gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

மகாலட்சுமி

Written by

 

 

லட்சுமி-விஷ்ணுவின்மார்பில் இருப்பவள். தூய உள்ளம் கொண்டவள் மகாலட்சுமி.

வேறுபெயர்கள்- கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜய லட்சுமி, சந்தான லட்சுமி, வித்யா லட்சுமி, தைரிய லட்சுமி, தான்ய லட்சுமி,

உகந்த நாட்கள்- செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, பௌர்ணமிதினங்கள் சிறப்புஎந்நாளும் வழிபடலாம்.

உகந்த மலர்கள்-செந்தாமரை, தாழப்பூ, செண்பகம், முல்லைமல்லி,பவளமல்லி (பாரிஜாதம்) சிறப்பு. தும்பை, அருகம்புல் தவிர மற்ற பூக்களை உபயோகிக்கலாம்.

வணங்கும்முறை- கோவிலுக்கு வெளியில் உள்ள சிறிய திருவடியை-அனுமானை வணங்கவும். பிராதனக் கோவிலின் முன்பகுதியில் உள்ள கொடிமரத்தை சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கவும். ஆழ்வார்கள், ஆச்சாரியர்களை வணங்கவும். எல்லா சன்னதிகளிலும் அனுக்கிரகம் பெற்று தாயார் சன்னதிக்கு வெளியில் உள்ள துவார பாலகிகளைச் சேவித்து அனுமதியுடன் தாயார் சன்னதிக்குச் செல்லவும்., நீங்கள் கொண்டுவந்த பழங்கள்பூக்கள் மற்றும் அர்ச்சனைக்குரிய பொருள்களை அர்ச்சகரிடம் கொடுத்து விட்டு அமைதியாக இறைவியின் துதிகளை, திருநாமங்களைச் சொல்லிக் கொண்டிருங்கள். அர்ச்சகர் மந்திரங்கள் சொல்லி மணி ஒலி எழுப்பும்போது கண்களை மூடாமல் இறைவியைப் பார்த்து மனதாற வணங்குங்கள். ஆராதனை செய்த தீபத்தை ஏற்றுகுங்குமம்பெற்று தாயேசரணம்எனச்சொல்லி நெற்றியில் இட்டுக் கொள்ளவும். மகாலட்சுமி, ஆண்டாள் ஆகியோருக்கு அர்ச்சனை செய்து அல்லது வணங்கி மூலவரான பெருமாளின் எதிரில் உள்ள கருடாழ்வார் துவாரக பாலகர்களை வணங்கி அவர்களின் அனுமதியுடன் மூலவரான பெருமாளைத் தரிசிக்கவும்.

அருள் நிறைந்துள்ள பெருமாள் கோவிலில் ஒரு பகுதியில் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்து துதிகள் அல்லது நாமங்களைச் சொல்லிக் கொண்டிருந்துவிட்டு எழுந்து வரவும்.

 

உள்ளே.....

1.“ஸ்ரீ லட்சுமி”-லஷ்மிகடாட்சம் பெற- தினமும்/ வேண்டும்போது.

2.“லட்சுமி”-புன்நகையும் பொன்நகையும் சேர-முத்துசாமி தீட்சிதர் பாடியது- தினமும்-நேரம் கிடைக்கும் போது

3.“அஷ்டலட்சுமி” கடாட்சம்பெற-தேவேந்திரன் பாடியது-தினமும்- குறைந்தபட்சம் வெள்ளிக்கிழமை 

4.“தியாகராஜர் துதி”-முத்துசாமி தீட்சிதர்-திருமகள் அருள்பெற- வறுமைத்துயர் நீங்க-தினமும்/ வேண்டும்போது. 

5.“லக்ஷ்மி இருதய துதி”-செல்வ வளம்பெற-தினமும் 

6.“லக்ஷ்மி துதி”-விரும்பும் துறையில் வேலை கிடைக்க தினமும் 16 முறை. 

7.“மகாலட்சுமி துதி”-அவதிகள்நீங்க, செல்வம் அடைய- தினமும் / வேண்டும் போது. 

8.“மகாலட்சுமி துதி”-இடர்கள் நீங்க, செல்வம் அடைய- இந்திரன் பாடியது- தினமும் / வேண்டும் போது. 

9.“லட்சுமி”யின் அருள்கிட்ட- சங்கடங்கள் விலக, ஆதிசங்கரர் -செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை 

10.“லக்ஷ்மிதுதி”-சர்வமங்களம், 16பேறுகளும்கிட்ட-வெள்ளிக் கிழமை 

11.“லட்சுமி”-வேண்டுவன எல்லாம்கிட்ட-வெள்ளிக்கிழமை-மற்றும் வரலட்சுமி விரத நாளன்று 

12.“திருமகள்” பாற்கடலில் தோன்றியபோது- அட்சய திருதியையன்று திருமால் கூறியது -வெள்ளி மற்றும் அட்சய திருதியையன்று. 

13.“லட்சுமி”-செல்வவளம் கொழிக்க, பரந்தமனப்பான்மை  பெருக-ஆதிசங்கரர் அருளியது -அட்சயதிருதயை 

14.“மகாலக்ஷ்மி துதி”- தனம், தான்யம், சந்தானம், ஆரோக்யம், கல்வி, செல்வம், கலை எல்லாம்பெற- தினமும் / நவராத்திரி போது. 

15.“மகாலக்ஷ்மி துதி”- ஆதிசங்கரரின் கனகதாரா- குணங்கள் மேன்மையுற,செல்வங்கள் அடைய,அறிவு வளர- தினமும்/ வெள்ளிக்கிழமை. 

16.“அஷ்டலக்ஷ்மி துதி”- தனம், தான்யம், சந்தானம், ஆரோக்யம், கல்வி, செல்வம், கலை எல்லாம்பெற- தினமும் / நவராத்திரி போது.

17.“108 லட்சுமி போற்றி”

“ஸ்ரீமங்களாஷ்டகம்”-நீண்ட ஆயுளுடன்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட-தினமும்.

வேழமுகத்து விநாயகனைத் தொழ
வாழ்வு மிகுந்துவரும்!
வெற்றி முகத்து விநாயகனைத் தொழ
புத்தி மிகுந்துவரும்!
வெள்ளைக்கொம்பன் விநாயகனைத்தொழ
துள்ளியோடும் தொடர்ந்த வினைகளே!
அப்பமும் பழம் அமுதும் செய்தருளிய
தொப்பையப்பனை தொழ வினையறுமே!

1.“ஸ்ரீ லட்சுமி”- லஷ்மி கடாட்சம் பெற- தினமும் / வேண்டும் போது.

oபொன்னரசி நாரணனார் தேவி புகழரசி
மின்னு நவரத்தினம்போல் மேனி அழகுடையாள்
அன்னையவள் வையமெலாம் ஆதரிப்பாள் ஸ்ரீதேவி
தன்னிரு பொற்றாளே சரண்புகுந்து வாழ்வோமே!

2.“லட்சுமி”- புன்நகையும் பொன்நகையும் சேர-முத்துசாமி தீட்சிதர் பாடியது- தினமும்- நேரம் கிடைக்கும் போதெல்லாம்

oசுவர்ணமயமான லட்சுமியை நான் சதா போற்றிப் பாடுகிறேன். ஈனமான அற்ப மனிதர்களைப் போல் கோரிக்கை நிறைவேறவேண்டுமென்ற வேண்டுதலோடு உன்னை நெருங்குவதை விட்டு விடுகிறேன்! உன்னை வணங்குகின்றேன்!

oஅழிவில்லாத நிலையான ஐவர்யத்தைக் கொடுப்பவளே! பாற்கடலின் புதல்வி. மகாவிஷ்னுவின் மார்பையே தன்னிருப்பிடமாகக் கொண்ட மான் விழியாளே! தளிர் போன்ற திருவடிகளைக் கொண்டவளே! மலர்ப்பாதம் கொண்டவளே! கைகளில் நீல மலர்களை ஏந்தியவளே! மரகத பச்சை மணி வளையல்களை அணிந்தவளே! உன்னை வணங்குகின்றேன்!

oஸ்வேத உலகத்தில் வசிப்பவளே! ஸ்ரீகமலாம்பா பரதேவதை எனக் கூறப்படுபவளே! கடந்த காலத்திலும், நிகழ் காலத்திலும், வருங்காலத்திலும் ஒளிர்பவளே! அந்தணர்களால் போற்றப்படும் உத்தமமான தாயே! தாமரை மாலை அணிந்தவளே! மாணிக்க மயமான ஆபரணங்கள் தரித்தவளே! உன்னை வணங்குகின்றேன்!

oகீதம், மற்றும் இசை வாத்தியங்களால் சந்தோஷம் அடைபவளே! பார்வதியின் அம்சமான இந்திராவே! சந்திர முகம் கொண்டவளே! மஞ்சள் நிற ஆடை அணிபவளே! குரு குகனின் மாமனான விஷ்ணுவின் அன்பு மனைவியே! மிகச் சிறந்த அழகியே! அதனால் லலிதா என்றழைக்கப்படுபவளே! உன்னை வணங்குகின்றேன்!

oமங்கள் தேவதையான உன்னால் நான் மிகவும் பெருமைப் படுத்தப்பட்டுள்ளேன். உனக்கு நன்றி. உன்னை வணங்குகின்றேன்!

oமிகச்சிறந்த கமலாலயத்தில் குடியிருப்பவளே! போக பாக்கியங்களை அளிக்கும் சகல பொருள்களுக்கு இருப்பிடமானவளே! சராசர மயமான உலகின் எல்லா உற்பத்தி, காத்தல், அழித்தல் என மூன்றுக்கும் பொறுப்பானவளே! உன்னை வணங்குகின்றேன்!

