ஓம்நமசிவய!
அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலி
ஒப்பிலா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்து
எப்பொழுதும் வணங்கிடவே எனையாள வேண்டுமென
அப்பனுக்கு முந்திவரும் அருட்கனியே கணபதியே!
&&&&&
ஆனி மாத விரதங்கள்!
ஆனி பௌர்ணமி- ஆனிமாதம் மரகத லிங்கம் வழிபாடு சிறப்பு, பகலில் சிவபூஜை செய்து இரவிமட்டும் உணவு உண்ணவேண்டும்.
ஆனிமாத அஷ்டமி பார்வதி-பசுபதி-வணங்கினால் கோமேதக யாகபலன்.
சாவித்ரி விரதம்- காரடையான் நோன்பு- ஆனி மாதம் திரியோதசி நாள் ஆரம்பித்து தொடர்ந்து பதினான்கு ஆண்டுகள் சாவித்ரி விரதம்- காரடையான் நோன்பு கடைபிடித்தால் சர்வ நலனும் வளமும் தரக்கூடியது, பிரம்ம லோகம் அடைவர். விரதத்தின் போது 14 வகை பழங்கள் நைவேத்தியம் செய்து தானம் செய்யவேண்டும்
அன்னை உமை ஈசனைப் பிரிய நேர்ந்த போது பெருமானை அடைய வேண்டும் என விரதம் கடைபிடித்த மூன்றாவது நாள் சிவன் தோன்றி அழகிகளில் அழகி என்ற பொருளில் காமாட்சி என்றழைத்து ஏற்றுக் கொண்டார். தேவருலகப் பெண்கள் தங்களின் கணவர்களின் கண்களுக்கு தாங்கள் எப்போதும் அழகிகளாக இருக்கவும் அவர்களுக்கு எந்த உடல் நலக்குறைவும் ஏற்படக்கூடாது என்று அன்னையிடம் வேண்ட உமை இந்த காரமடையான் நோன்பை கடைபிடித்தால் சகல பாக்கியங்களும் கிட்டும் என்றருளினார்.
சாவித்ரி விரத பலன்:பாராசர முனிவர் ஆலோசனைப்படி மாத்ர நாட்டு மன்னன் அசுவபதி சாவித்ரி விரதம் செய்ய அவன்முன் தோன்றிய சாவித்ரி மன்னன் மனைவி மாலதிக்கு தன் அம்சமாக ஒர் மகளாக ஜனிக்க அருள். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய சாவித்ரி மணப் பருவத்தில் துயிமதிதேசன் மகன் சத்யவானின் குணவிசேஷங்களைக் கேள்விப்பட்டு அவனைப் பார்க்காமலேயே காதல் கொண்டாள். அவன் அற்ப ஆயுள் உள்ளவன் என நாரதர் சொல்லியும் தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. சத்யவானின் பெற்றோர்கள் பார்வை இழந்து நாட்டையும் இழந்து காட்டில் சத்தியவானுடன் வாழ்ந்திருக்க அவர்களுடன் சாவித்ரியும் வாழ்ந்திருந்தாள். தேவகன்னியருக்கு அன்னை உமா உபதேசித்த காமாட்சி விரதத்தை நாரதர் சொல்லியபடி தொடர்ந்து மூன்று பகல் மூன்று இரவு உறங்காமல் இறைவனை வழிபட்டு ஒருமுறை மட்டும் உணவு உண்டு கடினமான விரத முறைகளை மேற்கொண்டாள்.
காட்டில் தனக்கு கிடைத்த அறுகம்புல், அரச இலைகள் ஆகியவற்றைப் பூவாகவும், காட்டில் விளைந்த கார் அரிசியையும் அவரையும் கொண்டு செய்த அடையையே நெய்வேத்தியமாக வைத்து நோன்பிருந்தாள். இதனை மக்கள் மங்கள கௌரி விரதம் என்பர்.
