ஓம்நமசிவய!
மண்ணாய் விண்ணாய் மலர்ந்தாய் போற்றி!
கண்ணுள் மணியாய்க் கலந்தாய் போற்றி!
நீர்தீக் காற்றாய் நின்றாய் போற்றி!
கார் குளிராகக் கணிந்தாய் போற்றி!
பகலவன் நிலவாய்ப் பரந்தாய் போற்றி!
நிகர்மீன் கணமாய் நிலைத்தாய் போற்றி! போற்றி!
குரு / ஆச்சார்ய வேடம் மூன்று!
1.16வயது அந்தனர் வேடமேற்று வேதத்தின் பொருள் அருளியமை: நைமிசாரண்யத்து முனிவர்கள்மீது கருணை கொண்டு 16வயது ஞானகுருவாக வடிவம் கொண்டு, இறைவனின் லிங்கவடிவத்தின் முன்பாக, வேதப் பொருளாக விளங்குவது சிவலிங்க வடிவமே. வேதம் வேறு. சிவலிங்கம் வேறன்று என்று வேதப் பொருளையும் சிவலிங்கத் தத்துவத்தையும் விளக்கியுரைத்தார்.
2.கார்த்திகைப் பெண்களுக்கு அட்டமாசித்தி உபதேசித்தல்: இறைவன் இட்ட சாபப்படி பட்டமங்கைத் தலத்தில் கற்பாறைகளாக மாறியிருந்த கார்த்திகைப் பெண்கள் அறுவர் முன்பாக பெருமான் ஞானாசிரிய வடிவம் கொண்டு அவர்கள் சாபவினை நீங்குமாறு தம் திருப்பார்வையை நல்கினார். சுய உருவம் அடைந்த கார்த்திகைப் பெண்களுக்கு அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராப்தி, பிரகாம்யம், ஈசத்துவம், வசித்துவம் ஆகிய எண்வகை சித்திகளை ஞானாசிரியராக உபதேசித்தார்.
3.வாதாவூராருக்கு உபதேசித்தமை:அரிமர்த்தன பாண்டியன் அமைச்சரான திருவாதாவூரர் அரசாணைப்படி கடல் துறையில் வந்திறங்கும் குதிரைகளை வாங்கச் செல்லும் வழியில் ஆட்கொள்ள திருவுள்ளம் கொண்ட பெருமான் வேதியர் குலத்தின் குருவாக வடிவம் கொண்டு திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் எழுந்தருளினார். தம் ஞானக்கண்ணல் வாதாவூராரின் மும்மலங்களையும் அவரது பாசபந்தத்தையும் போக்கி பேரின்ப நிலையினை எய்த திருவருள் புரிந்தார்.
#####