பிரத்தியாஹாரம்(அ)புலன் ஒடுக்கம்
ஓர் ஆன்மா தன் விருப்பப்படி மனதை நரம்பு மையங்களுடன் சேர்க்கவோ பிரிக்கவோ செய்வதில் சக்தி பெறுதல் பிரத்தியாஹாரம் எனப்படும். பிரத்தியாஹாரம் மனதின் ஆற்றல்கள் பெறிகள் மூலமாகப் புறத்தில் போய் வீனாகச் செலவழியாமல் அவற்றைத் தடுத்து உள்பக்கம் திருப்பி சித்தத்தின் வலிமையான ஆட்சிக்குள் அதைக் குவித்தல் என்பதாகும். அதாவது ‘பொருளை உள்ளத்தினுள் சேமித்து வைப்பது ஆகும். இதைச் செய்ய முடிந்தவன் நல்லொழுக்கம், நற்குணம் வாய்க்கப் பெற்று முக்தி பெறும் மார்க்கத்தில் சிறந்த முன்னேற்றம் காணமுடியும்.
அதற்கு மனதை அடக்கவேண்டும். ஆசனத்தில் அமர்ந்து மனதை அதன் வழி செல்ல விடுங்கள். என்ன என்ன நினைக்கின்றது எனப்பாருங்கள். நீர்க்குமிழி போல் வெளிக்கிளம்பிக் கொண்டே இருக்கும். குரங்கு மணம் என்று சொல்லுவதால் அங்கும் இங்கும் தாவிக்கொண்டே இருக்கும். அது எங்கே சென்றாலும் பொருமையாக அதைக் கவனியுங்கள். கொடிய எண்ணங்கள் எழும். அந்த மாதிரி எண்ணங்கள் உங்களின் மனதில் இருந்ததை நினைத்து ஆச்சரியப்படுங்கள். மனம் வேறு என்ன நினைக்கின்றது என அதன் போக்கில் விடுங்கள். நாள் செல்லச் செல்ல மனதின் போக்கு மாறி வருவதையும் அது அமைதியாவதையும் உணரலாம்.
அறிவே வலிமை தரும். மனம் என்ன செய்கின்றது என்பதை அறியாமல் எப்படி அதை அடக்குவது. முதலில் பலதரப்பட்ட எண்ணங்கள் மனதில் உதயமாகும். நாட்கள் செல்லச் செல்ல அந்த எண்ணங்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து ஒன்றும் இல்லா நிலையை அடையும் போது மனம் அமைதியடையும். அதற்கு தகுந்த பயிற்சியை தினமும் மேற்கொள்ள வேண்டும்.
நீராவியை உள்ளே விட்டால் எந்திரம் இயங்குகின்றது. கண் முன்னாள் பொருள் இருந்தால் அவைப் புலப்படும். பொருள்கள் புலப்பட்டு நாம் எந்திரம் ஆகிறோம். நாம் அதனால் கட்டுப்படவில்லை என நிரூபிக்க வேண்டும். அப்படி மனதை அடக்கி புலன்களுடன் தொடர்பு கொள்ளாமல் தடுப்பதுதான் பிரத்தியாஹாரம்.
ஒரு பொருளைப் பற்றிய காட்சி மனதில் ஏற்படுவதற்கு முதலில் புறக்காரணங்கள், அடுத்தபடியாக உட்கருவிகள் மூளை மையங்கள் மூலமாக இயங்குகின்றன. அடுத்தபடியாக மனம் உள்ளது. இவையெல்லம் ஒன்றுகூடி ஒரு பொருளோடு சேரும்போது நாம் காட்சி காண்கின்றோம்.
மனதை ஒரு பொறியோடு இனைந்திருக்க செய்வது கடினம். “நல்லவனாக இரு”, “திருடாதே”, “பொய்சொல்லாதே” என்று சொன்னால் மட்டும் போதாது. அதை எப்படி செய்யாமல் இருப்பது என விளங்கச் சொல்லவேண்டும். உண்மையில் மனதை அடக்கியாள கற்றுக் கொடுக்கும்போது தான் அவர்களுக்கு உண்மையான உதவி செய்கிறோம்.
விரும்பியோ, விரும்பாமலோ மனம் பொறிகள்பால் கவரப்பட்டு பொருந்துகின்றது. உள்ளேயும், வெளியேயும் நிகழும் செயல்கள் எல்லாம் மனம், பொறிகள் என்ற மையங்களோடு தன்னைப் பொருத்திக் கொள்வதால் நிகழ்கின்றது. இதனால் தவறான காரியங்களைச் செய்து பின்னால் வருத்தமடைகின்றனர். மனதை அடக்கி ஆண்டால் இது நிகழாது. மனம் பொறிகள்பால் சேராது. எண்ணங்களும் செயல்களும் கட்டுப்பட்டிருக்கும்.
மனோவசியத்தால் மற்றவர் நம் மனதை அடக்க நேர்ந்தால் கேடு நிகழும். நோக்கங்கள் சிதறும். ஆன்மாவின் குறிக்கோள் சுதந்திரமடைவது. மற்றவர் மனோவசியத்தால் ஒருவனது புலனை புறக்கணிக்கும் அளவிற்கு அவன் மனத்தை வலிமையுள்ளதாக்கலாம். அந்த மனம் வலிமை இழந்ததாகும். அவனின் நரம்பு நிலைகள் வசியத்தினால் அவனுக்கு இறுதியில் கேடு விளைவிக்கும். இந்த வசியமானது ஓடும் குதிரையை கடிவாளத்தைப் பிடித்து இழுத்து நிறுத்தாமல் மண்டையில் ஓங்கி அடித்து அதை மயங்கச் செய்தலுக்கு ஒப்பாகும். வசியத்திற்குட்பட்டவன் முழுமன வலிமை பெறுவதற்குப் பதில் வலிமை முற்றிலும் குன்றிய மனதின் காரணமாக பைத்தியக்காரனாகிவிடுவான். எனவே நம் மனதை நாமே அடக்கவேண்டும்.
ஜடப்பொருள், எண்ணங்கள் ஆகியவற்றிலிருந்து விடுதலிப்பெற்று அகம், புறம் ஆகிய இருவகை இயற்கைகளையும் அடக்கியாளக்கூடிய திறன் வேண்டும். உடலையும், மனத்தையும் நீங்களே அடக்கியாளுங்கள். நோய்வாய்பட்டிருந்தால் தவிர எந்த வெளிச்சக்தியும் உங்கள் மனதின்மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது. உணர்ச்சிவசப்படும் எந்த மக்கள் மீதும் ஒருவகை போலியான தற்காலிக கட்டுப்பாட்டை உண்டு பண்ணி மனதை பறிகொடுக்க வைத்து மக்களை இழி நிலைக்கு ஆளாக்கும் தீய சக்திகளிடம் எச்சரிக்கையாய் இருங்கள்.
பயிற்சிகள் தொடர்ந்து செய்து பழகவும். வேறுபட்ட உணர்வுகள் கொண்டவர்களுடன் பழகுவதை குறைக்கவும். அவர்களின் உணர்வுகளின் தாக்கங்கள் பயிற்சிக்கு இடையூராக இருக்கும். கூடுமானவரையில் தனித்து பயிற்சி செய்யுங்கள். உரையாடுதல் மனதைச் சிதறடிக்குமாதலால் அதிகம் போசதீர்கள். ஓர்நாள் உழைத்தபின் அந்த வேலையின் பளு மனத்தை குலைத்துவிடுமாதலால் அதிக வேலைசெய்யக் கூடாது.
