ஓம் நமசிவாய!
யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!
******
ஞானசட்க யோகம்
எல்லா தத்துவங்களையும் கலைகளுடன் ஞானமாக இணைந்துள்ளது. ஓம், பிரணவம், குண்டலினி எல்லாம் ஒரே தன்மையுடையது. அட்டாங்க யோக முறைகள், தெரிந்து பழகியபின் ஞானசட்க யோகம் பயின்றால் நலமாகும். இங்கு ஞானசட்க யோகம் மூலம் சிவாகமத்தில் கூறியுள்ள 16 கலைகளைப் புரிந்து கொள்ள முயல்வோம். சட்கம்- ஆறுபாடல்கள் கொண்டது. இந்த யோகத்தை ஞானமாலை யோகம் பயின்றபின் பயிலவும்.
கலைகளின் நிறமும் இடமும்
நாற்றழலின் கொழுந்து பயகதிர் மின்னுவிளக்கு
நண்ணும் வாளொளி புகை மாணிக்கம் இருமின்னும்
உற்று ஒளிரும் இரவி நூராயிர கோடிஉதய
ஒளியன்ன தொகைவட்டம் ஞான ஆகாயம்
அற்றமில் ஞானவ் வாழி, ஞானக் கண்ணாடி
அவிர்நூறாயிர கோடி மதி ஒளி அத்தொகையே
பெற்ற தினகர வெயில்மேல் பேசவரும் இருளே
பிறங்கு உந்தி முதல் முடிமேல் துவாதசாந்தம் பெறுமே.
1.அகரக் கலை-மேதை- எரியும் தீக்கொழுந்து. 2.உகரக் கலை-அருக்கீசம்- சூரிய சந்திரர் கூடிய ஒளி. 3.மகரக் கலை-விடம்- மின்னல் ஒளி. 4.விந்துக் கலை- விளக்குச் சுடர். 5.அர்த்தசந்திரக் கலை- கூரிய வாள் ஒளி. 6.நிரோதினிக் கலை- புகை நிறம். 7.நாதக் கலை- மாணிக்க ஒளி. 8.நாதாந்தக் கலை-இரு மின்னல்கள் இனைந்தது. 9.சக்திக் கலை- 100 சூரிய ஒளி. 10.வியாபினிக் கலை- 1000 சூரிய ஒளி. 11.வியோமரூபினிக் கலை- ஆகாயம் போன்றது (ஞான ஆகாயம் நீல ஒளி). 12.அனந்தைக் கலை- கடல் நிறம் போன்றது (ஞானக்கடல்). 13.அனாதைக் கலை- கண்ணாடி போன்ற நிறம். 14.அநாசிருதைக் கலை- லட்சகோடிச் சந்திரர் ஒளி. 15.சமனைக் கலை- கோடி சூரியர் ஒளி. 16.உன்மனைக் கலை- இருள்போன்றது. நாபி முதல் துவாதசாந்தம்வரை இந்தக் கலைகள் இருக்கும்.
நாபி முதல் துவாதசாந்தம்வரை உள்ள அளவும் இடமும்
அங்குலம்நால் அகரத்திற்கு உந்தி மீதே
அடுத்திடும் மூன்றிற்கு எட்டுஎட்டாயே நிற்கும்
துங்கமுள நாலினிக்கும் முன்று மூன்றாம்
துலங்கிய ஓரிரண்டினுக்கு நான்கு நான்காம்
தங்கிய மேல் ஒன்றுக்கு மூன்றே ஆகும்
தயங்கியமேல் ஒன்றுக்கு ஒன்றாகச் சாற்றும்
பங்கமிலா இவைகள் துவாத சாந்தமாகப்
பங்குபெறு கலைகள் எனப் பகரும் நூலே.
1.அகரக் கலை-மேதை- நாபி-உந்தி முதல் 4 அங்குலம், 2.உகரக் கலை-அருக்கீசம்-8. 3.மகரக் கலை-விடம்-8, 4.விந்துக் கலை-8, 5.அர்த்தசந்திரக் கலை, 6.நிரோதினிக் கலை, 7.நாதக் கலை, 8.நாதாந்தக் கலை ஆகிய 5முதல்8வரைக்கும் தனித்தனியே 3, 9.சக்திக் கலை, 10.வியாபினிக் கலை, ஆகிய 9, 10 இரண்டுக்கும் 4, 4, 11.சமனைக் கலைக்கு-3, 12.உன்மனைக் கலை-1 ஆக உந்தியிலிருந்து உன்மனை முடிய உயரம்=4+8+8+8+3+3+3+3+4+4+3+1=52விரல்கள்+ உந்தியிலிருந்து மூலாதாரம் வரை 12 ஆக மொத்தம் 64 விரல்கள். இங்கு வியோமரூபினி, அனந்தை, அனாதை அனாசிருதை ஆகியவை சமனைக்கலை-3 மற்றும் வியாபினிக் கலை-4 க்கு இடையே அடங்கி செயல்படும்.