நான்காம் நாள் காட்டிற்கு விறகு வெட்டச் சென்றபோது சத்தியவான் மரத்திலிருந்து தவறி விழுந்து இறந்தான். சாவித்ரிதேவியின் உண்மையான பக்தையான சாவித்திரிக்கு யமன் சத்தியவானின் உயிரை எடுத்துக் கொண்டுச் செல்வது தெரிந்தது. அம்பாளின் அருளினால் யமனைப் பின் தொடர்ந்த சாவித்திரியிடம் நான் எடுத்துச் செல்லும் உயிரைத் தவிர யாரும் என்னுடன் வரக்கூடாது என யமன் சொல்லியும் ஏதேதோ பேசிக் கொண்டே சாவித்ரியும் உடன் சென்றாள். சாவித்ரியின் வேண்டுகோளைக் கேட்ட யமன் சத்யவானின் உயிரைத் தவிர வேறு 3 வரங்கள் கொடுப்பதாகக் கூற, என்னுடைய தாய் தந்தையர் நாட்டை ஆள ஒர்மகனும், மாமனார் மாமியார் இழந்த பார்வையை மீண்டும் பெற்று ராஜ்யத்தை ஆள வேண்டும் எனச் சொல்லி மூன்றாவதாக எனக்கு ஒரு மகன் பிறக்க வேண்டும் என்றாள்.
மூன்று வரங்களையும் சிறிதும் யோசியாமல் அளித்த யமன் இன்னும் ஏன் என் பின்னால் வருகின்றாய் எனக் கேட்க, தர்ம சீலரே, வாக்குத் தவறாத உத்தமரே நீங்கள் வாக்களித்தபடி கற்புடைய மகளிரின் உத்தம குணப்படி என் கணவருடன் வாழ்ந்தால் தானே எனக்கு குழந்தை பிறக்கும். ஆனால் என் கணவரின் உயிரை நீங்கள் கவர்ந்து செல்கின்றீர்களே என்றாள். அப்போது தான் தான் யோசியாமல் வாக்களித்து விட்டது புரிந்த யமன் வாக்குத் தவறாமல் இருக்க சத்தியவானின் உயிரை திரும்பி அளித்தான்.
சாவித்ரி நோன்பு பூஜை முறை- காரமடையான் நொன்பு அன்றுமற்ற விரதங்களைப் போல் அதிகாலையில் எழுந்து குளித்து வீட்டையும் பூஜை அறையையும் சுத்தம் செய்தாலும் அந்த விரதம் கடைபிடிக்க வேண்டிய நேரத்திற்கு முன்பாக நீராடி பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட்டு ஒரு மனையில் காமாட்சி அம்மன் படத்தை கலசத்துடன் வைத்து குங்குமம் சந்தனம், மலர் சாத்தி அம்மனுக்கு எதிரே ஒரே நுனி (தலைவாழை) இலை வைத்து வீட்டில் உள்ளோருக்குத் தகுந்தவாறு 2, 4, 6 என்று நுனி-தலைவாழை இலையைப் போட்டு பூஜைக்கு செய்தவைகள் வைக்கவும். ஒரு மஞ்சள் நூலில் நடுவில் இரண்டு பூக்களைக் கட்டி அதில் கொஞ்சம் குங்குமம் இட்டு வீட்டில் உள்ளவர்களின் எணிக்கைக்குமேல் அம்மனுக்கு ஒன்றும் கூடுதலாக ஒன்றுமாக நோன்புச் சரடு எடுத்துக் அம்மனுக்கு முன் வைக்க வேண்டும். நைவேத்தியப் பொருள்களுடன், உருகாத வெண்ணெய் கொஞ்சம் இலையில் வைக்கவும். பழங்கள் வெற்றிலை பாக்கு, கார அடை என்ற உப்பு அடை, வெல்ல அடை எனும் இனிப்பு அடை ஒவ்வொன்றையும் தயாரித்து இலைக்கு இரண்டாக வைக்க வேண்டும். சிறிய மஞ்சள் பிள்ளையாரைப் பிடித்து குங்குமம் வைத்து வெற்றிலையில் வைக்கவும். சாப்பிராணி காட்டி தேங்காய் உடைத்து காமட்சியம்மன் படம் முன்னே இருபுறமும் வைத்து கற்பூர ஆரத்தி