ஓம் சிவயநமக!
விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து!
0=0=0=0=0=0
சித்தர்கள்
சித்தர்கள் யோகக் கலையின் பிதாமகன்கள். தங்கள் யோக பலத்தால் செய்த சாகசங்கள் நம்மால் நம்பமுடியாத அளவிற்கு இருந்தாலும் அவைகள் உண்மைகள். காலங்களை வென்று பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தும், இரும்பை பொன்னாக்கியும், கூடு விட்டு கூடு பாய்ந்ததும், மூச்சடக்கி வான் வெளியில் பறந்ததும், நவகிரகங்களை வசப்படுத்தியதையும் படிக்கும்போதும் கேள்விப் படும்போதும் நம் உணர்வுகள் அந்த சாதனைகளை அற்புதங்களை ஏற்று உள்ளத்தில் அவர்களைப் பற்றிய ஆச்சரியத்துடன் ஓர் உயர்ந்த எண்ணத்தை நம்முள் தோற்றுவிக்கின்றது.
சித்தர்கள் சித்தத்தில் சிவனை சிந்தனை செய்து சிவத்தைக் கண்டவர்கள். தாங்கள் பெற்ற சித்திகளை அனுபவத்தின் மூலமாக மனித வாழ்வு மேநிலையடைய உதவி செய்பவர்கள். பிறக்கும்போதே ஞானியாக, சித்தராக பிறந்தவர்கள்- கருவிலே திருவுடையவர்கள் பிரகலாதன், ஞானசம்பந்தர், பிறந்தபின் ஆண்டவன் அடியவராகி அருளில் ஒன்றியவர்கள்- நாயன்மார்கள், ஆழ்வார்கள். கல்பமருந்துகள், மூலிகைகள், பாஷாணங்கள் மூலம் உடலை இறுக்கி முக்தி அடைந்த காயசித்தர்கள்- போகர், கோரக்கர். உடலைத் தவம், யோகம் ஆகியவற்றாலும் ஒளஷதங்களாலும் சுத்தி செய்து முக்தியடைந்தவர்கள். சிவனிடம் உபதேசம் பெற்ற மகேஸ்வரசித்தர்கள். திருமூலரை குருவாகக் கொண்ட மூலவர்க்க சித்தர்கள், பாலமுருகனை குருவாகக் கொண்ட பாலவர்க்க சித்தர்கள், அஷ்டமா சித்திகள் பெற்ற சித்தர்கள் என பலவகைச் சித்தர்கள் இருந்தாலும் சித்தர்கள் என்றால் முதலில் பதினெண் சித்தர்கள்தான் நினைவில் தோன்றும்
வெறும் சித்து விளையாட்டுகளுடன் நிற்காமல் அவர்கள் கற்ற தெரிந்த யோக, ஞான, வைத்திய நெறிமுறைகளை எதிர்கால மக்களின் நன்மைக்காக அருளிச் செய்துள்ளனர். ஒரு மனிதனின் பிறப்பின் நோக்கத்தை அறிவித்து அவனை நல்வழிப்படுத்தி இறைவனுடன் இனிதாக இணைத்து வைத்து அவன் முக்தியடைய வழிகளை சொல்லியிருக்கின்றார்கள். அதைப் புரிந்து தெரிந்து அதன் வழி நடந்தால் மனித குலம் மேன்மையடையும்.
சித்தர் வழிபாடு
நந்தி, அகத்தியர், மூலம், புண்ணாக்கீசர், நற்றவத்துப்புலத்தியரும்,
பூனைக்கண்ணர், கந்திடைக்காடரும், போகர், புலிக்கையீசர், கருவூரார்,
கொங்கணவர், மாகாலங்கி, சிந்தியழகண்ணரகப்பையர், பாம்பாட்டித்
தேரையரும், குதம்பைச்சட்டசித்தர், செந்தமிழ்ச்சீர்சித்தர் பதினெண்மர்
பாதம்சிந்தித்தே அணியாகச் சேர்த்துவாழ்வோம்
சித்தர்கள் பதினெட்டுபேர் என வரையறுக்கப்பட்டவர்கள்
அகத்தியர் / அகப்பேய்சித்தர் / இடைக்காட்டுச்சித்தர் / உரோமரிஷி / கோரக்கர் / கருவூரார் / காகபுசண்டர் / குதம்பைச்சித்தர் /கொங்கணர்/சட்டைமுனி /சிவவாக்கியர் / சுந்தரானந்தர் / திருமூலர் / தேரையர் / பதஞ்சலிமுனிவர் / பாம்பாட்டிசித்தர் / புலிப்பாணி / போகர்