oமஞ்சள், குங்குமம், அழகிய ஆடை ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட திருமேனி உடையவளே! ஏழ்மை, துக்கம் போன்ற பெரிய அமலங்களைப் போக்குபவளே! ராஜகோபாலனின் இதயக் கமலத்தினை இருப்பிடமாகக் கொண்ட வரலட்சுமியே! பக்தர்களான குருகுகன் முதலியோர்களுக்கு அனுக்கிரகம் செய்பவளே! உன்னை வணங்குகின்றேன்!

oதேவர்களால் சதா வணங்கப்படுபவளே! பாதத் தாமரையை உடையவளே! பாற்கடலில் தோன்றியவளே! தேவர்கள் வணங்கும் பார்வதிக்கு இளையவளே! மயைக்கு வித்தான மகாலட்சுமியே! வரலட்சுமியே! உன்னை வணங்குகின்றேன்!

oசெல்வங்களை அளிப்பவளும், அழகிய பத்ம பாதங்களையுடையவளும் ரசனைக்கு இருப்பிடமானவள் ஆகிய அம்மா வரலட்சுமியே! உனக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!

oமன்மதனின் தந்தையான மகாவிஷ்னுவின் பிராண நாயகியே! பொன் வண்ண மேனியுடையவளே! கோடி சூர்யர்களின் ஒளியை உடையவளே! பக்தர்களை விரைவில் அடைபவளே! உன்னை வணங்குகின்றேன்!

oதன் அடியவர்களை ரக்ஷிப்பவளே! தாமரை மலருடன் கூடியவளே! கேசவனின் இதயத்தில் விளையாடுபவளே! உன்னை வணங்குகின்றேன்!

oஆவணி முதல் மாதத்தில் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை தினத்தில், சாருமதி முதலான பத்தினிகளால் பூஜிக்கப்படுபவளே! தேவர்களாலும் குரு குகனாலும் சமர்பிக்கப்பட்ட ரத்னமாலையை அணிந்தவளே! எளியவர்களை ரட்சிப்பதையே லட்சியமாகக் கொண்ட சாமர்த்தியசாலியே! உன்னை வணங்குகின்றேன்!

oநலிந்தோர்க்கு நிதிக் குவியலை அளிப்பவளே! மாயையைப் போக்குவதில் வல்லவளே! சரஸ்வதியால் வணங்கப் படும் உத்தமியே! கைவல்யத்தை கொடுப்பதில் விருப்பமுடையவளே! வேண்டும் விருப்பங்களை எல்லாம் அள்ளிக்கொடுக்கும் கைகளையுடையவளே! உன்னை மிக மிகப்போற்றி துதிக்கின்றேன்.

oமகிழ்வான புன்னகையும் மங்களமான பொன்நகையும் என் இல்லத்தில் என்றும் சேர்ந்திருக்க அருள்வாயாக! உன்னை வணங்குகின்றேன்!

3.“அஷ்ட லட்சுமி” கடாட்சம் பெற- தேவேந்திரன் பாடியது- தினமும்- குறைந்தபட்சம் வெள்ளிக்கிழமை

தாமரையில் வசிப்பவளும், நாரயணனின் தேவியான நாராயணியும் கிரிஷ்ணனின் அன்புக்குரியவளும் ஆகிய மகாலட்சுமியை எப்போதும் போற்றி வணங்குறேன்!

தாமரை இலையைப் போல் தனித்து நிற்பவளும், மகாவிஷ்ணுவின் பத்தினியும் கமலமலரில் வீற்றிருப்பவளும் பத்மினியுமான வைஷ்ணவியைப் போற்றி வணங்குகிறேன்!

எல்லாச் செல்வங்களின் வடிவமாகயிருப்பவளும், எல்லோராலும் போற்றப்படுபவளும், விஷ்னுவின் மேல் பக்தி செலுத்துவதை ஊக்குவிப்பவளும், சந்தோஷத்தை அளிப்பவளுமான மகாலட்சுமிக்கு நமஸ்காரம்!

oகிருஷ்ணரின் மார்பில் வசிப்பவளும், கிருஷ்ணரை நிழல்போல் தொடர்பவளும், நிலவின் ஒளியையே தன்னுருவாகக் கொண்டவளும், செந்தாமரை போன்று பிரகாசிப்பவளுமான அலைமகளை மனமாரத் துதிக்கிறேன்!

செல்வம் நிலையாக இருக்க வகைசெய்பவளும், மூன்று தேவிகளில் முக்கியமான தேவியும், வளத்தின் மொத்த உருவமும், வளமையுமே ஆனவளுமான தேவியைப் போற்றி வணங்குகிறேன்!

வைகுண்டத்தில் மகாலட்சுமியென்றும், பாற்கடலில் லட்சுமியென்றும், இந்திரனின் இருப்பிடத்தில் சொர்க்க லட்சுமி எனவும், அரண்மனையில் ராஜ்யலட்சுமி என்றும் அழைக்கப்படுபவள் ஆகிய ஸ்ரீதேவியைப் போற்றி வணங்குகிறேன்!

இல்லற வீடுகளில் கிருஹலட்சுமி என்ற கிரஹ தேவதையாகவும், வாரிவழங்கும் காமதேனுவாகவும், சமுத்திரத்தில் தோன்றியவளும் வேள்வியின் பிரிய நாயகியான தட்சிணாவாக இருப்பவளுமான மகா லட்சுமியை நமஸ்கரிக்கின்றேன்!

தாயே! நீயே தேவமாதாவான அதிதிதேவி, கமலாலயத்தில் வசிப்பவளான கமலாவும் நீயே! ஸ்வாஹா எனும் அக்னி தேவதையும், பித்ரு தேவதையான ஸ்வாதாவும் நீயே! உன்னை வணங்குகின்றேன்!

நீயே விஷ்ணு ஸ்வரூபியாக இருக்கிறாய்! வழங்கும் சக்திகளில் பூமித்தாய், நீ! சுத்த சத்வ சொரூபம் நீயே! எப்போதும்நீ நாராயணனைப் போற்றுபவள்! உன்னை வணங்குகின்றேன்!

பொறாமை, துன்புறுத்தல், உயிர்களைக் கொல்லுதல் போன்றவற்றை நீ விரும்புவதில்லை, சாரதையாக ஒளியுடன் திகழ்பவள் நீ! வேண்டிய அனைத்தையும் அளிப்பவள் நீயே! மகாவிஷ்ணுவின் அருளைப் பெற உதவுபவள் நீயே!

எல்லோருக்கும் மேலான தாய் நீ! எல்லோருக்கும் உறவினளாக உருவெடுத்தவள் நீ! தர்மம், அர்த்தம் ஆகிய பொருள், ஆசையாகிய காமம், முக்தியாகிய மோட்சம் ஆகிய நான்கு குணங்களும் வருவதற்கும், அவை ஈடேறவும் காரணமானவள் நீயே!

ஒவ்வொரு உயிரும் தாய்ப்பால் குடிக்கும் தருணம் முதல் கடைசி மூச்சு வரை எல்லாக் காலத்திலும் எல்லோருக்கும் தாயாக இருந்து அரவணைத்துக் காப்பவளான உனக்கு நமஸ்காரம்!

தாயை இழந்த சிசுக்கள், தாய்ப்பால் இல்லா விட்டாலும் தெய்வ அனுக்கிரஹத்தால் வாழ்கிறார்கள். ஆனால் உன்னருள் இல்லாமல் எப்படி வாழ்க்கை நடத்த முடியும்? நிச்சயமாக உன்னருளால்தான் இது முடியும்!

எப்போதும் மகிழ்ச்சியும் புன்முறுவலுடனிருப்பவள் நீ! பவாம்பிகையே நீ காட்சி தந்து மகிழ்விக்க வேண்டும். சகலருக்கும் சமமான அருளைத் தருபவளே! எதிர்ப்பு என்பதேயில்லாத ஒரு நிலையை எனக்குக் கொடு அம்மா!

நான் தங்களுடைய கடாட்சம் இன்மையால் உற்றார் உறவினரின்றி அநாதை போல் எல்ல செல்வத்தையும் இழந்து உன்னையே கதி என்றிருக்கின்றேன். நீயே எனக்கு ஞானத்தைக் கொடு! தர்மத்தை அருள்! சர்வ சௌபாக்யத்தையும், புகழ், கீர்த்தி மற்றும் அனைத்து அதிகாரத்தையும் கொடுத்து அருள்புரி!

வெற்றி, வீரம், எதிரி பயமின்மை, சகல செல்வம் என யாவற்றையும் கொடு தாயே!

கண்களில் நீர்வழிய தலைதாழ்த்தி நின்று மகாலட்சுமியை தேவர்களின் நலனை முன்னிட்டு இந்திரன் வணங்கினான். பிரம்மா, சங்கரன், ஆதிசேஷன், எமதர்மன், கேசவன், ஆகியோரின் (உடனிருந்தனர்) ஆசிகள் எனக்கும் உண்டு.

மனம் இரங்கி காட்சியளித்த கலைமகள் தேவர்களுக்கு வரம் கொடுத்ததோடு அழகிய, மனம் நிரைந்த மலர் மாலையைக் கொடுத்தாள்.

