gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
திங்கட்கிழமை, 01 June 2020 10:34

ஞான சரம்!

Written by
Rate this item
(1 Vote)

ஓம்நமசிவய!

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!

#####

ஞான சரம்!

சந்திரன், சூரியன் கோள், நாள், பக்ஷம், கரணம், யோகம், வாரம் இவைகளைப் பற்றிச் சொல்லப்பட்ட சோதிட இலக்கணத்தை அறியாதவர்கள் தம் தம் மன நினைவினால் அறிந்து கொள்ளும் மார்க்கம் என்ன என்/று உமை சிவபெருமானிடம் கேட்க அவர் அருளிச் செய்த அரும் பெரும் நூல் ஞான சரம் என்ற சாஸ்திரம் இதுவாகும். இதை உயிர்கள அனைவரும் படித்து பயன் பெற வேண்டும் என்ற அவாவில் குருஸ்ரீ பகோரா.

பரம்பரியமாக தொடர்ந்து விருத்தியாகி வரும் நான்கு வருணாச்சிரமம் எனப்படும் பிரம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர மானிட தேகத்தில் இந்தச் சரம் நாசிகையின் வழி நின்று எருதின் ஒரு மூக்கணாங்கயிறால் ஆட்டுவிப்பதுபோல் நன்மை தீமை என்ற நஞ்சினை ஊட்டுவிக்க அப்படி ஊட்டுவிக்கப்பட்ட கொடிய காலனென்ற பாம்பு உண்ணவும் உமிழவும் உட்பட்டு இருவினைக்கிசைந்தவராய் பிறந்து இறந்து போவர். எனினும் இந்நூலை இகழாமல் குரு வழி அறிந்து அனுபவித்து அறநெறியில் நிற்பவர் யாராக இருந்தாலும் தேவர் ஆவார்கள். அவ்வாறு அறியமாட்டாதவர்கள் ஊமைக்கு சமமாவார்கள்.

சரம் என்பன காற்று, மனம், சீவன், சுவாசம், மூச்சு, பிராணன், ஆவி, உயிர், உயிர்ப்பு இவைகள் முதலாகச் சொல்லப்பட்டவை.

சரம் பார்க்க விரும்பும் சீவர்கள் நல்லவர்களாய் உத்தமராய் குருவிடம் ஆசியும் தீட்சையும் பெற்றவர்களாய் இருந்தால்தான் பலிதலாகும். அஃதன்றி படித்து தாமே கற்று பலன் சொல்ல முறப்ட்டால் சமூகத்தில் அவப்பெயர் ஏற்பட்டு துன்பத்திற்கு உள்ளாவர்கள். தன் சுய வல்லமையால் தெரிந்து கொள்ள வல்லமையற்றவர்களாய் பின் சங்கரன் அருளினால் தெரிந்து கொள்ளத்தக்க சிறப்புடைய இந்நூலை குருவருளினாற் தெரிந்து கொள்வீராக.
சரம் பார்க்கிறவனை ஒருவன் வந்தழைத்தால் அவன் சூரியகலை நடக்கும்போதே போக வேண்டும். போவதானாலும் சூரியன் இயங்கும்போதே பேச வேண்டும். மற்றபடி கூடாது. மிஞ்சி நடந்தால் மத்திம பலன்.

சரம் பார்த்துச் சொல்கிறவனுக்கு தாம்பூலம் முதலானவைகள் கொடுத்து உபசாராதிகள் செய்து பின்பு கேட்கவும்.

திதி வார நட்சத்திர காலசர பலன்!

.சரம் விடிவதற்கு ஐந்து நாழிகை (ஒருநாழிகை=24நிமிடங்கள்) இருக்கும்போது எழுந்து பார்க்க வேண்டும். சரம் பார்க்கும்போது
வளர்பிறை பிரதமை, துவிதை, திரிதியை மூன்றிற்கும் சந்திர கலை உதித்து நடக்க வேண்டும். அடுத்த மும்மூன்று திதிகளுக்கும் சூரியகலை, சந்திரகலை என மாறி மாறி நடக்க வேண்டும்.
வளர்பிறைக் காலத்தில்
பிரதமை தப்பினால் யாதேனும் ஒரு இடர் வரும்
துவிதை தப்பினால் கலகம்
திரிதை தப்பினால் பொருட்சேதம்
சதுர்த்தி சகல வித நஷ்டமுண்டாகும்.
பஞ்சமி பந்துக்களுக்கு வியாதி
சஷ்டி அத்தேசத்தாருக்கும் அரசுக்கும் வருத்தம்
சப்தமி அரசுக்கும் தேசத்தாருக்கும் நலிவு. தனக்கில்லை என்று ஏமறியிருக்கக் கூடாது.. தன்னாலே அவர்களுக்கு வருத்தம் வந்ததென்று அவதூறான பொய் பிரச்சாரத்தால் வருத்தப்பட வேண்டியிருக்கும்.
அஷ்டமி பிழைக்கில் நோவும் சாவும் வரும்.
தேய்பிறைக்கும் இம்முறையே கொள்ளவேண்டும்.

தேய்பிறை பிரதமை, துவிதை, திரிதியை மூன்றிற்கும் சூரிய கலை உதித்து நடக்க வேண்டும். அடுத்த மும்மூன்று திதிகளுக்கும் சந்திரகலை, சூரியகலை என மாறி மாறி நடக்க வேண்டும்.

பொழுது விடிய ஐந்து நாழிகை இருக்க உதித்த சரம் மற்ற ஐந்து நாழிகையும் கலங்காது ஓட வேண்டும்.

காலசரம் சரிப்பட்டு வருமோ வராதோ. ஊழ்வினைப்படியல்லவோ நடக்கும் அதை நம் வசமாக்கல் இலகுவானதா என்று தளர்வுற்றிருக்க வேண்டியதில்லை. சரம் பார்க்கிறவன் பிராதக் காலத்தில் அருணோதயத்திற்கு முன் எழுந்து ஞாயிறு செவ்வாய் கிழமைகளுக்கு தென்புறமாய் மூன்றடி மண் (முன் சொன்னபடி) முன்னிட்டு வைத்து சாரத்தை பூரணமாக்கி அக்காலையே முன்னிட்டு போகலாம். திங்கள் வெள்ளிக்கு நாலடி வடக்கே போகலாம். புதனுக்கு இரண்டடி கிழக்கே போகவும் இப்படி போய்வந்து ஒரு திவ்விய ஆசனத்தில் அமர்ந்து சிவனை நினைத்து துதி செய்து பின்னெழுந்து எங்கே சென்றாலும் அல்லது எங்கேயிருந்தாலும் துன்பங்கள் வராது.

திதிகள் வாரங்களில் ஞாயிறு, செவ்வாய், வியாழன், சனி கிழமைகளுக்கு சூரியகலையும் திங்கள், புதன், வெள்ளி கிழமைகளுக்கு சந்திரகலையும் உதித்தோட வேண்டும்.. இப்படி உதிக்கும் சரம் எந்தப் பூதியத்தில் உதிக்க வேண்டும் என்பதை பூதிய பலன்களில் பார்க்க வேண்டும்.

வாரங்களுக்குரிய காலசரங்களின்படி
ஞாயிறு தப்பினால் வியாதி,
செவ்வாய் தப்பினால் சண்டை, சாவு
வியாழன் தப்பினால் தன் அரசுக்கு கேடாம், தனக்கு பொருள் வராது.
சனி தப்பினால் வறுமையுடன் தன் கையிலிருப்பதும் போகும்.

திங்கள் தப்பினால் சுற்றத்தாருக்கு கேடு
புதன் தப்பினால் அவ்வூர் அதிகாரிக்கு கேடு
வெள்ளி தப்பினால் தான் வசிக்கும் பதியை விட்டுப் போக வேண்டும். அந்த எல்லையை விட்டு மற்றோர் எல்லையை மிதிக்க வேண்டும். தேக கேடு வரும்,, தன் மனைவிக்கு சண்டை பிணக்கு நோய் முதலிய வருத்தமாதல், சதிபதிகளுக்கு பொருத்தம் போதாமை ஆகும்,. புணர்ந்தோர் காதலென்றும் சாமுடி வரைக்கும் வருத்தம் வரும்.

நட்சத்திரங்களுக்கு நடக்கவேண்டிய காலசரத்தின்படி பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், உரோகிணி, சதயம், உத்திரட்டாதி, ஆகிய பன்னிரண்டிலும் சூரியன் நடக்க வேண்டும்.
மற்ற பதினைந்திலும் சந்திரன் நடக்க வேண்டும்..

சரம் பார்க்க ஆசனங்களின் விதி.-

நன்மை தரும் ஆசனங்களின் மீதிருந்து சரம் பார்க்க வெண்டும்.

மூங்கில் தடுக்கின் மேல் அமர்ந்து பார்க்கின்- வறுமை
கல்லின் மேல் அமர்ந்து பார்க்கின்- வியாதி
மணலின் மீது அமர்ந்து பார்க்கின்- துக்கம்
உடைந்த/அறுபட்ட பலகைமீது- நன்மையில்லை.
கோரை/புறபாய்கள் மீது கீர்த்தி நாசம்.
பச்சிலைத் தலைகள் மணநடுக்கம்
மான் தோல் ஞானம்
புலித் தோல் செல்வம்
தர்ப்பாஷனம் மோக்ஷம்
வெள்ளை வஸ்திரம் தீமையில்லை
சித்திராசனம்/இரத்தின கமபளம் நன்மை

பதுமாசனத்தில் இருந்து பார்க்கும்போது மனதிற்கு மிகவும் நினைவுகளினால் அல்லல் வரும். அப்படி வரும் அல்லல்களை நீக்கி வேறு நினைவில்லாமல் ஒரே மனமாகி ஒட்டியாண பந்தமெனச் சொல்லும் பிரணாயாமம் செய்து அதன் மேற்பார்க்கில் எல்லையில்லாத திருவருளுக்கு இடமாகிய உந்தியில் கீழிருக்கும் எழுத்தில் தொடங்கி எழுபத்தீராயிரம் நாடிகள் இந்தத் தேகத்திலுள் உள்ளவை தெரியும். அதனுள் பத்து நாடிகள் நல்லனவாகும். அப்பத்து நாடிகளுள் மூன்று நாடிகள் மிக நல்லன. அம்மூன்றின் வழியாய் சரம் எளிதிற் காண ஓடும். எனவே இதை அறிய பெரிதாகிய நன்மையினை அளிக்கும் அவ்வெழுத்தை பார்க்கவும்.

இதய கமலத்தின் வழி ஊடுருவிக் கொண்டு யாதொரு தீங்குமின்றி அசுவை உயிரெனப்பட்ட சரம் நாசிகை வழி நான்கு அங்குலம் போக மற்றவை போகும்போது செம்மையாய் திரும்பி வரும்போது கணகிட்டுப் பார்க்கின் இருபத்தோறாயிரத்து அறநூறு தரம் நடக்கும். இதற்கு 60 நாழிகை சேர்ந்த ஒரு நாள் காலம் ஆகும். மூலாதாரம், சுவதிட்டானம், மணிப்பூரகம், அனாதகம், விசுத்தி, ஆஞ்ஞை என்ற பர நிலைகளின் பரிசாக வரும் இதனைக் காணும் வழி இந்நூலை மயக்கமறப் பார்ப்பது. அப்படிப் பார்ப்பவர் பரமாகவும் அபரமாகவும் இருக்கும் ஒரு பொருளினால் உண்டாகும் நன்மைதனை அறிவர்.

இடைகலை என்பது இடப்பக்க நாசியில் வரும் சுவாசம் சந்திரகலை எனப்படும் பிங்கலை என்பதுவே வலப்பக்க நாசியில் வருஞ்சுவாசம் சூரியகலை எனப்படும். யாவருக்கும் ஒக்கக் சொல்லுங்காலத்தில் சுழுமுனை என்பது நடுவாகும் அக்கினி எனப்படும். சந்திரனைச் சொல்லுமிடத்தில் அமுதம் தீர்க்கமாக எப்பொருள்களையும் உண்டாக்குபவன். அச்சுழுமுனை இரண்டு நாசிகளிலும் பரவியோடும் அதற்கு பூரணம் என்பது பெயர்.

சூரியனுடைய குணங்குறிகளைச் சொன்னால் அந்தச் சூரியன் உலகம் முழுவதும் சஞ்சரிப்பவன். பரிசுத்தமான வெண்மை நிறத்தையுடையவன். ராசியில் சர ராசி. சுழுமுனை என்ற அக்கினி சகல கருமங்களையும் அழிக்கும் பொல்லாதது. அக்கினி சிவப்பு நிறம். ராசி என்று கேட்டால் இரண்டு ராசிகளையும் உடையது. அதாவது இடைகலை என்று சொல்லப்பட்ட சந்திரன் பெண்பால். பிங்களை என்று சொல்லப்பட்ட சூரியன் ஆண்பால். சுழுமுனை எனப்பட்டது அஃறினைப் பால் அதாவது அலியாகும்,

சந்திர இலக்கணம்.

இடைகலையில் சரம் நடக்கும்போது
ஒருவரைத் தூது அனுப்புதல்,
தானே தூது போதல்,
புதிய வஸ்திரம் தரித்தல்,
ஆபரணாக்கள் அணிந்து கொள்தல்,
விவாகம்-தாலிகட்டல்
ஒருவரை அடிமையாகப் பெற்றுக் கொள்ளல்,
குணறு, குளம், ஏரி வெட்டுதல்.
வாழும் வீடு, மனை வாங்குதல்.
ஒரு வீட்டிற்கு குடி போதல்,
இரு வஸ்துவை விற்றல்,
அரசைக் காணல்,
சாந்தி கழித்தல்,
இஷ்ட தெய்வம் பிரதிஷ்டை செய்தல்,
ஒருவனைச் ச்மாதான்ம் செய்தல்,
கல்வி கேட்டு கொள்ளுதல்,
யாராயிருந்தாலும் உண்மைபக்கம் நிற்றல்,
தன்ம் தான்ய ஆஸ்தி சேர்த்து வைத்தல்,
தியாகம் செய்தல்,
பாப விமோசனஞ் செய்தல்

ஆகிய இவைகள் நன்மைகளாக முடியும் மற்றவை தீமையாய் முடிவாகும்.

சூரிய இலக்கணம்.

பிங்கலையில் வல நாசியில் சரம் நடக்கும்போது
குரு உபதேசம் பெறல்
தான் ஒருவருக்கு உபதேசம் பண்ண வித்தை பாராயணஞ் செய்தல்
வித்தை ஒருவருக்குச் சொல்லுதல்
ஒருவணை வணங்குதல்
எதிரியைத் துரத்தல்
பயிர் விளைத்தல்
வியாபரம் செய்தல்
திருடல், சூதாடல்
யாராலும் தீர்ப்பதற்கரிய வழக்கை பேசுதல்
யானை, குதிரை தேர்களில் சவாரி செய்தல்
விளங்கும்படியாக எழுத்தெழுதல்
சங்கீதம் பாடல் பேசத் தொடங்கல்
பகையை உண்டாக்குதல்
ஒருவனை பங்கம் பண்ணல்
கோள் சொல்லுதல்
பிசாசு ஓட்டுதல்
மந்திர தீட்சை சாதித்தல்
மருந்து சாப்பிடுதல்
உணவு உண்ணுதல்
நித்திரை செய்தல்
ஸ்நானஞ் செய்தல்
கொல்லுவதர்கேதுவாகிய விஷயங்களை நிவர்த்தி செய்தல்
தம்பன யோக சாதனஞ் செய்தல்

ஆகிய இவைகள் நன்மைகளாக முடியும்

சுழுமுனையில் இரண்டு சரமும் ஒத்து ஒடுகையில் சமாதி யோகஞ் செய்யலாம் அதாவது கருவி காரணங்களோடு சும்மாயிருத்தல் நன்மை ஆகும். நினைத்த காரியம் ஏதும் ஆகாது. சுழுமுனை நடக்கும்போது நன்மையே இல்லை.. கெட்ட காரியங்கள் எல்லாம் பலிக்கும். சுழுமுனை நட்க்கும்போது ஒருவன் வந்து இப்பொருள் அகப்படுமா என்றால் அகப்படாது.

சரம் எந்தப் புழையில் ஓடுகின்றதோ அந்தப்பக்கம் பூரணம் என்றும் சரம் ஓடாத பக்கம் சூன்யம் என்றாகும். குறைவிலாத பூரண பக்கம் நின்று வழக்கு பேசுகிறவர்களை தர்க்கம் பண்ணுகிறவர்களை சண்டை பண்ணுகிறவர்களை ஒருவன் சென்று காணும்போது அவ்வாறு கூறப்பட்டவர்களை இதனால் காணலாமென்று சரமோடாத சூன்ய பக்கத்தில் நிறுத்தினால் பூரண பக்கத்தில் இருப்பவன் வெல்வான்.. இப்படிபட்டவர்களை தனக்குச் சரமோடாத சூன்ய பக்கத்தில் நிறுத்தினால் அவன் பேச்சே வெல்லும்.

யாத்திரை பிரயாணம் போகும்போது சரம்!

சந்திர திசை- மேற்றிசையும் தென்றிசையும்
சூரியதிசை- வடக்கும் கிழக்கும் சூரிய திசை

யாத்திரை போக நாடியவன் சந்திரனில் சந்திர திசையில் போகவேண்டும் சூரியனில் சூரிய திசையில் போக வேண்டும். அல்லது இருபத்துநான்கு காத தூரம் போக வேண்டியிருப்பவர்கள் சந்திரனில் தொடங்கி சூரிய திசையில் பிரயணத்தை முடிக்க வேண்டும்.
அல்லாது சரம் இசகு பிசகாய் மாறி ஓடினால் அதற்கு உபாசாந்தம் அதாவது சாந்தி என்னவென்றால் சூரிய கலையில் போகவேண்டிய திக்கில் யாத்திரைக்குச் சந்திர கலையாயிருந்தால் அந்த சந்திர சுவாசத்தை ஏற உள்ளே இழுத்து பூரணமாக்கி இந்தக் காலையே இரண்டு தரம் முன்னிட்டு வைத்துப் பின்பு சுதாவாய் நடந்து வழியில் சிறிது தூரம் நிற்காமல் போக வேண்டும். அப்போது சந்திரன் பலன் கெட்டுப்போகும். தீமையில்லை. போகிற காரியம் ஜெயமாகும்.
சந்திர கலையில் போக வேண்டிய திசையில் யாத்திரைக்குச் சூரிய கலையாயிருந்தால் சூரியன் சுவாசத்தை உள்ளே இழுத்து அக்காலையே மூன்றடி முன்னால் வத்து பின் சுதாவாய் நடந்து வழியில் சிறிது தூரம் நிற்காமல் போக வேண்டும்.. சூரிய பலன் கெட்டுப்போகும். தீமையில்லை. போகிற காரியம் ஜெயமாகும்.
இப்படியன்றி வடக்குத் திசையும் கிழக்குத் திசையும் சந்திரன் நடக்கும்போது யாத்திரை போனால் போகிற இடத்தில் ஒருவருக்கொருவர் விரோதப்பட்டுப் போவார்கள். திரும்பமாட்டார்.
மேற்குத் திசையும் தெற்குத் திசையும் சூரிய கலை பாயும்போது யாத்திரை போனால் சலனத்தினால் அல்லது மழையினால் இறந்து போவார்.
இரு பதினான்கு காத வழிக்கு மேற்பட்ட தூரமான இடத்திற்கு போகும்போது சந்திரகலை ஓடும்போது புறப்பட்டுச் சூரியகலை நடக்கும்போது அந்த இடத்திற்குப் போய்ச் சேரவேண்டும்.


நன்மை தீமை சொல்லும் வழி-

நாம் செய்யுங்காரியம் நன்றோ தீதோ கண்டறிவோம். என வந்தவன் சூர்ய கலை நடக்கும்போது பூரணப் பக்கம் இருந்தால் அவன் சொன்ன காரியங்கள் அவனுக்குச் சித்திக்கும். அப்படியன்றி வலப்பக்கத்தில் நின்றாலும் சரம் பார்க்கிறவன் மேலிருக்க வந்தவன் கீழிருந்து கேட்டாலும் நேர்நேரே பின்னிருந்து கேட்டாலும் அச்சூரிய கலைக்குரிய பலிதமே நடக்கும்.
சந்திர கலை நடக்கும்போது அவன் அப்பூரண பக்கமாயிருந்து கேட்டால் அவன் சொன்ன கரியங்கள் எல்லாம் அவனுக்குப் பலிக்கும். அப்படியில்லாமல் இடப்பக்கத்தில் நின்றாலும் நேர்நேரே முன்னே நின்றாலும், மேலிடத்தில் இருந்தாலும் அச்சந்திரக்கலைக்குரிய ஞானமே பலிதமாக வரும்.
இதைத் தவிர சரம் ஓடாத சூன்ய பக்கத்தில் நின்று கேட்பானானால் அவன் கேட்ட காரியம் பொல்லாதது ஆகும். பலிக்காது. அல்லாது அவன் வாய்திறந்து சொல்லிய முதல் வார்த்தையின் எழுத்துக்களை எண்ணினால் ஒற்றைப் படை வந்தால் சூரியன் குணம். இரட்டைப்படை வந்தால் சந்திரன் குணம்.
`இதில் மேல் கீழ் என்பது மெத்தை வீட்டையும், கிணறு முதலிய பள்ளக் குழிகளையும் குறிக்கும்.
சந்திரனுடைய திசையும் பக்கமும் பூரணமாயிருந்தாலும் பலாபலன் மத்திமமாகத்தான் இருக்கும். அதே சமயம் சூரியனுடைய திசையும் பக்கமும் சூன்யமாயிருந்தாலும் பூரணமாயிருந்தாலும் சொன்னபடி நடக்கும்.
குறி கேட்க வந்தவன் தன் காரியத்தைச் சொல்லிக்கொண்டே முன்னர் பூரணத்தில் வந்தாலும் பின்னர் சூன்யத்தில் வந்துவிடுவானாகில் அக்காரியம் தீதாம். முன்பு சூன்யத்தில் நின்று பின்பு பூரணத்தில் வருவானெனில் மத்திமம். இவ்விரண்டும் மாறுபாடில்லாமல் வந்தவன் கலங்காமல் பூரண பக்கத்திலிருந்து தான் வந்த காரியத்தைச் சொல்லி முடித்துவிடுவானெனில் அக்கருமம் நன்கினிதாகும்.

ஒருவன் வந்து நான் இதனால் கெட்டுப் போனேன் என்றாலும் நான் இதைப் பறிகொடுத்தேன் என்றாலும் பாம்பு கடித்தது என்றாலும் விஷம் குடித்தேன் என்றாலும் படுத்த படுக்கையில் இருக்கின்றான் பிராணன் போய்விடும் போலிருக்கின்றது என்று அபாய குறிகள் எவையாயிருந்தாலும் சரம் ஓடாத சூன்ய பக்கமாய் வந்து நின்றால் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவன் சொல்லுவது குறை நீங்கி நிவர்த்தியாகும்.
அப்படியில்லாமல் சரம் ஓடுகின்ற பூரண பக்கத்தில் நின்று சொல்வானானால் வந்தவன் எப்படி எப்படிச் சொன்னானோ அப்படி அப்படியே நடக்கும். பறிபோன பொருள் வராது. நஞ்சு மீளாது. படுக்கையில் இருக்கும் நோயாளி தேறமாட்டான்.
சூன்யத்தில் எவனாவது வந்து எதையாவது சொன்னானாகில் அது ஒரு காலத்தில் அபத்தமான வார்த்தையானாலும் ஆகும். பூரணத்தில் சொன்ன சொல் எப்போதும் உண்மையாயிருக்கும்.
வந்தவனுடைய திசையையும் அவன் சொல்லிய முதல் வார்த்தையின் எழுத்தை எண்ணிப் பார்க்கில் அவன் திசை சந்திர கூறாகவும் முன் சொன்ன சொல் சூரியன் கூறாகவும் இருந்தால் மேற்சொன்ன காரியங்கள் மத்திமமாக இருப்பினும் மோசமாகாது,
சந்திரன் திசையானாலும் அல்லது சந்திரனேயானாலும் சூரியனேயானாலும் வந்தவன் பூரண பக்கத்தில் நின்றால் அவன் வந்த காரியம் நன்றாம்.


சண்டை வழக்கு குறி!

முன்பு சூன்யத்திலிருந்து கேட்டால் பிறக்கும் குழந்தை மரிக்கும் என்றாலும் போர், சண்டை, வழக்கு குறித்து ஒருவன் வந்து இன்னவன் இன்னவன் எவன் வெல்வான் என்றால் வந்தவன் சூன்ய பக்கத்திலிருந்து சொன்னால் முன் சொல்லப்பட்ட பெயரையுடையவன் தோற்பன். பூரணமாகில் பின் சொல்லப்பட்ட பெயரைய்டையவன் தோற்பன். சரம் பார்க்கிறவனுக்குச் சுழுமுனை நடந்தால் அந்த இருவரும் ஒருமித்து போவர்.
சண்டையின்போது வழக்கு நேர்கிறவனுக்கு சூரியகலையாய் இருந்தால் வெல்வான். சந்திர கலையாய் இருந்தால் தோற்பன். சுழுமுனையாகில் ஒருமித்து போவர். சந்திரகலை நடக்கப் பெற்றவர் சரத்தை உள்ளிழுத்து பூரணமாக்கி அச்சரம் நடக்கிற காலையே முன்வைத்து ஐந்தடிபோய் பின்பு நேர் நடந்தால் வெல்வான்.
சந்திரகலை இயங்கும்போது சென்று சூரியகலை இயங்கும்போது களத்தினேரில் எதிரி எப்படிப்பட்டவானாய் இருந்தாலும் தோற்பன். சந்திரன் இயங்கும்போது புறப்பட்டு சந்தின் இயங்கும்போது போரில் தோற்பன். சூரியன் இயங்கும்போது புறப்பட்டு அச்சூரியன் இயங்கும்போது போரில் வெல்வதனாலும் தன்மேல் ஓரு காயம் படாமல் வென்று வருவான்.

போர் வெல்லும் மார்க்கம்- அ, ஆ- பாலன் கூறு, இ, ஈ-குமரன் கூறு, உ, ஊ அரசன் கூறு எ, ஏ, ஒ, ஓ விருத்தன் கூறு எனக் கொள்க. சண்டைக்காரனுடைய முதலெழுத்து ஆவொலியாக இருந்தால் பாலன்கூறு என்வும். ஈ வொலியாக இருந்தால் குமரன் கூறாகவும், ஊ ஒலியாக இருந்தால் அரசன் கூறாகவும். மற்ற எ, ஏ, ஒ, ஓ ஒலியாக இருந்தால் விருத்தன் கூறாகவும் கொண்டு பாலன் குமரனையும் அரசனையும் வெல்வான் என்க. விருத்தன் மற்றவர்களால் படுவானெச் சொல்க. அதிலும் எ, ஏ, ஒ, ஓ விருத்தன் கூறு இவ்விரண்டு எழுத்துக் கொண்டவன் அவர்களால் படுவான்.

பஞ்ச பூதியங்கள்!

சரத்தின் ஸ்பரிசம்! இடைகலை, பிங்கலை, சுழுமுனை என்ற மூன்று கலைகளையும் அவற்றின் பயன்கள் அனுபவத்தையும் பரிசார்த்த முறையில் பார்த்தால் ஒத்துவரும் அந்த நாடிகளுக்குள் பஞ்ச பூதியங்கள் நடப்பதுண்டு. அவற்றைத் தேர்ந்தறிந்து அனுபவிப்பது சிறப்பாகும்.
`
நாசியிலிருந்து வரும் சரம் வலத்திற்கும் இடத்திற்கும் ஒன்றுதான்,

மூக்குத் தண்டைச் சார்ந்து வந்தால் பிருதிவியின் கூறு
கீழ் நோக்கியோடில் அப்புவின் கூறு
மேலாகச் சென்றால் தேயுவின் கூறு
தண்டிற்கு நேராகி மற்றொரு புறத்தைச் சார்ந்து வீசினால் வாயுவின் கூறு
இப்படி நான்கு பக்கமும் கலைந்து நடந்தால் அது ஆகாயத்தின் கூறு

பஞ்ச பூதிய சரம் நடப்பதை கீழ்கண்ட முறையில் கண்டு தெளியலாம். ஒர் பூதியத்திற்கு நான்கு குறி சொல்லியிருப்பது ஒன்று இல்லாவிட்டாலும் ஒன்றைக் கொண்டு கண்டு பிடிக்கலாம் என்பதற்காகவே.

பிருதிவி சரம் பொன்மை
அப்புச் சரம் வெண்மை
தேயுச் சரம் செம்மை
வாயுச் சரம் கருமை
ஆகாய பூதியம் நிறம் படிகம்

அப்போது கண்டத்தில்

பிருதிவிக்குத் தித்திக்கும் உணர்ச்சி
அப்புக்குத் துவர்க்கும்
தேயுவுக்கு உவர்க்கும்
வாயுவிற்கு புளிக்கும்
ஆகாயத்திற்கு கண்டங்கசக்கும்

பிருதிவி எண்கோண வடிவம்
அப்பு எட்டு நாள் பிறைபோன்று வடிவம்
தேயு முக்கோண வடிவம்
வாயு அறுகோண வடிவம்.
ஆகாயத்திற்கு வட்ட வடிவம்

பிருதிவி 12 அங்குலம்
அப்பு 16 அங்குலம்
தேயு 8 அங்குலம்
வாயு 4 அங்குலம்
ஆகாயம் 1 அங்குலம்

இப்படி பூதியங்களின் குணா குணங்களைச் சொல்லின் பிருதிவிக்கும் அப்புவிற்கும் உத்தமம். தேயு மத்திமம். வாயுவும் ஆகாயமும் தீது.

சுட்டிக் காட்டாமல் சூன்ய பக்கத்திலிராமலும் பூரண பக்கத்திலிருந்து சண்டைக்குப் போகிறவன் ஆயுதங்களினால் காயம்பட்டு வருவான் என்க. மேலும் பூதியப்படி
பிருதிவி நடந்தால் முதுகில் படுகாயம் அடைவான்
அப்புவாகில் காலில் காயம் படுவான்
தேயுவாகில் மார்பில் காயம் படுவான்
வாயுவாகில் கையில் காயம் படுவான்
ஆகாயமாகில் தலையிலும் காயம் படுவான். விஷ்ணு தேவன் வந்து விலக்கினாலும் தப்பித்து வரமாட்டான்.

சமர் செய்கின்ற வாயு மூலை தொடங்கி அக்கினி மூலையளவாக ஒரு கயிறு பிடித்தாற்போல் சரியாகப் பாவனை செய்து அதன் மேற்கையும் தெற்கையும் சந்திரன் கூறாகவும் வடக்கையும் கிழக்கையும் சூரியன் கூறாகவும் கொண்டு போர் செய்தால், போர் செய்கிறவனுக்கு சூரியகலை இயங்கில் தான் அச்சூரியன் திசையிற் நின்று எதிரியை சந்திரன் திசையில் நிறுத்தி சமர் செய்ய வேண்டும். அப்படி செய்கையில் சந்திரனானாலும் சரி சூரியனானாலும் சரி உபயோகிக்கும் ஆயுதங்கள்
பிருத்தியாயிருந்தால் கத்தி
அப்புவாகில் வாள்
தேயுவாகில் வில்
வாயுவாகில் தண்டு
ஆகாயமாகில் கல்
கொண்டு அந்தந்த நிலத்தில் இருந்து சண்டை செய்தால் வெற்றி பெறுவர்.

ஒருபக்கத்தில் ஓடும் சரத்தில் ஐந்துவகைப்பட்ட பூதியங்களுண்டு அப்பூதியம் ஒன்றிற்குள் ஐந்து பிரிந்து நடப்பதுண்டு. அவை
பிருதிவிற் பிருதிவி
பிருதிவியில் அப்பு
பிருதிவியில் தேயு
பிருதிவியில்வாயு
பிருதிவியில் ஆகாயம்

தேயு பூதியம் நடக்கும்போது போர் அரங்கம் புரிகையில் வெல்லும். இப்போரில் வாளெடுத்து புரிவது மத்திமம்.
வாயு பூதியம் நடக்கையில் மற்போர் தொல்வியடையும்
ஆகாய பூதியம் நடந்தால் விற் போர் ஜெயிக்கும்.

சாந்தி பண்ணுதல், போக்கு கழித்தல் செய்ய் வேண்டும் என்று கேட்டால் பிருதிவி, அப்பு பூதியங்களில் ஏதாவது ஒன்று நடக்கும்போது செய்தால் பலிக்கும்.

ஒருவன் வந்து மற்றொருவன் எங்கேயிருக்கின்றான் என்று கேட்கின்
பிருதிவியாயிருந்தால் வீட்டிற்குள்ளிருக்கின்றான்.
அப்புவாகில் முற்றத்திலிருக்கின்றான்
தேயுவாகில் அந்த கிரமத்தில் எல்லைக்குள்ளேயிருக்கின்றான்
வாயிவாகில் எல்லைக்குப் புறப்பட்டான்
ஆகாயமாகில் மலையேறுகிறான் என்க.

இதவிடுத்து அடுத்த தேசம் சென்றவன் பற்றிக் கேட்டால்
முதல்பூதியமாகில் அவ்வூரிலே நிலையாயிருக்கின்றான்.
இரண்டாவது பூதியமாகில் திரும்பி வருகின்றான்.
மூன்றகில் திரும்பியவ நில்லாது வந்து கொண்டிருக்கின்றான்.
நான்காகில் அவனிருக்கும் ஊருக்குள் வந்தான்
ஐந்தாகில் ஒரு நாழிகையில் வீடு வந்து சேர்வான். என்க.

இப்படி பூதியம் இவ்வைந்துக்குள் ஐந்தோடும் இது அன்றியும் நூல்பயன் யாவையும் குரு முகாந்திரமாயிருந்து அறிந்து கொள்ளவேண்டும். அல்லாமல் தேவர்களாய் இருந்தாலும் தனியே எண்ணங்கொண்டு குருவைத் தள்ளி சுயானுபவதால் இந்நூலைக் கொண்டே அறிவது கூடாது.

சந்திரக்கலையில்
பிருதிவி நடந்தால் சிவாலயம், வீடுகட்டல், குடி புகுதல், போக்கு சாந்தி கழித்தல், மரம் வைத்தல் இவை நன்றாம்.
அப்பு நடந்தால் குளம் முதலியவை எடுத்தல், சோலை வைத்தல், நிலத்தை உழுதல், விதைத்தல், விவாகம் செய்தல் நன்றாம்.
தேயுவாகில் பிணி தீர்த்தலாம்
வாயுவாகில் குதிரை தேர், கப்பல் ஓட்டலாம்.
சூரிய கலையில் ஆகாயத்தில் மந்திரஞ் ஜெபிக்க விற்போர் செய்ய நன்று.

கருப்பக்குறி!

ஒருவன் கர்பத்தைக் குறித்துக் கேட்கும்போது வந்தவன் ஒரு சீவன்மேல் ஏறிக்கொண்டிருந்தாலும் உயிருள்ள ஒன்றைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தாலும், ஒரு சீவனைத் தொட்டுக் கொண்டிருந்தாலும் அவன் நின்ற பக்கம் வலமாகவும் புரணமாகவும் இருந்தால் ஆண்பிள்ளை பிறக்கும். அல்லது இடப்பக்கமாகவும் பூரணமாகவும் இருந்தால் பெண் பிள்ளை பிறக்கும் என்க.
பூரண பக்கம் இல்லாமல் சூன்ய பக்கமிருந்து எதனை தொட்டு இருந்தாலும் வலமாகில் ஆண். இடமாகில் பெண். ஆனால் பிறக்கின்ற பிள்ளை இறக்கும்.
சரம் பார்க்கின்றவர்க்கு சுழுமுனையாயிருந்தால் பிள்ளை ஆணுருவிலும் அல்லாமல் பெண்ணுருவிலும் அல்லாமல் அலியாகும்.
வந்தவன் முதலில் வலத்தில் நின்று அவன் வந்த காரியத்தைச் சொல்லிக் கொண்டபின் இடத்தில் வந்து நின்றால் வயிற்றில் உள்ள குழந்தை வருத்தப்பட்டு பின்புதான் பிறக்கும்.

பூதிய சரங்களின்படி பிருதிவியும் அப்புவும் நன்மை தருவன. ஐந்து நாழிகைக்குமேல் நடக்கையில் இவ்விரண்டு பூதியங்கள் அதிகமாக நடந்தால் இலாபமுண்டு. ஒரு பிராணியைக் கைப்பற்றாமலும் அதன் மேல் ஊர்ந்து நில்லாமலும் தனியே வந்து சூனியத்தில் நில்லாமலும் பூரணத்தில் நின்று கர்ப்பக்குறி கேட்டால் அப்போது சரம் பிருதிவி அல்லது அப்பு நடந்தால் ஆண்பிள்ளை பிறக்கும் என்க.

தேயு பூதியம் நடக்கும்போது கர்ப்பம் பற்றிக் கேட்டால் அஃது அழிந்து போகுமாம்.
வாயு பூதியம் நடக்கையில் கர்ப்பம் பற்றிக் கேட்டால் அது பெண்ணாகும்.
ஆகாய பூதியம் நடக்கையில் கர்ப்பம் பற்றிக் கேட்டல் அலியாய் பிறக்கும். பிறந்து இறக்கும் என்க.

உபய சரங்கள் நடக்கும்போது கேட்கப்பெற்ற பிள்ளை இரட்டைப் பேறாகும்.. எப்பக்கமாயிருந்தாலும் பூரணபக்கம் ஆண். சூன்ய பக்கம் பெண்.
வைகறைப் பொழுதில் மனைவிக்குச் சரம் இடப்பக்கத்தில் நடந்து ஆணுக்கு வலத்தில் நடந்தால் உட்கொள்ளும் அப்பியாசம் செய்துகொண்டு வந்தால் மனைவி அவன் வயமாவாள். அப்படி வாங்குவது பன்னிரண்டு தரம் வாங்கியுட்கொள்க. வாரசாராங்கள் எந்தெந்த பூதியங்களில் உதிக்க வேண்டுமெனில் புதன் பிருதிவியில், ஞாயிறு அப்புவில், சனியும் திங்களும் தேயுவில், வியாழனும் செவ்வாயும் வாயுவில், வெள்ளி ஆகாயத்தில் உதிக்க வேண்டும்.

நோய்க்குறி!

புருடன் கொண்ட நோய்க்காக புருடனே வந்து இந்நோய் குணமாகுமா என்றால் அந்நோய் இலகுவாகும். சரம் பார்க்கிறவனுக்கு வலப்பக்கம் நின்று கேட்கிலும் நிவர்த்தியாகும்.
ஸ்திரீ கொண்ட நலிவிற்கு ஸ்திரீயே வந்து வினவினாலும் குணமாகும். வந்தவள் அவனுக்கு இடப்பக்கத்தில் நின்று கேட்கில் சரியாகும்
அப்படியின்று ஆணுக்குப் பெண் வந்தாலும் பெண்ணுக்கு ஆண் வந்தாலும் அவ்வியாதி தீர்வது துர்பலம்.
வலப் பக்கத்திலிருந்து குறி கேட்டுக்கொண்டு இடப் பக்கம் நின்றாலும் இடப் பக்கம் குறிகேட்டுக் கொண்டு வலப் பக்கம் வந்து நின்றாலும் நோய் போக்கு கடினமாகும். ஆனாலும் நாட்பட குணமாகும்

எப்போது தீரும் என கேட்கின் பூதியம்

பிருத்திவியாயிருந்தால் சில நாட்களில்
அப்புவாகில் விரைவில்
அக்கினியாகில் மூன்று நாட்களில் அதிகமானால் கொல்லும்
வாயுவானால் இரண்டு நாளில் அதிகமானால் கொல்லும்
வானமாகில் அன்றைக்கே நோய் பிரிந்து காணும் மிஞ்சிப் போனால் மறுநாள் மரிக்கும்.
நோயைக்குறித்து ஒருவன் கேட்கும்போது சுழுமுனை நடந்தால் அந்நோயாளி ஐந்து தினங்களுக்குள் மரிப்பான். அப்படி மரிக்காமல் தப்பினால் அவனுக்கினி ஒரு விபத்து வருமளவுஞ் சாகான்.

குறி சொல்லும் மார்க்கம்!

சரம் பார்க்கிறவன் ரேசகஞ் செய்கின்ற போது வந்து கேட்கின் கெட்ட காரியஞ் சித்தியாகாது.
பூரகத்திலெனில் நன்மை. அவன் சொல்கிறது உண்மையாயிருக்கும்.
கும்பகஞ் செய்காலத்திலாகில் நற்காரியம் சித்திக்கும்.
மலம், சலம், வாயு கழியும் போதானால் பகைவர் கெட்டுப் போவர்.

சரம் மனத்துடன் லயப்பட்டால்!

இடப்பக்கத்திலும் வலப்பக்கத்திலும் மாறி மாறி நடக்கும் இச்சரம் தேகத்தினூடே லயப்பட்டு போகுமானால் பிராணணுக்கு அழிவில்லை. அப்படி வயப்பட்டு நிற்கில் மனம் முதலிய அந்த காரணங்களுக்கும் வேலையில்லை. அவை அசைவற்றிருப்பனவாகும். அதனால் யாராலும் பயமில்லை. இயமனாலும் பயமில்லை. இடப்பக்கமும் வலப்பக்கமும் மாறியோடும் சரம் ஒவ்வொரு பக்கத்தில் எந்நேரந்தரித்து நடக்குமெனில் ஐந்து நாழிகையாம். அதிலும் பூதியங்களின் கூறுக்கேற்றவாறு பகுப்பது எனில்
மண்ணில் ஒன்றரை நாழிகை
நீரில் ஒன்றேகால்
நெருப்பில் ஒன்றும்
காற்றில் முக்காலும்
வெளியில் அரையும் ஆக நிறைந்தோடும்.

இப்படியாகிய பூதியங்கள் கூறுகொண்ட ஐந்து கடிகைகளும் ஒவ்வொரு பக்கத்திற்கும் சிதையாதோட வேண்டும். இதைவிடக் குறைந்தாலும் வளர்ந்தாலும் தேகநலியாம். சரம் வயப்பட வழிதேட வேண்டும். தேடினால் முன் சொன்ன பயன் உண்டு. நாடியொன்றிற்கு ஐந்து நாழிகை பூதியங்களின் அளவே சிதறாமல் நடப்பிக்க வேண்டும். அவ்வாறில்லையெனில் தேக நலியே வரும்.

மூன்று நாடிகளின் முறைமை!- சூரியன் சந்திரன் சுழுமுனை என்னுமிம் மூன்று நாடிகளுள்ளும் வாழ்வு, கேடு, நிலைமையென்கிற மூன்று கரும நிதானப் பலன்களைச் கேட்குமிடத்தில் சூரியனாகில் நன்மையும் மிகுந்த செல்வத்தையும் அடைவார்கள். சந்திரனாகில் கேடு முதலிய கண்ணியக் குறைவாகும். சுழுமுனையாகில் முன் உள்ளபடி ஏறாமல் குறையாமல் நிறைவாகும்.
அன்றியும் தேவாதி தேவர்களாலே வசீகரிக்கப்பட்டவனாகிலும் ஜெயாபஜெயத்தில் முன்னிலையில் வருவோமென்ற உறுதியாக சொல்லினுஞ் சந்திரனே அதிகமாக இயங்கிடின் வரார். சூரியனே அதிகப்படில் வருவர் எனக் காண்க.
சந்திரன் அதிகமாக நடந்தால் நமக்குக் கேடு வருவதோடல்லாமல் பந்துக்களுக்குமதுவே வரும். சத்துருக்கள் தோன்றி வருவது தப்பாது. சந்திரனில் போக வேண்டிய காரியமல்ல்லாத காரியார்த்தமாய்ப் போகும்போது சந்திரன் நடந்தால் சரத்தை நீள வெளிவிட்டு அப்பக்க காலையே இரண்டு மூன்றடி முந்தி வைத்துகொண்டு போக வேண்டும். சூரியனில் போக வேண்டிய காரியமல்ல்லாத காரியார்த்தமாய்ப் போகும்போது சூரியன் நடந்தால் அச்சரத்தை ஏற உள்ளே வாங்கி அவ்வலக்காலை முன்னிட்டுக் கொண்டு போக வேண்டும். அப்படிப்போனால் போங்காரியம் நன்று.

சர ராசியெனப்பட்ட சூரியனையும், திர ராசியெனப்பட்ட சந்திரனையும், உப ராசியெனப்பட்ட சுழுமுனையும் மற்றவற்றின் பயன் முதலிய கூறுபாட்டையும் பங்கயாசனத்திலிருந்து பிரிவற்றுச் சிவயோகஞ் செய்தாலல்லது நன்குணர்தலரிது. உயிர்பாழ் போகாது. சீவன் முத்தனுக்கு அது மார்க்கம். இல்லையேல் அவம் போகுமென்றறிக.


பிராணனுக்கு அழிவில்லை!

கிழமை ஏழும் தவறாமல் மேற் சொன்ன நாழிகையும் கோணாமல் திக்கு நோக்கிச் செல்வதுடன் பிராணாயாமமும் மாறாமல் நிகழ்ந்து வருமானால் இயமன் வரான். பிராணனுக்கு அழிவில்லை. சீவன் முத்தனாய் வாழ்வான். அஷ்டமாசித்தியும் அவனுக்கு சித்திக்கும்.

சனி வியாழன் பலன்!

வளர்பிறை வியாழனுக்கு சந்திரனும், தேய்பிறை வியாழனுக்கு சூரியனும் தப்பாமல் நடந்து கொண்டே வந்தால் நிறைந்த பேறுண்டாகும். சீவன் முத்தனாவான். தளர்வின்றி வாழ்வான்.
சனிக்கிழமை இரவிலும் பகலிலும் சந்திர சூரிய சரங்கள் மாறுபாடில்லாமல் நடந்தால் இவ்வுலகமெங்கும் மெச்சத்தக்க கீர்த்தி வந்துறும்.

அயன சரம்!

சரம் பார்க்கிறவனுக்கு சென்ற நாட்கள் போக மற்றும் நின்ற நாட்கள் எவ்வளவு என்னும் கருத்துக் கொண்டு பார்ப்பது எவ்வாறெனில் அது அயன சரமாகும்.
தைமாத முதல்தேதியில் உத்தரயணகாலம்
ஆடிமாத முதற்தேதியில் தக்ஷிணாயன காலம்
இவ்வயன காலத்திற்கு முன்னாள் பகலில் ஒரு பொழுதன்னமுண்டு தத்துவங்களைப் பரிசுத்தமாக்கி தேகம் மெலிவதனால் மனதிற்கும் மற்ற வாயுவாதி காரணங்களுக்கும் வரும்மிடையூற்றினை ஒருவி தைமாத முதற்தேதியில் பொழுதுவிடிய ஐந்து நாழிகையிருக்கையில் பார்க்கும்போது சரம் வாரம் திதி நட்சத்திரங்களைத் தள்ளி இடப்பக்கத்திலுதித்த சரம் ஐந்து நாழிகைக்கு சிதறாமல் ஓடுவதைப் பார்க்க வெண்டும்

இதேபோல் ஆடிமாத முதல் தேதியில் பார்க்க வேண்டும் அப்போது சரம் வலப்பக்கத்திலோடும். அப்படியோடிய சரம் முன் சொன்ன வண்ணம் ஐந்து நாழிகைகளுக்குச் சிதறாமலோடினால் சரம் பார்க்கிறவன் தான் செய்யும் பிராணாயாம உதவியினால் அன்று தொட்டு நூறுவருஷ காலம் வாழ்ந்திருப்பான்.

இதுவன்றிக் குறைந்தால் அவ்வைந்து நாழிகையை நூற்றொருமா ஐந்தாக நூறாக்கி குறைந்த நாழிகை ஒருமாவோ இரண்டு மாவோ அல்லது அதன் மேற்றோகைப் பட்டவையோ அதற்கு ஒவ்வொரு வருஷத்தை கூட்டிப் பார்த்து குறைந்த ஒவ்வொரு மா நாழிகையின்மேல் கணக்காக்கிக் கொள்ளவும்.

சரம் முழுவதும் தப்பி இடத்திற்கு வலமானால் வலத்திற்கு இடமானாலும் அவனுக்கு க்ஷீண காலம் என்க.

போசன விதி!

சரம் பார்க்கிறவன் சூரியகலையியங்கி வருகிற மட்டும் போஜனம் இல்லாமல் எதற்காகவும் காக்க வேண்டியதில்லை. சந்திரன் நடக்கும்போதும் சாப்பிடலாம். உப்பு, கசப்பு, காரமாகிய பண்டங்களை வைத்துக் கொண்டு தாக பாணத்தை நிறுத்தியுண்ண வேண்டும். சொல்லியபடி சூரியன் நடந்தால் நெய், பால், புளித்தல், தித்தித்தல், துவர்த்தலான பண்டங்களை சாப்பிடலாம். தாகப்பாணம் அப்போதே செய்யலாம். சந்திரனுக்கு அப்போது கூடாதாகிலும் பின்பு சூரியன் நடக்கையில் சாப்பிட வேண்டும்.. இது மாறினாலும், ஆத்திரத்தாலும், ஆசையினாலும் சூரியனுக்காகக் காத்திராமல் அடுத்தடுத்துச் சந்திரன்தானே என தின்று வந்தாலும் நலியாம். இப்படிச் சாப்பிடுகிற உணவு அவ்வயிற்றிற்கு பாதிதானாகும். மிஞ்சலாகாது. மற்றப் பாதிக்குச் சலம் காலாகக் கொண்டு தச நாடிகளையும் பிராணாயம முன்னிலையில் சுத்தி செய்து ஏகாக்கிர சித்தனாய் சரம் பார்க்க வேண்டும்..

சரத்தை வயப்படுத்தும் மார்க்கம்!

சரம் பார்க்கிறவனுக்கு அனுபவம் இந்நூல் சொல்லியபடி வருமா! மற்ற விதிப்படி பிறழாது போஜனமுறை ஒத்துக்கொள்ளுமா! அதிகமானலும் குறைவானும் நோய் வருமா! எளிதாக சரியாய் வருமா! வராதெனில் அவனெப்படி நன்மை அடைவான்! எனக் கேள்வி எழுப்பினால் நன்றெனவும் தீதெனவும் ஊழின்படி தெறிந்தோதுவன் என ஐயமுற வேண்டியதில்லை.
சரம் பார்ப்பான் பரம்பார்ப்பான் என்பதுபோலச் சரத்தை கணக்கின்படி அறிந்து பார்க்கிறவனுக்கு எந்தக் காரியமானாலும் தப்பிப்போகாது. அவனைக் கண்ட பேர்களுக்கு நினைத்த காரியமெல்லாம் முடியும்.
பிருத்துவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதியங்களின் கூறு கூடிய வாயுவினைப் பாழ்போகாமல் மனவறிவுடனேகட்டி ஆறாதாரத்திலுள்ள பரிசினையறிந்து தசநாடிகளுக்கும் முதல் நாடியாகிய பிராண நாடியினின்று மற்றங்கிருந்து உதித்தோடும் சந்திரன் சூரியன் அக்கினி எனும் மூன்றினுடைய குணங்களையும் பார்த்தால் கைக்கனி போல் இலேசில் தெரியவரும்.

சாயா புருஷ தரிசனம்!

பூமியிலே மேடுபள்ளமில்லாத இடத்தில் ஆகாயத்தில் மேகமறைவு இல்லாமல் வெயில் காயும்போது தன்னிழல் ஐந்து முதல் பத்தடிக்குட்பட்ட தருணத்தில் தான் அந்நிழல் முகமாய் நின்று கைகளிரண்டையும் தொங்கவிட்டுக் கண்களிமையாமல் அந்நிழலைக் கழுத்து, கைகள், கால்கள் இவ்வுருப்புகளுள் ஒன்றைப் பார்த்து அப்படியே கண்கள் இமையாமல் ஆகாயத்தைப் பார்த்தால் அங்கே அவனுருவம் தோன்றும்.
அவனுருவம் பொன்னிறமாயிருந்தால் அவனுக்குச் செல்வம் வரும்.
வெண்மையாயிருந்தால் பிராண பயமில்லை.ஆயுள் வளரும்
செம்மையாகில் ஆயுள் தேயும். அதர்கொரு குறைவு வரும்
கருமையாயிருந்தால் நலி.
அவ்வுருவில் கைகளாவது கால்களாவது தோன்றாமலிருந்தால் ஆறு மாதங்களுக்குள் மரணம்.
தலையே தோன்றாது முண்டமாய் இருந்தால் மூன்று மாதத்தில் மரணம்.
இந்த சாயா புருஷ தரிசனத்தை இப்படி பன்னிரண்டு ஆண்டுகள் பார்த்துக் கொண்டு வந்தால் தன் முன்னிற்கும் அந்நிழல் தன்னுடன் பேசும். பேசினால் அதன் முகாந்திரமாய் அஷ்டமா சித்திகளைப் பெறலாம். பின்னும் சில நாட்களில் அந்நிழல் ஓர் ஆளுருவம் ஆகி தன்னுடனே திரியும். படுத்தால் படுக்கும் எழுந்தால் தானும் எழும்.. இவனுக்கு வரும் நன்மை தீமைகளை முன்னதாகவே இவனுக்கு உணர்த்தும்.

மரண இலக்கணம்!

வானிற் கலங்கமில்லாமல் சூரியன் எரிகையில் மரநிழல் வீட்டுத் தாழ்வார நிழல் இப்படிப்பட்டதொரு நிழல் தனக்கு முன்னிருக்க சரம் பார்க்கிறவன் பின்னின்று வாய் நிறைய நீர் கொண்டு அந்த நிழலருகில் துகள்கள் பறந்து அணுபோலப் பறக்க ஒரே சரமாய் உமிழ்ந்து அத்துகள்களைப் பார்த்தால் அதில் இந்திர தனுசு அமைந்து வர்ணங்களுடனே தோன்றினால் பார்க்கிறவனுக்கு அன்று முதல் ஒருவருஷம் வரை சாவில்லை. அதுவரும் வருவதில் அவ்வில் நிறம்மாறி அங்கு ஒரு பொண்ணுரு தோன்றினால் ஆறு மாதங்களில் இறப்பான்.

சந்திர் சூரியன் பார்க்கும் இலக்கணம்!
ஒரு செம்பு அகலில் பசுவின் நெய்யை உருக்குவிட்டு அதில் பூரண சந்திரனை அலலது அமாவாசையின்போது சூரியனைப் பார்த்தால் அதில் தோன்றுகின்ற சந்திரன் அல்லது சூரியன்
வெண்மை செம்மையெணில் வாழ்வுண்டாம்.
பொன்மையாகில் கேடு
பசுமையானால் நோய்
கருமையோ சாவு வரும்
அப்படிச் சாவு வருவது எப்போது என்றால் தென்புற வட்டங்குன்றந்தால் ஆறு மாதம், வடப்புறம் மூன்று மாதம், கீழ்புறம் ஒருமாதம், நடுவே கொள்ளையாயிருந்தால் பத்து நாள்.

நிறைமதியம்,குறைமதியம் சரீர பழுது - மரண இலக்கணம்!
கை கால் நெற்றி கன்னம் இவை அடர்ந்து துடித்தால் மரணகாலம் வந்ததென்று அறிக.
கை துடிக்கில் ஒருவருஷம்
கால் ஆறு மாதம்
நெற்றி மூன்று மாதம்
கன்னம் பத்துநாள்
இதைத்தவிர காது கேளாவிட்டால் ஏழுநாளில் மரணம்
கண் பார்வை மங்கினால் மூன்றுநாள்
வாய் குழறிப் பேச்சழிந்தால் இரண்டுநாள்
இதையறிந்து கடவுளுடைய பாதங்களை நினைந்து போற்றினால் இவ்வினைகள் இராது.
சூரியன் நடக்க வேண்டிய நாளிற் சந்திரன் நடந்து, சந்திரன் நடக்க வேண்டிய நாளில் சூரியன் நடந்து இப்படியே மாறுபட்டு ஒருவாரம் முழுவதும் நடந்தால் அவன் மரித்து போவான்.

உசுவாச நிசுவாச பலன்!

உசுவாசம்- ரேசகம் உடலைவிட்டுப் போகிற வாயுவே சிவம். நிசுவாசம்-பூரகம்- உடபுகுவது சத்தி. சரம் வெளிப்பட்டு போவதெல்லாம் விடமுண்பதற்குச் சரி. சரம் உட்பட்டு போவதெல்லாம் அமுதமுண்பதற்குச் சரி.. சரம் உள்ளே போகும்போது ஒருவன் சொன்னது அல்லது நினைத்த காரியம் ஆகும். வெளிச் செல்லுகையில் ஆகாது. அந்த வாயு கும்பகத்தடங்கினால் உண்டவிடம் கெடுமெனச் சரி. நடு நாடிவழிப் போமாகில் பாவமென்பதில்லை.
ஒருவன் வந்து குறி கேட்கின் அவன் முன் சொல்லிய எழுத்தை எண்ணிப் பார்க்கையில் ஒற்றையாகில் சிவன் கூறென்றும், இரட்டையாகில் சத்தி கூறென்றும் கொள்ளவேண்டும்.
சரம் வெளியே போகும்போது ஒருவன் வந்து இன்னான் போவானோ எனில் போவான். வாரான். உட்புகையில் வருவான். சரம் போகும்போது வருவானோ என்றும் புகும்போது போவானோ என்றும் மாறுபட்டு வினவில் சரிப்படாது. போகும்போது போவானேயல்லது வாரான். புகும்போது வருவனேயல்லாமல் போகான். சரம் போகும்போது நோய் தீருமோ எனில் தீராது. புகும்போது தீரும் என்க,

இதுவுமது!

திசை, ஆண், பெண், சூன்யம், பூரணம், எழுத்து இவை முதலாய்ச் சொல்லப்பட்ட இச்சர நூலில் நுட்பப் பொருள்களைக் கண்டு இஃது இன்னதென்றும் அஃது இன்னதென்றும் நிரூபிக்க வல்லவனே சரம் பார்க்க வல்லவன்.
நல்ல பிரமண குலத்தவராய் பிறந்தாலும் அல்லது இழிந்த குலத்தவாய்ப் பிறந்தாலும் இச்சர நூலை நன்கு உண்ர்ந்து இதன் நடை தப்பாமல் பார்ப்பவரே பிராமணர். சராசரங்களினுடைய நன்மைகளை அறிந்தவராக இப்பூமியின் கண் அவரே தேவரென யாவராலும் பூசிக்கப்பட்டு வாழ்ந்து பரம் பொருளிற் சாயுச்சியடைவர். பார்க்கமாட்டாதவர் இழிந்த குலத்தினராய் புன்பிறப்பு பிறந்து கொண்டிருப்பார்கள்.
இழிந்த குலத்தில் பிறந்தவனானாலும் ஒரு முகாந்திரமாய் இச்சர நூலைச் சொல்லக் கேட்டு இதனை உணர்ந்து இவ்வழி நடப்பவன் யாவனானாலுமவன் யாமேயாவான். வேற்றுமையில்லை. நெருப்பு தன்னை அடைந்தவற்றையுந் தன்னுருவக்கிக் கொள்ளும் இயல்பைப் போல அவன் யாமே. அவமாய் பிறந்திறவான். இன்னும் விசேஷமாய் சொல்லப்போனால் சடாபாரத்தில் நாமணிந்திரானின்ற சந்திரன் போன்று ந்ம்முடி மேல் வீற்றிருப்பான்.

#####

Read 5786 times Last modified on செவ்வாய்க்கிழமை, 02 June 2020 10:51
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26880301
All
26880301
Your IP: 54.166.234.171
2024-03-19 13:59

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg