பகை உணர்வு!
பகைவர்கள் என்றால் நமக்கு வேண்டாதவர்கள் என்றுமட்டுமல்ல, அவர்களால் நமக்கோ, நம்மால் அவர்களுக்கோ தீய செயல்கள் தொடர்ந்து தோன்றிக் கொண்டிருப்பது என கொள்ள வேண்டும். அப்படி எப்போதும் பகைமை பாராட்டுவது நம் உடல் ஆரோக்கியத்திற்கும், மனவளர்ச்சிக்கும் உகந்தது அல்ல.
பகைவனை அழிப்பது என்றால், பகைமையை அழிப்பது என்று கருதவேண்டும். பகைவனைக் கொல்வதல்ல! அப்படிச் செய்தால் பகைமை அழியாது. தொடர்ந்து வரும்.
எப்போதும் தீய சிந்தனைகள், அதன் எண்ணங்கள், அதை செயலாக்கும் திட்டங்கள், செயலாக்கம் என நம் வாழ்வில் பெரும் பகுதியை செலவிடுகின்றோம்.
நம் எண்ணங்கள் இவ்வாறு பகைமை பாராட்டுவதால், நமக்கு ஏற்படும் நம் இழப்புகள் பற்றி சிந்திப்பது இல்லை. யார் தவறு செய்தாலும் தண்டணை நிச்சயம் என கர்ம பலன் சொல்வதால், பகைமை பாராட்டுவதில் முனைப்புகாட்டி, உங்கள் சந்தோஷத்தை இழந்ததோடு மட்டுமல்லாமல், கர்மபலன்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கோ, அல்லது மேலும் கர்மபலன்கள் ஏற்படாமலிருக்க செயல்படமுடியாமல் போகின்றது.
வாழ்வில் இது ஓர் நஷ்டம். சந்தோஷம் என்ற பாதையைவிட்டு உணர்ச்சிகளை கோபத்தின் பக்கம் திருப்பி துன்பங்கள், துயரங்கள், கர்மபலன் என முற்றிலும் திசைமாறிவிடும்.
“நம்மை வெறுப்பவர்கள் நமக்கு பகைவர்கள் இல்லை, நம்மால் வெறுக்கப்படுபவர்களே நம் பகைவர்கள்.” இதன் உண்மைதனைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களை வெறுப்பவர்கள், அவர்தம் மனதில் தீயஎண்ணங்கள், திட்டங்கள், செயல்பாடுகள் என ஏற்படுத்தி அவர்களின் தீயகர்மபலன்களை அதிகரித்துக் கொள்கின்றனர்.
அவர்கள் பகைவர்களல்ல! அதே சமயத்தில் நீங்கள் அவ்வாறு பகைமை நினைவு கூர்ந்தால் நீங்களும் அதே நிலைக்குத் தள்ளப்பட்டு கர்மபலன்களின் பாதிப்புக்குள்ளாகி துன்பத்தை சந்திக்க நேரிடுமாதாலால், உங்களால் வெறுக்கப்பட்டவர்கள்தான் உங்கள் எண்ணங்களைத் தூண்டி உங்களைப் பகைவர்களாக்க முற்படுகின்றார்கள்.
பெருமாள் பக்தர்களில் வடகலைப் பிரிவினர் ஆங்கில 'யு' வடிவத்தில் திருநாமம் இட்டிருப்பார்கள். தென்கலைப் பிரிவினர் அதன்கீழே ஒரு கோடு இழுத்து திருநாமம் இட்டிருப்பார்கள். வடகலைப் பெரியவர் ஒருவர் இரண்டு பிரிவுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் உடம்பின் வலது பக்கம் வடகலை நாமத்தையும், இடது பக்கம் தென் கலை நமத்தையும் இட்டுக் கொண்டார்.
எதிரில் வந்த தென்கலைப் பிரிவினர் குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கில் 'உன் வடகலை நாமத்தை மட்டும் வலது பக்கம் ஜம்மென்று போட்டுக் கொண்டாய், எங்களுக்கு இடப்பக்கம்தானே கொடுத்திருக்கின்றாய்' என்றனர்.
அதிர்ச்சியடைந்த பெரியவர் 'நண்பர்களே! நான் உங்கள் தென்கலை நாமத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வலது கையால் இட்டுக்கொண்டேன்! எங்கள் வடகலை நாமத்தை இடது கையால் இட்டுக் கொண்டேன்! என்றார். புரிந்து கொள்ளுங்கள். வடகலை, தென்கலை இரண்டும் இறைவனை நினைத்து போட்டுக் கொள்வதுதான். எதற்கும் எப்படியும் குறை கண்டு துவேஷத்தை வளர்க்கும் மனப்பான்மை கொள்ளாதீர்
ஓருவர்மீது நீங்கள் பகை உணர்வு கொண்டால், அவரைச் சந்திக்க இயலாத போது, பகையின் ஆதரவாளர்களைக் கண்டால் அந்த உணர்வு வெளிப்பட்டு அவர்மீதுகூட தாக்குதல் தொடங்குவீர்கள். பகை உணர்வு அத்தன்மையுடையது. எனவே யார்மீதும் வெறுப்பு கொண்டு, யாரையும் வெறுத்து ஒதுக்காதீர்கள்.
விரோத மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளாதீர்! உங்களிடமுள்ள பொறுமை, கருணை, சகிப்புத்தன்மை கொண்டு உங்கள் மனதில் தோன்ற முயலும் பகைமை உணர்வை ஒழித்து விடுங்கள். அப்போது உங்களுக்கு என்றும் யாரும் பகைவராக முடியாது.
சத்தியம், அகிம்சை, பொறுமை, தயை(கருணை), சமநோக்கு, அமைதி, சந்தோஷம், எளிமை, சகிப்புத்தன்மை, தியாகம் முதலியன கொண்டுள்ள ஓர் மனதிற்கு யாராலும் தீங்கு செய்யமுடியாது, அந்த மனம்- இதயம் தூய்மையானது. ஆசை, பொறாமை, பேராசை போன்ற முட்கள் அங்கிருக்காது. அங்கே அருள் கொண்டு மனிதநேயம் நிறைந்திருக்கும்.
உங்களை இன்னொருவருடன் ஒப்பிடுவது சரியன்று. உங்களைவிட அதிர்ஷ்டம் குறைவானவர்களை நினைத்து நீங்கள் பெருமை, திருப்தியடையலாம். அதேசமயம் உங்களைவிட அறிவு, அழகு, வசதி, வலிமை என அதிகம் உள்ளவனை ஒப்பிட்டால் அது மகிழ்ச்சி தராமல் துயரத்தின் விளிம்பிற்கு கொண்டுசெல்லும். போட்டி மனப்பான்மையை வளர்க்கும். போட்டி ஆசையின் முடிவில் பொறாமையாக மறிவிடும். நீ நீயாக செயல்படு.
அந்த நாடு அப்போதுதான் விடுதலைப் பெற்றிருந்தது. அதன் அதிபராக பொறுப்பேற்றவர் நாட்டில் கல்விச்சாலைகளை ஏற்படுத்தி, கல்வியுடன் விளையாட்டுகளையும் பயிற்றுவிக்க திட்டம் போட்டார். அதன்படி ஒரு பயிற்சியாளர் அந்த கிரமத்து இளைஞர்களை இரு குழுக்களாகப் பிரித்து அந்த விளையாட்டின் சட்டதிட்டங்களை போதித்தார்.
எந்த அணி என்னென்ன தவறுகள் செய்தது, எத்தனைப்புள்ளிகள் என்று கணக்கிட ஆரம்பித்தார். முடிவில் இந்த அணிக்கு இவ்வளவு புள்ளிகள் அடுத்த அணிக்கு இவ்வளவு புள்ளிகள். குறைவாக புள்ளிகள் எடுத்த அணி தோற்ற அணி என்று கூறி நாளை அனைவரும் நன்றாக விளையாடி போட்டி போட்டு புள்ளிகள் எடுக்க வேண்டும் என்றார்.
அப்போது அந்த இளைஞர்கள் எங்களுக்குள் எந்த போட்டியும் இல்லை. நாங்கள் ஒவ்வொருவரும் அங்கும் இங்குமாக நட்புடன் விளையாடி ஆனந்த மகிழ்வு கொண்டோம். வெற்றியும் தோல்வியும் எங்களுக்கு வேண்டாம். விளையாடிய அந்த சந்தோஷம் மட்டும் போதும் என்றனர்.
இதேபோன்று வாழ்வை ஆனந்தம் தரும் விளையாட்டாக கருதினால் அது இன்பம். போட்டியாக கருதினால் அது சூதாட்டம். இன்பமும், துன்பமும் வரலாம். அதனால்தான் குழந்தைகள் விளையாட்டை விரும்புகின்றன. தெரிந்த மனிதன் அதை ஒரு போட்டியாக புரிந்து கொள்கின்றான். அவதிபடுகின்றான்.
விளையாட்டு ஓர் ஆரோக்கியத்திற்காக தோன்றியது. அது ஆனந்தம் அளிக்கக்கூடியது. அதுவே போட்டியானால் பொறாமை, பகையுணர்வு மேலோங்கி துன்பத்தினை அளிக்கக்கூடியது. வழ்வை விளையாட்டாக கருதினால் இன்பத்தையும், விளையாட்டுப் போட்டியாக கருதினால் இரண்டும் தரக்கூடியதாகிவிடும். ஆனந்தம் தரும் விளையாட்டை நட்புடன் விரும்புங்கள். பொறாமைகளைத் தவிர்க்க போட்டிகளை தவிர்த்து விடுங்கள்.
நட்பு: எல்லா உயிர்களிடத்தும் தோழமை கொள்வதே நட்பின் இலக்கணம். எந்த ஓர் சூழலிலும் உண்மை நட்பு உதவிக்கு வரும். கிருஷ்ணர் அவதாரமாக கருதப்பட்டாலும் அவர் அர்சுனன் மேல் அளவில்லா நட்பு கொண்டதும், அதனால் பஞ்ச பாண்டவர்களுக்கு தீங்கு நேரிட்டபோது எல்லாம், கிருஷ்ணர் அர்ச்சுனனுடனிருந்து அவர்களுக்கு உதவியது மகாபாரதத்தின் வாயிலாக அறிவோம். கிருஷ்ணா அவதாரம் நட்புக்கு ஓர் எடுத்துக்காட்டு. குசேலரின் பால்ய நண்பர் கண்ணன் என்று அறிவோம். ஆழ்நட்பின் காரணமாக தன்னிலை பற்றி கண்ணனிடம் கூறாதபோதும், தன் நண்பனின் நிலையறிந்து கண்ணன் உதவி செய்ததாக கூறப்பட்டுள்ளது.
பிசிராந்தையாரின் நட்பு இன்னும் ஒருபடி மேல். கண்ணால் கண்டு பழகாத நட்பு. கேள்வி ஞானமூலம் கொண்ட தீவிர நட்பு. இறக்கும் வரை சந்திக்காமல் அகநட்புடன் வாழ்ந்த நட்பு.
சிலரின் நட்பு பலரை நல்ல மேலான உயர் நிலைக்கு கொண்டு செல்லும் ஆற்றல் உடையது. தாமரையிலையில் விழும் நீர்த்துளி முத்துபோல் காட்சி கொடுக்கும். சிப்பிக்குள் விழும் நீர்த்துளி முத்தாக மறும். சூடான பரப்பில் விழும் நீர்த்துளியானது கண்ணுக்குத் தெரியாமல் மறையும் தன்மை கொண்டது. நல்ல நட்பு அறிவு குறைந்தவனை அறிவாளியாக்கிவிடும். செயல் பாட்டில் சுணக்கங்களை அகற்றும். சொற்களில் உண்மைகளைச் சேர்த்து, சுயமரியாதையுடன் வாழ வைக்க உதவி புரியும்.
எப்போதும் பொழுது போக்கி, சிரித்து மகிழ மட்டுமன்றி, தீமைகள் ஏற்பட்டால் பாதுகாத்து, துன்பங்கள் அடைந்தால் கூட இருந்து துன்பப்படுவதும் நட்புதான். முகங்கள் மட்டும் மலரும்படியாகச் செய்வது உண்மையான நட்பல்ல, இரு மனமும் மகிழ்வு கொள்ள வேண்டும் என்ற நினைப்பதே உண்மையான நட்பாகும். நம் அந்தரங்களை உண்மையான நட்பிடம்தான் பகிர்ந்து கொள்ளமுடியும். இல்லையெனில் அந்தரங்கம் அந்தரத்தில் தொங்கவிடப்படும்.
தனக்குத் தேவையானபோது நட்பு பாராட்டி, கிடைக்கும் பலன்களை ஆராய்ந்து பார்ப்போரின் நட்பு கூடாது. சொல்வது ஒன்று, செய்வது என்று என்பவரின் நட்பு என்றும் துன்பம் தரும். சுயநலமில்லா நட்பை கண்டறிந்து அதை தக்கவைத்துக் கொள்ளவேண்டும். நிறைய நண்பர்கள் என்பதைவிட, நட்புக்கு இலக்கணமாக ஓரிருவர் இருந்தாலே போதும். நல்ல நண்பர்கள் அபூர்வமாக கிடைப்பார்கள். அந்த நட்பை காப்பாற்றத் தெரியவேண்டும்.
தன்னிடம் பயின்ற மாணவர்களிடம் சிறந்தவனை தேர்ந்தெடுத்த குரு, அவன் மற்றவர்களைவிட எப்படி சிறந்தவன் என தெரிந்து கொள்ள அவனிடம் சில கேள்விகளை எல்லோர் முன்னிலையில் கேட்டார். ‘நீ மலைப்பகுதியில் சென்று ஆன்மீகத்தை பரப்ப போகிறாய். அவர்கள் கல்வி அறிவு இல்லாதவர்கள். உன்னிடம் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டால் நீ என்ன செய்வாய்’ என்றார்.
அதற்கு அந்த மாணவன் அவர்கள் என்னை அடித்தாலும், என்மீது கல் எறிந்தாலும், எப்படி நடந்து கொண்டாலும், நிதாதனத்துடன் நட்பு பாராட்டி, அன்பு கொண்டு நடப்பேன் என்றான். குரு, ‘உன்மீது கல்லால் அடித்தால்’ என்றார். ‘என்னை ஆயுதங்களால் தாக்க வில்லை’ என எண்ணிக்கொண்டு நட்பு பாராட்டுவேன் என்றான். குரு. ‘ஆயுதங்களால் தாக்கினால்’ என்றதற்கு, அவர்கள் ‘என்னை கொல்லவில்லையே’ என நினைத்து அப்போதும் நட்பு பாராட்டுவேன் என்றான்.
குரு, அந்த மாணவனை உற்றுப்பார்த்து, சரி, ‘அவர்கள் உன்னைக் கொல்ல வந்தால்’ என்றார், ‘குருவே, அவர்களை அப்போதும், எப்போதும் அன்புடன் நட்பு பாராட்டி மகிழ்வேன், ஏனெனில் அவர்கள், எனக்கு உடல் பந்தங்களிருந்து விடுதலை அளிக்கப் போகின்றார்கள் என்பதற்காக, என்றான். தீங்கு செய்பவர்களிடமும் காட்டும் அன்பின் நட்பு சிறந்த மேன்மையைத் தரும்.
தொடர்புகளும் பழக்கங்களுமின்றி ஒன்றுபட்ட ஒருமித்த உணர்சிகளே நட்புகள் மலர காரணமாயிருக்கும். அந்த நட்பு வேறுபாடின்றி முடிந்தபோதெல்லாம் உதவிக் கரம் நீட்டும்.
இனிமையான முகம் காட்டி சிரித்துப் பேசி மனதில் வஞ்சக எண்ணம் கொண்டுள்ளவரின் நட்பை புறக்கணிக்க வேண்டும்-குருஸ்ரீ பகோரா.