யோகத்தினால் தீங்கு எதுவும் இல்லை, நன்மையுண்டு. நாடி நரம்புகளில் பதைபதைப்பை முதலில் தனிக்கும். மனம் அமைதி கிட்டும். ஆராயும் பொருளை தெளிவாக அறியவைக்கும். மனம், உடல், நலம்பெறும். முதலில் உடல் நலம் பெறும். பின் குரலில் கரகரப்பு மறைந்து இனிமை ஏற்படும். பயிற்சியில் வெற்றிபெற உணவுப் பழக்கம் சீராக வேண்டும். அதிகம் உண்ணுதலோ, குறைவாக உண்ணுவதோ கூடாது. கட்டுப்பாடான உணவு உட்கொள்ளவேண்டும். பால், பயிறுவகைகள், பழங்கள் உட்கொள்வது நல்லது.
மனதை ஒருமுகப்படுத்தும்போது ஒரு குண்டூசி விழுதல்கூட பெரிய சத்தமாகத் தெரியும். உறுப்புகள் நுட்பமாய் செயல்படும்போது காட்சிகளும் நுண்ணீயதாகும். குழப்பங்களை விட்டெழித்து புறத்தூண்டுதல்கள் கலக்காமல் மனதை மூடி உள்ளே உள்ள உண்மையை ஒளிரச் செய்யுங்கள். சாதனைகள் வெற்றிபெற தொடர் செயல் வேண்டும். ஒருமுறையைச் செய்து பாதியில் விட்டுவிட்டு பிறகு வேறுமுறையில் செய்தால் பலன் கிடைக்காது. தேந்தெடுத்த முறையில் அதையே நினைத்து கனவுகண்டு அந்த வெற்றிக்காகவே வாழுங்கள். உடலின் ஒவ்வொரு பகுதியும் அந்த ஒரே நோக்கத்திற்காக உழைக்க வேண்டும். மற்றவற்றை மறந்துவிடல் வேண்டும். இடைவிடாத முயற்சியும் மிகுந்த மனவலிமையும் பெற்றவர்களால்தான் வெற்றி காணமுடியும்.
“நான் கடலை குடித்திடுவேன், எனது மனவலிமையால் மலைகள் தவிடு பொடியாகும்” என்பது போன்ற மன உறுதியுடன் உழைப்பைக் கலந்து செயலுடன் இலட்சிய வெற்றி காண்பீர்.
எண்ண அலைகள் பாதியாக குறைவதற்கு இமயம், நியமம், ஆசனம், பிராணாயாமம் அகியவைகள் துணை நின்றுள்ளன.
தூல உடம்பு –ஞான இந்திரியம்- பஞ்ச இந்திரியம் என்பன- காது, கண், மூக்கு, வாய், தோல் ஆகியன. அவை பொறி எனவும் கூறப்படும்.
தன்மாத்திரைகள்- சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பவை பொருள்களை உணர்வதற்கு காரணமாகின்றன. அவை புலன்கள் எனப்படும்.
பஞ்சபூதங்களின் நுண்ணியவடிவம்- நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பன. நுண்வடிவங்களின் உயிர்கள் உடம்பாகும். பஞ்ச பூதங்களின் பெருவடிவம் – பிரபஞ்சம் ஆகும்.
நுண்ணிய புலன்கள் தளர ஆரம்பித்தால், பொறிகள்- தூல உடலின் கருவிகள் கலங்கிவிடும். நெறி மயங்கி குளறி விடும். அறிவு அழியும். கபம் எழுந்து செய்வது அறியாமல் திகைக்கச் செய்யும். எனவே நுண் உடம்பே பரு உடலைப் பணி செய்ய வைக்கின்றது. பரு உடலுக்கும் நுண் உடம்பிறகும் நடுவே மனம் செயல்பட்டு வாழவைக்கின்றது.
ஆழ்ந்து ஓர் இடத்தில் மனதைச் செலுத்தினால் பக்கத்தில் உள்ள நாற்றங்கள் தெரிவதில்லை. என்ன நடந்தாலும் தெரிவது இல்லை. மனம் ஒன்றைப்பற்றி அதில் ஒன்றும்போது நுண்ணுடம்பும், பரு உடம்பும் சேர்ந்து செய்யும் செயல் நடப்பதில்லை. அதனால் மனம் விருத்தியாகி எண்ண அலைகள் அதிகமாவது குறையும். இந்த நிலையை வரவழைப்பது பிரத்தியாஹாரம் ஆகும்.
