ஓம்நமசிவய!
மேவியொளிர் சரணே போற்றி!
மததாரை விரவியதிண் கபோலனே போற்றி!
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!
வேடுவ வேடம் மூன்று!
1.யானையைச் சாய்த்தமை: சோழ மன்னன் சமண சமயத்தைச் சார்ந்திருந்ததால் சைவ சமயத்தை சார்ந்த பாண்டிய மன்னன் விக்ரம பாண்டியனைக் கொல்ல சமணக் குரவர்கள் எட்டாயிரம் பேரை அழைத்து அபிசார வேள்வி நடத்த அதிலிருந்து ஒரு பெரிய கரிய யானை வெளிப்பட மதுரையையும் பாண்டியனையும் அழிக்க ஏவினர்.
இதையறிந்த பாண்டியன் மதுரையும் தன்னையும் காப்பாற்ற இறைவனை வேண்ட வேடுவன் உருவில் வந்து யாணையை நரசிங்க கணையால் கொன்றார்.
2.வேட்டுவச்சியாகத் தோன்றி மாபாதகம் தீர்த்தமை: அவந்தி நகர வேதியனின் மகன் சிறு வயது முதலே தகாத செயல்கள் செய்து வந்தான். இளம் வயதில் காமம் மிகுந்தவனாய் பேரழகுடன் விளங்கிய தன் தாயுடன் தகாத உறவு வைத்திருந்தான். இதற்கு தந்தை இடைஞ்சல் என்று தந்தையைக் கொன்றான். வீட்டில் இருந்த பொருள்களுடன் தன் தாயுடன் காட்டு வழி வேறு ஊருக்குச் செல்லும்போது வழிப்பறிக் கொள்ளையர்கள் அவர்களிடமிருந்த பொருள்களைக் பறித்துக் கொண்டு, அழகியாக இருந்த வேதியனின் மனைவியையும் இழுத்துச் சென்றனர். தனியனாக இருந்த அவனை பிராமணக் கொலை தந்தைக் கொலை ஆகிய மாபாதகப் பழி பிடித்து துன்புறுத்த மதுரைவந்த அவன் மிகவும் வருந்தி சொக்கநாதரிடம் அழுது புலம்பினான். வேடுவர் வேட்டுவச்சியாக வந்த பெருமானும் மீனாட்சியும் அவன்மீது இரக்கம் கொண்டு அவனுக்கு நல்வழி காட்டினர். விரதங்கள் மேற்கொண்டு சிவத் தொண்டு செய்து தான் மாபாதகச் செயல்களுக்கு பரிகாரம் செய்துகொண்டான்.
3.வேடனாக சுந்தரப் பேரம்பு எய்தமை: பாண்டிய நாட்டைக் கைப்பற்ற சோழன் படையெடுக்கும்போது சிவபெருமான் வேட மன்னராக வடிவம் கொண்டு பாண்டியப் படைக்குத் தலைமை பொறுப்பேற்று சுந்தரேசன் என்ற அம்பினை பகைவர்மேல் விடுத்து சோழப்படையையும் அவனுக்குத் துணை நின்ற வடபுலத்து வேந்தர் படைகளையும் நிர்மூலமாக்கி வங்கியசேகர மன்னனுக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.
#####