gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

சமாதிபாதம்

Written by

 

1.சமாதி பாதம்
1-1 அத யோகாநு சாஸனம்

தொடர்ந்து சொல்லிவருவது ஆகையால் யோகத்திற்கு துணையாக இருக்கும்.யோகம் விளக்கப்படும்.

1-2 யோக ஸ்சித்த விருத்தி நிரோத

சித்தத்தின் விருத்திகளை ஒடுக்குவது யோகமாகும். மனமும் புத்தியும் தோன்றுவதற்கு ஓர் அடிப்படை சித்தம். மனம், புத்தி, சித்தம், உள்ளம், அகங்காரம் ஆகியன அந்தக்காரணமாகும். மனம், புத்திகளின் ஆணிவேர் சித்தமாகும். வினைப் பயன்களினால் எண்ணங்களை எண்ண வைப்பது சித்தம். சித்தம் ஒழுங்குபட்டால் மனம், புத்தி அடக்கம் காணும். வாழ்க்கையின் சூழ்நிலைகள் சித்தத்தில் அலைகளை ஏற்படுத்தி அதனால் மனமும் புத்தியும் வளரும். மனம் விருப்பத்தினால் நினைவுகளினால் குழப்பத்தை தந்து சுயநலமாக உணர்ச்சி பூர்வமாக இயங்கும். புத்தி அந்த இயக்கத்திலிருந்து தீர்மானித்து முடிவு செய்வது. ஒரு பொருளைப்பற்றி மனத்தில் எண்ணங்கள் தொடர்ந்து தோன்றிக் கொண்டே இருப்பது விருத்தியாகும். பிரபஞ்சத்துடன் நாம் சார்ந்திருப்பதால் நம் மனம் விருத்திகளை அடையும். நாம் சக்தியடைந்தால் அந்த எண்ணங்கள் குறைந்து மறைந்துவிடும். அதுவே விருத்திகளை ஒடுக்குவது. விரியாமல் செய்வதாகும்.

1-3 ததா த்ரஷ்டு ஸ்வரூபே அவஸ்தானம்

சித்தத்தின் விருத்திகள் ஒடுக்கப்பட்டால் ஆன்மாவின் இயற்கை வடிவம் தெரியும். சித்த விருத்திகள் ஆரம்பத்தில் யாரிடமும் இல்லை. பின்னால் பார்த்த, கேட்ட, படித்த அறிவால் வந்தது. நீரின்மேல் உள்ள பாசத்தை நீக்கினால் அடியில் நீர் தெரிவதுபோல் பாதியில் வந்த விருத்திகளை நீக்கினால் ஸ்ரூப வடிவம் தெரியும். வேறொன்றுடன் கலவாமல் நாமாகவே இருக்கின்றோம்.

1-4 வ்ருத்தி ஸாருப்ய மித ரத்ர

இயற்கையாகவே தன் வடிவமே அதுதான் என்று எண்ண அலைகளில் சிக்கும்போது நினைக்கிறான். ஒருவன் என்னை நிந்திக்கின்றான். அதைக் கேட்டதும் என் உள்ளத்தில் சித்த விருத்தி ஒன்று உண்டாகிறது. அதனுடன் ஒன்றுபட்டு நான் துன்பம் அடைகிறேன்.

1-5 வ்ருத்தய பஞ்ச தய்ய க்லிஷ்டா அக்லிஷ்டா

இன்ப துன்பங்களின் மூலமான சித்த விருத்திகள் 5 வகைப்படும். முப்பிறவியின் பயன்களால் ஏற்படும் விருத்திகள் வாழ்க்கையின் போக்கில் எண்ண அலைகளாய் விரிந்து வளர்ச்சி அடைகின்றன். சில துன்பம் தருபவை. வேறுசில துன்பம் அற்றவை.

1-6 ப்ரமாண விபர்யய விகல்ப நித்ரா ஸ்ம்ருதய

சித்த விருத்திகளுக்கு காரணமானவை தொழில்படும் அறிவான உண்மை அறிவு, தவறான அறிவு-விபரீத அறிவு, கற்பனை அறிவு-சொல்லால் வரும் மயக்கம், தொழில்படா அறிவான உறக்கம்- தூக்கம், பதியவைக்கப்பட்டுள்ள அறிவு நினைவு-ஞாபகம் ஆகியவையாகும்.

1-7 ப்ரத்யக்ஷானு மானாகமா ப்ரமாணானி.

காட்சியறிவு, அனுமான அறிவு, ஆகமம் ஆகிய மூன்றும் அறிவு பெறும் வாயில்கள் உண்மை அறிவு-பிரமாணங்கள் எனப்படும். மெய்- தொடு உணர்வு, வாய்- சுவை அறிவு, கண்- பார்த்தல், மூக்கு- நுகர்தல், காது- கேட்டல் ஆகியவைகள் மூலம் ஒருவன் வெளிப்பொருள்களை அனுபவிப்பது காட்சியறிவு – ஐயறிவு –ப்ரத்தியட்சப் பிரமாணம் எனப்படும்.

ஒரு பொருளைப் பார்த்தவன் அதேபோன்ற பொருளைப்பற்றி கேட்கும்போது அதைப்பற்றி யூகித்தல் அனுமான அறிவு-கருத்துணர்வு.
புலவர்கள் ,ரிஷிகள், முன்னோர்கள், வேதங்கள் ஆகியவற்றால் நாம் அறிந்து கொள்வது ஆகம அறிவு- ஆப்தவாக்கியம் ஆகும்.

1-8 விபர்யயோ மித்யக் ஞானமதத்ரூப ப்ரதிஷ்டம் 

பொய்க் காட்சியாலும் அறியாமையாலும் வரும் தவறான அறிவே விபர்யம் ஆகும். மித்யா-மாயம். அறியாமையை உண்டுபண்ணும் பொய்க்காட்சிகளால் ஏற்படும் ஒன்றை வேறொன்று என்று தவறி எண்ணுவதாகும். நிலத்தில் வளைந்து சுருண்டு கிடக்கும் கயிற்றை வெளிச்சம் குறைவினால் அதைப் பாம்பு என நினைத்து கொள்வது போலாகும். அந்த நினைவினால் உடம்பில் பதற்றம் ஏற்பட்டு உடல், மனத்துன்பம் அடைவது விபர்யம் என்பதாகும். பளபளப்பான முத்துச் சிப்பியை வெள்ளியென்று தவறாக எண்ணுவதுபோல ஒன்றை மற்றொன்றாக பிழைபட எண்ணுவதால் எழும் விருத்திகள்-இது சித்த விருத்தியினால் வருவதாகும்.

