேலும் மேலும் ஏறி மேலே செல்லச் செல்ல குறைந்து உன்மனைவரை செல்லும். தொடர்ந்து ஓம் உச்சரிப்பதால் ஒலியானது தொடர்ந்து உன்மனைவரை போகும். இது மவுனமாகவே உச்சரிப்பதாகும். இடங்கள், வடிவங்கள், அளவு, அதிதேவர் ஆகியன நினைவு கொண்டு உச்சரிக்கும்போது ஒலி அலை உண்டாகி காதில் ஓசை எழும்பும்.
4.விந்துக்கலை
விந்து- பிந்து- புள்ளி என்பதாகும். வட்டமான ஒளிப் பொட்டையே விந்து வடிவமாக கொள்க.
5.அர்த்தசந்திரக்கலை
அர்த்த சந்திரன் மூன்று அங்குலியே
வைத்த மாத்திரை கால்வால் ஒளியாம்
இவ்வகை ஐந்தும் மெய்பெறு தூலம்.
விந்துக்கலை முடியும் புருவமத்திக்குமேல் 3 அங்குலம் வரை உள்ளது அர்த்த சந்திரக் கலையின் பரப்பாகும். மாத்திரை- ஒலி அளவு கால் நொடியாகும். நிறம் ஒளிவாளின் கூரிய வாய் போன்றது. நெற்றி வடிவம் பாதிச்சந்திரன் போன்றிருப்பதால் அர்த்தசந்திரன் எனப்பட்டது. அதிதேவர்- சதாசிவன். அகரம், உகாரம், மகரம், விந்து, அர்த்த சந்திரன் ஆகிய ஐந்தும் உடம்பில் படர்ந்து இருப்பதால் இவைகள் தூல கலைகள் எனப்படும்.
6.நிரோதினிக்கலை
நேய மான நிரோதி மூன்றங்குலி;
ஆய மாத்திரை அரைக்கால்; நிறம்புகை;
நண்ணும் யோனி நாற்காலாகும்;
எண்ணும் மாயேயம் மலம் என இசைப்பர்.
அர்த்தசந்திரக்கலைக்குமேல் 3 அங்குல பரப்பு கொண்டது, முக்கோண வடிவம் கொண்ட நிரோதினிக்கலை. மாத்திரை- அரைக்கால், நிறம்- புகை, யோனி- நாற்கால் விலங்காம். மலம்- மாயேயம்- மாயையின் காரியமான மலம் ஆகும். அதிதேவர்- சதாசிவன்
7.நாதக்கலை
தோன்றிய நாதம் மூன்ரு அங்குலயே;
ஏன்ற வடிவம் இரண்டு விந்து;
பேணும் மாத்திரை மாகாணி; மணிஒளி
நிரோதினிக் கலைக்குமேல் நாதக் கலையில் பரப்பு 3 அங்குலம். இரண்டு விந்துகள் இதன் வடிவமாகும், ஒலி அளவு- மாகாணியாகும்- அரைகாலில் பாதியாகும். நிறம்- மாணிக்க ஒளியாகும். அதிதேவர்- சதாசிவன். யோனி-பிறப்புவகை-மானிடம். மலம்-மாமாயை (சுத்தமாயை)
முதல் 3 கலைகளுக்கும் அ+உ+ம் என்ற எழுத்துக்களும். நான்காவதற்கு ஒளிப்புள்ளி வட்டமும் ஐந்தாவதற்கு நெற்றிவடிவமாகிய அர்த்த சந்திரனும் ஆறாவதற்கு முக்கோணமும் சொல்லியதில் உடம்பு, எழுத்து ஆகியனவே வடிவங்களாயின. ஏழாவதிற்கு இரு ஒளிப் புள்ளிகள் வடிவமானது. பிரசாத மாலையில் நடுவில் கலப்பையும் வலம் இடத்தில் இரு புள்ளிகளும் சொல்லப்பட்டது. இதில் எதை வேண்டுமாயினும் எடுத்துக் கொள்ளலாம்.
8.நாதாந்தக்கலை
முயன்ற நாதாந்தம் மூன்றங் குலியே;
இயன்ற வடிவோர் அலம் ஒரு விந்து
தெய்வம் சதாசிவம்; சேரும் மாத்திரை
எய்திய அரைமா அரைக்காணி; இதன் நிறம்
இராண்டு மின்னாம்; திரண்டயோனி
மானிட மாகும்; மலம்மா மாயை;
ஆனது பிண்டம்; அண்டம் ஆகாசம்;
நாற்பது நூறாயிர கோடி யோசனை
ஏற்ற அகலம் இசைந்த உயரம்
முந்து வருசனம் ஐந்து கோடி
நோக்கிய மூன்றும் சூக்குமம் ஆகும்
ஓதும் சாந்தி அதீத கலையே.
நாதக்கலையின் எல்லைக்குமேஎல் 3அங்குலம் வரை நாதாந்தக்கலையின் பரப்பாகும், அர்த்தசந்திரன் மதல் நாதாந்தம் வரை ஒரே கடவுள்.