அதோடு அலைமகள், தேவேந்திரா உன்னால் இனிமையாகச் சொல்லப்பட்ட இந்த புண்ணிய துதியை தினமும் மூன்று முறை சொல்கிறவர்கள் குபேரனுக்கு சமமான செல்வம் பெறுவர். ஐந்து லட்சம் முறை சொல்பவர் ஸ்ரீ ராஜராஜேஸ்வரனாவார் என்றார்!

புனிதமான இத்துதியை எக்காலத்தும் இடைவிடாது துதிப்பவர், சக்ரவர்த்திக்கு நிகரான செல்வங்களும் அரச வாழ்வும் பெறுவார் என்பது நிச்சயம்! தேவேந்திர போகமும் குபேர சம்பத்தும் நான் பெற நான் ஆசி புறிவாய் அம்மா!

4.“தியாகராஜர் துதி”- முத்துசாமி தீட்சிதர்- திருமகள் அருள் பெற- வறுமைத்துயர் நீங்க-தினமும்/ வேண்டும்போது.

oமங்களமான சௌகந்திக மலர் மாலைகளின் மணத்தாலும் அழகினாலும் ஒளிரும் திருக்கழுத்தை உடையவர். நிலவைத் தலையில் சூடியவர். திரிபுராதி அசுரர்களை கொல்ல முற்பட்டபோது மேரு போன்ற மலையை வில்லாக ஏந்தி நின்றவர். இப்படிப்பட்ட பெருமைகளையுடைய ஸ்ரீ தியாகராஜரைப் போற்றி வணங்குகின்றேன்.

oமுத்து, இந்திரநீலம் போன்ற ஒளிமயமான நவரத்னங்கள் இழைக்கப்பெற்ற நவரத்ன சிம்மாசனத்தில் வீற்றிருப்பவராகிய தியாகராஜ பெருமானை அடியேன் போற்றி வணங்குகின்றேன்.

oவானர முகமுடைய முசுகுந்தச் சக்ரவர்த்தியின் பிரார்த்தனைக்கு
இணங்க விண்ணைவிட்டு இந்த மண்ணுலகுக்கு வந்தவரும், பாதுகாப்பான கவசம் போன்ற பெட்டகத்திலேயிருப்பவரும், முருகனின் தந்தையுமான ஸ்ரீதியாகராஜரே தங்களை நான் பணிவு கொண்டு வணங்குகின்றேன்.

oசகல ஜீவ ராசிகளையும் காப்பாற்றும் பசுபதியும், மிகச் சிறந்த குருவடிவம் எடுத்து அநேக பெரியோர்களின் சுத்த சத்குருவாக விளங்குபவரும், ஸ்ரீபுரம் எனப்படும் கமலாம்பிகையின் நகரத்தில் விளங்குபவரும், தன்னுடைய வடிவத்தை மறைத்துக் கொண்டிருப்பவருமாகிய தியாகராஜரே உமக்கு என் வணக்கங்கள்.

oதன் இனிய மனையாளான ஸ்ரீகமலாம்பிகையின் பேரெழில் நிறைந்த புன்னகையில் ஒளிர்பவரும், அந்த அம்பிகைக்காக தனது ஒரு பாதியைப் பகிர்ந்து கொடுத்தவரும், கணங்களின் தலைவராகிய கணபதியைப் பெற்ற ஸ்ரீதியாகராஜருக்குப் போற்றி. போற்றி.

oவிடாது தொடர்ந்து ஆரதிக்கப்பட்டால் மட்டுமே தனது சூட்சுமமான வடிவத்தின் ரகசியங்களை உணரச் செய்பவரும், சிறப்பான முறையில் அனைவரின் கோரிக்கைகளையும் நிறைவேற்றி இன்பமுறச் செய்பவரும், தடைகளற்றபோக போக்கியங்களையும் உன்னதமான பதத்தையும் அளிக்க வல்லவருமான தியாகராஜப்பெருமானுக்கு என் வணக்கங்கள்.

oபாற்கடலில் சயனித்திருக்கும் பகவான் விஷ்னுவால் முன்னம் மனத்துள் வைத்து பூஜிக்கப்பட்டபோது அவரது உள்சுவாசம் வெளி சுவாசத்திற்கேற்ப பன்னெடுங்காலம் வசித்துக் கொண்டிருந்தவர். அவரது அப்போதைய அசைவே ஆடலாகப் பரிணமித்தது. ஆக பரந்தாமனின் எல்லையற்ற இதயக் கடலில் அன்றலர்ந்த தாமரையின் மேல் அன்னப்பறவையைப் போன்ற அழகிய ஹம்ஸ நடனம்- அஜாபா நடனம் ஆயிற்று. அப்படிப்பட்ட ஆடலின் நாயகனும் மிகவும் போற்றுதலுக்குரிய பெருமைமிக்க பரமகுருவும் எல்லையற்ற மங்கள சொரூபியுமான தியாகராஜரைப் போற்றி வணங்குகின்றேன்.

oசச்சிதானந்த வடிவினராக குருவாகத் தோற்றமளிக்கும் ஸ்ரீதியாகராஜருடைய சீரடிகளில், பரமானந்தத்தை அளிக்கவல்ல இந்த அஷ்டகத் துதி மிகுந்த பக்தியுடன் சமர்பிக்கப்படுகின்றது. அகத்தூய்மையுடன் அர்பணிக்கப்படும் இந்தத் துதியால் மகிழ்ந்து மங்களங்கள் யாவும் அவரால் அளிக்கப்படும் என்பது நிச்சயம் என்ற நம்பிக்கையுடம் மனநிறைவுடன் இத்துதியை படிக்கின்றேன். எனக்கு லட்சுமி கடாட்சம் அருள்வாயாக.

5.“லக்ஷ்மி இருதய துதி”-செல்வ வளம் பெற- தினமும்

ரத்தினங்களால் ஜொலிக்கும் மாளிகையில் வசிக்கும் அழகுமிகு லட்சுமிதேவியே! உன்னை வணங்குகின்றேன். தூயதங்கம் போன்ற தேஜஸ் உள்ள லட்சுமிதேவியே வணக்கம், பொலிவுடன் ஒளிவீசும் லட்சுமி தேவியே வணக்கம், சாந்த சொரூபியான லட்சுமிதேவி எங்களுக்கு அனைத்து அருளும் வழங்குவாயாக. எழில் சிறக்கும் ஸ்ரீ மகாலட்சுமியே எங்கள் இல்லத்தில் விரைவாக எழுந்தருளி நிலைகொள்ள வணங்கி வேண்டுகின்றேன்.

6.“லக்ஷ்மி துதி”-விரும்பும் துறையில் வேலை கிடைக்க- தினமும் 16 முறை.

செல்வங்களுக்கெல்லாம் அதிதேவதையானவளே! அமிர்தம் வேண்டி கடைந்தபோது திருபாற்கடலில் தோன்றியவளே! தாமரை மலரை விரும்பி ஏற்பவளே! சந்திரனுக்கு சகோதரியே! திருமாலின் மனைவியே! வைஷ்ணவியாய் அருள்பவளே! பக்தர்களின் நலவாழ்வில் ஏற்படும் தடைகளை உன் கையில் உள்ள சார்ங்கம் எனும் வில்லால் அழிப்பவளே! ஹரி எனும் திருமாலுக்கு பிரியமானவளே! தேவர்களுக்கெல்லாம் தேவியே! மகாலட்சுமியாய் பேரழகு கோலத்தில் திகழ்பவளே! உன்னை வணங்குகின்றேன்!

7.“மகாலட்சுமி துதி”- அவதிகள் நீங்க, செல்வம் அடைய- தினமும் / வேண்டும் போது.

விளக்கினை ஏற்றிவைத்து வெற்றிலை பாக்கு வைத்து அளக்கரும் 
குங்குமத்தை அமுதமாம் சந்தனத்தை துலக்கமாய் அதனுக்கிட்டு 
தொடர்ந்து நீ அதனை ஏற்றி விளக்கமாய் வருக தாயே! 
என்று நீ விளம்பிவை வருவாள் லட்சுமி!

நூற்றிதழ்த் தாமரையின் மீதே நுணுகியே உறையும் பொன்னே!
ஏற்றிடும் தொழிலுக் கெல்லாம் இறைவியே! எங்கள் செல்வி!
போற்றினோம் உன்னை என்றும் பொன்னடி புனைகின்றோமே!
நாற்றிசை நீயே அம்மா நல்குவை இன்பம்தானே!

மகிடனின் பொருட்டாய் அன்று மாதேவர் மூவர் கூடி
முகிலெனக் கருணை நல்க! மூண்டதோர் கோபத்தாலே
அகிலமும் கொண்ட அன்னாய்! அவரவர் ஒளியினாலே
சிகியெனத் தொன்றினை நீயே! சிறந்தபொன்னாவாய் தாயே!

மணியினைத் தரித்தாய் நீயே! மலரினை உகந்தாய் நீயே!
கனியெனக் கனியும் மாதே! மேலையே உனது ஜோதி
அணியெனக்கு ஆயிற்றம்மா அனைத்துமாம் இன்பம் எல்லாம்
துணிவுடன் நல்க வல்ல தூயவளே! வணங்குகின்றேன்!

கமலத்தில் வசிக்கும் மாதே! கமலினி வணங்குகின்றேன்!
அமைவுறும் தேவதேவி! அன்புடை நாராணியும் நீயே!
இமையினில் வண்ணம் காட்டும் எழிலெனும் கண்ணன் மாட்டு
அமைவுறும் ராதை என்ற அன்னை மகாலட்சுமி போற்றி!

