திருடியது மனித மாண்பை!
இறைவனை தரிசித்துவிட்டு குதிரைமேல் பயனித்த குரு வழியில் கிடந்த ஒருவனைப் பார்த்து அவனுக்கு உதவ குதிரையிலிருந்து இறங்கினார். அவன் முகத்தில் நீர் தெளித்தும் அவன் மயக்கத்திலிருந்து மீளவில்லையாதலால் அவனை தன் ஆசிரமத்திற்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க நினைத்து சிரமப்பட்டு அவனைத் தூக்கி குதிரைமீதி ஏற்றினார். அப்போது திடீரென்று விழித்த அந்த இளைஞன் குதிரையின் கடிவாளங்களைப் பிடித்து குதிரையை வேகமாகச் செலுத்திக் கொண்டு சென்றான். உதவ நினைத்த தான் ஏமாற்றப்பட்டது தெரிந்த குரு வேறுவழியின்றி ஆசிரமத்திற்கு நடந்தே சென்றார்
குதிரையின் தேவை அதிகமாக இருந்ததால் குரு அந்த வாரச்சந்தைக்கு குதிரை வாங்கச் சென்றார். அங்கு அவருடைய குதிரையை விற்பதற்காகப் பிடித்துக் கொண்டு தன்னை ஏமாற்றி குதிரையைக் களவாடிச் சென்றவன் இருப்பதைக் கண்டார். அவன் அருகில் சென்று அவன் தோளைத் தொட்டார்.
திரும்பிப் பார்த்தவன் பேயைக் கண்டவன் போல பயந்து அதிர்ச்சியடைந்தான். நடந்ததைச் சொல்லி அவர் தனக்கு தண்டனை வாங்கி கொடுப்பார் என நினைத்தவனுக்கு, தம்பி, அந்தக் குதிரையை நீயே வைத்துக் கொள்! ஆனால் அதை நீ எப்படி அடைந்தாய் என்பதை மட்டும் யாரிடமும் சொல்லி விடாதே! என்று குரு கூறியது சாட்டையால் அடித்தது போலிருந்தது.
மேலும் அவர் சொன்னார், இந்தக் குதிரை இழப்பால் எனக்கு ஒன்றும் பெரிய நஷ்டமில்லை. சிலநாட்கள் உழைத்தால் ஒரு குதிரை வாங்கும் அளவிற்கு பொருள் சேர்ந்துவிடும். ஆனால் உதவி செய்ய நினைத்த ஒருவன் ஏமாற்றப்பட்டான் என்று தெரிந்தால் உலகத்தோர் யாருக்கும் உதவி செய்ய முன் வரமாட்டார்கள். இது ஒரு முன் உதாரணம் ஆகிவிடும். நீ என் குதிரையை அபகரிக்கவில்லை. என் சிலநாள் உழைப்பை சுரண்டிவிட்டாய் அவ்வளவே என்றார்.
உண்மையாகவே வருந்துவர்களைக் கூட நம்பாமல் இது நடிப்போ! நாம் ஏமாந்து விடக்கூடாது என்று நினைத்து உண்மையாக உதவி தேவைபடுபவனுக்கு உதவ மாட்டார்கள். உன் ஒருவன் செயலால் மனித நேயம் அங்கே மரத்துப் போகும். கருணையின்றி நடந்து கொள்வர். இப்படி ஒவ்வொருவரும் நடந்து கொண்டால் அதன் விளைவு மனித குலத்திற்கே கெடுதல் என அவனின் செயலின் பாதிப்பை சுட்டிக் காட்டினார்.
தான் செய்த செயல் ஒரு மனிதனுடைய பாதிப்பு அல்ல! மனித இனத்தின் மாண்பு எனப்புரிந்தான்! எந்நாளும் மனித மாண்பை கேள்வியாக்காதீர்கள்!
#####