1-9 சப்தக் ஜ்ஞானானுபாதீ வஸ்துசூன்யோ விகல்ப

ஒலி முதலிய ஒரு நிரந்தர நிலைப்பாட்டினால் ஒரு பொருளைப் பற்றி கற்பித்துக் கொள்ளும் அறிவானது விகல்பம் எனப்படும். மனத்தில் தோன்றுவது கல்பம். மொழியால் அதைக் கூறுவது ஸங்கல்பம். அதைக் கற்பனையாக மாற்றிக் கூறுதல் விகல்பம், இல்லாத ஒரு பொருளை இருப்பதுபோல் கற்பித்தலாகும். பாம்பு இல்லாமல் பாம்பு என்ற வார்த்தை ஒரு கூட்டத்தை கலைக்கும். சொல்லைக்கேட்டு அது இல்லாத இடத்தில் கற்பித்துக் கொள்வது.பொருள் இல்லாதிருக்கும்போது வெறும் சொல்லைபற்றி நிகழ்வது- சொல் மயக்கமாகும்(விகல்பம்). ஒரு சொல்லைக் கேட்டவுடன் அதன் கருத்தை ஆராயக் காத்திராமல் உடனே ஒரு முடிவுக்கு வருகிறோம். இது சித்தத்தின் வலிமையின்மைக்கு அறிகுறி. மனம் அடக்கம் குறைந்த நிலை. சில செய்திகள் காதில் விழுந்ததும் மனம் ஏன் கோபம் அல்லது வருத்தம் போன்ற நிலைகளை அடைகிறது. சொற்கள் காதில் விழுந்ததும் தொடர்ந்து விருத்திகள் வராது தடுத்து பழகுபவனே தன்னடக்கம் உடையவன்.

1-10 அபாவ ப்ரத்யயாலம்பனா விருத்தி நித்ரா.

உணர்ந்து கொள்வதற்கான ஆதாரம் ஒன்றுமில்லை என்ற விருத்தியானது உறக்கம் ஆகும். அபாவம்- இல்லாதது. பிரத்யயாலம்பனா- உணரும் ஆதாரம். எந்த பொருளையும் உணர வேண்டாத நிலையில் மனத்திற்கு வேலையில்லாததால் அது உறக்கம் கொள்ளும். திடீரென்று தூக்கத்தில் விழித்தெழும் ஒருவர் தான் எங்கே இருக்கிறேன் என்று கேட்பதுண்டு. சில நொடிகளில் உறங்குமுன் நடந்தது நினைவுக்கு வந்ததும், தான் நன்றாக உறங்கியதை உணர்வர். அதற்குமேல் எண்ண இடமில்லை என்ற நிலையில் அறிவு இருப்பதால் தெளிவடைய முடிகிறது. இந்த விருத்தி உறக்கத்திற்கு காரணமாகிறது. தூங்கும்போது ஒருவகை அலைகள் மனதில் உண்டாவதால் நாம் தூங்கினோம் என்றநினைவு ஏற்படுகிறது. குளத்து நீரில் கல் எறிவதால் உண்டாகும் எதிர்செயலை அலை என்கிறோம். ஆழ்ந்த உறக்கத்தில் அலைகள் ஒன்றும் தோன்றாவிடில் அது எதிர்மறையாகவோ உடன்பாடாகவோ உள்ள காட்சியாக இருக்காது. அவற்றை நாம் நினைவு கூரமாட்டோம்.

1-11 அனுபூத விஷயாக அஸம் ப்ரமோஷ ஸ்மிருதி.

விருத்திகள் மூலமாக முன்பு அனுபவித்த விஷயங்கள் நழுவாமல் சித்தத்தில் சம்ஸ்காரங்களாக வைத்திருத்தலும் அதை மீண்டும் உணர்வுக்கு கொண்டுவருதலும் நினைவாகும். நம் அனுபவத்தினால் ஒரு பொருள் பற்றிய விவரங்களைத் தொகுத்து வைத்திருப்பது நினைவாகும். நிகழ்வுகளின் விவரங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்துவிடாமல் தனித்தனியே வைக்குமிடம் ஞாபகப் பகுதி. ஐம் புலன்களில் ஏற்படும் விருத்திகள் எல்லாம் பதியப் படுவதில்லை. நம்மை மிகவும் பாதித்தவைகள், அழுத்தமான உணர்வுகள் பதியப்படும். சிலப்பதிவுகள் உடன் மறையும், சில பல ஆண்டுகளாக இருக்கும். வேண்டும்போது அவை வெளிக் கொணரப்படும். இந்தப் பதிவுகள் கனவுகளுக்கும் காரணமாகின்றன். நமது அனுபவப் பகுதியும் பதிவுப் பகுதியும் கலந்து செயல் புரிந்தால் நினைவிலிருந்து எண்ண அலைகள் தோன்றுகிறது. நாம் கேட்கும் ஒரு சொல் குளத்தில் எறிந்த கல்லைப்போல் அலையையும் அந்த அலை பல அலைகளையும் எழுப்பும் இது நினைவாகும். தூக்கத்திலும் ஒருவகை அலை சித்தத்தில் நினைவு அலயை உண்டாக்கும். இது கனவு. விழிப்பு நிலையிலுள்ள நினைவு எனப்படும் அலையின் மற்றோர் உருவமே கனவு.

1-12 அப்யாஸ வைராக்யாப்யாம் தன்னிரோத.

தொடர்ந்து பயிற்சிகள் செய்து வந்தாலும் எதிலும் பற்றற்ற தன்மை கொண்டிருந்தாலும் விரிந்து பரவும் விருத்திகளை ஒடுக்கலாம். சித்த விருத்திகளை ஒடுக்கவேண்டும் என்ற வைராக்ய எண்ணமே ஒரு சக்தி எண்ணமாகி அது விருத்தியாகி மற்ற விருத்திகளை அடக்க உதவும்.

1-13 தத்ர ஸ்திதௌ யத்னோப்யாஸ.