காட்டி பின் கணவர் கையால் மனைவி நோன்புச் சரடை கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். கணவர் அங்கு இல்லையெனில் மற்ற மூத்த சுமங்கலி பெண்களை கட்டச் சொல்லி கயிறு கட்டிக் கொள்ள வேண்டும். இந்த விரத நேரம் வரும் வரை பெண்கள் உணவு எதுவும் உட்கொள்ளாமல் இருந்து நோன்பு முடிந்து அடையையே உணவாக உட்கொள்ள வேண்டும். நோன்பு நேரம் அதிகாலை அல்லது இரவு என்று எந்த நேரத்தில் வந்தாலும் விரதம் இருக்க முடியாதவர்கள் பால். கஞ்சி, பழம் ஆகியவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
நோன்பு சரடினை கட்டிக் கொள்ளும்போது என் கணவர் நீண்ட காலம் நோய் நொடியில்லாமல் வாழ்வதற்காக நான் மேற்கொண்ட விரத்தை காமாட்சி அன்னையே உன் அருளால் வெற்றிகரமாக முடித்து நோன்பு சரடினை அணிந்து கொண்டேன். என் கணவரை காத்தருள்வாய் அம்மா என மனதரா வேண்டிக் கொள்ளவேண்டும்.
நோன்பு சரடு கட்டிக் கொண்டபின்னர் அருகில் உள்ள சுமங்கலிகளுக்கு தாம்பூலம், காரடை, உப்புடை ஆகிய பிரசாதங்கள் கொடுத்து ஆசி பெற்றுக் கொள்ளலாம். நடு நிசி, விடியற்காலை ஆகிய நேரங்களில் நோன்பு அமைந்தால் மறுநாள் பிரசாதம் வழங்கலாம்.
உத்திரப்பிரதேசப் பெண்கள் கர்வா சவுத் என்று இவ்விரதத்தை கணவன் நல்ல ஆயுளோடும், செழிப்போடும் வாழ வேண்டுமென நிலாவினைக் காணும் வரை நீர்கூட அருந்தாமல் உபவாசம் இருக்கின்றனர். சிந்தி பெண்கள் தீஜ்ரி என்று நோன்பாக கொண்டாடுகின்றனர்.
பெண்கள் சாவித்திரி விரதம் கடைபிடித்து காமாட்சி அம்மன் அருளால் தீர்க்க சுமங்கலிகளாக சகல சௌபாக்யங்களுடன் வாழ வாழ்த்தும் குருஸ்ரீ பகோரா
ஆனிமாதச் சிறப்புகள்-தமிழ் மாதங்களில் ஆனி மாதம் நீண்ட பகல் பொழுதைக் கொண்ட மாதம். சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் காலம் என்பதால் ஆனிமாதத்தை மிதுனமாதம் / ஜேஷ்டமாதம் என்பர். ஜேஷ்டா என்றால் மூத்த அல்லது பெரிய எனப் பொருள். ஜேஷ்டம் என்றால் கேட்டை நட்சத்திரம். அந்நாளில் பெருமாளுக்கு நடைபெறுவதால் ஜேஷ்டாபிஷேகம், பஞ்சாங்கத்தை நிர்ணயிக்கும் இருகோள்களான சூரியன் மிதுன ராசியிலும், சூரியனின் நட்சத்திரமான உத்திரத்தில் அதாவது சந்திரன் கன்னி ராசியிலும் சஞ்சரிக்கும் நேரமே ஆனித்திருமஞ்சனத் திருநாள். ஆனி உத்திரத் திருநாளே ஆனித் திருமஞ்சனம் என சிறப்பிக்கப்படும். சிவபெருமானின் 64 திருவுருவங்களில் அற்புதமான ஆடலரசனுக்கு நடைபெறும் திருமஞ்சனமமே ஆனித்திருமஞ்சனத் திருநாளாகும். கல்விக்கு அதிபதியாகிய புதன் கிரகத்தின் ஆளுமை பெற்ற ராசிகளான மிதுனம், கன்னி இரண்டும் உள்ள ஆனிமாதத்தில் நடக்கும் ஆனித்திருமஞ்சனத்தைக் காணும் பேறுபெற்றவர்கள் இறையருளால் அறிவில் சிறந்து விளங்குவர்.
ஆனித் திருமஞ்சனம் சிவனுக்கு உரியதானாலும் நடராஜருக்கே முக்யத்துவம். நடராஜர் உள்ள எல்லா சிவாலாயங்களிலும் ஆனித்திருமஞ்சனம் நடைபெற்றாலும் சிதம்பரத்தில் ந்டைபெறும் ஆனித் திருமஞ்சனமே சிறப்பானதாகும். திருமஞ்சனம் என்றால் மகா அபிஷேகம் என்று பொருள். நடராஜரும் சிவகாமியும் தங்களது தாண்டவ கோலத்தை பக்தர்களுக்கு காட்டி அருள்கின்றனர். அணுவில் இருக்கும் நுன் துகல்களைக்கூட ஆட்டுவிப்பது இறையின் திருநடனம். நுண் துகல்களின் இயக்கம் ஒரு நடனத்தை ஒத்திருப்பதாக அறிவியலார் கண்டறிந்திருக்கின்றனர்
ஆலகால விஷத்தை உண்ட சிவனின் கண்டத்தில் பர்வதியால் அது நிறுத்தப்பட்டபோது சிவன் உடலில் அதிக உஷ்ணம் பரவியது. அந்த வெப்புத் தன்மையை தவிர்க்கவே ஈசன் -நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது. இது தேவர்களால் நடத்தப்பெறும் மாலைநேர அபிஷேகம்- இதை சிவாலயங்களில் விழாவாக கொண்டாடுகின்றோம். இந்த உற்சவம் ஆனி உத்திரத் திருவிழா எனப்படும். சூரிய உதயத்திற்கு முன் நடராஜருக்கு அபிஷேகம் முடிவுறும். ஏனெனில் தேவர்களுக்கு மாலைப் பொழுது ஆனிமாதம். அவர்களுக்கு வைகறை-மார்கழி, காலை-மாசி, உச்சி-சித்திரை, மாலை-ஆனி, இரவு-ஆவணி, நடுஇரவு-ஐப்பசி என்பதாகும்.
ஆனி மாதம் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி நிர்ஜலா ஏகாதசி எனப்படும். வியாசர் தருமருக்கு ஏகாதசி விரதம் பற்றி கூறியபோது அங்கு வந்த பீமன் தன் வயிறில் விருகம் என்ற அக்னி உள்ளதால் அளவில்லா உணவு உண்டால்தான் என் பசி அடங்கும். எல்லா ஏகதசியன்றும் விரதம் அனுஷ்டிக்க முடியாது என்றாலும் ஆண்டிற்கு ஒரு முறை விரதம் அனுஷ்டிக்க எளிய முறையைச் சொல்லுங்கள் என்று கேட்டான். நிர்மலா ஏகாதசி அன்று நீர் அருந்தாமல் விரதம் அனுஷ்டிக்குமாறு வியாசர் கூரினார். எனவே இந்த ஏகாதசி- ஆனிமாத சுக்லபட்ச ஏகாதசி- நிர்ஜலா ஏகாதசி- பீம ஏகாதசி எனப்படும்.
வருடத்தின் ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை முதல் நவமிவரையிலான திதிகள் அம்பிகைக்கு உரியது. இதன்படி பன்னிரண்டு நவராத்திரிகள் உண்டு. என்றாலும் அவற்றில் முக்கியமானது நான்கு மட்டுமே கொண்டாடப்படுகிறது.
1.ஆனி மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ஆஷாட நவராத்திரி.
2 புரட்டாசி மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் சாரதா நவராத்திரி.
3. தை மாத்த்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் சியமளா நவராத்திரி.
4. பங்குனி மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் வசந்த நவராத்திரி..
&&&&&