1. அதிதேவர்- சதாசிவன், 2. மாத்திரை- மாகாணியில் பாதியளவு. அரைமா அரைக்காணி.-1/32=0.03125.
3. நிறம்-இருமின்னல் இணைந்தது போன்றதாகும், 4. வடிவம்-ஒரு புள்ளியும் ஒரு கலப்பையும்
5. யோனி-பிறப்புவகை -மானிடம், 6. மலம்-மாமாயை (சுத்தமாயை) –இதுவரை உடலில் பிண்டம் உள்ளதாகும்., 7. உயர (நீளம்) அகலம்-40 இலட்சம் கோடி யோசனை (ஒரு யோசனை 10 லட்சம் மைல்), 8. கனம் -5 கோடி யோசனை, 9. பஞ்ச கலை-சந்தியாதீதக் கலை
நிரோதினி, நாதம், நாதாந்தம் ஆகிய சூக்குமக் கலையாகும். நிரோதினி உடம்பு பகுதியிலிருந்தலும் ஒலியளவு அரைக்கால் நொடியாக இருப்பதால் உணர்வது கடினமானதால் சூக்குமக்கலையானது, பிரபஞ்சத்தின் ஒரு மூலையிலிருந்து மறு மூலைக்கு இருக்கும் வட்டம் என்பது எவ்வளவு பெரியது அதை நம் ஞானிகள் மனத்தால் உணர்ந்துள்ளார்கள் என்பது விந்தையான ஒன்ராகும்.
9.சக்திக்கலை
முதிரும் சக்தி சதுர் அங்குலியே;
வடிவொடு கலப்பை நடிவிந்து ஆகும்;
கலந்த மாத்திரை காணிமுந்திரிகை;
இலங்கிய ஒளிநூறாயிரகோடி
மதிக்கும் ஆதித்தர் உதிக்கும் ஒளியே.
நாதாந்தக்கலைக்குமேல் 4 அங்குலம் சக்திக்கலையின் பரப்பாகும். வடிவம்- ஒரு கலப்பையின் நடு வாகும். ஒரு விந்து புல்ளி வட்டமாகும். மாத்திரை நாதந்தத்தில் பாதி-1/64=0.015625. இது காணி முந்திரிகை எனப்படும். நிறம்- ஆதித்தர் ஒளி- ஒருலட்சம்கோடி சூரிய ஒளி. மலம் ஆணவ மலம். பஞ்சகலை- மந்திரக்கலை.
10.வியாபினிக்கலை
ஒப்பால் வியாபினி செப்பில்நால் அங்குலி;
முரண்டெழு சூலம் இரண்டு விந்து
உருவம் ஆகும்; பொருவில் மாத்திரை
அரைக்காணிக் கீழ் அரையாம் உரைக்கில்;
ஆதவர் வட்டம் நூறாயிர கோடி;
சோதி ஒளியாம் துளங்கிய பேரொளி;
ஒரு தெய்வம் ஆகத சிவமே;
தொடுத்த இரண்டும் சூக்குமா சூக்குமம்;
அடுக்கும் யோனி அலகையாகும்
புலந்தனை ஒழிக்கும் மலம்திரோதாயி.
சாந்திக்கலைக்குமேல் 4 அங்குலம் வியாபினிக்குரிய பரப்பாகும். வியாபினி சூக்குமா சூக்குமக் கலையாகும்.
1. அதிதேவர்- ஆகதசிவன்- தடத்த உருவ சிவன், 2. மாத்திரை-1/28 அல்லது 0.0078125 நொடி, 3. நிறம்- இலட்சம் கோடி சூரிய ஒளியாம்- கண்ணுக்குத் தெரிய முடியாதது. 4. வடிவம்- திரிசூலத்தை இடம் வலமாக இரு புள்ளிகள், 5. யோனி- பிறப்புவகை-அலகையாம்- பேய் வடிவம், 6. மலம் -திரோதாயி- மறைப்புச் சக்தி. 7. பஞ்சகலை-மந்திரக்கலை
11.சமனைக்கலை
தங்கும் சமனை மூன்று அங்குலி வடிவே
இங்குஇரு குச்சி இருவிந்து ஆகும்
வந்த மாத்திரை முந்திரிகைக் கீழ்க்கால்
துய்ய ஆதித்தர் நூறாயிர கோடி வெய்யில் ஒளியாம்
வியாபினிக் கலைக்குமேல் 3 அங்குலம் சமனைக் கலையின் பரப்பாகும். இதன் வடிவம் இரு குச்சிகள் நிற்க அதன் இருபுறமும் ஒவ்வொரு புள்ளியுடையதாகும். மாத்திரை ஒலியளவு- 1/256 அல்லது 0.003900625, நிறம்- ஒரு இலட்சம் கோடி சூரிய ஒளியாகும். கண்ணிற்குப் புலப்படாதது ஆகும். யோனி- தேவர்கள் பிறப்பே. மலம் ஆணவ மலம். பஞ்சகலை- மந்திரக்கலை. இது அதி சூக்கும கலையாகும். குரு உபதேசத்தால் உணரக் கூடியது ஆகும், ஞானமாலையில் சக்தி, வியாபினி, சமனை ஆகியவற்றின் நிறம் மாறியிருக்கும்.
