ஓம்நமசிவய!
வேழமுகத்துக் கடவுளே போற்றி!
பேழைபெரு வயிறுடையாய் போற்றி!
இருகையுடைய எந்தாய் போற்றி!
ஒருகை லிங்கம் எந்தினாய் போற்றி!
மணம்விரி மலர்த்தொடை சூடினாய் போற்றி!
மாமதச் சிந்தூரக் களபமே போற்றி!
இடபாந்திகர்!
2000 சதுர்யுகங்களை கொண்டகாலம் நான்முகனின் ஒருநாள். அத்தகைய நாட்களையுடைய ஆண்டுகள் நூறு கொண்டது அவரின் ஆயுள். அது திருமாலின் ஒரு நாள். அப்படி நாட்களைக் கொண்ட நூறு ஆண்டுகள் கழிந்தால் உலகின் எல்லா ஆன்மாக்களும் அழியும். இது பேரூழிக்காலத்தின் நிலையாகும். அப்போது பரம்பொருளாகிய சிவன் உமா காண ஊழித்தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார். அனைத்து உயிர்களும் அந்தப் பிரளயத்தில் ஒடுங்கிக் கொண்டிருந்தது. அப்போது தருமதேவதை தானும் அவ்வாறு ஒடுங்க வேண்டி வருமென அஞ்சி இடப வடிவம் கொண்டு சிவனிடம் தஞ்சமடைந்தது. அதற்கு அஞ்சேல் எனக்கூறி கிருதாயுகத்தில் நான்கு கால்களுடனும், திரேதாயுகத்தில் மூன்று கால்களுடனும், துவாபரயுகத்தில் இரண்டு கால்களுடனும், கலியுகத்தில் ஒரு காலுடனும் இடபமாக இருக்க அருள். ஒவ்வொரு யுகத்திலும் தருமம் வீழ்ச்சியடைந்து அதன் நிலை மாறுபடும் என்பதை உணர்த்தவே இவ்வாறு அருள் புரிந்துள்ளார். எல்லாம் அழியக் கூடிய ஊழிக்காலத்தில் தர்மதேவதையாகிய வெள்ளிடையை ஆதரித்த காரணத்தால் சிவபெருமான் இடபாந்திகர் எனப்பட்டார்.
இடபமாகமாறிய தர்மதேவதை-அறத்திற்கு உயிர் கொடுத்த தயாநிதி. காளையின் மீது சாய்ந்தபடி அதன் கொம்புகளுக்கு இடையில் தனது கரத்தினை வைத்த தோற்றம் இடபாந்திகர் வடிவமாம். காட்சி: திருவாவடுதுறை
#####