Print this page
திங்கட்கிழமை, 07 May 2018 09:59

மாசி மாத விரதங்கள்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம்!
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமமாதலால்
கணபதி என்றிடக் கருமமில்லையே!

&&&&&

மாசி மாத விரதங்கள்!

மாசி பௌர்ணமி- மாசியில் சூரியகாந்த லிங்கம் வழிபாடு சிறப்பு, பகல் உபவாசமிருந்து சிவபூஜை புரிய வேண்டும்.

மாசிமாத அஷ்டமி-அம்பிகை-ஈஸ்வரன்- வணங்கினால் 100 கோமேதக யாகபலன்.   

த்ரிதியை / திருதியை விரதம்- சிவ பார்வதி திருமணம் நடந்த திதியாதலால் ருத்திரருக்குரிய இந்த நாளில் தம்பதியர் இணை பிரியாமல் இருக்க, குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்க விரத பூஜை. எள்ளு சாதம் சாப்பிடவும். வைகாசி, புரட்டாசி, மாசி மாதங்களில் பூஜை செய்வது சிறப்பு. பெண்களுக்கு புரட்டாசி மாசியில் செய்வது உத்தமம். அமாவாசைக்கு அடுத்து வரும் மூன்றாம் நாள் வளர்பிறையே திருதி எனச் சிறப்பிக்கப்படும். இந்த மூன்றாம் நாள் பிறையைத்தான் இறைவன் தன் தலையில் சூட்டிக்கொண்டான். அதனால்தான் நாம் மூன்றாம் பிறை கண்டு மகிழ்கின்றோம்.

சங்கட சதுர்த்தி விரதம்- மாசிமாத தேய்பிறையில் செவ்வாய்க்கிழமையுடன் கூடி வரும் சதுர்த்தி திதியில் துவங்கி ஓராண்டு காலம் விதிப்படி அனுஷ்டிக்க வேண்டும். சூரியன் உதிக்க ஐந்து நாழிகை முன் விழித்து விதிப்படி சங்கற்பித்துக் கொண்டு புண்ணிய நதியில் நீராடி சிவ சின்னங்களை அணிந்து விநாயகரை தியானித்து அவருடைய ஓரெழுத்து அல்லது ஆறெழுத்து மந்திரத்தை அல்லது அவரின் திருநாமத்தை விடாமல் தொடர்ந்து நாள் முழுவதும் உபவாசம் இருந்து ஜபிக்க வேண்டும். இரவு உறங்காமல் விநாயகர் புராணத்தை பாராயணம் செய்தல் நன்று. மன உறுதியுடன் ஓராண்டு செய்தால் கூன் குருடு நீங்கப் பெற்று உடல் நலமுறுவர். அறிவு செறிவர். எல்லா இன்பங்களும் வந்தடையும். கடன் தொல்லை பகை நீங்கப் பெறுவர்.

செவ்வாய் பிள்ளையார் கும்பிடுதல் என்று தமிழ் நாட்டில் பெண்கள் தை செவ்வாய், ஆடி செவ்வாய் எனத் துவங்கி இத்தனை செவ்வாய் என விரதமேற்கொள்வர். இவ்விரதத்தால் ஏற்படும் சப்தம் ஆண்களுக்கு கேட்க கூடாது. அப்படிக் கேட்டால் அவர்கள் உடல் நலம் பாதிக்கப்படும் என்பதால் அவர்கள் உறங்கிய பின் அல்லது ஊருக்குச் சென்றிருந்தால் மற்ற பெண்களுடன் கூடி ஒவ்வொருவரிடமிருந்தும் சேரும் நெல்லை குத்தி அரிசியாக்கி ஊறவைத்து களைந்து இடித்து மாவாக்கி தேங்காய் சிறு துண்டுகளைச் சேர்த்து வேகவைப்பர். மாவில் உப்பு கிடையாது. இதுவே நிவேதனம். ஈனாக்கன்றின் சாணத்தால் பிள்ளையார் பிடித்து புங்க இலை, புளிய இலைகளை பரப்பி அதன் நடுவெ பிள்ளையாரை எழுந்தருளச் செய்து விநாயகர் புராணம் சொல்லி தீப ஆராதனை காட்டி வழிபட்டு அங்கிருக்கும், அனைவருக்கும் வினியோகிப்பர். அங்கேயே சாப்பிட்டு புங்கன் தழை புளியந்தழை பூஜித்த மலர்கள் சாணிப் பிள்ளையார் ஆகியவற்றை ஓடும் நீரில் விட்டுவிட்டு நீராடி புனித மஞ்சள், குங்குமம் அணிந்து இல்லம் செல்வர். அன்று யாருக்கும் காசு, தானியம் தரமாட்டார்கள். செவ்வாய் கிரகமும் பிள்ளையாரும் இணைந்த விரதமே சங்கட சதுர்த்தி விரதம்.

மாசிக் கயிறு பாசி படியும் என்பர். திருமணமான பெண்கள் மாசி மாதத்தில் தாலிக்கயிற்றை மாற்றிக் கொண்டால் அவர்களது கணவனின் ஆயுள் பாசிபடியும் வரை பலகாலம் நீடிக்கும் என்பது வழக்கமானது.

சிவராத்திரி விரதம்.-புனித நீராடி பக்தி சிரத்தையுடன் உபவாசமிருந்து மனதில் இறைவனின் நாமங்களைச் சொல்லிக்கொண்டு சிவராத்திரி கண்விழித்தல் என்பது, நான் அழிவற்ற ஆன்மா, பரமாத்மாவின் குழந்தை, எந்த ஒரு பாவமும் செய்யாமல் புண்ணிய செயல்களையே செய்வேன் என்ற உறுதியான உணர்வுகளோடு இருக்கும் உணர்விலிருத்தல் நிகழ்வாகும். தீய விகாரமான எண்ணங்களை எக்காலமும் அளிக்காமல் இருக்கவே இந்த விரதம்.

சிவராத்திரி சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனை அர்ச்சிக்கும் ராத்திரி ஆகும். சைவத்தின் பெருவிழா- சிவபெருமானுக்காக கொண்டாடப்படுவது சிவராத்திரி. சிவராத்திரி- நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி, முக்கோடி சிவராத்திரி, உத்தம சிவராத்திரி, யோக சிவராத்திரி எனப்படும்

நித்ய சிவராத்திரி-தினமும் ஈசனைப் பணிந்து மாலை நேரத்தில் வழிபடுதல்.
பட்சசிவராத்திரி-அமாவாசையும் பௌர்ணமியும் மாறிமாறி வரும்போது பிரதோஷமும் வரும் அப்போது நடத்தப்படும் மாலைநேர அபிஷேக ஆராதனைகள் பட்ச சிவராத்திரி.
மாத சிவராத்திரி-மாதந்தோறும் சுக்கிலபட்ச தேய்பிறை சதுர்த்தசி/ கிருஷ்ணபட்ச பிரதோஷம் முடிந்த உடன் அன்றைய இரவு தேய்பிறை சதுர்தசி-மாத சிவராத்திரி.
மகாசிவராத்திரி விரதம்: மாசிமாத கிருஷ்ணபட்ச தேய்பிறை சதுர்த்தசி திதியே மகா சிவராத்திரி விரத தினம். இந்நாளில் இரவு 1130 முதல் 0100 மணிவரை உள்ள காலம் லிங்கோத்பவ காலம். இந்த நேரத்தில்தான் சிவன் ஜோதிலிங்கமாக ஆகாயத்திற்கும் பூமிக்குமாய் தோன்றி முழுமுதற் கடவுள் என உணர்த்தினார். பன்னிருகோடி லிங்க தரிசனம் தரும் பலனை சிவராத்திரியன்று ஒரு லிங்கத்தை பூஜிப்பதால் பெறலாம். நான்கு யுகத்திலும் உலகம் தோன்றிய தினம். ஜோதிர்லிங்கத்தல வழிபாடு கோடி புண்ணியம்.
முக்கோடி சிவராத்திரி- மாசிமாத தேய்பிறை சதுர்தசி செவ்வாய் அல்லது ஞாயிறு அன்று அமைந்தால் அது முக்கோடி சிவராத்திரி என்பர்.
உத்தம சிவராத்திரி-மார்கழி மாத சதுர்தசி திருவாதிரை நாளில் அமைந்தால் அது உத்தம சதுர்தசி சிவராத்திரி ஆகும்.
யோக சிவராத்திரி- அமாவாசையும், சோமவாரமும் கூடிய தினம்- திங்கட்கிழமையில் தேய்பிறை சதுர்தசி அமைந்தால் அல்லது அன்று 60 நாழிகை இருந்தால் அது யோக சிவராத்திரி எனப்படும். திங்கள் சூரிய அஸ்தமனம் முதல் செவ்வாய் காலை சூரிய உதயம் வரை வரும் கிருஷ்ணபட்ச தேய்பிறை சதுர்த்தசி-3கோடி விரதபலன்.