12.உன்மனைக்கலை
விளங்கிய உன்மனை முடிவில் ஓர் அங்குலி; வடிவு
வட்டம் தெய்வம் அநாகத சிவமே; இருள்நிறம்:
மதிக்கும் யோனி துதிக்கும் தெய்வம்;
இவ்வகை இரண்டும் இவை அதி சூக்குமம்
செப்பிலோர் அம்முதல் இப்பதிநாலும்
மந்திரக் கலையாம்; மலமா ணவமாம்;
நந்திய பாச சாலம் நாவிலில்
சமனைக்கு மேல் ஓர் அங்குலம் உன்மனையின் எல்லையாகும், வடிவம்- தனித்தவட்டம். நிறம் இருளாகும். அதிதேவர்- அநாகத சிவந் சொரூப சிவன். யோனி- தேவர்கள் பிறப்பாகும். இது அதி சூக்கும கலையாகும். சக்தி, வியாபினி, சமனை, உன்மனை ஆகியன சாந்தியா தீதத்துக்கு மேல் உள்ள மந்திரக்கலையில் அடங்கும். மலம் ஆணவ மலம். இக்கலை குரு உபதேசத்தால் உணரக்கூடியது ஆகும், ஒவ்வொருவர் அனுபவமும் மாறிமாறி இருக்கும் என்பதால் கலைகளின் அடைவுகள் மாறுபட்டுள்ளதை பொருட்படுத்தாமல் விரும்புவதை ஏற்றுக்கொண்டு செய்க.
13. வியோமரூபிணி, 14.அனந்தை, 15.அனாதை, 16.அனாசிருதை கலைகள்.
மேலும் உரைசெய்வன் நாலு சக்தி;
வினவிய வியோமரூபினி அனந்தை
அனாதை அனாசிருதை அடைவு ஒர் அங்குலி;
விந்து வடிவே; அந்த அம்பரம்
அளக்கர் ஆடி சரற் காலத்தில்
உதய மதியம் நூறாயிர கோடி
கதிர் ஒளி திரண்ட காட்சி ஒளியே
விரவிய தெய்வம் பரமசிவ மாகும்;
பேச அரிய மாசூக் குமமே;
நாலும் தியாணம்; மேல் உப தேசம்
புண்ணிய குருவின் தண்ணளி தருமே.
விந்துவின் வடிவங்களான வியோமரூபிணி, அனந்தை, அனாதை, அனாசிருதை ஆகிய நான்கு கலைகளும் ஒவ்வோர் அங்குலம் பரப்பு உடையவை ஆகும், வியாபினி மற்றும் சமனை கலைகளுக்கு நடுவில் இந்த நான்கு கலைகளும் இருக்கும், இவைகளின் அதிதேவர் பரமசிவன், இவை மகா சூக்குமக் கலைகலாகும். தியான முதிர்ச்சியில் விளங்கும் தியானக்கலைகள்.
வியோமரூபிணி ஆகாய நிறமுடையது. வியோமம்- ஆகாயம், இதை ஞானாகாயம் என்பர், அனந்தை கடல் நிறம் கொண்டது. அனந்தை- பல அல்லது மிகுந்தது எனப்படும். இதை ஞானக் கடல் என்பர், அனாதை- கண்ணாடி. இதை ஞானக்கண்ணாடி என்பர், அனாசிருதை பனிக்காலத்தில் இலட்சம் கோடி சந்திரர்கள் உதயம் போன்ற நிறமுடையது,
அடுத்தொளிர் மும்மண்டலம் ஆறு ஆதாரம் அப்பால்
அடுத்த இரவாளிரண்டுக்கும் அப்பால் அடுத்த ஒளி
அம்பலம் நின்றாடிய கூத்து ஆனந்தம் கண்டிருப்பர்
அம்பலன் தாள் ஏத்துவார்.
மூலாதாரம் முதல் புருவ மத்தி வரை ஆறு ஆதாரம் மூன்று மண்டலம். கீழே அக்னி மண்டலம். அடுத்தது சூரிய மண்டலம், அடுத்தது சந்திர மண்டலம். ஆக்ஞாவிற்கு அப்பால் இருமுறை 12 விரல் அளவுள்ள கலைகள் உள்ளன, அவை விந்து கலைக்குமேல் உள்ள 8 கலைகளாகும். அவை நடுவில் உள்ள வியோமரூபிணி முதலிய நான்கு கலைகள் நீங்கலாக அர்த்தசந்திரன் முதல் உன்மனைவரை 8 என்க. கடைசி கலையாகிய உன்மனைக்குமேல் உள்ள பகுதி அம்பலம் ஆகும், அதில் அம்பலவாணன் ஆனந்தக் கூத்தாடுகின்றான். அந்தத் திருவடிகளை வணங்கி ஆனந்தக் கூத்தைக் கண்டு சமாதியில் இருப்பர் என்பதாக கருதுக. ******
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.