புலன்களாகிய தன்மாத்திரைகளை விட்டு விட்டு ஒரு பொருளில் ஈடுபடும் பொறிகள் சித்தத்தின் உறவை மட்டும் ஏற்பது பிரத்தியாஹாரம் ஆகும். பொருள்களிடத்தில் சேரும் இந்திரியங்களை- பொறிகளை- வலிந்து தடுப்பது பிரத்தியாஹாரம். பொருள்கள் பொறிகளை வசம் செய்ய முடிவதில்லை. பொறிகளும் தாமாக எந்த ஒருபொருளிலும் படியமுடிவதில்லை. புலனும் பொறியும் இணையமுடியாமல் பிரிக்கப்படுகின்றது. இதை இணைக்கும் மனம் வேறு பணிக்குத் திருப்பப்பட்டதால் இவை செயல் இழந்தன. ஆத்மா சித்தத்தின் வழி செயல்படும்.
பார்ப்பவன் மனிதனாகவும் பார்ப்பது கண்ணாகவும் பார்க்கப்படுவது தென்னை மரம் என்றால் அது இயல்பாக நடப்பது. பார்ப்பவன் ஆத்மா பார்ப்பது மனம்/புலன்/பொறி ஆகவும் பார்க்கப்படுவது தென்னைமரம் என்றால் புலனும், பொறியும் இனையாமல் மனம் முழுவடிவில் இல்லாமல் இருப்பதால் தென்னைமரம் தெரிவதில்லை. இந்நிலையில் ஆத்மா மனம், புலன், பொறிகளை ஒன்றாக்கி விளங்க அங்கே ஆத்மஞானம், ஆனந்தம் வரும். பார்க்கப்படுவது தென்னை மரத்திற்குப் பதில் பிரம்மமாயிருந்தால் மனம், புலன், பொறிகள் செயல் இழக்க, எப்போதும் ஆத்மாவும் பிரம்மாவும் ஒன்றுபட்டவை ஆகையால் இனைகிறது. பிரம்மானந்தம், போரானந்தம் நம்மையடையும். இது பிரத்தியாஹாரத்தைப் பழகுவதனால் நம்மால் சாத்யமாகும்.
“யத் யத் பச்யதி தத் ஸர்வமாத் யேதி ப்ரத் ஹாரஹ” –உபநிஷத்
பார்க்கும் ஆத்மாவும் பார்க்கப்படும் பிரம்மமும் ஒன்றாகி விடும்போது எல்லாம் எங்கும் ஆத்மாவே என்ற நிலை ஏற்படும். மற்றபொருள்களை காணாது நினையாது ஒதுக்கி விடுதல், உணரவைப்பது பிரத்தியாஹாரம்.