புனிதமே கமல மாதே! புள்ளூர்ந்தான் போற்றும் தேவி!
இனிய பத்மாசனத்தில் இருப்பவள் நீயே அன்றோ!
துணிவுடை வைணவீ உன்றன் திருவடி தொழுவதற்கே
அணுகினோம் நோக்கு தாயே! அவதியை நீக்கு தாயே!

செல்வமென்று சொன்னால் செல்வி நீதான் ஈவாய்!
வெல்வது நீயே என்றும்! வேறென அனைத்தும் நீயே!
பல்குணப் பரந்தாமன்பால் பற்றுடை திருவே உன்னை
பல்கிய மலர்கொண்டேத்திப் பணிந்தனம் காக்க தாயே!

கண்ணன் மார்பில் வாழும் கமலை நீ அன்னை நீயே!
கண்ணனின் சாயல் பெற்ற காரிகை நீயே தாயே!
எண்ணரும் இந்தின் ஜோதி ஏற்றனை கமலச் செல்வி!
எண்ணியே துதிப்போம் உன்னை இன்பமே சேர்க்க அன்னாய்!

எத்தனை செல்வம் உண்டோ! அத்தனை தரவும் வல்லாய்!
பித்தனை மயக்கும் செல்வி! பேணினோம் போற்றி! போற்றி!
எத்தனை விருத்தியுண்டோ அதனதன் வடிவம் நீயே!
அத்துணை விருத்தி நாங்கள் அடைந்திட வழிகாட்டாயோ!

நாரணர் வைகுண்டத்தில் மகாலக்ஷ்மி நீயே தாயே!
காரணம் யாவும் ஆன கனகமே நீரில் வந்த 
பூரணி சுவர்க்க லக்ஷ்மி இந்திரன் பூசை கொள்ளும்
நாரணி கருணைத் தாயே! நீயேதான் ராஜலக்ஷ்மி!

வீட்டினில் விளங்கும் பொன்னே! வீடதைக் கொடுக்கும் செல்வே!
வீட்டினைக் காக்க நீயும் விரும்புவை இலக்குமி நீயே!
கேட்டினைக் களையும் பெண்ணே! கெடுதலே அறியா அன்னை!
தேட்டினால் தொழும் உன் பக்தர் தொண்டினை உணர்ந்து காக்க!

அதிதிகள் போற்றும் தேவி! நிதியென நிற்கும் அன்னை! 
நிதியெனும் கமலச் செல்வி! நிமலையென்றமர்ந்த அன்னை!
தன்னையே உரிமை கொள்ளில் தகவுடன் அமையும் அன்னை!
மின்னுனைத் தொண்டுகொண்டோம்! மெல்லியை அருள்க மாதே!

விட்டுணு வடிவம் கொண்ட விமலையே! கமலை நியே!
எட்டுணைப் பொறுளும் நீயின்றி இல்லையே! இல்லை மண்ணில்
கற்றவர் போற்றும் எல்லா சார்புகள் நீயே தாயே!
அற்புதன் கண்ணன் போற்றும் அமலையே காக்க நீயே!

துட்டரை அடக்கும் காலை! துணிவோடு குரோதம்
திட்டமாய் கொள்ளும் அன்னை! திருவடி கொள்ளும் அன்பர்
கெட்டன எல்லாம் நீக்கும் கேடிலா சாரதை! இன்பம் 
உற்றவள் பறையென்றோதும் உயர்குல விஷ்னுப் பிரியை!

உலகமும் தானே ஆனாள்! உறுபொருள் எல்லாம் ஆனாள்!
இலகிடும் ஒளிகொள் நங்கை உலவிடும் உயிரில் எல்லாம்
ஒளிர்பவள் அகில அம்ச அளிகொளும் அனைத்தாம் சக்தி!
குளிர்பவள் பக்தர்க்கென்றே குரைகழல் வணங்குகின்றோம்!

எல்லாமாய் ஆகி நின்றாள்! இவள்பரை அன்னை என்றே!
எல்லோரும் உரிமை கொள்ளும் இன்பமாம் உருவைப் பெற்றாள்!
கல்லார்க்கும் கற்றவர்க்கும் காமமும் மோட்சம் தானும்
வெல்வகை அழித்துக்காக்கும் விமலையும் படைகள் கொண்டாள்!

எங்கணும் நீயே! அன்னை எங்களின் பொருளும் நீயே!
மங்களம் நல்கவல்ல மகிமையும் நீயே அம்மா!
பொங்கிய கீர்த்தி கொண்டு புவனமே காக்கும் அன்னாய்!
எங்ஙணும் உன்றன் தோற்றம் எங்களைக் காக்க தாயே!

எங்களை வாழ வைக்கும் எங்களின் அன்னை நீயே!
எங்களின் உயிரில் ஆத்மா என்றிடும் இறைவி நீயே!
பொங்கொளி பரப்பும் தாயே! புனிதமே கோபி கொண்ட 
மங்கல அன்னை நீயே! மலரடி பணிகின்றோமே!

உன்றன் உருவம் தன்னை ஒருவரும் உரைக்க ஒண்ணா
கண்ணரும் கொண்டாய் நீயே! கடுமையும் பகைவர்க் கென்றாய்!
எண்ணிலா தோற்றம் காட்டும் எம்மனை நீயே அம்மா!
தண்ணொளி அறத்தைச் சேர்க்கும் தாயுனை வணங்குகின்றோம்!

அகத்தினில் உறையும் அன்னாய்! அகத்தினில் ஒளிசேர்ப்பாயே!
இகத்தினில் உற்றோர் வஞ்சம் இதனையும் போக்கு தாயே!
அகத்தினில் சகலமான அருந்தனம் சேர்க்க அன்னாய்!
அகத்தினில் அரியின் நெஞ்சில் அமர்ந்தனை கமலச் செல்வி!

ஞனமே அருள்க தேவி! ஊனமில் அறத்தை நானும்
ஞானத்தால் அறியச் செய்க ஞானமே! பொருளை ஈவாய்
ஒளியினில் சிறந்த அன்னாய்! உன்னுடைய ஒளியே இந்த 
நிலவிய உலகம் காக்கும்! நீயதன் அரசியாவாய்!

வெற்றியும் வீரம் தானும் வேண்டிடும் அன்பர் எல்லாம் 
கொற்றவைபரையை லட்சுமி கொள்கையில் நிலையாய்க் கொண்டு
உற்ற இப்பாக்கள் தம்மை ஒருதினம் மூன்று வேளை
நற்றவ உணர்வில் கூறின் நாடிடும் இன்பம் தானே!

8.“மகாலட்சுமி துதி”- இடர்கள் நீங்க, செல்வம் அடைய- இந்திரன் பாடியது- தினமும் / வேண்டும் போது.

மனமொழி, மெய்யே கொண்டு மங்கல தேவியுன்னை
தினம்தினம் தொழுதேன் எங்கள் மகேஸ்வரி சிவையே பொற்றி!
வணங்கினோம் உலகமானாய்! வளர்தரு இறையை அன்பால்
வணாங்கினால் போதும் உன்றன் வள்ளன்மை காண்போர் தாயே!

எந்தவோர் தேவி இந்த இகபரம் அனைத்தும் ஆனாள்!
அந்தவோர் விஷ்னு மாயை அவளை நான் வணங்குகின்றேன்!
எந்தஓர் தேவி இந்தப் பஞ்சபூதங்கள் ஆனாள்
அந்தவோர் தேவி தன்னை அடிக்கடி வணங்குகின்றேன்!

அரவணை மீது என்றும் அறிதுயில் கொள்ளும் தேவி!
குரவமும் முல்லை கொஞ்சும் கோதையை வணங்குகின்றேன்!
இயங்குவ நிலைத்த வான எந்த ஓர் பொருளின் உள்ளும்
மயங்கிய தூக்கம் கொண்ட மாயையை வணங்குகின்றேன்!

எந்தஓர் பொருளின் உள்ளும் சூக்குமம் ஆன தேவி
அந்த எம் அன்னை தன்னை அனுதினம் வணங்குகின்றேன்!
எந்தஓர் பொருளும் ஆகி அந்த ஓர் உருவம் ஆன
சுந்தர தேவி தன்னை சூழ்ந்து நான் வணங்குகின்றேன்!

எவ்வகைப் பொருளின் சக்தி என்றனின் சக்தி என்னும்
உய்வகை சொல்லும் தேவி உண்மையை வணங்குகின்றேன்!
எவ்வகைப் பூதத்துள்ளும் காட்சியின் வடிவமான
செவ்விய தேவி தன்னைச் சேர்ந்து நான் தொழுகின்றேன்!

எந்த ஓர் தேவி எல்லாப் பொருள்களின் சாந்தி ரூபம்
அந்தஓர் தேவி தன்னை அனுதினம் தொழுகின்றேன்!
எந்த ஓர் தேவி எல்லாப் பொருள்கலின் இனமாய் ஆனாள்!
அந்த ஓர் தேவி தன்னை அடிக்கடி வணங்குகின்றோம்!

உயிர்க்குலம் அனைத்தினுக்கும் உயர்வருள் நாணம் என்னும்
அயர்விலாக்குணம் கொள்அன்னை ஆதியை வணங்குகின்றேன்!
எந்த ஓர் பொருளின் சாந்தி உருவம்தான் என்று சொல்லும்
அந்த ஒர் சக்தி அன்னை அடியினை பரவுகின்றேன்!

எந்த ஓர் உயிரின் உள்ளும் தலைமை கொள்தேவி தன்னை
விந்தைகள் விளைக்கும் தாயின் வடிவமே தொழுகின்றேனே!
உயிர்க்குலத் தொனியாய் ஆன உன்னதத் தாயை நான்
உயர்வுற வணங்குகின்றேன்! உரிமையாய் காக்க தேவி!

எந்த ஓர் பொருளின் உள்ளும் இலக்குமி வடிவம் கொண்ட 
எங்களின் தேவி தன்னை இனிமையால் வணங்குகின்றேன்!
எவ்வகை பொருள்களேனும் விருத்தியாய் விளங்கவல்ல 
செவ்விய அன்னை தன்னை சேர்ந்து நான் தொழுகின்றேனே!

மன்னிய உயிர்க் கெல்லாம் மறைவடிவான மங்கை
கண்ணியள் அன்னை தன்னைக் கவினுற வணங்குகின்றேன்!
எவ்வகைப் பொருளும் கொண்ட நல்லளியான எங்கள்
செவ்விய தேவி தன்னைச் சேர்ந்து நான் தொழுகின்றேனே!

உயிர்க்குலம் கொண்ட வீர வடிவமும் தானே ஆன
உயர்வுடைய அன்னை தன்னை ஒளிபெறப் பணிகின்றேனே!
உலகுயிர்க் குலங்கட்கெல்லாமுயர்வுடைத் தாயின் தோற்றம்
அலகிலா விளையாட்டென்றே அவளை நான் தொழுகின்றேனே!

உயிர்க்குலம் அனைத்தும்கொண்ட பயமுமாய் ஆனாள் அன்னை!
அயர்வெலாம் அகற்றவேண்டி அவளை நான் வணங்குகின்றேன்!
புலன்களும் நீயே தாயே! பூதமும் ஆனாய் தாயே!
நலந்தரும் அதிர்ஷ்டம் நீயே! எல்லாமும் நிறைந்த அன்னாய்!

கலன்களும் அணிகள் தந்து காப்பவள் என்றும் நீயே!
நலந்தரு மனையில் இன்பம் நல்குக! வணங்குகின்றேன்!
பலன்களின் வடிவமான பரவிய பராபரையே!
நலன்களைத் தருக தாயே! நலம்பெற வணங்குகின்றேன்!

சூர்ப்பகை அழிக்கும் தாயே! சுரர்களைக் காக்கும் அன்னாய்!
சுரார்களின் தலைவன் இந்திரன் சுரரொடும் தொழுகின்றேன்!
நலன்களைத் தருக தாயே! நாடியே வளமும் கொள்வாய்!
பொலங்குழைமனம்கொள்வாயே! போற்றினோம்போற்றி! போற்றி!

9.லட்சுமி”யின் அருள்கிட்ட- சங்கடங்கள் விலக, ஆதிசங்கரர் - செவ்வாய்க்கிழமை, வெள்ளிக் கிழமை

அம்மா புவனேஸ்வரி, உன்னை வணங்குகின்றேன். உன் பீடத்தை தினமும் ஜபிக்கின்றவர்களுக்கு உலகில் எல்லாம் நடக்கும். உன்னிடம் முறையிடமலேயே உன்னை வணங்கும் பக்தர்களின் நியாமான தேவைகளைப் பூர்த்தி செய்யும் அன்னையே, மலர் மாலைகளாலும் கீரீடத்தாலும் அலங்கரிக்கப்பட்ட அழகு அம்பிகையே, மதம் கொள்ளக்கூடிய யாணைகளும் துதிக்கும் அன்னையே, தங்கம், இரத்தினம் போன்ற செல்வங்களுக்கு அதிபதியே, மகாலட்சுமியே, பெருமை மிக்கவளே, உனனை வணங்குகின்றேன். எனக்கு அருள் புரிவாயாக!

10.“லக்ஷ்மிதுதி”- சர்வமங்களம், 16பேறுகளும் கிட்ட- வெள்ளிக் கிழமை

oபரப்பிரம்ம சொரூபிணியான ஆதிலட்சுமியே உனக்கு நமஸ்காரம். புகழைக் கொடு, தனத்தைக் கொடு, அனைத்து அத்யாவசிய விருப்பங்களையும் அளிப்பாயாக.

oசந்ததி சிறந்திட சந்தான பாக்யம் அளித்திடும் சந்தான லட்சுமியே வணக்கம். எனக்கும் அந்தப் பேற்றினைக் கொடு. செல்வத்தைக் கொடு. நியாமான எல்லா தேவைகளையும் நிறைவேற்று.

oபிரம்ம வித்யா தேவியின் வடிவினளான வித்யா லட்சுமியே உனக்கு நமஸ்காரம். வித்தையைக் கொடு. கலைதனைக் கொடு. எல்லா நல்ல இஷ்டங்களையும் நிறைவேற்று.

oஅனைத்து வறுமைகளையும் நசிக்கச் செய்யும் தனலட்சுமியே உனக்கு நமஸ்காரம். நீங்காத செல்வத்தைக் கொடு, அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்.

oஎல்லா விதமான உயர்ந்த ஆபரணங்களையும் அணிந்து பிரகாசத்தோடு விளங்கும் தான்யலட்சுமியே உனக்கு நமஸ்காரம். புத்திக் கூர்மையைக் கொடு. வற்றாத செல்வத்தைக் கொடு. எனது எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்று.

oகலியின் கொடுமைகளை அழிக்கும் மேதாலட்சுமியே உனக்கு நமஸ்காரம். அறிவாற்றலான மேதைத்தனத்தை அளி. நிறைவான செல்வத்தைக் கொடு. சகல கலைஞானங்களையும் என் தேவையறிந்து கொடு.

oஅனைத்து தேவர்களின் அம்சங்களை கொண்ட கஜலட்சுமியே உனக்கு நமஸ்காரம். குதிரைகளும், பசுக்களும் நிரம்பிய கோகுலத்தைக் கொடு. எனது எல்ல நல்ல எண்ணங்களையும் நிறைவேற்று.

oஎல்லாச் செயல்களிலும் வெற்றியைத்தரும் வீரலட்சுமியே உனக்கு வணக்கம். தைரியத்தையும் பலத்தையும் கொடு. எல்லா நல்விருப்பங்களும் ஈடேற அருள்புரி.

oபராசக்தி வடிவினளான ஜயலட்சுமியே உனக்கு நமஸ்காரம். அனைத்திலும் எனக்கு வெற்றியைக் கொடு. சர்வமங்களங்களையும் அளித்திடு. சகல வேண்டுதல்களையும் ஈடேற்றிடு.

oஉனது கருணை மனதால் சௌமாங்கல்யத்தை அளித்திடும் பாக்யலட்சுமியே உனக்கு நமஸ்காரம். நல்பாக்யத்தைக் கொடு. வற்றாத செல்வமும் சகல நலமும் வளமும் அளித்திடு.

oமகாவிஷ்னுவின் மார்பில் உறையும் கீர்த்தி லட்சுமியே உனக்கு நமஸ்காரம். மங்காத புகழினைக் கொடு. நிறைவான செல்வத்தைக் கொடு. உன் விருப்பப்படி எனக்கு எல்லா நன்மைகளையும் அளித்திடு.

oஎல்லாப் பிணிகளையும் தீர்க்கும் ஆரோக்ய லட்சுமியே உனக்கு நமஸ்காரம். நீண்ட ஆயுளைக்கொடு. வற்றாத செல்வத்தைக் கொடு. நான் விரும்பும் வரமாக அனைத்தையும் அனுபவிக்கும்படியான ஆயுளும் ஆரோக்கியமும் எனக்குக் கொடு.

oசர்வ சித்திகளையும் அளிக்கவல்ல சித்திலட்சுமியே உனக்கு நமஸ்காரம். என் எல்லாச் செயல்களிலும் சித்தியினை அளித்திடு. குன்றாத வளமையைக் கொடு, எனக்கு விருப்பமானதும் நன்மை பயப்பதுமான பலன்களைக்கொடு.

oஅழகு மிளிரும் சௌந்தர்யலட்சுமியே. எழிலான ஆபரணங்களை அணிந்து மேலும் ஜொலிக்கும் உனக்கு வணக்கம். அழகான உருவத்தைக் கொடு. வற்றாத செல்வத்தைக்கொடு. என்மனம் போல் யாவற்றையும் குறைவின்றிக் கொடு.

oபுத்தியும் முக்தியும் அளிக்கக்கூடிய சாம்ராஜ்ய லட்சுமியே உனக்கு நமஸ்காரம். முக்தியைக்கொடு. வற்றாத செல்வத்தைக் கொடு. எனக்குத்தேவையான புத்தியையும் சகல விருப்பங்களையும் அளித்திடு.

oமாங்கல்யத்தின் மூலம் மங்களத்தை வழங்கும் மங்களையே மங்களாம்பிகையே எக்காலமும் மங்களத்தை அளிக்கும் மாங்கல்ய வளத்தை எனக்குக்கொடு.

oஅனைத்து மங்களங்களையும், மாங்கல்யத்தையும், ஆரோக்கியம், ஆயுள் உள்ளிட்ட எல்லா நலன்களையும் எல்லா செல்வங்களையும் அளிக்கக்கூடியவளே. த்ரயம்பகியே, நாராயணியே உன்னைச் சரணடைகிறேன்.

o கல்யாணியே சுபம் கிடைக்க அருள்க. ஆயுள், ஆரோக்யம், செல்வமும் அருள்வயாக. என் எதிரிகளையும் பிணிகளையும் நசிக்கச் செய்திடுக. தீபஜோதியான திருவிளக்கே, தீபலட்சுமியே உனக்கு நமஸ்காரம்.

11.“லட்சுமி”-வேண்டுவன எல்லாம் கிட்ட- வெள்ளிக் கிழமை- மற்றும் வரலட்சுமி விரத நாளன்று

எல்லாவகை மங்களங்களையும் அருள்பவளே! மகாலட்சுமியே நமஸ்காரம். வெறும் வார்த்தைகளால் அளந்துவிடமுடியாத எல்லையற்ற கருணை கொண்டவளே! நமஸ்காரம். என்றென்றும் ஆனந்தம் அளிப்பவளே! நமஸ்காரம். வேதங்களை அழகு செய்யும் மந்தாரப் பூமாலை போன்றவளே! நமஸ்காரம். ஸ்ரீமத் நாராயணனின் ஐஸ்வர்யமாக துலங்குபவளே! நமஸ்காரம். உலக மக்களுக்கு காமதேனுவைப் போல் வேண்டிய வரங்களை எல்லாம் தந்தருள்பவளே! மகாலட்சுமியே உனக்கு நமஸ்காரம்.

12.“திருமகள்” பாற்கடலில் தோன்றியபோது- அட்சய திருதியையன்று திருமால் கூறியது -வெள்ளி மற்றும் அட்சய திருதியையன்று.

oசிலந்திப்பூச்சியின் வாயிலிருந்து நுண்ணிய நூல் பெருக்கெடுப்பது போலவும், செந்தீயிலிருந்து நெருப்புப் பொறிகள் மேல் நோக்கி எழுவது போலவும், சகல உலகங்களையும் தன்னிச்சைப்படி தன் அருளால் தடையின்றி தோற்றுவிக்கும் உலகிற்கே தாயான மங்களகரமான அந்த தேவியின் இனையடிகளைப் போற்றுகிறேன்!

oதான் தோற்றுவித்த உலகங்கள் சற்றும் பிறழாத தாள கதியில் சீராக இயங்கிட தன் மாயா சக்தியை அவற்றினூடே செலுத்தி, அந்த அண்டங்களுக்கோர் சக்தியாய் தலைவியாய் விளங்குபவளின் தாள் போற்றி!

oஅஞ்ஞானத்தினால் மீண்டும் மீண்டும் பிறந்து உழன்று வினைப் பயனால் அல்லல் படுவோர்க்கும் பிறவிப்பிணியை அகற்றிடும் பெரும் ஞான ஒளியாக விளங்கும் அன்னையின் பத்ம பாதங்களைப் போற்றுகிறேன்!

o மங்களங்கள் யாவுக்கும் இருப்பிடமான வித்தகத் திரு என்றும்
சர்வ சக்தியென்றும் போற்றப்படும் அந்த தேவியை துன்பங்களிலிருந்து விடுபடவும் உய்வு பெறவும் போற்றுகிறேன்!

oஅன்னையே போற்றி! உலக உயிர்களின் துயரை அழிப்பாய் போற்றி! எங்களை இடர்களிலிருந்து காப்பாற்றும் தாயே போற்றி! இருளகற்றி அன்பை உணர்வுறச் செய்வாய் போற்றி! பாவத்தால் பிறவி எங்களை அழுத்துகிறது. அந்த பாவச் சுமையிலிருந்து எங்களை விடுவிப்பாய் அம்மா! உன்னருள் என்னும் இன்பத்தை நல்லோர்க்கு அளிக்கக் கூடியவளே போற்றி! ஒளி மலர்க் கண்ணாளே போற்றி!

oஆயிரம் தாமரை இதழில் அமர்ந்தவளே! கருஞ்சிவப்புநிற ஆடையை விரும்பி அணிபவளே! தண்ணென்ற சரத்கால நிலவின் ஒளியினாளே! திருமங்கையே, நின் பாதங்கள் போற்றி!

oதன்னிகரில்லாத பிரகாசமான ஒளிபொருந்தியவள்! கடைக்கண் நோக்கினால் சகலருக்கும் அருள் மழை பொழிபவள்! செந்தழல் போல் மாசுமறுவற்ற பொன்னொளி வடிவினள்! அப்படிப்பட்ட தேவியின் திருத்தாள் போற்றி!

oதூய்மையான ரத்ன மாலையினைப் பூண்டவளும், மஞ்சள் பட்டு உடுத்துபவளும், பணிவோடு சிறிது அளித்தாலும், பலகோடி மடங்கு தனத்தினையளிப்பவளும், என்றும் இனிமையாகவும் இளையவளானவளும், மங்களங்களை எல்லாம் வாரி வழங்குபவளாகவும் விளங்கும் செல்வத்திருவே போற்றி! போற்றி!

13.“லட்சுமி”-செல்வவளம் கொழிக்க, பரந்த மனப்பான்மை பெருக-ஆதிசங்கரர் அருளியது-அட்சயதிருதயை அன்று

மழை கொண்ட மேகங்களை காற்றுதான் நகர்த்திக் கொண்டு வந்து பூமியில் தேவையான இடத்தில் மழை பெய்ய உதவுகிறது. திருமகளின் கண்கள், நீருண்ட மேகம், அம்பாளின் கருணை, அனுகூலக்காற்று. இந்த அனுகூலக்காற்று, கருமேகத்தை தேவையான இடத்தில் பொருள்மழை பெய்விக்க அழைத்துச் செல்கிறது. அம்பிகையின் கருணைமிகுந்த தன் கடைக்கண் பார்வை இந்த ஏழையின் மீது விழவேண்டும். என் துன்பத்தை நீக்கி, பொருள்மழை பொழிவித்து அருள வேண்டும்.

14.“மகாலக்ஷ்மி துதி”- தனம், தான்யம், சந்தானம், ஆரோக்யம், கல்வி, செல்வம், கலை எல்லாம் பெற- தினமும் / நவராத்திரி போது.

oமுத்துநகை ரத்தினங்கள் மூக்குத்தி பில்லாக்கு
சத்தமிடும் கங்கணங்கள் சங்கீத மெட்டியுடன்
சித்திரை நிலவு முகம் சிங்காரப் புன்சிரிப்பு
பத்தரைப் பசும்பொன்னே பவனிவரும் இலக்குமியே!

oபாற்கடலில் உதித்தவளே! பவள நிறத்தவளே!
சீர்மேவும் சித்திரமே! சிங்கார நல்முத்தே!
கார்மேகக் கருணைமனம் கைகளோ வள்ளன்மை
பார்வையிலே பலனுண்டு பைங்கிளியே இலக்குமியே!

oசெல்வச் சிறப்புடனே சீர்மை வளத்துடனே
வல்லச் சுவையுடனே வெற்றி தருபவளே!
அள்ளக் குறையாத அறமோடு பொருளீந்து
உள்ளக் களிப்பினிலே ஒன்றிடுவாய் இலக்குமியே!

15.“மகாலக்ஷ்மி துதி”- ஆதிசங்கரரின் கனகதாரா- குணங்கள் மேன்மையுற, செல்வங்கள் அடைய, அறிவு வளர- தினமும்/ வெள்ளிக்கிழமை.
மணம்வீசும் முகுள மலர்களைத் தங்கநிற வண்டுகள்
மொய்ப்பது போல மகாவிஷ்ணுவின் மார்பிலே தங்க 
மங்கையான மகாலட்சுமியின் பார்வை உறைகின்றது. 
அதனால் பரந்தாமன் ஆனந்தத்தில் திளைக்கிறார்.

பொன்மகளே, அத்தனை மகிமை வாய்ந்த உன் 
கடைக்கண் பார்வையை இந்தப் பக்கம் 
திருப்பி, சகல சௌபாக்கியங்களையும் தருவாயாக.
உன்னை வேண்டுபவருக்கு அருள் புரிவாயாக.

தங்கக்கரத்தில் தாமரைப்பூவை வைத்திருப்பவளே போற்றி. 
உலகங்களின் நாயகியான என்தாயே போற்றி.தேவர்கள், 
கலைஞர்களுக்கும் கருணைகாட்டும்தெய்வமே போற்றி. 
திருமாலின் மகிமையால் எல்ல சக்தியையும் பெற்றவளே போற்றி.

கருணை என்னும் காற்று நிறைந்த 
லக்ஷ்மி கடாக்ஷம் என்னும் மேகம், 
ஏழையான இந்த சாதகப் பறவையிடம்
தாபத்தை அகற்றி தனம் எனும் மழையைத் தரட்டும்.

பூஜிக்கத்தக்கவளே உனக்கு செய்யும் நமஸ்காரம்
செல்வத்தை அளிக்கும். மகிழ்ச்சியைத் தரும்.
சாம்ராஜ்யத்தைக் கொடுக்கும். பாவங்களைப் போக்கும்
எனவே எப்போதும் உன்னை நமஸ்கரிக்க அருள் புரிவாயாக.

தாமரையில் அமர்ந்திருப்பவளே, கையில் தாமரை 
வைத்திருப்பவளே, பட்டு ஆடை, சந்தனம், பூக்கள் 
அணிந்தவளே, பகவதியே, ஹரிபத்தினியே, அழகியே, 
எல்லோருக்கும் செல்வத்தைவாரி வழங்கி அருள் புரிவாயாக.

16.“அஷ்டலக்ஷ்மி துதி”- தனம், தான்யம், சந்தானம், ஆரோக்யம், கல்வி, செல்வம், கலை எல்லாம் பெற- தினமும் / நவராத்திரி போது.

“ஆதிலக்ஷ்மி”

o நின்மேலுமாணை!நின்மகன்மேளுமாணை!நின்மாகொழுநன்
தன்மேலுமாணை! தமிழ்மேழும் ஆணை! தலமாவணிகச்
சின்னஞ்சிறுவர் தெரியாத காளையர் என்செயினும்
பின்னும் பொறுத்திருப்பாயே பெரிய இலக்குமியே!

o உன்னைத் தொழுதேன், உயிர்க்குப் புகலுதவும்
பொன்னே! முதல் திருவே! பூவிருக்கும்-அன்னே! 
எனதுள்ளம் என்றும் இனிப்பே அடையக்
கனிவுனது கண்மலராற் காட்டு,

“தான்யலக்ஷ்மி”

o புல்லை விதையாக்கிப் பூமியிலே நட்டாலும்
நெல்லாக மாற்றும் நிறைவுடையாய்! 
கல்லெல்லாம் ஆக்கிப் புசிக்கும் அருமை
உணவாக வாய்க்கத் தருவாய் வரம்!

o இருக்கும் இடமெங்கும் இன்கனியும் பூவும்
பெருக்கி மகிழ்வுதவும் பெண்ணே!
பருக்கரும்பை ஏந்தும் திருமகளே! எங்கள்
கழனியெல்லாம் சேர்ந்து வளங்கொழிக்கச் செய்!

“வீரலக்ஷ்மி”

o பஞ்சான கையால் படைக்கருவி ஏந்தாமல்
எஞ்ஞான்றும் வெல்லும் இயல்புடையாய்!
அஞ்சாமல் நேர்மைப் படையால் நெருங்க
பகைவெல்லும் கூர்மை எமக்குக் கொடு!

o தரமுயர்ந்த வீரம் தருக்கர்களை வாட்டக்
கரமருவும் போர்க்கருவி காட்டி- வரமளிக்க
வாகை புனைத்திலங்கம் வஞ்சிநீ எம்மனையிற் 
சேர்க எனப் பணிந்தோம் சேர்ந்து

“கஜலக்ஷ்மி”

o ஆனை இருபுறமும் அள்ளிச் சொரிபுனல்போல்
தானம் கொடுக்கும் தவப்பயனே! ஈனமெனும்
இந்தப் பிறவி இனிமேலே போயொழியத்
துந்திக்கை தாராய் துணை!

o துலங்கு பொற்கும்பத் துதிக்கையால் ஆனை
நலங்கெழுநீர் ஆட்ட நயந்த -இலங்கிழையே!
கையேந்தி உன்பாற் கசிந்து தொழுகின்றோம்
செய்யவளே சீரெமக்குச் செய்!

“சந்தானலக்ஷ்மி”

o கள்ளூறும் வாயால் கனிமழலை பேசுகிற
பிள்ளை வரமருளும் பேரன்பே! எல்லாரும்
நல்லவரைப் பெற்றிடவும் நாடு சிறந்திடவும்
வல்லவளே! ஈவாய் வரம்!

“வித்யாலக்ஷ்மி”

o நீங்காது நின்மகளும் நீண்டதிருமாலும்
பாங்காக அன்றுவந்த பாற்கடல்போல்-தேங்காமல்
நன்றாக நீயிருந்து நாளும் வளம்பெருக்கி
என்றைக்கும் நீங்காதிரு!

o நினைத்துத் தொழுதெழுந்தோம் நேயத்திருமால்
மனைக்கு விளக்கே! மலரால் உனக்கடிமை
செய் ஆனை போலுயர்த்து சீர்கொண்டு
இலங்கவே தையல் நீ ஈவாய் வரம்!

“தனலக்ஷ்மி”

o காடுவெட்டிப் போட்டு கடியநிலந்திருத்தி
வீடுகட்டிக் கொண்டிருக்கும் வேள்வணிகர் 
வீடுகட்கு அன்றைக்கு வந்த எங்கள் அம்மா!
இலக்குமியே! என்றைக்கும் நீங்காதிரு!

o செய்ய திருமேனி செம்பொன் அணிசெறியக்
கையிருக்கும் தம்பலத்துக் காரிகையே!
வையகத்தில் என்றும்பொன் மாரியினால்
இன்பம்பெருகிவர என்றென்றும் எம்பால் இரு!

17. “108 லட்சுமி போற்றி”

o ஓம் மஹாலட்சுமியே போற்றி
ஓம் தீபலட்சுமியே போற்றி
ஓம் ஆதிலட்சுமியே போற்றி
ஓம் தான்யலட்சுமியே போற்றி
ஓம் தைர்யலட்சுமியே போற்றி
ஓம் சந்தானலட்சுமியே போற்றி

o ஓம் விஜயலட்சுமியே போற்றி
ஓம் வித்யாலட்சுமியே போற்றி
ஓம் தனலட்சுமியே போற்றி
ஓம் கஜலட்சுமியே போற்றி
ஓம் சுபலட்சுமியே போற்றி
ஓம் சுப்புலட்சுமியே போற்றி

o ஓம் இராஜலட்சுமியே போற்றி
ஓம் கிருஹலட்சுமியே போற்றி
ஓம் சீதாலட்சுமியே போற்றி
ஓம் அமிர்தலட்சுமியே போற்றி
ஓம் குணலட்சுமியே போற்றி
ஓம் அன்னலட்சுமியே போற்றி

o ஓம் ஆத்மலட்சுமியே போற்றி
ஓம் பத்மலட்சுமியே போற்றி
ஓம் ஐஸ்வரியலட்சுமியே போற்றி
ஓம் இச்சாலட்சுமியே போற்றி
ஓம் கிரியாலட்சுமியே போற்றி
ஓம் ஞானலட்சுமியே போற்றி

o ஓம் ஜோதிலட்சுமியே போற்றி
ஓம் சௌபாக்யலட்சுமியே போற்றி
ஓம் அலங்காரலட்சுமியே போற்றி
ஓம் ஆனந்தலட்சுமியே போற்றி
ஓம் மோட்சலட்சுமியே போற்றி
ஓம் மோனலட்சுமியே போற்றி

o ஓம் மோகலட்சுமியே போற்றி
ஓம் நாகலட்சுமியே போற்றி
ஓம் அபயலட்சுமியே போற்றி
ஓம் மங்களலட்சுமியே போற்றி
ஓம் பங்கஜலட்சுமியே போற்றி
ஓம் அம்புஜலட்சுமியே போற்றி

o ஓம் லோகலட்சுமியே போற்றி
ஓம் யோகலட்சுமியே போற்றி
ஓம் சுவர்க்கலட்சுமியே போற்றி
ஓம் மதுரலட்சுமியே போற்றி
ஓம் ஜீவலட்சுமியே போற்றி
ஓம் மீனலட்சுமியே போற்றி

o ஓம் மரகதலட்சுமியே போற்றி
ஓம் தீனலட்சுமியே போற்றி
ஓம் திரிபுரலட்சுமியே போற்றி
ஓம் புவனலட்சுமியே போற்றி
ஓம் சுகுனலட்சுமியே போற்றி
ஓம் சுந்தரலட்சுமியே போற்றி

o ஓம் சுகானந்தலட்சுமியே போற்றி
ஓம் கீதாலட்சுமியே போற்றி
ஓம் சண்பகலட்சுமியே போற்றி
ஓம் துளசிலட்சுமியே போற்றி
ஓம் புண்யலட்சுமியே போற்றி
ஓம் திலகலட்சுமியே போற்றி

o ஓம் கனகலட்சுமியே போற்றி
ஓம் சுகந்தலட்சுமியே போற்றி
ஓம் கற்பகலட்சுமியே போற்றி
ஓம் கன்யாலட்சுமியே போற்றி
ஓம் தர்மலட்சுமியே போற்றி
ஓம் சொரூபலட்சுமியே போற்றி

o ஓம் அஷ்டலட்சுமியே போற்றி
ஓம் நித்யலட்சுமியே போற்றி
ஓம் ஜெகலட்சுமியே போற்றி
ஓம் மாயாலட்சுமியே போற்றி
ஓம் மஞ்சுளாலட்சுமியே போற்றி
ஓம் சியாமளாலட்சுமியே போற்றி

o ஓம் பிரியலட்சுமியே போற்றி
ஓம் வேதலட்சுமியே போற்றி
ஓம் அனந்தலட்சுமியே போற்றி
ஓம் மந்த்ரலட்சுமியே போற்றி
ஓம் புஷ்பலட்சுமியே போற்றி
ஓம் புனிதலட்சுமியே போற்றி

o ஓம் கல்யாணிலட்சுமியே போற்றி
ஓம் குங்குமலட்சுமியே போற்றி
ஓம் கோமளலட்சுமியே போற்றி
ஓம் சந்த்ரலட்சுமியே போற்றி
ஓம் சத்யலட்சுமியே போற்றி
ஓம் ரெங்கலட்சுமியே போற்றி

o ஓம் வெங்கடலட்சுமியே போற்றி
ஓம் சங்குலட்சுமியே போற்றி
ஓம் சக்ரலட்சுமியே போற்றி
ஓம் பிரபஞ்சலட்சுமியே போற்றி
ஓம் ரூபலட்சுமியே போற்றி
ஓம் மகரலட்சுமியே போற்றி

o ஓம் ஹம்சலட்சுமியே போற்றி
ஓம் வில்வலட்சுமியே போற்றி
ஓம் கௌரிலட்சுமியே போற்றி
ஓம் சாந்தலட்சுமியே போற்றி
ஓம் அட்சதலட்சுமியே போற்றி
ஓம் கிரிஜாலட்சுமியே போற்றி

o ஓம் பாக்யலட்சுமியே போற்றி
ஓம் சித்தலட்சுமியே போற்றி
ஓம் கிருபாலட்சுமியே போற்றி
ஓம் காமலட்சுமியே போற்றி
ஓம் இஷ்டலட்சுமியே போற்றி
ஓம் வசந்தலட்சுமியே போற்றி

o ஓம் வைராக்யலட்சுமியே போற்றி
ஓம் பூரணாலட்சுமியே போற்றி
ஓம் தூபலட்சுமியே போற்றி
ஓம் அனுக்கிரஹலட்சுமியே போற்றி
ஓம் மயூரலட்சுமியே போற்றி
ஓம் சோபாலட்சுமியே போற்றி

o ஓம் ப்ருத்விலட்சுமியே போற்றி
ஓம் தயாலட்சுமியே போற்றி
ஓம் சௌந்தரலட்சுமியே போற்றி
ஓம் அங்கலட்சுமியே போற்றி
ஓம் சுபலட்சுமியே போற்றி
ஓம் ஸ்ரீதேவி லட்சுமியே போற்றி

மகாலக்ஷ்மி காயத்திரி செல்வம்நிலைக்க தினமும் 108முறை

ஓம் மஹா லக்ஷ்ம்யை ச வித்மஹே
விஷ்ணு பத்ந்யை ச தீமஹி
தந்நோ லட்சுமி ப்பிரசோயாத்

“ஸ்ரீமங்களாஷ்டகம்”:--

மங்களங்கள் பெருக- மனக் குறைவின்றி- பாவங்களிலிருந்து விலகி- நீண்ட ஆயுள்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட தினமும்-காலை/மாலை.

oபிரம்மனே! மஹாவிஷ்னுவே! பரமேஸ்வரனே! இந்திரனே! அக்னியே! யமனே! நிருதியே! வருணனே! வாயுவே! குபேரனே! முருகனே! கணபதியே! சூரியனே! சந்திரனே! ருத்திரர்களே! விச்வ தேவர்களே! ஆதித்யர்களே! அச்வினி தேவர்களே! சாத்தியர்களே! வஸுக்களே! பித்ருக்களே! சித்தர்களே! வித்யாதரர்களே! யஷர்களே! கந்தர்வர்களே! கின்னரர்களே! மருத்துக்களே! மற்றும் ஆகயத்தில் சஞ்சரிக்கும் அனைத்து தேவர்களே! உங்கள் அனைவரையும் வணங்குகின்றேன். எனக்கு என்றும் மங்களம் அருளுங்கள்.

oசரஸ்வதி, மகாலட்சுமி, பூமிதேவி, பார்வதி, சண்டிகை, பத்ரகாளி, பிராஹ்மி முதலிய மாத்ரு கணங்கள், தட்சனின் மகள்களான அதிதி, திதி, சதி, முதலியோர், சாவித்ரி, கங்கை, யமுனை, அருந்ததி, தேவர்களின் மனைவிகள், இந்திராணி முதலிய தேவலோகப் பெண்களும் விண்ணில் சஞ்சரிக்கும் தேவமாந்தரும் எனக்கு நீங்காத மங்களத்தை அளிக்கட்டும்.

oமத்ஸ்யமூர்த்தி, கூர்மமூர்த்தி, வராஹமூர்த்தி, நரசிம்மப் பெருமாள், வாமனர், பரசுராமர், ராமர், பலராமர், ஸ்ரீகிருஷ்ணர், கபிலர், நரநாராயண மூர்த்தி, தத்தாத்ரேயர், பிருகு மற்றும் நரகாசுரனை வதம் செய்த மகா விஷ்ணுவின் மற்ற எல்ல அவதாரங்களும், சுதர்ஸ்ன சக்கரம் முதலிய ஆயுதங்களும், அவதாரம் செய்த மூர்த்திகளின் மனைவிகளும், அவர்களின் புத்திரர்களும், விஷ்னுவின் எல்ல அம்சா அவதாரங்களும் எனக்கு தீராத மங்களத்தை அளிக்கட்டும்.

oவிஸ்வாமித்திரர், வசிஷ்டர், அகஸ்தியர், உசத்யர், ஆங்கீரஸ், காச்யபர், வியாசர், கண்வர், மரீசு, கிரது, பிருகு, புலஹர், சௌனகர், அத்ரி, புலஸ்தியர் முதலான மஹரிஷிகளும் மற்றும் பல முனிவர்களும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி முதலிய கிரகங்களும், அஸ்வனி முதல் ரேவதி வரியிலான நட்சத்திரங்களும், நம் பிரஜாபதிகளும் நாகராஜன் முதலிய சர்ப்பக் கூட்டங்களும், மனுக்களும் எனக்கு வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.

oமநு புத்ரிகளான ஆகூதி, தேவஹூதி, ப்ரஸீதி ஆகிய மூவரும், எல்லா முனிவர்களின் பத்தினிகளும், மனுக்களின் பத்தினிகளும், சீதை, குந்திதேவி, பாஞ்சாலி, நளன் மனைவி தமயந்தி, ருக்குமணி, சத்யபாமா, தேவகி மற்றுமுள்ள அரசர்களின் மனைவியர், கோபிகைகள், பதி விரதைகள், நற்குலப்பெண்மணிகள் யாவரும் எனக்கு எல்லாவித மங்களத்தையும் கொடுக்கட்டும்.

oகருடன், அனந்தன், ஹனுமான், மஹாபலி, சனகர் முதலான யோகிகளும், சுகர், நாரதர், பிரகலாதன், பாண்டவர்கள், ந்ருகன், நளன், நஹூஷன், அரிச்சந்திரன், ருக்மாங்கதன் முதலிய விஷ்னு பக்தர்களும் மற்றும் சூரிய, சந்திர குலத்தில் உதித்த உத்தமர்களும், அரசர்களும் எனக்கு வளமான மங்கலத்தை உண்டாக்கட்டும்.

oஅந்தணர்கள், பசுக்கள், வேதங்கள், ஸ்ம்ருதிகள், துளசி, கங்கை, முதலி8ய சர்வ தீர்த்தங்கள், சகல வித்யைகள், பலவிதசாஸ்திரங்கள், இதிஹாசங்கள், சகல புராணங்கள், வர்ணங்கள், ஆச்ரமங்கள், சாங்கியம், யோகங்கள், யம நியமங்கள், எல்லா கர்மங்கள், காலங்கள், சத்யம் முதலான அனைத்து தர்மங்களும் எனக்கு போதிய மங்களத்தை அளிக்கட்டும்.

oசகல உலகங்கள், தீவுகள், கடல்கள், மேரு, கைலாசம் முதலிய உயர்வான மலைகள், காவேரி, நர்மதை முதலிய புண்ணிய தீர்த்தங்களான நதிகள், கற்பகத்தரு முதலான நன்மைதரும் எல்லாமரங்கள், எட்டு திக்கு யானைகள், மேகங்கள், சூரியன் முதலான ஒளிதரும் கணங்கள், சகல மனிதர்கள், பசுக்கள், பறவைகள் மற்ற பிராணிகள், மருந்தாகும் மூலிகைகள், ஜ்யோதிர்லதை, தர்ப்பை, அறுகம் முதலான சக்திமிக்க புனிதமான புற்கள், செடிகள், கொடிகள் எனக்கு நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.

குருஸ்ரீ பகோராயின் சந்தோஷப்பூக்களின் இதழ்களில் சில......

o நதியில் ஓரிடத்தில் நாம் நின்றால் நம்மை கடந்து நீர் சென்று கொண்டேயிருக்கும். நாம் நிற்க ஆரம்பித்தபோது இருந்த நீர் மீண்டும் கண்களுக்கோ, கைக்கோ வரா! பார்த்த நீரை எடுத்தால் அது அப்போதைய நீர், அவ்வளவுதான்.

oஅதை கீழேவிட்டால் மீண்டும் அதே நீர் கிடைக்காது. நதியின் போக்கில்வேறு நீர் கிடைக்கும். சென்ற நிமிடத்தில் எங்கோ ஓர் இலை உதிர்ந்திருக்கும், ஓர் விதை முளைத்திருக்கும், ஓர் பூ பூத்திருக்கும் அதை இந்த நிமிடத்தில் உணர இயலாது. கடந்தது கடந்ததுதான். இதுவே வாழ்வில் உணரவேண்டியது.

oமுதுமையும் வருவதற்குள் ஒர் உடலில் எத்தனை சாவுகள்! குழந்தைப்பருவம், வாலிபப்பருவம், நடுவயது பருவம், என நம் வாழ்க்கைப்பயணத்தில் நாம் இறந்து கொண்டுதான் இருக்கின்றோம்.

oஅழகாக இருக்கின்ற பொருளை நீங்கள் விரும்புகின்றீர்கள் என்பதல்ல, நீங்கள் விருப்புகின்ற பொருள் உங்களுக்கு அழகாய் இருக்கின்றது-

oஉங்கள் வாழ்வு சிறக்க உங்களுக்கு வேண்டியதை இந்த உலகிலிருந்து நீங்கள்தான் உங்கள் தேவைக்கேற்ப எடுத்து கலந்து கலவையாக்கி உபயோகிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் “உங்கள் எண்ணம், செயல்பாடுகள் அடங்கிய வாழ்க்கைப் பாதையின் வெற்றி இரகசியம்.”

oஉண்மை என்னவென்றால் தவறு செய்தவர்களுக்கு பாவ விமோசனம் கிடைக்கும் இடம் இந்த புவிதான்
 “சந்தோஷப்பூக்களை நுகர்ந்து வாழ்வியல் பயன் பெறுங்கள்”

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26880705
All
26880705
Your IP: 44.213.80.174
2024-03-19 16:03

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg