ஓம்நமசிவய!
தும்பிக்கை நாதா போற்றி!
துளைக்கர விநாயகா போற்றி!
தேசிய விநாயகா போற்றி!
தொப்பக் கணபதியே போற்றி!
சலந்தராரி-சலந்திரவத மூர்த்தி!
இறை அருள் இருந்தால்தான் இன்பமாக வாழலாம். அகந்தை தலை தூக்கினால் அல்லல்கள் ஏற்படும். இறையருளால்தான் இடர் நீங்கப் பெறும். இந்திரன் தானே பெரியவன் என்ற ஆணவத்தோடு கயிலை சென்றான். இந்திரன் ஆணவத்துடன் வருவதை அறிந்த சிவன் தானே வயிற்காப்போனாய் நின்றார். இந்திரன் கேட்ட கேள்விக்கு பதில் ஏதும் அளிக்காமல் இருக்க கோபங்கொண்டு தன் வஜ்ராயுதத்தால் அக்காவலனை அடிக்க வஜ்ராயுதம் பொடிப் பொடியானது கண்டு அதிர்ச்சியடைந்தவன் முன் சிவன் தோன்ற தன்னை மன்னிக்க வேண்டினான். அவனை மன்னித்து தன்னிடம் தோன்றிய கோபக் கனலைக் கடலில் எறிந்தார்.
கடலில் விழுந்த கோபக் கனல் ஒரு குழந்தையாக மாறி நீரால் வளர்க்கப் பட்டமையால் அதற்கு சலந்திரன் என பிரம்மன் பெயரிட்டார். வாலிபப் பருவம் அடைந்தபின் அசுரத் தச்சன் மாயனால் சாலந்தரம் என்ற நகரை உருவாக்கி காலநேமி என்பவரின் மகள் பிருந்தையை மணம் செய்துகொண்டு வாழ்ந்தான். தேவர்கள் அனைவரையும் போரிட்டு வென்றான். திருமால் பல காலம் போரிட்டு அவனை வெல்ல முடியாமல் அவனைப் பாராட்டியதைக் கண்ட இந்திரன் மிகவும் பயந்து கயிலையில் தங்கியிருந்தான். இதை அறிந்த சலந்திரன் கயிலைக்குப் புறப்பட்டான்.
தேவேந்திரன் சிவபெருமானை சரன் அடைந்தான். பெருமான் ஒரு வயோதிகர் உருவெடுத்து ஊன்றிய தடியுடன் கையில் கமண்டலமும் கொண்டு தேவேந்திரனை பின்வரச் சொல்லி தான் முன் நடந்தார். வழியில் சலந்தரனைக் கண்டவர் நீ யார் எனக்கேட்டார். நான் கடல் அரசனின் மகன். என்பெயர் சலந்திரன், நான் சிவபெருமானிடம் போர் புரியச் செல்கின்றேன் என்றான். பெரியவர் சிவனுடன் சண்டை செய்தால் நொடிப்பொழுதில் மரணமடைவாய் .உடனே இங்கிருந்து போய்விடு என்றார். ஒரு நொடிப்பொழுது தங்கியிருந்து என் ஆற்றலைக் காணுங்கள் என்றான் சலந்திரன்.
நான் உன் வல்லமையைக் காணத்தான் வந்தேன். என்று கூறி தன் காலால் ஒரு சக்கரத்தை வரைந்து இந்த வளையத்தை உன் தலைமேல் தூக்கிவைக்க முடியுமா? எனக் கேட்டார். என்ன முயற்சி செய்தும் சலந்திரனால் முடியவில்லை. தன் முழு ஆற்றலையும் உபயோகப்படுத்தி அந்த சக்கரத்தை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி தலைமேல் வைத்ததும் அது அவனை இரு கூறாக்கியது. அசுரப்படையை தீயினால் சாம்பலாக்கினார்.
பின் இரு கரங்களில் மழு, மான், முன் வலக்கரத்தில் சக்கரம், இடக்கரத்தில் கத்தரி முத்திரையுடன் இருப்பார். கோபக்கனலை அழித்து மனம் அமைதிபெறச் செய்வார். தன் கோபக்கனலில் உருவான சலந்திரன் தேவர்களுக்கு தீரா துயர் விளைவித்ததால் தன் பாதத்தினால் நிலத்தில் சக்கரம்கீறி அதனைக் கொண்டு சலந்திரனை அழித்த வடிவம்*சலந்தராரி-சலந்திரவத மூர்த்தி!. நிகழ்வு நிகழ்ந்த தலம்: திருவிற்குடி
#####