ஆத்மாவைக் காணும் கருத்து மேலோங்கினால் புலன் பொறிகள் மனத்தை விட்டு அகல, வேதத்தின் யோகநெறியில் மகிழ்ந்து இருக்கும் இறைவனை கண்டு அவனுடன் இணையலாம். தி-மந்திரம்-578
தொப்புளிலிருந்து 12 விரல்கள் தொலைவில் உள்ள மூலாதாரத்தில் பதிந்து சொல்லும் “ஓம்” பிரணவ மந்திரத்தை அறிந்து சொல்ல கடவுள் அங்கே வெளிப்படுவான்- தி-மந்திரம்-579
மலத் துவாரத்திற்குமேல் 2 விரல் உயரத்திலும், சிறுநீர் துளைக்கும் கீழ் 2 விரலும் ஆகிய இடத்திலிருந்து தொப்புளுக்கு கீழே 4 விரல்வரை குண்டலினி சக்தி இருக்கிறது- தி-மந்திரம்-580
மூக்கு நுனியிலிருந்து 12 விரல் தூரத்தில் உள்ளது அதோமுகம்- தண்டுவடம் தொடங்குமிடம். அதில் மனதை பதியவைத்து தியானம் செய்தால் பெரிய சித்தயோகம் கைக்கூடும். உடம்பிற்கு அழிவில்லை. தி-மந்திரம்-581
சுழுமுனை நாடியில் சுடர் ஒளி மின்னல் கொடிபோல் தோன்றினால் பரமானந்தம் உண்டாகும். கண்டத்தில் தொண்டைக் குழியில் நீல ஒளி உண்டானால் உடல் கட்டுப்படாத மகிழ்ச்சியில் துள்ளும். தி-மந்திரம்-582
மூலாதாரத்தில் முடியும் சுழுமுனை நாடியின் துவாரத்தையும், தலை உச்சியில் உள்ள பிரம்ம நாளமாகிய நடுத்துளையையும் மனதில் இனைத்து ஒன்றாக்கி விழிகள் மூடாமல் வெளியே விழித்திருக்க- ஆயுட்காலம் வென்று வாழும் காலமாகும்.- தி-மந்திரம்-583
மலத் துவரத்திற்குமேல் 2 விரல் தொடங்கி மேலே 8 விரல் வரை குண்டலினி இருக்குமிடம். அதைத் தியானித்தால் எல்லாவற்றின் கருவாய் நிற்கும் சோதியான கடவுள் கலந்து நிற்கிறான் என்பதை உணரலாம். தி-மந்திரம்-584
மாயையின் உபாதியை ஒடுக்கவும். ஜோதியான சிவனை நம்மை விட்டுப் பிரிப்பது நான் என்னும் தன் அறிவு. அந்த அறிவாகிய உபாதியையும் கரைத்து நீயும் சிவத்தில் கரைந்து உள்நோக்கி உன் நிலை அறிக. இதுவே பிரஹாரத்தின் பெருமையும் முழுமையும் ஆகும். தி-மந்திரம்-585
காற்றை உள்ளே இழுத்து வெளியேற்றாமல் நிறுத்தியதால் உடலில் புறப்பட்ட பிராணனால் உள்ளம் வலிமை பெரும். உள் இருந்த கடவுள் வெளியேறாததால் அவனை அங்கே கண்டு கொள்ள முடியும். தி-மந்திரம்-586
பிரத்தியாஹாரத்தில் மனதின் உள்ளே பிரபஞ்சத்தை காணலாம். மயக்கம் தரும் மாயை நீக்கி சிவனை நாடும் சிறப்பான உணர்வு சிந்தையினால் அந்த தருணத்தில் உணர்திட்டால் அறிய விரும்பும் காட்சி ஒளிமயமாகத் தெரியும். தி-மந்திரம்-587
பிரத்தியாஹாரப் பயிற்சி-
முதல் முறை- 1.கால்பாதம், 2.கால் கட்டை விரல், 3.கணுக்கால், 4.கெண்டைக்கால், 5.முழங்கால், 6.மலவாய், 7.தொடை, 8.ஆண் (+பெண்) குறி, 9. தொப்புள், 10.இதயம் (மார்பு), 11.கழுத்து, 12. தாடை, 13. மூக்கு, 14.கண், 15.புருவமத்தி, 16.நெற்றி, 17.தலை உச்சி, 18.இந்திரயோனி (உண்ணாக்கு) –இந்த பதினெட்டு மர்மத் தானங்களில் உணர்வை நிறுத்தி பிற இடங்களில் உணர்வு செல்லாது காப்பது பிரத்தியாஹாரம். கீழிருந்து மேலாகவும் பின் மேலிருந்து கீழாகவும் ஒவ்வொன்றையும் நினைத்து மனதில் நிறுத்தி பழகவும்.
1.அமைதிதரும் ஆசனத்தில் அமரவும்.
2.உடல் முழுவதும் சூன்யம் ஆகிவிட்டதாகவும், நான் என்ற உணர்வும் மட்டும் இருப்பதாக கருதவும்.
3.முதலில் கட்டைவிரலை மட்டும் நினைக்கவும். கண்களைத் திறந்து வெளியை காண்பது போல் காண்க. கண்ணில் ஒரு பொருளும் விழியில் தெரியவில்லை என்று மனதை அடக்கவும். கால் கட்டைவிரல் மட்டும் மனக்கண்ணிற்குத் தெரிவதாகவும் பிற ஒன்றும் தெரியாததாகவும் எண்ணவும்.
4.பிறகு படிப்படியாக ஒவ்வொன்றாக இதேபோல் வரிசையாக நினைத்து செய்க. ஒன்றை நினைத்து முடிந்ததும் அடுத்ததை மட்டுமே நினைக்கவும்.
5.தலை உச்சிவரை சென்றபின் கீழிரங்கி வரிசையாக நினைக்கவும்.20 விநாடிகள் ஒவ்வொரு உறுப்புக்கும் எனக் கொண்டால் மொத்தம் 18 உறுப்புக்கள்.அதாவது 18 x 2(மேலே+கீழே) x 20 விநாடிகள் =720 விநாடிகள் = 12 நிமிடங்கள்.
நேரத்தைக் குத்து மதிப்பாக கொள்ள வேண்டும். அதைக் கணக்கிட்டுக் கொண்டு மனதை விரிவடையச் செய்யக்கூடாது.
ஆரம்ப பயிற்சிகள் முடிந்ததும் ஒவ்வொரு உறுப்புக்கும் 12 நிமிடங்கள் எனக் கொண்டு மொத்தம் 18x2x12 நிமிடங்கள் = 7மணி 12 நிமிடம் செய்யவும்
இதற்கு மலைஉச்சி, அருவிக்கரை, ஏரிக்குளக் கரைகள், ஆற்று ஓரம், ஆற்று மையம், கடற்கரை, ஆல் அல்லது அரசு மர நிழல் ஆகிய இடங்களில் தர்பையின்மேல் பருத்தி துணிப் பரப்பி காலை 6மணி முதல் செய்ய ஆரம்பித்து மதியம் 2 மணிக்குள் முடிக்கலாம்.
அமாவாசை, பவுர்ணமி, ஏகாதசி, அஷ்டமி, சிவராத்ரி, கார்த்திகை மற்றும் பிறந்த நட்சத்திரம், முன்னோர் திதிகள் ஆகிய நாட்களில் செய்வது சித்தி பல கிட்டும்.
இராண்டாம் முறை- மேற்குறிப்பிட்ட தினங்களில், இடங்களில் உடலின் ஆறு ஆதாரங்களுடன் அல்லது அதனுடன் சகஸ்ரம் (1000 இதழ் தாமரை) குருபாதுகா ஆகிய இரண்டையும் சேர்த்து, எட்டையும் தேர்வு செய்து, ஆதாரத்தின் இடம், வடிவம், நிறம், மந்திரம், பூஜை எல்லாம் ஒவ்வொன்றிற்கும் 12 நிமிடம் எனச் செய்து மொத்தம் 8 x12 = 96 = 1 மணி 36 நிமிடம் செய்து பலன் காணவும்..
எந்த முறையானாலும் பயிற்சி முடிந்தபின், தவறாமல் முதலில் செய்த சூன்யத் தியானத்தைக் கலைத்து முழு உடம்பையும் மனத்தின் மூலம் உணரவேண்டும். இதைச் செய்யாவிடில் கேடுவிளையும்.
#@#@#@#@#@
“இராஜயோகம்” தன்னகத்தே கீழ்க்கானும் எட்டு படிகளைக் கொண்டுள்ளது.
1. இமயம்
2. நியமம்
3. ஆசனம்(அ)இருக்கை
4. பிரணாயாமம்(அ)பிராணணைக்கட்டுப்படுத்தல்
5.பிரத்தியாஹாரம்(அ)புலன் ஒடுக்கம்
6. தாரணை
7. தியானம்(அ)ஆழ்ந்து சிந்தித்தல்
8. சமாதி(அ)மெய்மறந்த உயர் நினைவு நிலை
******