ஓம்நமசிவய!
அழகிய ஆனைக்கன்றே ஜயஜய
இளமத யாணை முகத்தாய் ஜயஜய
இரகுபதி விக்கின விநாயகா ஜயஜய
அனந்தலோடாதியில் அடிதொழ அருளே!
ஏகபாத திரிமூர்த்தி!
முதலும் முடிவும் இல்லாத சிவபெருமான் உலகமக்களின் நலன் கருதி சுத்த மாயையின் நிழலில் அசுத்த மாயையின் இடத்தில் பல உருவங்களை எடுத்துள்ளான். எப்படி மேடைகளில் கூத்தாடும் கலைஞர் அவ்வப்போது உடைமாறி உருவ மாற்றத்தைச் செய்கின்றானோ அவ்வண்ணமே உயிர்கள் நலன் கருதி இறைவனும் பல உருவங்கள் எடுக்கின்றான். உருவங்கள் வேறாக இருந்தாலும் உணர்வுகள் பல இருந்தாலும் அனைத்தையும் இயக்கும் மூலன் ஒருவனே.
ஆணவம், கன்மம் மாயை என்ற மூன்று மலங்களைக் கொண்ட ஆன்மாக்கள், இரு மலங்கள் மட்டும் கொண்ட ஆன்மாக்கள், ஒரு மலம் மட்டும் கொண்ட ஆன்மாக்கள் என்ற விதவிதமான ஆன்மாக்களுக்கும் உடம்பு செயல் புரிவதற்கு உரிய ஐம்புலன்கள், சுக துக்க அனுபவங்களுக்கு உதவி புரியபவராக இருப்பார். மூன்று வித குணபோதங்கள் நிறைந்த மனித ஆன்மாக்களை உருவாக்கி உலகம் இயங்க காரணமானவர் சிவபெருமான்.
உயிர்களுக்கு அருள் புரிவதற்காகவே பிரமன், திருமால், ருத்திரன் ஆகியோரை தோற்றுவித்து படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய தொழில்களை செய்து வருபவர் சிவபெருமான். சிவபெருமானின் இதயத்திலிருந்து தோன்றுபவர் உருத்திரன், இடப்பக்கம் தோன்றுபவர் திருமால், பிரமன் வலப்பக்கம் தோன்றுவர்.
தட்சிண வாம நெற்றியிலிருந்தும் நேத்திரங்களிலிருந்தும் சூரிய, சந்திரன்களையும், மூக்கிலிருந்து வாயுவையும், கழுத்திலிருந்து கணேசரையும், இதயத்தின் ஒருபாகத்திலிருந்து ஸ்கந்தரையும், தொந்தியிலிருந்து யமன், இந்திரன், வருணன், குபேரன் ஆகியோரையும் பிரத்யங்கத்திலிருந்து ஐம்பது கோடி தேவர்களையும், உரோம கூபங்களிலிருந்து பல கோடி முனிவர்களையும் தேவர்களையும் தோற்றுவிக்கின்றார். கற்பகங்கள் தோறும் சிவபெருமான் அநேக கோடி பிரமாக்களையும் திருமால் உருத்திரர்களையும் உருவாக்கி ஊழிக்காலத்தில் அனைவரும் தம்மிடமே ஒடுங்கும் படியாகவும் செய்கின்றார். தனக்கு பிறப்பு இறப்பு இல்லாதவராய் மும்மூர்த்திகளுக்கும் பிறப்பிடமாய் இருந்து அனைவரையும் தாங்கும் ஒரே மூர்த்தியாக ஒற்றைக் காலுடன் நிறபவர் ஏகபாத திரிமூர்த்தி வடிவம்.
ஒற்றைத் திருவடிவுடைய மும்மூர்த்தி வடிவம். பிறப்பு இறப்பு என்றில்லாமல் மும்மூர்த்திகளுக்கும் பிறப்பிடமாய் அம்மூவரையும் தாங்கும் ஒரே மூர்த்தியாக ஒற்றைக்காலுடன் நிற்கும் வடிவம்- ஏகபாத திரிமூர்த்தி
#####