தாராணை
ஒரு குறிப்பிட்ட இடத்தில் மனதை நிறுத்திவைப்பது தாரணை. உடலின் பகுதிகளை ஏனையவற்றிலிருந்து பிரித்து அவற்றை மனம் உணரும்படி செய்வதாகும். கையின் மீது மனதை நிறுத்துங்கள் இப்படிச் சித்தம் ஏதாவது ஓரிடத்தில் நிலை நிறுத்தப்பட்டால் அது தாரணையாம். தாரணை வெளிப் பொருளில் மனதை நிலை நிறுத்துவதாகும். அணு முதல் அண்டம் வரை அல்லது பிரபஞ்சம் வரை ஒவ்வொன்றாக எடுத்து அதை மனதில் நிறுத்துவது. இதை ஒருமுகப்படுத்துவது அல்லது ‘ஏகாக்ரம்’ என்லாம்.
மனதில் காலம் – இடம் – காரணம் – காரியம் ஆகிய தொடர்புகளின் சக்திகள் இயங்கிக் கொண்டே இருக்கும். நம் வாழ்நாளில் சந்தித்த நிகழ்வுகள், செய்திகள் பற்றியன அவைகள். தேவைப்படும்போது அவை ஒன்று சேர்வதும், வேறு பொருளில் மனம் நிலை செய்யப்படும்போது இவைகள் மேலெழுந்து வராமல் இருப்பதுதான் தாரணை.
வெளியில் உள்ள பொருளின்மேல் மனத்தை நிறுத்தும் போது அவை பற்றிய விவரங்கள் காலம், இடம், காரண காரியங்கள் மனத்தில் தோன்ற விடாமல் செய்வதும் தாரணை. இச்செயலில் மனம் கட்டுப்பட்டிருந்தால் இந்திரியங்களின் மேல் மனம் செல்வது தடுக்கப்பட்டிருக்கும். சுற்றி நடப்பது எதுவும் தெரியாது.
சாக்கடையின் வாசனை அருகில் குடியிருப்பவனுக்கும் தெரியாது. அதை சுத்தி கரிப்பவனுக்கும் தெரியாது. மனத்திற்கும் மூக்கிற்கும் உள்ள தொடர்பானது தேவையில்லை என அற்றுப் போய்விடுகிறது. ஒன்றை மறந்த நிலை. இது இந்த யோகத்தினாலும், பக்தியினாலும் சாத்தியமே. சிறிய பொருளிலோ பெரியபொருளிலோ மனத்தை நிறுத்தும் போது 12 விநாடிகள் நிறுத்த வேண்டுவது தாரணை. சிறிய பொருளில் மனத்தை நிறுத்தும் போது மனதில் அது அடங்கும் உணர்வு நிலை தெரியும். பெரிய மலைத்தொடர்களை நிறுத்துவது கடினம். ஆனால் மனம் அதைவிடப் பல மடங்கு பெரியதாக விரியும் தன்மைக் கொண்டது.
உலகில் எல்லாப் பொருள்களுக்கும் 3 பகுதிகள் உண்டு. 1. ஆதிபௌதிகம்- நம் கண்ணால் காணும் பொருள். 2.ஆதியாத்மிகம்- நம் ஆத்மாவும் அந்தப் பொருளின் உள்ளமைப்பும் ஒத்திருக்கும். 3.ஆதிதைவிகம்- அந்தப் பொருளை உருவாக்கி அதைக் கண்காணிக்கும் சக்தி, ஒருபொருளை நினைக்கும்போது இந்த மூன்று பகுதிகளுக்குள்ளும் தொடர்பு ஏற்பட்டு அவன் பலனடைகிறான். யோக நிலையில் இமயத்தைப்பற்றி மனதில், நானே இமயம் என்று உடலை நினைத்தும், தன் அங்க அசைவுயாவும் மலையில் நிகழ்வதாக உணர்வதும் ஆகும். மலைமீது யாத்திரைகள் தன் உடலின்மேல் நடப்பதாக பாவிக்கலாம்.
மனத்தின் கவனத்தை வேறு எதிலும் செல்லவிடாமல் முதுகுத்தண்டு வழியாகச் செலுத்தி, தன் உடல் உள்பட பிரபஞ்சம் யாவையும் சூன்யவெளியாகப் பாவித்து, கண் விழித்தும் ஒன்றும் பார்க்காமலும், காது இருந்தும் ஒன்றும் கேளாமலும் இருக்கும் நிலையே தாரணையாகும். உலகமெங்கும் பிரம்மம் போல் எல்லாமாக தான் இருப்பதாக உணர்ந்தால் எந்த ஒன்றையும் பார்க்கவோ, கேட்கவோ முடியாது- தி-மந்திரம்-581
முதுகுத்தண்டில் உள்ள நீண்ட நாடியாகிய சுழுமுனை நாடிவழியாகக் குண்டலினி- பிராணச் சக்தியுடன் மனமும் சென்றால், தலையின் உள்ளே பொது நடனம் புரியும் ஆனந்தமாயமான ஜோதியைக் கண்டால், அருவிபோல் அமுதம் ஊறிப்பாயும். தி-மந்திரம்-589
தலையில் உள்ள ஆயிரம் இதழ்த் தாமரை-சகஸ்ராரத்தில் கடவுளுடன் சேரும் எண்ணத்துடன் மூலாதாரத்தில் பராசக்தி குண்டலினியாய் இருக்கிறாள். ஓம் மந்திரத்தால் அவளை எழுப்பினால் சிவசக்தி இணைப்பு தலையில் நடக்கும்.- இதனால் யோகி இளைஞனாக என்றும் இருப்பான். ஒளி காண்பது, ஒலி கேட்பது, ஆமுதம் ஊறுவது ஆகிய எல்லாம் சிவசக்தி ஐக்கியத்தின் அடையாளம். தி-மந்திரம்-590
ஆசன வாயை மனத்தால் மூடி கும்பகம் செய்யும் காற்றால் குண்டலினியை எழுப்பி சுழுமுனை வழியாக ஆராதாரக் கதவுகளை திறந்து வைத்து இனிய மனத்துடன், கொக்கு மடை வாயிலில் காத்திருப்பதுபோல் காந்திருந்தால், யோகம் ஊழிக்காலம் வரை உடம்பை அழியாமல் காப்பாற்றும். தி-மந்திரம்-591
உடல் உயிருடன் கலந்து இருக்கும். அதன் ஆயுட்காலத்தை அறிந்தால் அது மூச்சுக்காற்றுடன் தொடர்பு உடையது என தெரியும். காற்றை கும்பகத்தால் அடக்கி பிராணாயாமம் செய்து பழகினால் ஆயுட் காலம் குறையாது. தி-மந்திரம்-592
வாய் திறவாமல் மௌனம் சாதிப்போர் மனத்தில் ஒரு செல்வம் இருக்கும். வாய் திறந்து பேசுவோர் பிராண சக்தியை மூச்சை விடுவது போல் வெளியே விடுவர். மௌனம் காப்போர் சந்திர அமுதினை ஊறுமாறு செய்வதால் ஆயிரம் தாமரை இதழ்கொண்ட சகஸ்ராரம் கோழையில்லா வீரரான இவர்க்கு கண்டிப்பாக வழி விடும். தி-மந்திரம்-593
வெளியில் போகும் காற்றை தனக்குள் அடக்கினால், ஏழு ஜன்னல்களும் இரு பெரிய வாயிலும் கொண்ட உடல் சிவசக்தி கூடும் பள்ளியறையாகும். ஆகவே உடம்பு பலகாலம் அழியாது. தி-மந்திரம்-594
பத்து இந்திரியங்களில் ஞானேந்திரியமாகிய ஐந்தும் வசம் செய்யப்படாமல் போனால் அவை யோக முயற்சிக்குத் துணையாய் இருக்காது. அப்போது வருந்தி என்ன பயன். காற்றை அளவாக இழுத்து கும்பகம் பயின்றால் மனமாகிய குரங்கை உடலின் கோட்டையில் அடைத்து யோக சித்தி பெறலாம். தி-மந்திரம்-595
இப்படி திட்டங்களால் யோகத்தை சாதிக்க முடியாமல் பலர் இறந்தனர். இதை இனியும் மதிக்காதவர் யோக சித்தி அடைவர் என உறுதியாக சொல்ல முடியாது. கோடிக்கணக்கானோர் வீடுபேறைப் பற்றி பேசுகின்றனர். அதையும் சிலர் நம்ப மறுக்கின்றனர். ஆற்று வெள்ளத்தில் இடிந்திருக்கும் கரை மேலும் இடிவதுபோல் மரணத்தால் இவ்வுடல் அழியும். அதற்குள் சாதனை புரியவேண்டும். தி-மந்திரம்-596
இடிந்த கரைப்போல் வாழ்வு முதுமை, அச்சம் என்கிற மரணம் இவற்றால் அரிக்கப்படும். கடவுளிலிருந்து இந்த உடல் வரை எப்படி படைப்புகள் தொடர்ந்தனவோ, அதே முறையில் உரியவற்றில் ஒன்றிவிட்டால் தற்பரமாகிய கடவுளுடன் ஒன்றுவது போலாகும். இதுவே தாரணை. தி-மந்திரம்-597
எண்ணும் பயிற்சி-
1.சுவை, ஒளி, உறு, ஓசை, நாற்றம் எனப்படும் தன்மாத்திரைகள் ஆகிய சூக்ம பூதங்கள் (ரூப, ரச, கந்தம், சப்த, பரிசம்)-5
2.இவற்றிலிருந்து விரிவடைந்த பெருவடிவப் பஞ்ச பூதங்கள் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்)-5
3.தன் மாத்திரைகளில் உண்டாகிய ஞானேந்திரியங்கள்(காது, கண், மூக்கு, வாய், தோல்)-5
4.அதனால் உண்டாகிய கர்மேந்திரியங்கள்(கேட்டல், பார்த்தல், நுகர்தல், சுவைத்தல், உணர்தல்)-5
5. அந்தக்கரணம் மனம், புத்தி, சித்தம், அகங்காரம்-4
மொத்த ஆன்ம தத்துவம்- 24
1. சிவ தத்துவம்-5
2. வித்யாதத்துவம்-7
3. ஆன்ம தத்துவம்-24
மொத்தம் 36
உடம்பை பஞ்ச பெரும் பூதங்களில் அடக்கி அவற்றை சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய தன் மாத்திரைகளில் அடக்கி – மனம் புத்தி சித்த அகங்காரங்களை அவை தோன்றிய மூலப் பிரகிருதியில் அடங்கச் செய்து விட்டால், ஆன்மாவும் பிரம்மமும் சத்சித் ஆனந்தம் எனும் பிரம்மத்தில் கலந்துவிடும். இப்படி நினைத்து அடக்கவும்.- முதலில் நாமே வரிசையாக எண்ண வேண்டும். பிறகு மூலப் பிரகிருதியிலிருந்து மறுபடியும் பிரிந்து பிரபஞ்சமாகவும் உடலாகவும் வருவதாக எண்ண வேண்டும்.
என் உடல் பஞ்ச பூதங்களில் அடங்குகிறது.
என் ஞானேந்திரியங்கள் ஐந்தும், கர்மேந்திரியங்கள் ஐந்தும் தன் மாத்திரைகளில் அடங்குகிறது.
பஞ்ச பூதங்களூம் அணு வடிவமாகிய தன் மாத்திரைகளில் அடங்குகிறது.
பிரபஞ்சம் பஞ்ச பூதங்களின் மூலம் தன் மாத்திரைகளில் அடங்குகிறது.
என் மனம் சித்தத்திலும், சித்தம் புத்தியிலும், புத்தி அகங்காரத்திலும், அகங்காரம் மூலப்பிரகிருதியிலும் அடங்குகிறது
ஆன்மாவைத்தவிர எல்லாம் மூலப்பிரகிருதியில் அடங்குகிறது.
மூலப்பிரகிருதியும் மாயையில் அடங்குகிறது.
மாயையில் வித்யா தத்துவங்கள் ஏழும் அடங்குகிறது.
சிவ தத்துவங்கள் ஐந்தும் சுத்த மாயையில் அடங்குகின்றது.
இரு மாயைகளும் ஒன்றாகின்றது.
சத் – சித் ஆனந்தத்தில் ஆன்மா கரைந்து மற்றவை எல்லாம் அடங்கிய பிரமத்திடம் தானும் நெருங்கி நிற்கிறது.
இப்படி எண்ணியதை மீண்டும் சென்ற வழியிலே திரும்பி வருவதாக எண்ணவும்.
பிராணாயாமத்தின் பிறகும் பிரத்தியாகாரம், தாரணை ஆகிய பயிற்சிகளால் மனம் மகிழ்ச்சியில் இருப்பதை உணரலாம். ‘ஏகாக்ரம்’ செய்யும்போது பிராணன் யோகியின் தலையில் மிதந்து நிற்கும். தலையில் ஏற்படும் கனம், பரபரப்பு, அலைவு ஆகிய நிகழ்வுகளால் இதை உணராலாம்.
கண்ணால் பார்த்த பொருளை அடுத்து கண்களை மூடி மனத்தில் அதே பொருள்களை நினைத்து பழக வேண்டும். கண்ணால் பார்த்தபோது அறியாமை நீங்கும். மனத்தால் பார்க்கும்போது பொருளின் சக்தியும் செயலும் புரியும். பொருள்களிலிருந்து மனத்தையும் பிரித்தும் பழகலாம். மனத்தால் பார்க்கும்போது ‘ஓம்’ – ‘ஓம் நமசிவாயா’ – ‘ஓம் நமசிவாயா’ – ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திர உச்சரிப்புக்கள் மிகுந்த பலனைத் தரும்.
மௌனம் தாரணைக்கு எப்போதும் துணை செய்யும். எனவே மௌனமாக இருக்கப் பழக வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு மணி நேரமாவது மௌனமாக இருந்தால் பலன் உண்டு. அப்போது மனம் எதை, எதை நினைக்கின்றது, எங்கெங்கே போகின்றது என்பதைப் பார்த்து அதை தடுக்கவும். இருக்குமிடம் அமைதியை தராவிட்டால் யாருமில்லா இடத்தை தேர்ந்தெடுத்து கொள்ளவும்.
தீவிரப் பழக்கத்திற்குப்பின் புருவ மத்தியில் அசையும் உணர்வு ஏற்படும். அங்கே ஒளி தென்படக்கூடும். அந்நிலையில் நீங்கள் நினைத்தது உடனடியாகத் தெரியும்.
“இராஜயோகம்” தன்னகத்தே கீழ்க்கானும் எட்டு படிகளைக் கொண்டுள்ளது.
1. இமயம்
2. நியமம்
3. ஆசனம்(அ)இருக்கை
4. பிரணாயாமம்(அ)பிராணணைக்கட்டுப்படுத்தல்
5. பிரத்தியாஹாரம்(அ)புலன் ஒடுக்கம்
6. தாரணை
7. தியானம்(அ)ஆழ்ந்து சிந்தித்தல்
8. சமாதி(அ)மெய்மறந்த உயர் நினைவு நிலை
******