கலைகளின் வடிவம்
அகரம் உகரம் மகரம் விந்துநல்ல
அர்த்தசந்திரன் இவை அவ்வடிவே ஆகும்
புகலவரு முக்கோணம் இருவிந்து நடுவே
பொருந்தும் மலம் விந்து வலம்நடுவே விந்து;
தகவுடைய திரிசூலம் இரண்டும் விந்து
சாரும் வியோமாதி நால்விந்து நான்காய்
நிகழவரும் இருகுச்சி இரண்டு விந்து
நீடுமொரு விந்து என நிறுத்தும் நூலே.
ஞானமாலையின் பாடலில் கூறப்பட்டுள்ள வடிவம் மாறுபட்டுள்ளது. எனெவே ஏதாவது ஒன்றை பாவித்து தியானம் செய்தால் போதும்.
கலைகளின் அதிதேவர்கள்
மலரயன்முன் நால்வர்களும் ஆகும் உந்திமேல்
மருவுஅகரம் ஆதி ஒருநாலுக்கும்
இலகவரு நான்கினுக்கும் சதாசிவமே தெய்வம்
எழிலுடைய மேலிரண்டின் ஆகதமாம் சிவமே
நலமுடைய நான்கினுக்கு நற்பரம சிவமே;
நண்ணும் அநாகத சிவமே நவிலரிய இராண்டிற்கு
உலகறிய ஐந்து மூன்று இரண்டு இரண்டே
உள்ளாகும் இரண்டு இரண்டிற்கு ஒரு நான்குதானே.
1.அகரக்கலை-மேதை-பிரமன், 2.உகரக்கலை-அருக்கீசம்-திருமால், 3.மகரக்கலை-விடம்- உருத்திரன்,
4.விந்துக்கலை- மகேச்வரன். 5.அர்த்தசந்த்ரக்கலை, 6.நிரோதினிக்கலை. 7.நாதக்கலை. 8.நாதாந்தக்கலை ஆகிய நான்கிற்கும் சதாசிவன் 9.சக்திக்கலை. 10வியாபினிக்கலை ஆகிய இரண்டிற்கும் ஆகத சிவன் (அபர சிவன்). 11.வியோமரூபிணிக்கலை, 12.அனந்தைக்கலை, 13.அனாதைக்கலை, 14.அனாசிருதைக்கலை ஆகிய நான்கிற்கும் பரமசிவன் 15.சமனைக்கலை 16.உன்மனைக்கலை இரண்டிற்கும் அனாகத சிவம் (சுத்தசிவன்=சொரூபசிவன்). 1முதல் 5வரை தூல கலைகள். 6.7.8 சூக்கும கலைகள். 9, 10 அது சூக்கும கலைகள். 11.12 மகா சூக்ம கலைகள். வியாபினிக்கு அடுத்த வியோமரூபினி, அனந்தை இரண்டும் வியாபினியிலும், அதற்கடுத்த அனாதை, அனாசிருதை இராண்டும் சமனையிலும் அடங்கும்.
கலைகளின் மலநிலை
மூலத்தில் ஓங்காரம் அசபைக்காக
மொழிவார் காமிகமலம்; மேல்முகிழ்க்கும் உந்தி
ஏலத்தான் மேவு அசுரமுன் இரண்டிற்கு
இழுக்குமலம்; மேலிரண்டிற்கு இலகு மாயை
சீலத்தான் மேலிரண்டில் திகழ் மாயேயம்;
திறலுடைய மேல் இரண்டில் சேர்மா மாயை;
சாலத்தான் மேலிரண்டில் தகுதி ரோதம்;
தயங்கியமேல் இரண்டிற்கு ஆணவமே சாற்றில்.
12 கலைகளையும் இரண்டு இராண்டாகப் பிரித்து, ஓம் எனும் மந்திரம் அசபை ஆகியவற்றுடன் ஏழு பிரிவாக மலங்களைப் பிரித்தும் கூறப்பட்டுள்ளது.
1 |
ஓம் + அசபை |
காமிகம் (கன்மமலம்) |
2 |
அகரம் + உகரம் |
பிரகிருதி மாயை |
3 |
மகரம் + விந்து |
அசுத்த மாயை |
4 |
அர்த்தசந்திரன்+ நிரோதினி |
சுத்த மாயையின் காரியங்கள் |
5 |
நாதம் + நாதாந்தம் |
சுத்த மாயை |
6 |
சக்தி + வியாபினி |
திரோதானம் (மறைப்பு ஆற்றல்) |
7 |
சமனை + உன்மனை |
ஆணவ மலம் |
இதைத் தியானைத்தால் மலங்களின் வாதனை நீங்கும்.
84 லட்சம் யோனி பேதம் மற்றும் கலைகளை அடக்குமுறை
அரிய மூலாதாரம் அதனின் மேவி
அவிரும் ஓம்காரம் எழில் அசபைக்காகத்
தெரிவரிய யோனி தாபரமே யாகும்;
திகழவரும் உந்தியின் மேல் அகர மாதிப்
பிரிவரிய இவ்விரண்டாய் அறுகூறாகிப்
பெறும்யோனி ஊர்வனவும் நீரில் வாழ்வதற்கு
உரியனவும் பறவைகளும் நாற்கால் மானிடரும்
உயர்தெய்வ கதியும் என உரைக்கும் நூலே.
ஓங்காரம் அசபை இரண்டிலும் தாவர வர்க்கமும், அகர உகரத்தில் ஊர்வனவும், மகர விந்துவில் நீர் வாழ்வனவும், அர்த்தசந்திரன், நிரோதினியில் பறவைகளும், நாதம், நாதாந்தங்களில் விலங்குகளும், சக்தி வியாபினியில் மக்களும், சமனை உன்மனைகளில் தேவர்களும் என ஏழு வர்க்கங்களாகும். இவையே 84லட்சம் யோனி பேதம் ஆகும். இதனால் பிறப்பு இனி இல்லாது போகும்.
கலைகளின் மாத்திரையும் சூன்யமும்
மூன்று அகரம் இரண்டு உகரம் மகரம் ஒன்றே
முந்துவிந்து அரை; பிறைகால்; முக்கோணம் அரைக்கால்
ஆன்றமைந்த நாதம் மாகாணி நாதாந்தம்
அரைமாமேல் அரைக்காணி சக்தி ஐமுந்திரிகை
என்ற வியாபினி அரக்காணியின் கீழின் அரையே
இம்முறையே வியோமாதி அரைஅரை மாத்திரையே
தோன்றும் மகரத்தின் மேல் நிரோத சக்தியின்மேல்
தோற்றும் வியாபினி சமனை உன்மனைமேல் சுன்னே.
1.அகரக் கலை- 3மாத்திரை, 2.உகரக் கலை-2, 3.மகரக் கலை-1, 4.விந்து- அரை, 5.அர்த்தசந்திரக் கலை- கால், 6.நிரோதினிக்கலை- அரைக்கால், 7.நாதக்கலை- மாகாணி, 8. நாதாந்தக்கலை- அரைமா, அரைக்காணி, 9.சக்திக்கலை- காணி முந்திரிகை, 10.வியாபினி- அரைக்காணிக்கு கீழ் அரை, 11.வியோமரூபினிக்கலை முதல் 16வது கலை வரக்கும் – இதற்குமேல் பாதி பாதியாக கொள்க.
மகரக்கலையின்மேல் முதல் சூன்யம்-தொப்புளுக்குமேல் -24 விரல். நிரோதினியின்மேல் இரண்டாம் சூன்யம் தொப்புளுக்குமேல் -34 விரல், சக்தியின்மேல் மூன்றாம் சூன்யம்- தொப்புளுக்குமேல் -44 விரல். வியாபினியின்மேல் நான்காம் சூன்யம்- தொப்புளுக்குமேல் -48 விரல். சமனையின்மேல் ஐந்தாம் சூன்யம்- தொப்புளுக்குமேல் -51 விரல். உன்மனையின்மேல் ஆறாம் சூன்யம்- தொப்புளுக்குமேல் -52 விரல். இதை மனத்தால் தொப்புளுக்குமேல் ஒவ்வொரு முறையும் அளந்து சூன்யங்களைத் தியானிக்க வேண்டும்.
******