ஓம்நமசிவய!
தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம்!
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமமாதலால்
கணபதி என்றிடக் கருமமில்லையே!
உலகம் பலவிதம்!
அம்பலத்தில் ஆடும் நடராஜரின் இயக்கத்தினால் உலகம் இயங்குகின்றது. அந்த ஆட்டத்தை நிறுத்தினால் உலக இயக்கம் நின்று விடும் என்ற தத்துவத்தை விளக்க முன்னோர்கள் ‘உலகு அம்பல விதம்’ எனக் கூறியது மருவி ‘உலகம் பலவிதம் என்றானது.
உலகை இயக்கும் அந்த இறைவனை வழிபடும் முறை மூன்று வகைப்படும். புறத்தேயிருந்து வழிபடுவது அபரம் எனப்படும். தெய்வம் வேறு தான் வேறு என நினையாமல் வழிபடுவது பரம் எனப்படும். அகத்திலிருந்தும் புறத்திலிருந்தும் வழிபடுவது பராபரம் எனப்படும்.
இந்த மெய்ப்பொருள் அறிவாகிய ஞானம் அபரஞானம் என்றும் பரஞானம் என்றும் இருவகைப்படும். அபரம்- ஆரம்ப படிநிலை. பரம்- முடிவான உயர்நிலை. மெய்ப்பொருளை ஒருவன் உண்மையாக உணர்ந்து அதனைக் கண்டு அதன் தன்மையில் தான் அழுந்தி நிற்றலேயாகும். அதாவது மெய்ப்பொருளை அனுபவமாக உணர்ந்து அதன் இன்பத்தில் திளைத்திருத்தலே ‘பரஞானம்’. அனுபவ ஞானம் எளிதல் எவருக்கும் முதலிலேயே வந்துவிடாது என்பதை புரிந்து கொள்ளல் வேண்டும்.
பரஞானம், அபரஞானம் இரண்டும் அஞ்ஞானத்தை போக்குபவையாயினும், அபரஞானம் அஞ்ஞானத்தைப் போக்குதல் என்பது ஒரு விளக்கு இருளைப் போக்குவது போன்றதாகும். அதேசமயம் பரஞானம் அஞ்ஞானத்தைப் போக்குவது என்பது சூரியன் இருளைப் போக்குவதற்கு ஒப்பானதாகும். எனவே அபர ஞானம் அஞ்ஞானத்தை முழுவதும் நீக்காமல் இருக்க, பரஞானமே அஞ்ஞானத்தை முற்றிலும் நீக்க வல்லது.
அந்த இறைவனை ஈசர், ஈஸ்வரன், ஈசானன் என்று சொல்வதுண்டு. ஈசர்- என்றால் ஆளுகின்றவர், ஈஸ்வரன்- என்றால் எல்லாம் உடையவன், ஈசானன்- என்றால் உலகங்களை உண்டாக்கி ஆளுபவன் என அர்த்தமாகும்.
ஈ என்றால் உச்சி என்பதாகும். அதாவது எல்லாவற்றிற்கும் உயரத்தில் இருப்பவன் மேலானவன். நம்மை வாழ்க்கையின் உயரத்திற்கு அழைத்துச் செல்பவன்.
சித்தர்களின் இஷ்ட தெய்வம் சிவனே! லிங்க வழிபாடு நடந்தாலும் ரூபமாக நோக்கின் நடராஜர் தோற்றமே புலனாகும். இந்த தோற்றம் உலகின் இயக்கத்தினை உணர்த்துவதாகும். நடராஜரின் ஒவ்வொரு நெளிவு சுளிவுக்குப் பின்னால் ஒரு பெரும் பொருள் இருக்கின்றது. அவரின் நாட்டியத்தின் முத்திரை ஒவ்வொன்றும் பூவுலகில் பலவித மாற்றங்களை குறிக்கும். அதில் வளர்ச்சியும் உண்டு. வீழ்ச்சியும் உண்டு. நடராஜர் உருவம் இருக்குமிடத்தில் இயகக்கதி சுறுசுறுப்பாக இருக்கும். சுறுசுறுப்பும் விறு விறுப்பும் இல்லாத மந்தகதியில் இயங்கும் ஓர் வீட்டினுள் நடராஜர் சிலாரூபம் நுழைந்தால் அந்த இல்லத்தில் ஒர் விசைப்பாடு தோன்றி பல் வினைகளாக செயலாக்கம் தொடங்கும்.
3000 ஆண்டுகள் பழமையான ரிக்வேதம் லிங்க வழிபாட்டை வலியுறுத்துகின்றது. கிருத, திரேதா, துவாபர யுகங்கள் முடிந்து கலியில் 5115 ஆண்டுகளை கழித்து விட்டோம். மூன்று யுகங்களின் கணக்கோடு கலியுகக் கணக்கைச் சேர்த்தால் இதுவரை இந்த பூமி நான்கு யுககாலமான 43,20,000 ஆண்டுகளில் 30லட்சம் ஆண்டுகளை கடந்து விட்டிருக்கின்றது. பூமி தோன்றும்போதே வேதங்கள் தோன்றியுள்ளன. அப்படியென்றால் ரிக்வேதம் தோன்றியதற்கு முன்பிருந்தே லிங்க வழிபாடு நடைபெற்றிருக்கின்றது என்றால் 30லட்சம் ஆண்டுகளுக்கு மேலாக இப்புவியில் லிங்க வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது என அர்த்தம்.
சிவன் எங்கும் நிறைந்திருக்கின்றான். அவன் இல்லாத இடமில்லை. விறகில் தீயாக, பாலில் நெய்யாக, எள்ளில் எண்ணெய்யாக ஒன்றில் ஒன்றாக இருப்பது எல்லாம் அவனே. இந்த உண்மை ஞானம் பெற்றல்தால்தான் அறியமுடியும். முதலில் அறிவது. இரண்டாவது உணர்வது. பாவ புண்ணிய சுழற்சிகளுக்குள் இருந்து விடுபடாமல் பிறந்தும் இறந்தும், இறந்தும் பிறந்துமாய் இருந்தால் உயிர்களை மீட்டெடுக்க வழிகாட்டவே சிவன் பூவுலகில் எண்ணற்ற தலங்களில் குடிகொண்டு லிங்க வடிவில் அருள் பாலிக்கின்றான்.
லிங்க ரூபத்தில் சக்தி பீடமாய் இருக்கின்றது. லிங்க ரூபத்தினை வழிபடுபவர்களை சிவன் முதலில் ஆட்கொள்கின்றான். அக்னியாஸ்திரத்தை மிஞ்சும் அஸ்திரம் இல்லை என்பதால் அர்ச்சுனனைக் கொல்ல சிவவிக்கிரக ஆரதனை செய்துவந்த அஸ்வத்தாமா அந்த அஸ்திரத்தை ஏவுகின்றான். அந்த அஸ்திரத்திற்குப் பதிலாக சிவலிங்க ரூபத்தை தியானித்து தவம் செய்து பெற்ற பாசுபதாஸ்திரத்தை அர்ச்சுனன் ஏவ அது அக்னியாஸ்திரத்தை அடக்கி விடுகின்றது. வழிபாட்டுக்குரியது லிங்க வடிவமே. உயிர்களை மீட்டெடுக்க உதவுவது லிங்கவடிவ வழிபாடேயாகும்.
லிங்கம் என்பது மணியாகும். மந்திரம் என்பது பஞ்சாட்சரமாகிய ‘நமசிவய”. விபூதியே மருந்து-ஒளஷதம். சித்தர்கள் மணி-மந்திர-ஒளஷதம் என்று லிங்கத்தை, பஞ்சாட்சரத்தை, விபூதியை கொண்டிருந்தார்கள். அன்பு நிறைந்த ஆத்மாக்களே நீங்களும் மணி-மந்திர-ஒளஷதம் என்றிருங்கள்.
லிங்கம் ஏழு வகைப்படும். சுயம்பு, தேவி, திவ்ய, ஆர்ஷக, மானுஷ, ராட்ஸச, ஆசுர எனப்படும். 12 ஜோதிர்லிங்கங்கள் சுயம்பு வகை. லிங்கங்களை வணங்கியே தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், அஷ்டதிக்பாலகர்களும், கிரகங்கள், சப்தரிஷிகள், அசுரர்கள், யட்சர்கள், கின்னரர்கள் கிம்புருடர்கள் ஆகியோருடன் சித்தர்களும் வழிபட்டு வரங்களைப் பெற்றுள்ளனர்.
ஆனால் சித்தர்கள் தாங்கள் உணர்ந்ததையும் அறிந்ததையும் கொண்டு ஆத்மாக்களுக்கு வழிகாட்ட நினைத்தனர். சிவலிங்கத்தை வழிபாடு செய்த தேவர் முதலியவர்களால் லிங்கத்தின் மகாத்மியம் பக்தி பணிவு தெரிய வந்தது. சித்தர்களால் உடல், உள்ளம், ஆன்மா முதல் அண்டம், பிண்டம், பேரண்டம், மூச்சுக்காற்று, பிராணாயமம், மூலிகை, அஷ்டமாசித்தி முதலியன தெரிய வந்துள்ளது. சிவனே சித்தனாக வந்து சாகசம் புரிந்துள்ளான்.
&&&&&