சிவராத்திரி நாளில் சிவன் நாமங்கள்
1.பவாயநம, 2.ருத்ராயநம, 3.உக்ராயநம, 4.பசுபதயேநம, 5.பீமாயநம, 6.மகாதேவாயநம, 7.சர்வாயநம, 8.சிவயநம, 9.ஈசனாயநம, 10.சம்புவேநம, 11.சதாசிவயநம.

சிவராத்திரியன்று சிறப்பு
1வதுஜாமம்- படைக்கும் தொழில் புரியும் பிரம்மன் பூஜை செய்வதாக ஐதீகம். அம்பிகை சிவபூஜை செய்த அடையாளமாக பஞ்சகவ்ய அபிஷேகம், சந்தனம், வில்வம், தாமரைப்பூ அலங்காரம், அர்ச்சனை, பச்சைப்பயறு, பொங்கல், பால்சாதம், நிவேதனம் மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தல். நெய் தீபம், ரிக்வேத பாராயாணம. சந்தன தூபம். பலன் – முன்வினை மற்றும் பிறவிப் பிணிகளில் இருந்து விடுபட்டு நற்பலன்கள் அடையலாம்.
2வதுஜாமம்-காக்கும் தெய்வம் விஷ்ணு செய்வதாக ஐதீகம். முருகன் வழிபட்ட காலம்-சர்க்கரை, பால், தயிர், நெய்கலந்த ரஸபஞ்சாமிர்த அபிஷேகம், பச்சைக்கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்து சார்த்துதல், துளசி அலங்காரம். தாமரைப்பூ அர்ச்சனை, நிவேதனமாக பாயாசம், வெண்பட்டு ஆடை அணிவித்தல். நல்லெண்ணெய் தீபம். யஜூர்வேத பாராயணம். குங்கிலிய தூபம். பலன்–தனதான்ய சம்பத்துக்கள் சேர்ந்து லட்சுமி கடாட்சம் நிலவும். அன்ன பஞ்சம் ஏற்படாது.
3வதுஜாமம்- அம்பிகை இறைவனை பூஜிப்பதாக ஐதீகம். கணபதி பூஜித்த காலம்- தேன் அபிஷேகம், பச்சைக் கற்பூரம் சார்த்துதல், மல்லிகைப்பூ அலங்காரம், வில்வ/அறுகு அர்ச்சனை, எள் சாதம் நிவேதனம், சிவப்பு வஸ்திரம். இலுப்ப எண்ணெய் தீபம். சாமவேத பாராயணம். சாம்பிராணி தூபம். இது லிங்கோத்பவகாலம் எனப்படும் சிறப்பு பெற்றது. இந்த காலத்தில்தான் சிவபெருமானின் திருமுடி, திருவடி காணப் பிரம்மனும் விஷ்ணுவும் முயற்சித்தது. பலன்– எந்தவித தீய சக்தியும் அண்டாமல் இருப்பதோடு சிவசக்தி அருள் கடாட்சம் கிட்டும்.
4வதுஜாமம்- முப்பத்தி முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூத கணங்களும், மனிதர்களும் மற்றுமுள்ள அனைத்து ஜீவராசிகளும் பூஜிப்பதாக ஐதீகம். மகாவிஷ்னு சிவபூஜை காலம். கருப்பஞ்சாறு அபிஷேகம், நந்தியாவட்டை மலர், அல்லி, நீலோற்பல மலர் அலங்காரம், அர்ச்சனை, நிவேதனமாக சுத்தமான அன்னம், தீப ஆராதனை அதர்வணவேத பாராயாணம். அகில்புகை தூபம். பலன் – மிகப் பெரும் பலன்களையும் அருளையும் தரவல்லது.
நாள் முழுவதும் உண்ணாமலிருந்து வில்வ இலைகொண்டு அர்ச்சனை செய்து சிவ தோத்திரங்களை சொல்வது என்பது தான தர்மங்கள் செய்வது, யாத்திரை செல்வது, நோன்புகள் மேற்கொள்வது, விரதங்கள் இருப்பது ஆகியவற்றால் ஏற்படும் நற்பலன்கள், புண்ணியங்களை விடவும் மேலான புண்ணியங்களும் நற்பலன்களும் கிட்டும் என்கின்றது வேதங்கள்.