உறுதியிலிருந்து தளராமல் இடைவிடாது செய்வதுதான் சிறந்த பயிற்சியாகும். தினமும் ஒரு குறிப்பிட்ட காலையில் எழுந்து பழகியதால் உடல் அந்த குறித்த நேரத்தில் அலாரம் வைத்து எழுப்பியதுபோல் தயாராகி விடும். உள்ளத்தில் விழிப்பு ஏற்படும். இந்த விழிப்பே ஒரு விருத்திதான். இது மற்ற விருத்திகளை ஒடுங்கச் செய்யும். ஏதோ ஒரு காரணத்தால் ஒருநாள் விடுபட்டாலும் அந்த நாள் முழுவதும் பயிற்சி முறையின் எண்ண விருத்தியானது மற்ற விருத்திகளுக்கிடையில் மனதில் உணர்த்திக் கொண்டிருக்கும். காலம் தவறாமல் நாம் செய்யும் செயல்களை உடல் உறுப்புகள் ஏற்றுக்கொண்டு இயற்கைக் கடிகாரத்திற்கு கட்டுப்பட்டு சரியாக இயங்க வைக்கும். பயிற்சி என்பது மனத்தை அலை வடிவமாக போகவிடாமல் தடுத்து சித்தவடிவமாக நிலைபெறவைக்கும் முயற்சியே.

1-14 ஸது தீர்க்க கால நைரந்தர்ய ஸத்கார ஸேவிதோ த்ருடபூமி.

முறையாக நன்றாக பயின்று எவ்வளவு காலமானாலும் உறுதியாக வெற்றி பெறுவதே பயின்றதன் அடையாளமாகும். மேச்சல் நிலம் ஒன்றை புதிதாக விளச்சல் நிலமாக்க பல செயல் பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அப்படிப் பண்பட்டநிலம் சிறப்பனதாகும். அதன் பிறகு விளைச்சலுக்குத் தயார் படுத்தும் பணிகள் குறைவானதே. அதுபோன்றே சிறப்பான பயிற்சி ஒரு நிமிடத்தில் செய்வதைக் சுறுக்கி சில நொடிகளில் செய்ய முடியவைக்கிறது. இது ஒரு தவத் தன்மையாகும்.பழக்கத்தை திருத்தி அமைப்பது ஒரே நாளில் செய்கிற காரியமில்லை. நீண்ட தொடர் பயிற்சியால்தான் முடியும்.

1-15 த்ரஷ்டானு ச்ரவிகவிஷய வித்ருஷ்ணஸ்ய வசீகார ஸ்ம்ஞா வைராக்யம்.

வெளிப்புலன்களால் வரும் செய்திகளில் நாட்டம் கொள்ளாமல், அவைகளுக்கு அடிமையாகாமல், அதை விட்டு விருப்பத்துடன் விலகி இருக்கும் செய்கைதனை வைராக்யம் எனலாம். பார்த்த அல்லது கேட்ட விஷயங்களில் உள்ள ஆவலைத் தியாகம் செய்வதன் பயனாக கிடைக்கும் மனநிலையும், அந்த விஷயங்களை அடக்கும் மனநிலையும் பற்றின்மை எனலாம். ஒருவன் தான் வைராக்கியமாக இருப்பதாக தமக்குள் அகங்காரம் கொள்ளக்கூடாது. தான் கொண்டிருக்கும் வைராக்யத்தினால் தன்னை பிறர் புகழவேண்டும் என்றோ, தன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதற்கோ இடம் தருதல் கூடாது. அது தனக்கு ஒரு வசிகரமாக ஆக்கிக் கொள்ளவேண்டும். எனவே சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற புலன்களால் ஏற்படும் செய்திகளில் மூழ்காமல் வைராக்யமாக அவைகளை விட்டு விலகவும். இந்த மனவலிமையே துறவு ஆகும். முக்தி பெறுதலுக்கு இது சாதனம் ஆகும்.

1-16 தத்பரம் புருஷக் யாதேர் குணவைத்ருஷ்ண்யம்.

ஆத்மாவின் இயல்பை அறிந்து முக்குணங்களில் மூழ்காமல் பற்று அற்று இருப்பது வைராக்கியத்தில் சிறந்தது ஆகும். இறைவனுக்கு சரிசமமாகவோ அல்லது இறைவனின் ஒரு பகுதியாகவோ இருந்து தன் அறிவு குறைந்து இறைத்தன்மை குறைந்து மாயையின் வலையில் சிக்கி உடலில் உள்ளே இருப்பதாக உணர்வது மனித ஆத்மாவின் இயல்பை அறிவது ஆகும். 3 குணம் கொண்ட பிரபஞ்ச சக்திகளில் மூழ்காமல் அதன்மேல் பற்று அற்ற தன்மையுடன் இருப்பதே சிறந்தது.

1-17 விதர்க விசாரானந்தா ஸ்மிதானுகமாத் ஸம்ப்ரஞ்ஞாத.

ஸம்ப்ரஞ்ஞாத சமாதி என்பது ஒன்றை விளக்கி பின் அதை ஆராய்ந்து அந்த காரணத்தால் மகிழ்ந்து அதனால் வரும் தூய அகங்காரம் ஆகியன நான்கும் சேர்ந்தவை. ஆராய்ச்சி, விவேகம், இன்பம், நிர்குண அகங்காரம் ஆகிய இந்த நான்கையும் தொகுத்துக் கூறுவது- பிரஞ்ஞாத சமாதி ஆகும். தனித்து பகுத்து கூறுவது ஸ்ம்ப்ரஞ்ஞாத சமாதி. இதனால் இயற்கையை வெல்லும் திறன்கள் வந்து சேரும்.

சமாதி இரண்டு வகைப்படும். 1. ஸ்ம்ப்ரஞ்ஞாத சமாதி- உணர்வுடன் கூடியது. எல்லைகளிட்ட சித்த விருத்திகளோடு செய்யும் சமாதி யாகும். 2. அஸ்ம்ப்ரஞ்ஞாத சமாதி- உணர்வோடு கூடாதது . புலன்களின் அனுபவமில்லாத நிலையில் புரியா அளவில் அவை நிற்க ஏற்படுவதாகும்.

1-18 விராம ப்ரத்யயாப்யாஸ பூர்வ ஸம்ஸ்கார சேஷோஸன்ய.

வைராக்கியத்தாலும் பயிற்சிகளாலும் ஒடுக்கப்பட்ட சித்த விருத்திகள் முழுவதும் வளர்சியடையா நிலையில் ஏற்படுவது அஸம்ப்ரஞ்ஞாத சமாதியாகும். முழு வளர்சியில்லை என்றாலே சித்த விருத்திகளின் செயல்பாடுகளில்லை என்பதால் ஆத்மாவின் இயல்பு வெளிப்படுமாதாலல் அதில் இணைந்து சமாதி அதிகரிப்பதே அஸம்ப்ரஞ்ஞாத சமாதியாகும். முழு வளர்சியடைந்த சித்த விருத்திகள் ஒடுக்கப்படும்போது அதன் வடிவங்கள் மீண்டும் வளர முடியாதவையாகின்றது. அது பூர்வஸம்ஸ்கார எனப்படும்.இடைவிடாத பயிற்சியால் சித்த விருத்திகள் அனைத்தையும் ஒதுக்கிவைக்கும் சமாதியை அடையும்போது சித்தத்தில் தோன்றா நிலையில் உள்ள சம்ஸ்காரங்கள் எஞ்சியிருக்கும்.

1-19 பவப்ரத்யயோ விதேஹ ப்ரக்ருதி லயனாம்.

சமாதி நிலையை அடைந்தவர்கூட விதேஹர்களாகவும் பிரகிருதியை சார்புடையவர்களாகவும் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்க முடியும். சமாதியின் மூலமாக புலன்களுக்கு அடிமையான நிலையிலிருந்து மாறுபவர்களுக்கு உடலால் எவ்விதப் பயனுமில்லை. அவர்களை விதேஹர் எனலாம். இவர்கள் முற்பிறவியின் கருமம் காரணமாக அறியாமையுடன் கூடிய பிறவிக்கு வருவர். மூலப்பிரகிருதியுடன் தொடர்பு கொண்டு இயங்குவதால் எல்லாப் பொருள்களும் 3 குணங்களுடன் சம்பந்தப்பட்டே இயங்கும். முழு வளர்ச்சியடையா சித்த விருத்திகள் அதாவது அஸம்பிரஞ்ஞாத சமாதியடைந்த நிலை யானது மூலப்பிரகிருதியுடனான தொடர்பை விடுவித்துக் கொள்ளாமல் அதனுடன் இணைந்தது ஆகும். பிரகிருதியுடன் இரண்டறக்கலந்தவர் முற்பிறவியின் கருமம் காரணமாக அறியாமையுடன் கூடிய பிறவிக்கு வருவர். பிறவி எடுக்காமலிருக்க இராஜயோகத்தின் எல்லாப் பகுதிகளையும் பயிற்சியினால் அடைந்திடல் வேண்டும்.

1-20 ச்ரத்ததா வீர்ய ஸ்மிருதி ஸமாதி ப்ரக்ஞா பூர்வக இதரேஷாம்.

யோகத்தை முழு ஈடுபாடு, திறமை, எப்போதும் அதையே நினைவு கொள்ளுதல், சமாதி பற்றிய உணர்வு, அடக்கமுடமை ஆகியவற்றாலும் அடையலாம். சிரத்தை மிகுந்த ஈடுபாடு கொண்டு யோகத்தை மதிப்பவர்களும், உடல் சக்தியால் யோகம் செய்யும் வீரியமான ஆற்றல் உள்ளவர்களும், மற்ற நினைவுகளைத் தவிர்த்து இதைப்பற்றியே நினைத்துக் கொண்டிருப்பவர்களும், உள் உணர்வு மிக்கவர்களும், அடக்கம் உள்ளவர்களும் ஆகிய குணங்களைக் கொண்டவர்களுக்கு, கண்களில் தெரியும் தூல உடம்பை விட்டு மறைந்துள்ள உள் உறுப்புகள் கொண்ட நுண் உடம்பை தொடர்பு கொள்ளும் பயிற்சிகள் இயற்கையாய் வரும். உணர்வது அன்றி எக்காலத்தும் காணமுடியாதது பிராணசக்தி, காந்த சக்தி, நாடிகள் மற்றும் ஆதாரத் தாமரைகள். இவைகளை மனதில் நாடி உணர்ந்தவர்கள் சமாதி நிலையை அடையலாம். நம்பிக்கை, ஆற்றல், ஞாபகசக்தி, மனஒடுக்கம், விவேகம் ஆகியன மூலமாகவும் சமாதி அடையலாம். அவர்கள் தேவபதவி, புவனங்கள் ஆலும் பதவி நாடார். முக்தி அடைவர்.

1-21 தீவ்ர ஸம்வேகானாமா ஸன்ன.

உரிய வேகத்துடனும் தீவிரமான உறுதியான உணர்வுடனும் யோகம் செய்பவர் விரைவாக சமாதி நிலையடைவர். வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணத்தில் மிக அதிக வேகமும் குறைந்த வேகமும் இல்லாமலும் அளவான சீரான வேகத்தோடு யோகம் செய்பவர்கள் இயற்கையாகவே சமாதி நிலை அடைவர். தீவிரம் என்றால் சமாதி நிலை தானாக வரட்டும் என்ற அடக்கமும் அதற்கான முயற்சிகளில் குறைவு இல்லாமலும் இருப்பதும் ஆகும். வேகம் அரைகுறையாகவும், குறைந்த வேகம் மிகுந்த தாமதத்தையும் தரும். முதல் முயற்சியிலே சமாதி நிலைக்குப்போன சான்றோர்கள் உளர். சூன்யத் தியானங்களைப் பயில்வோர் விரைவில் சமாதியடைவர்.

1-22 ம்ருதுமத்யாதி மாத்ரத்வாந் ததோபி விசேஷ.

மெதுவாகவும், நடுத்தரமாகவும், தீவிரமாகவும் பயிற்சி செய்பவர்கள் ஒவ்வொருவரும் வேறுபட்ட சமாதியடைவர். எல்லாச் செயலுக்கும் இந்த மூன்று நிலைப்பாடுகளைக் கொண்டு அவைகள் வெற்றி பெருவதும் கணிக்கப்படுகின்றது.
1-23 ஈச்வரப்ரணி தானாத் வா.
இறைவனிடம் முழு அன்புகொண்டு வழிப்பாடு நடத்தினாலும் சமாதி நிலையை அடையலாம். ஒரு செயலின் வெற்றிக்கு குருவின் ஆசியும், இறைவன்மீது பக்தியும் காரணமாகும். குரு சொல்வதில் நம்பிக்கை தெளிவு, சக்தி நிறைந்த பரமத்தின்மேல் பக்தி வேகமான வெற்றியைத் தரும்.
1-24 க்லேச கர்ம விபாகாசயை பரராம்ருஷ்ட புருஷ விசேஷ ஈச்வர.
சஞ்சலங்கள், கர்மபலன்கள் ஆகியவற்றால் தொட முடியாதவனாய் இருப்பதால் உடலுடன் கூடிய புருஷ ஆத்மாவை விட கடவுளே சிறந்தவன். ஆத்மாவின் உடலும் உடலின் கருவிகளும் இன்ப துன்பங்களுக்கும் பிரபஞ்ஞத்திற்கும் கட்டுப்பட்டவை. இவைகளுக்கு அப்பாற்பட்டவன் இறைவன். ஆற்றில் மூழ்கிய ஆத்மா வெளியில் கரையில் உள்ள இறைவனை நாட நினைப்பது சரியானதாகும்.
1-25 தத்ர நிரதிசயம் ஸர்வக் ஞத்வ பீஜம்.
காண்பதை எல்லாம் அதிசயிக்க தேவையில்லா இயல்புக்கும், அவை எல்லா வற்றையும் உணரும் அறிவுக்கும் இறைவனே காரணமாகின்றான். இறைவனின் படைப்பையும் இறைவனையும் கண்டு அதிசயப்படலாம். ஆனால் இறைவன் எதைக்கண்டும் அதிசயிக்கப்பட தேவையில்லாதவன். ஒரு மரத்திலிருந்து விழுந்த விதை அதேபோன்ற மரத்தை தருவதுபோல், நீக்கமற நிறைந்த எல்லா உணர்வுகளும் கொண்ட இறைவன் தன்னை வழிபடுவோருக்கு தன் குணங்களைத் தருபவன்.
1-26 ஸ பூர்வேஷாமபி குரு. காலேனானவச் சேதாத்.
எல்லா குருவுக்கும் குருவாக இருக்கும் கடவுள் காலங்களால் கட்டுப்படுத்த முடியாதவன். பிரபஞ்ஞத்தை தோற்றுவித்து அதற்கு குருவாக இறைவன் இருகின்றான். பின் தோன்றும் அனைத்து குருமார்களுக்கும் அவனே குரு. எனவே வழிகாட்டும் குருவாக அவன் நமக்குள் இருந்து செயல் படுகின்றான். அவனின் ஞானம் நம்முள் இருப்பதால் அவனை கடவுளாகவும் குருவாகவும் நினைத்தல் வேண்டும். காலத்தால் கட்டுப்படாததால் மிகப் பழைய குருவுக்கும் அவரே குரு.
1-27 தஸ்ய வாசக ப்ரணவ.
பிரணவம் இறைவனின் ஒலி வடிவம். எல்லா சலனங்களிலும், ஓசைகளிலும் ஓம் என்ற ஓசை இருக்கின்றது. அது பிரம்மத்தை குறிப்பதாகும். ஆகாசம் ஒலி வடிவமானது. எல்லாப் பொருள்களூம் ஆகாசத்திலிருந்து உருவாகியது. ஒலி என்றால் பிரணவம். யோகத்திற்குரியது.
1-28 தஜ் ஜபஸ்த தர்த்த பாவனம்.
பாவனைகளையும் ஜபமும் பிராணவத்தின் பொருளை உணர்ந்து செயல் வேண்டும். எல்லா மந்திரங்களும் பிரணவத்தில் அடங்கும் என நினைக்க வேண்டும். அதனால் பிரணவத்தில் இனைந்த ஒலிகளை உணர்ந்து அதன் பொருளை உணர்ந்து, அதனை ஜபம் செய்யும்போது உடலில் ஏற்படும் ஒளி, நிறம் ஆகியவற்றைக் கவனித்து ஜபம் செய்யவும். சலனங்கள் எல்லா அணுக்களிலும் உள்ளது. பிரணவ சலனத்தால் கட்டிடங்கள் பாலங்கள் மரங்கள் எல்லாம் ஓர் நிலையில் சரிந்துள்ளது. ஆக்கல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழில்களை செய்யவல்லது பிரணவம்.
1-29 தத ப்ரத்யக் சேதனாதிகமோ அப்யந்தராயா பாவஸ்ச.
பிரணவ ஜபம் செய்வதால் மனம், உடல் ஆகியனவற்றல் ஏற்படும் தடைகள் நீங்கும். அறிவு சிறந்து விளங்கும். ஓம் ஜபம் செய்வதால் உள்மனம் சிறக்கின்றது. இந்த ஜபத்தினால் தூல சூக்கும உடல்களை மனம் தழுவும். இந்த இரண்டின் பரிவர்த்தனை யோகத்திற்கு பயன்படும். சுழுமுனை நாடி ஆரம்பிக்கும் இடத்தில் ஒங்கார ஒலியைச் சொல்லும்போது அவ்வொலி தலை உச்சிக்கு செல்கிறது. இது பிரணவத்திற்கு இயற்கையானதாகும். ஓம் எனும் பிராணவ ஜபத்தினாலும் அதன் கருத்தைச் சிந்தனை செய்வதாலும் முதலில் ஒள்நோக்கு மேலும் மேலும் வலிமையாகி மனதிலும் உடலிலும் ஏற்படும் தடைகள் மறைந்து போம்.

1-30 வ்யாதி ஸ்த்யான ஸம்சய ப்ரமாதாலஸ்யா விரதி ப்ராந்தி தர்சனாலப்த. பூ மிக த்வானவஸ்தி தத்வானி சித்தவிக்ஷேபாஸ்தே குந்தராய.

யோகம் செய்வதற்கு தடைகளாவன- ஆரோக்கியமில்லா நோய்களினால் அதைப் பற்றிய எண்ணக்கவலைகள், களைப்பினால் ஏற்படும் அயர்ச்சி, எதையும் சந்தேகப்படும் ஐயங்கள், உந்துதல் அற்ற உக்கமின்மை, பொருள்களின் மேல் விடமுடியா பற்று வைத்தல், சரியாகச் செயல்படா மயக்கமான அறிவு, ஒரு முனைப்பட மறுத்து அங்கும் இங்கும் அலையும் குவியா மனது, சாதனைகளை தொடர்ந்து செய்ய முடியாமல் பாதில் கைவிடுவது ஆகியவையாகும்.

1-31 துக தௌர்மனஸ்யாங்க மேஜயத்வ ச்வாஸா ப்ரச்வாஸா விக்ஷேப ஸஹபுவ.

முறையற்ற பயிற்சியினால் மனம் சரியாக ஒடுங்காத நிலையில் துக்கம், மனக்கிலேசம், உடலில் நடுக்கம், தடுமாற்றமான மூச்சு ஆகியன ஏற்படும். இந்த தடைகளுடன் யோகம் பயின்றால் அது முறையற்றதாகி விடும். தடைகளினால் உடலில் மின்காந்த சக்தி, பிராண சக்தி ஆகியன பரந்து இருப்பதால் உச்சியை நோக்கிய பயணம் இயலாது. சித்த சக்தி, காந்த சக்தி, மின்சக்தி, ஒங்கார நாத சக்தி ஆகியன சரியாக இருக்கும்போதுதான் யோகம் சித்திக்கும்.ஓங்காரத்தை ஜபித்து, ஆண்டவனிடன் சரன் புகுதல் மனதை வலுப்படுத்தி புதிய சக்தியை தரும்.

1-32 தத் ப்ரதி ஷேதார்த்த மேகாத் வாப்யாஸ.

யோகத்தடைகள் நீங்க ஒரு பொருளில் மனதை நிறுத்திப் பழக வேண்டும். உடல் உள்ளே இருக்கும் உறுப்புக்கள் அல்லது உடல் வெளியில் பிரபஞ்ஞசத்தில் உள்ள ஒரு பொருளில் மனதை பதிய வைத்தால், உடலுக்கு உள்ளும் வெளியும் பரவிய சக்திகள் ஒன்றாகத் திரட்டப்பட்டு ஒருமுகப்பட்டால் தடைகள் நீங்கிவிடும்.

1-33 மைத்ரீ கருணா முதிதோபேக்ஷாணாம் ஸூகது க புண்யாபுண்ய விஷயாணாம் பாவனாதஸ் சித்த ப்ரஸாதனம்.

உணர்வாகிய நட்பு சுகத்தோடும், இரக்கம் துக்கத்தோடும், மகிழ்ச்சி புண்ணியத்தோடும் வெம்பல் பாவத்துடனும் தொடர்புபடுமாறு இருந்தால் மனம் இனிமையடைகின்றது. நம் சூழலில் இருப்பவருக்கும் நம்மைச் சேர்ந்தவருக்கும் நமக்கும் சுகம் வரும்போது நட்பினால் இனையலாம். துன்பம் வந்தவரை நினைத்து வருத்தப்படலாம். புண்ணியங்கள் நிகழ்ந்தால் மகிழ்ச்சியும் பாப நிகழ்வு நடைபெறும்போது பகையுமின்றி நட்புமின்றி நடுநிலை வகிப்பது என்ற நிலைப்பாட்டை கொண்டால் சித்த விருத்திகள் விரிவடையாது.

1-34 ப்ரச் சர்தன விதாரணாப் யாம்வா ப்ராணஸ்ய.

காற்றை உள்ளே இழுத்து வெளிவிடும் பயிற்சியால் பிராணனை மனத்தோடு இணைத்து சித்தத்தில் அமைதி ஏற்படும். பிராணனும் மனதும் நெருங்குவதால் மன அமைதி தரும். குண்டலினியை அசைத்து எழுப்ப பிராணாயமம் பயனாகிறாது. எல்லாப் பொருள்களின் கட்டமைப்பும் ஆகாசத்தால் தான் அமைக்கப்படுகின்றது. அதன் சக்தியாக இருப்பது பிராணன். உயிர்களில் மனம் என்ற சக்தி பிராணசக்தியுடன் சேர்ந்து செயல்படுகின்றது. மனம், ஆகாசம், பிராணன், மூன்றும் பிரபஞ்சம் முழுவதும் உள்ள பொருள்கள். இவை இச்சா, ஞான, கிரியா சக்திகளாகும்.. நாம் உட்கொள்ளும் மருந்தின் அனுக்கள் பிராணசக்தியுடன் ஐக்கியமாகி உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் விரைந்து பாதிக்கப்பட்ட பகுதியை உடன் சரி செய்கிறது. எனவே பிராண சக்தியுடன் நாம் ஐக்கியமானால் நம் மனம் அமைதியடைகிறது. பிராணாயாமத்தால் பிராணான் உண்டாவதை மனம் உணர்வதனால் அமைதியடைகிறது.

1-35 விஷயவதீ வா ப்ரவ்ருத்திருத்பன்னா மனஸ ஸ்திதி நிபந்தினீ.

பொருள்களை இந்திரியங்களின் துணையின்றி மனம் தெளிவாக உணர்கிறது. அதனால் யோகம் செய்ய மிகுந்த ஈடுபாடு கிடைக்கும். புலன்களும் பொறிகளும் அறிந்தால் மனம் பொருளை புரிந்து கொள்ளும். அப்படியின்றி தியானத்தால் அப்பொருள்களை உணர முடியும். இப்படித் தியானத்தின் பயன் தெரியவந்து மனம் அதில் அதிக ஈடுபாடு கொள்ளமுடியும். இதை தாரணை என்பர். கூர்ந்து சிந்தித்தால் மூக்கு மிகவும் நெருக்கமாகச் செயல்பட்டு ஒருவாரகால தியானத்தில் மூக்கின் நுனியை பயிற்சி செய்தால் மூலப் பொருள் இல்லாமலே மலர்களின் நறுமணம் முகரலாம். நாவின் அடியில் தியானம் செய்தால் புதிய ஓசைகளைக் கேட்கலாம். நாவின் நுனி- நல்ல சுவைகளையும், நாவின் நடுப்பகுதி- ஒரு பொருள் மோதுவதையும், மேல் அண்ணம்- காணாதபொருளை காண்பதாகவும் தியானிப்பதால் தெரியும்.

1-36 விசோகாவா ஜ்யோ திஷ்மதீ.

எதுவும் கலக்காத அருளாகிய துக்கமற்ற ஒளியைத் தியானித்தால் மனம் உறுதியாகிறது. மூலாதாரம், அநாகதம், ஆக்ஞை, ஆகிய இடங்களில் உள்ள மூன்று கோணத்திலோ தலை உச்சி துவாரம் உள்ள இடத்திலோ எரியும் சுடரின் ஒளி இருப்பதாக கருதுக. காலை, மாலை இரு வேளைகளிலும் சூரியனின் செங்கதிர்கள் அங்கே ஒளி பரப்புவதாய் நினைத்து தியானம் செய்தால் மனம் உறுதியாகும்.

1-37 வீத ராக விஷயம் வா சித்தம்.

மனம் ஒரு நிலைப்பட ஆசைகள் பாசங்கள் இல்லா மனத்தையும் தியானிக்கவும். நம் மனம் அதிக ஈடுபாடுடைய குருமார், சித்தர்கள், ஞானிகள் ஆகியோரை நினைத்தும் தியானம் செய்து சாந்தியடையலாம். எதில் மனம் ஈடுபாடு காண்கிறதோ அதின் இயற்கையை மனம் பெறும்.

1-38 ஸ்வப்ன நித்ரா க்ஞானாலம்பனம் வா.

எந்த சம்பந்தமிலாமல் கனவில் வரும் ஞானத்தையும், உறக்கத்தில் வரும் சாந்தியையும் தியானம் செய்து மனம் அமைதி பெறலாம். இவ்வுலக மாந்தர் யாருமின்றி கனவில் வருவோரால் மகிழ்வு ஏற்படலாம். அமைதியான நல்ல உறக்கத்தில் ஏற்படும் சாந்தியையும் தியானிக்கலாம்.

1-39 யதாபிமதத் யானாத்வா.

ஒருவருக்கு ஏற்றதும் நன்மைக்குரியதுமான ஒரு பொருளை தியானம் செய்தாலும் மனம் உறுதி காணும். உலகில் சான்றோர்களால் ஒதுக்கப்பட்ட எந்த ஒரு பொருள் மேலும் தியானம் செய்தல் கூடாது. நலம் தரும் பொருள் எதுவானாலும் தியானம் செய்யலாம். புண்ணிய ஸ்தலங்களை வழிபடுவது, புண்ணிய நதிகளில் நீராடுவது, இயற்கை எழில் கொஞ்சும் அழகிய இடங்கள், பொருள்கள் ஆகியவைகளை நினைத்தும் தியானம் செய்யலாம்.

1-40 பரமாணு பரம மஹத் த்வாந்தோ அஸ்ய வசீகார.

ஒரு பொருளை தியானிக்கும்போது அப்பொருளில் உள்ள பரமானு முதல் பிரம்மாண்டம் வரை எல்லம் தியானத்தில் அடங்கும். பொருளின் உள் அணுவிலிருந்து அது தொடர்புள்ள பிரம்மாண்டம் வரை உணரலாம். தியான மையத்திற்கு ஏற்ப தியானம் செய்பவரின் மனம் விரிவடைகிறது. பிரம்மன் படைத்தது எல்லாம் பிரமாண்டம் எனப்படும். கோடிக்கணக்கான அண்டங்களைக் கொண்டது பிரபஞ்ஞம். முதலில் தூலப் பொருள், பிறகு சூக்குமப் பொருள், பிறகு அதி சூக்குமப் பொருள் எனப் படிப் படியாக தியானம் செய்யவும்.

1-41 க்ஷீண வ்ருத்தோரபி ஜாதஸ்யேவ மணேர்க்ரஹீத்ரு க்ரஹண க்ராஹ்யேஷு தத்ஸ்த ததஞ்ஜனதா ஸ்மாபத்தி.

சித்த விருத்திகள் நாசமடைந்து அறிபவன், அறிதல், அறியப்படும் பொருள் ஆகிய 3ம் ஸ்படிகத்தின் முன் இணையும் பொருள்போல் சமாதி நிலையடையும். கிரஹிதா- அனுபவிக்கும் ஆத்மா- தியானிப்பவன், கிரஹணா- அறியும் தொழிலைச் செய்யும் மனமும் ஐம்பொறிகளும்- தியானிக்கும் கருவிகள், கிரஹ்யா- அறியப்படும் பொருள்- தியானிக்கப்படும் வெளிப் பொருள் ஆகியவை ஸ்படிகத்தை ஒட்டியிருப்பதுபோல் ஒன்றாகத் தெரியும். இவைகளைத் தணித்து உணர்வது சதாரண நிலை. ஒன்றாய் உணர்வது சமாதி நிலை. தியானிக்கும் பொருளுடன் தியானிப்பவன் ஒன்றாகி விடுகிறான்.

1-42 தத்ர சப்தார்த்த ஜ்ஞான விகல்பை ஸங்கீர்ணா ஸவிதர்கா ஸமாபத்தி.

சொல்லும், பொருளும், உணரும் ஞானமும் தடையின்றி ஒன்றுபடும் நிலையே ஸவிதர்க்க சமாதி எனப்படும். பலா என்ற சொல் கேட்டதும் கண்ணின் புலன் படம் போலக் காட்ட-பொருள், புத்தி அது பலாப்பழம்- சொல், எனத் தீர்மானித்து, அதிலிருந்து சுவையான சுளை கிடக்கும் என உணர்வது ஞானமாகும். இவைகளை இப்படி அறிவது ஸவிதர்க்க சமாதி ஆகும்.

1-43 ஸ்ம்ருதி பரிசுத்தௌ ஸ்வரூபசூன்யே வார்த்த மாத்ர நிர்பாஸா நிர்விதர்கா.

ஞாபகம் தூய்மையாகும் போதும், தியானிக்கப்படும் வடிவம் சூன்யமாகி, அதன் பொருள் எஞ்சியிருப்பதை நிர்விதர்க்க சமாதி என்பர். ஓசையைக் கேட்காமல் அந்தப் பொருளின் வடிவம் நமக்குள் தெரியாது. ஞாபக சக்தி தூய்மையடைந்தால் பொருளை பெயர் சொல்லாமலே மனம் அறியும். மூன்றில் ஓசையும், வடிவமும் இல்லாமல் பொருள் மட்டும் மனதில் தெரிகின்றது. கேட்பது, தெளிதல் ஆகிய செயல்களின்றி நினைவாற்றலால் உணர்தல் பொருள் உணர்ச்சியை பெற முடிகிறது. இது நிர்விதர்க்க சமாதி ஆகும்.

1-44 ஏதயைவ ஸவிசாரா நிர்விசாரா ச ஸூக்ஷ்ம விஷயா வ்யாக்யாதா.

நுண்ணிய பொருள்களை அனுபவிப்பது ஸவிசார, நிர்விசார சமாதிகள் ஆகும். முழுவதும் நன்கு விசாரிக்கப்படுவது ஸவிசாரம், விசாரனை அற்றது நிர்விசாரம். ஸவிதர்க்க சமாதி, நிர்விதர்க்க சமாதி இரண்டும் தூலப் பொருள்களின்மேல் நிகழும் நிகழ்வு. நுண் பொருள்களில் நிகழ்வது ஸவிசாரம், நிர்விசாரம். தூலப் பொருளைப் பார்க்க முடிவதால் அங்கு தர்க்கம் உண்டு. நுண் பொருள் தர்க்கமில்லாதது. அதனால் இங்கு விசாரம்-விசாரிக்கப்படுவது உண்டு. தனக்குள் உள்ள ஆத்மாவை அறிய எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் ஆத்மவிசாரம் ஆகும்.

1-45 சூக்ஷ்ம விஷயத்வம் சாலிங்க பர்யவ ஸானம்.

சூட்சுமப் பொருளகள் யாவும் வெளிப்படையாக தெரியாதவை. லிங்கம் குறி உள்ளது வெளிப்படுவது. அலிங்கம் வெளிப்படாதது. தன் மாத்திரைகள் மனம், புத்தி, சித்தம் அகங்காரம் ஆகியன தோன்றுமிடமான மூலப்பிரகிருதி யாவும் சூட்சுமப் பொருள்களைத்தரும் அவ்யக்தம் எனப்படும் வெளிப்படாதது ஆகும். அணுக்களை நாம் கருவிகளினால் காணமுடியும். சூக்குமத்தை காணமுடியாது. உணரத்தான் முடியும். ஆத்மாவும் சூக்குமம். ஆனால் தனித்து நிற்கும். ஒரு காலத்தில் எல்லா சூக்குமங்களும் அழியும் ஆனால் ஆத்மா அழியாது. காணமுடியா நிலையிலும் அதை நாம் உணரமுடியும்.

1-46 தா ஏவ ஸ்பீஜ ஸ்மாதி.

சூக்மப் பொருள்கள் மேல் கொண்ட சமாதிகளெல்லாம் முன் பிறவியின் வினைகள் என்ற விதைகளுடன் கூடியது ஆகும். அந்த விதைகள் முளைத்து பலத் தடைகளைத் தரலாம். எனவே இச்சமாதிகள் வீடு பேற்றிற்கு காராணமாகாது.

1-47 நிர்விசார வைசாரத்யைஅ த்யாத்மா ப்ரஸாத.

நிர்விசார சமாதி வலிமை பெறும்போது முக்குணங்களின் அழுத்தமோ, தாக்கமோ இல்லையாதலால் ஆத்மாவிற்கு அமைதி உண்டாகிறது. ஆத்ம அமைதி சித்த விருத்திகளை மேலும் விரிவடையாமல் தடுக்கும்.

1-48 ருதம்பரா த்த்ர ப்ரக்ஞா.

புலன்களின் மயக்கத்தில் இல்லாமல் தெளிவான அந்த காரணங்களாகிய மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவைகளினால் சத்யமானதும் பூரணமானதும் ஆன உண்மை ஞானம் முழுவதும் ஒளிரும்.

1-49 ச்ருதானுமான ப்ரக்ஞா ப்யாமந்ய விஷயா விசேஷார்த் தத்வாத.

சுருதிகளாலும் அனுமானத்தாலும் அறியும் செய்திகளைவிட அதற்கு அப்பால் உள்ள செய்திகளையும் அறிய முடியும். இது ருதம்பரா என்ற ஞானமாகும். பொறி புலன்களால் அறிவது, சுருதிகளாலும் அனுமானத்தினாலும் பெறப்படுபவை. ருதம்பரா பொறி புலன்களுடன் தொடர்பு படாமல் அறியும் அறிவாகும். ருதம்பரா ஞானத்தில் தோன்றியவை விஞ்ஞான கருவிகளாகும்.

1-50 தஜ்ஜ ஸம்ஸ்காரோஅன்ய ஸம்ஸ்காரப் ரதி பந்தீ.

ருதம்பரா என்ற உண்மை ஞான ஸம்ஸ்காரம் மற்ற சித்த விருத்தி ஸம்ஸ்காரங்களைத் தடுக்கும். தியானத்தில் முளைக்கும் தேவையற்ற எண்ணங்களை அடக்க முயலும்போது அவை வலிமை பெறும். அவைகள் ருதம்பரா நிலையில் வலிமை குறைந்து தடுக்கப்படும்.

1-51 தஸ்யாபி நிரோதே ஸ்ர்வநிரோதான் நிர்பீஜ ஸமாதி.

மற்றெல்லா ஸம்ஸ்காரங்களை நீக்கக்கூடிய இந்த ஸம்ஸ்காரத்தையும் அறவே நீக்கும்போது எண்ணங்களைக் கொண்ட முளைகள் இல்லாததால் விருத்திகள் தோன்றாத சமாதி ஆகிய நிர்பீஜ சமாதி தோன்றும்.. எண்ண விருத்தி ஆத்மாவை மறைக்கும்.

சமாதிகளில் எட்டு வகையான சமாதிகள். அவை 1. பிரஞ்ஞாத சமாதி, 2. ஸ்ம்ப்ரஞ்ஞாத சமாதி (பிரஞ்ஞாத சமாதியின் பிரிவுகள்), 3. ஸவிதர்க்க சமாதி 4. நிர்விதர்க்க சமாதி (விதர்க்க சமாதியின் பிரிவுகள்), 5. ஸவிசார சமாதி, 6. நிர்விசார சமாதிகள் (விசார சமாதியின் பிரிவுகள்), 7. ஆனந்த சமாதி, 8. அஸ்மிதா சமாதி அல்லது ஸாஸ்மிதா சமாதி எனப்படும்                          

 

                                                       ****** 

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879823
All
26879823
Your IP: 44.204.164.147
2024-03-19 11:43

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg