ஓம்நமசிவய!
அருளெனும் கடல்முகந் அடியர் சிந்தையாம்
பொருள் பெருநிலஞ் சிவபோக முற்றிட
வரமழை உதவி செவ்வந்து யானையின்
திருவடி இணைமலர் சென்னி சேர்த்துவோம்
$$$$$
தாயுமானவர்
வேதாரண்யம் என்ற திருமறைக்காட்டில் கேடியப்ப பிள்ளையின் இராண்டாவது மகனாகப் பிறந்தார். மிகவும் பேரழகு கொண்ட இவர் கவிதை இயற்றும் ஆற்றலுடன் பக்தியில் நாட்டமும் கொண்டிருந்தார். திருச்சியை ஆண்ட நாயக்க மன்னன் கேடியப்ப பிள்ளையின் மறைவிற்குப்பின் அவர் மகனை அதே பெருங்கணக்கர் பணியில் அமர்த்தினார். சில காலத்தில் மன்னர் இறக்க அரசி பொறுப்பேற்றுக் கொண்டார். ஓர் நாள் மாலை அரசி அவரிடம் வந்து தாயுமானவரிடம் தன் உள்ளக்கிடங்கை எடுத்துறைத்தாள். என்ன சொல்லியும் அரசியை சமாதானப்படுத்த முடியவில்லை. தான் அழகாக இருப்பதால் வந்த தீவினை என நினைத்து அங்கிருந்து நல்லூர் சென்று தவமிருந்தார். விபரம் அறிந்த அரசி மந்திரவாதி ஒருவரின் உதவியுடன் அவரின் தவ நிலைக்கு இடையூறு செய்து வசியம் செய்ய முனைந்தாள். தாயுமானவர் அந்த மந்திரவாதியின் மனதை தம்பால் திருப்பி அரசிக்கு அறிவுரை சொல்ல வைத்தார்.
தாயுமானவரின் உறவினர்கள் வந்தனர். திருமணம் புரிய வற்புறுத்தினர். தவறான உறவிற்கு இந்த தர்மமான உறவு எவ்வளவோ மேல் என்று நினைத்தார் தாயுமானவர். தாய் அவர் மனதை மாற்றி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தாள். திருமணம் முடிந்து ஓர் ஆண்டில் ஓர் ஆண்மகன் பிறந்ததும் மனைவி இறந்தாள். மகனை கனகசபாபதி என நாமமிட்டு வளர்த்தார். அவரின் தாயும் இறைவனடி சேர்ந்தாள். சில நாட்கள் சென்றன. தன் மகனை வரவழைத்து தனக்கு துறவில் நாட்டம் என்றும் எந்த உறவும் நிலையானதில்லை, இனி நீ உன் வழி நட என அமைதிப்படுத்தினார். அப்போது அவரின் வீட்டிற்கு, முன்பு ஒரு சமயம் தாயுமானவர் துறவு வேண்டி நின்றபோது, நீ திருமணம் வேண்டாமென்றாலும் உனக்குத் திருமணம் நடைபெறும். உனக்கு ஒரு மகன் பிறப்பான் .அதன் பின்னரே உனக்கு துறவு எனக்கூறிய மௌனகுரு வந்தார். அவரின் பின்னே தாயுமானவர் அமைதியாகச் சென்றார் தன் துறவுப் பணியினை தொடர…
$$$$$