ஓம்நமசிவய!
அருளெனும் கடல்முகந் அடியர் சிந்தையாம்
பொருள் பெருநிலஞ் சிவபோக முற்றிட
வரமழை உதவி செவ்வந்து யானையின்
திருவடி இணைமலர் சென்னி சேர்த்துவோம்.
#*#*#*#*#
30.பூஜையில் வாழைப்பழம் தேங்காய் ஏன்!
தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன்! எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது. எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு! என வேண்டவே நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம். அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு. அது மட்டுமல்ல தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை. மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது. ஆனால், தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத்தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும். அது போல, வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும். பழம் கொட்டை என்பது கிடையாது. அப்படி நமது எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள். நாமும் இந்த மரபினைப் பின்பற்றிவருகிறோம். இதுவே இந்து தர்மத்தின் தனிச்சிறப்பு.
மேலும் கோவிலுக்குப் போகும்போது வெறும் கையுடன் செல்லாமல், இறை அருளால் நன்றாக இருப்பேன் அதற்கான காணிக்கை என்பதற்கான சம்பிரதாயமாக எதையாவது கொண்டு செல்ல வேண்டும். அந்த வழக்கப்படி தேங்காய், வாழைப்பழம், கற்பூரம் ஆகியவற்றை எடுத்துச் செல்கின்றோம். கொண்டு செல்லும் பொருளில் நானே கெட்டியானவன் என நினைத்த தேங்காய் உள்ளே உடைபடுகின்றது. இனிமையானவன் மென்மையானவன் என நினைத்த வாழைப்பழம் பூஜை முடிந்தபின் உரிக்கப்படும். அமைதியாக இருந்த கற்பூரம் தீபம் ஏற்றப்பட்டதும் கரைந்து காணமல் போனது. இதில் பக்தர்களுக்குச் சொல்லப்படும் உண்மை நிலை என்றால் தேங்காயைப்போல் கர்வத்துடன் இருந்தால் ஒருசமயம் உடைக்கப்படுவீர். மென்மையாகவும் இனிமையாகவும் இருக்கின்றோம் என தற்பெருமை பேசிக்கொண்டிருந்தால் ஒருநாள் கிழிக்கப்படுவோம். கற்பூரம்போல் அமைதியாக மணம் வீசிக்கொண்டிருந்தாலும் இறுதியில் கரைந்து ஒன்றுமில்லாமல் இறைவனோடு கலந்து விடுவோம் என்பதை உயிர்கள் உணர்ந்துகொள்ளவே!
ஆண்டுதோறும் நடைபெரும் விழாக்கள் மகோத்சவம் அல்லது பிரமோத்சவம் எனப்படும். கொடியேற்றமே திருவிழாவின் முதல் நாளாகும். இதன் மூலம் விழாவிற்கு வருமாறு தேவர்களுக்கு அழைப்பு விடுத்து திருவிழா முடியும் வரை கொடிமரத்தில் இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படும். ஒன்று / பத்து / இருபத்தோரு நாட்கள்வரை நடைபெறும். மும்மலத்தில் கட்டுண்டு கிடக்கும் உயிர், தளைகளை நீக்கிக் கொண்டால் இறைவன் திருவடியை அடையலாம் என்பதை கொடியேற்ற நிகழ்ச்சி காட்டுகின்றது.
கொடிமரம் பதியையும், கொடிச்சீலை உயிர்களையும், தர்ப்பைக் கயிறு பாசத்தையும் குறிக்கும். உலகை உடலுக்குள் காணும் யோகிகள் கொடிமரத்தை முதுகுத் தண்டாகவும், கொடி சீலையை மூலாதாரத்தில் சுருண்டிருந்து யோக சாதனத்தால் சுழுமுனையை நோக்கி மேலேறும் குண்டலினி எனும் சக்தியாகவும் கருதுவர்.
ஆசமனம் ஏன்!
இறைவனை ஒருவன் பூஜை செய்து வழிபடவேண்டுமென்றால் ஆசமனம் செய்ய வேண்டும். ஆசமனம் என்பது நீரால் தன்னை சுத்தி செய்து கொண்டு பக்தியால் உள்ளத்தை சுத்தி செய்வதாகும். அவ்வாறு ஆசமனம் செய்பவனே தூய்மையடைவான். உடலும் உள்ளமும் தூயமையுடன் இருக்கும்போது தான் அவனுள் பக்தி தலைதூக்கும்.
#*#*#*#*#