சிவராத்திரி சிறப்புகள்-
1.ஒவ்வொரு கல்பத்திலும் பிரளயத்தின்போது உயிர்கள் அனைத்தையும் தன் வயப்படுத்திக் (ஒடுங்குதல்) கொள்ளும் சிவன் யோக சமாதியில் ஆழ்ந்துவிட அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு சக்தி தியானம் மற்றும் பூஜை செய்து வழிபட தன்னுள் ஒடுங்கியிருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்த வேளை-சிவராத்திரி.
2.பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை உண்டு தியாகராஜராக தோன்றிய காலம்-சிவராத்திரி.
3. பார்வதி கண்ணை மூடியதால் ஒளி இழந்த சூரியன், சந்திரன், அக்னி மூவரும் ஒளி பெற்ற இரவு-சிவராத்திரி.
4.வில்வ இலைகளை லிங்கத்தின் மேல் உதிர்த்ததால் குரங்கு-முசுகுந்த சக்ரவர்த்தியாக பிறக்க அருள் பாலித்த இரவு-சிவராத்திரி.
5. ஜோதிவடிவாக லிங்கோத்பவமூர்த்தியாக ஈசன் தோன்றியநாள்.
6. பரமனின் பாதி இடத்தை பார்வதி பிடித்தநாள்.
7. உமா மகேசனிடம் ஆகம உபதேசம் பெற்றநாள்.
8. வேடன் தனது கண்ணை லிங்கத்திற்கு அப்பி கண்ணப்பநாயனார் ஆனநாள்.
9. பகீரதனால் கங்கை பூமிக்கு வந்தநாள்.
10. மார்க்கண்டேயனுக்காக ஈசன் எமனை உதைத்தது மார்கண்டேயன் என்றும் 16 என வரம் பெற்றநாள்.
11. கிருஷ்னர் நரகாசுரனை வதம் செய்த நாள்.
12. கிரகங்கள் இயங்கத் தொடங்கிய நாள். குருதீட்சை பெற்றிட சிறந்த நாள்.
13. அர்ஜுனன் தவம் செய்து பாசுபதம் பெற்ற நாள்.

மகாசிவராத்ரியன்று வழி படவேண்டிய தலங்கள்
1.முதல்காலம்-குடந்தைகீழ்க்கோட்டம்(144)-நாகேஸ்வரர், 
2.இரண்டாம்காலம்-திருநாகேச்சுரம்(146)-நாகநாதர், 
3.மூன்றாம்காலம்-திருபாம்புரம்-பாம்புரேஸ்வரரையும், 
4.நான்காம்காலம்-நாகூர் நாகேஸ்வரரையும்-உடன் ஆதிசேஸனையும் வழிபடவும்.

சிவராத்திரியன்று சிறப்பு தரிசன தலங்கள்
1.ஓமாம்புலியூர், 2.காஞ்சிபுரம், 3.காளஹஸ்தி, 4.கோகர்ணம், 5.திருக்கடவூர், 6.திருக்கழுக்குன்றம், 7.திருவண்ணாமலை, 8.திருவைகாவூர், 9.ஸ்ரீசைலம், 10.தேவிகாபுரம்

மகாசிவராத்திரி விரதம்
விரதங்களில் உயர்ந்தது மகாசிவராத்திரி விரதம். விரதம் இருப்போர் சிவராத்திரிக்கு முதல் ஒருபொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசம் இருந்து காலை ஸ்நானம் செய்து, சிவசிந்தனையுடன் கண் விழித்திருந்து இரவு நான்கு கால வழிபாடும் முறைப்பட் செய்தல் வேண்டும். சிவபுராணம் படித்தல், கேட்டல், சொல்லுதல், துதிகளைச் சொல்லுதல், பஞ்சாட்சரம் ஓதுதல், எழுதுதல் சிறப்பு. அடுத்த நாள் காலை நீராடி சிவ தரிசனம் செய்து அடியவர்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்திடல் வேண்டும்.

மாசிமகம்

மாசி மாதத்தில் புண்ணிய தலங்களுக்குச் சென்று நீராடுவது சிறப்பு. அதிலும் மாசிமாத மக நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பிறவிப் பெருங்கடலில் முழுமைப் பேறாகியவீடுபேறு என்ற நிலையை அடைய செய்யும் வழிபாடுகள், விரதங்கள், பூஜைகள் ஆகியவற்றைவிட பெரும் பலன்தருவது மாசிமகத்தில் புண்ணிய நீராடுவதாகும். இதை மாசி மகக்கடலாடு தீர்த்தநாள் என்றும் ஆலயங்களில் தீர்த்தவாரி எனவும் சிறப்பித்துக் கூறுவர்.

தீர்த்தவாரி என்பது கடவுள் திருவடிவங்களை நீர் நிலைகளுக்கு எடுத்துச் சென்று அங்கே திருமஞ்சனம் செய்து ஆரதனை செய்வதாகும். மாசிமகத்தன்று புகழ்மிக்கத் தலங்களில் பஞ்ச மூர்த்திகள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலாவருவார்கள்.

நவகிரக குருபகவான் சிம்மராசியில் இருக்கும்போது மகநட்சத்திரத்தில் சந்திரன் பௌர்ணமி அன்று இணைவதும் கும்பராசியில் இருக்கும் சூரியன் அனைவரும் நேருக்குநேர் பார்க்கும் அமைப்பான நாள் மகாமகம். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த நிகழ்வு நடைபெறுவதால் மகாமகம் எனச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

இந்த விரதம் இருப்போர் வீட்டில் / புண்ணிய நதிகளில் நீராடி, உலர்ந்த ஆடை அணிந்து இறை சிந்தனையுடன் வீட்டில் வழிபாடுகளை முடித்து காலை அல்லது மாலை அருகிலுள்ள சிவன், விஷ்ணு கோவிலுக்குச் சென்று வழிபட்டு பின்னர் மதிய உணவு உண்ன வேண்டும். இரவு உணவை தவிர்க்கவும். இயலாதவர்கள் பால் பழம் அருந்தலாம்.

 பித்ரு தர்ப்பணம் கொடுப்பதால் அவர்களது பரிபூரண ஆசிகிட்டி இடையூறுகள் நீங்கி இல்லத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

மாசி மகத்தன்று மந்திர உபதேசம் பெற, குருவின் தீட்சை பெற ஏற்றநாள்.


&&&&&

Read 4879 times Last modified on ஞாயிற்றுக்கிழமை, 17 March 2019 20:10
Login to post comments