ஓம்நமசிவய!
திணைபால் கடந்த தேவே போற்றி!
புனையாய் இடர்க்கடல் போக்குவோய் போற்றி!
பேழை வயிற்றுப் பெம்மன் போற்றி!
ஏழைக்கிரங்கும் எம்மிறை போற்றி!
அடியவர் உள்ளம் அமர்ந்தாய் போற்றி!
அடிமலர் எம்தலை அணிவாய் போற்றி! போற்றி!
திருநாவுக்கரசருக்கு அருளிய வடிவங்கள்-இரண்டு!
1.திருப்பைஞ்ஞீலியில் பொதிசோறளித்த அந்தணர்: சைவத் தலங்கள்தோறும் சென்/று இறைவனைத் துதித்து இனிய பாடல்களைப் பாடிவந்தார் திருநாவுக்கரசர். திருவானைக்கா, திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, திருகற்குடி, திருப்பராய்த்துறை ஆகிய தலங்களை வணங்கி திருப்பைஞ்ஞீலியைச் சேரும்போது பசியாலும் நீர் வேட்கையாலும் வாடினார். பெருமான் வழியில் சோலையும் குளமும் அமைத்து வழிப்போக்கர் போல் பொதி சேற்றுடன் அந்தணர் கோலத்தில் உணவு அளித்து சற்று தூரம் வந்ததும் மறைய பெருமானின் கருணையை நாவுக்கரசர் உணர்ந்தார்.
2.பனிபடர்ந்த மலையில் அப்பருக்கு அருளிய முனிவர்: திருநாவுக்கரசர் காளத்தியில் காளத்திநாதரைக் கண்டு வணங்கி திருப்பருப்பதத்தை எண்ணி மலைப்பாதைகளும் வனங்களும் கடந்து கங்கையையும் கடந்து காசியில் விஸ்வநாதரை தரிசனம் செய்தார். திருக்கயிலையைக் காண வேண்டும் என்ற வேட்கையில் கைகளும் மார்பும் தேய உடல் வருந்தும் தன்மையில் தொடர்ந்து சென்றார். பெருமான் முனிவர் வேடத்தில் தோன்றி கயிலை காண்பதற்கு அரியது. அதைக் கைவிடுக என்றார். அதை ஏற்றுக்கொள்ளாத அப்பரடிகளிடம் காட்சியளித்து இப்பொய்கையில் மூழ்கி திருவையாற்றில் கையிலைக் காட்சி காண்பாயாக என அருளினார். அவ்வாறே பொய்கையில் மூழ்கித் திருவையாற்றில் திருக்கயிலைக் காட்சியைக் கண்டு மகிழ்ந்தார்.
#####