ஓம்நமசிவாயநமக!
முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்
0=0=0=0=0=0
என் உரை:-
அறுபத்து மூவர் நாயன்மார்கள் வரலாறு முழுவதுமாக அனைவருக்கும் பயன்பெறும் வகையில் இருக்க வேண்டும் என்ற சிந்தனையில் இப்பகுதியினை இனைத்துள்ளேன். சிவனின் பெருமைதனை போற்றி சிவத் தொண்டு புரிந்த அந்த அறுபத்தி மூவரின் வாழ்க்கையை சிவ அருள்பெற நினைபோரெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றாகும். அவர்களின் அனுபவங்கள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றது.
நாயன்மார்களின் உன்னத வாழ்க்கை வரலாற்றைக்கூறும் நூல் பெரியபுராணம் ஆகும். அவர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த பண்டைய தமிழர் அரசியல் அமைப்பு, நடத்தை விதிகள், பண்பாடுச் சிறப்பு ஆகியன பற்றி அறிய முடிகிறது. ஆயிரம் ஆயிரமாண்டுகளாக அருளாளர்கள் தோன்றி பக்தி விதை விதித்து அன்பு நீர் பாய்ச்சி கருணை வேலியிட்டு செம்மையாக இந்த தமிழ் மண்ணின் பெருதனை வளர்த்து வந்துள்ளார்கள். சேக்கிழார் அவர்கள் 63 அடியார்களையும் 9 தொகை அடியார்களையும் பற்றி செய்யுளாக எழுதியுள்ளார்.
இந்த வாழ்க்கை வரலாற்றின் அடிப்படைக் குறிக்கோள் என்னவென்றால் இறையடியார்களை வணங்குவதும் அவரின் சொல்படி செயல் படுவதுமேயாகும். தமிழ் மக்களின் மனத்தில் தொண்டு மனப்பான்மையை வளர்ந்திட இந்த வரலாறு உதவி செய்யும் என்பதாகும். உயர்ந்த நாகரீகம் பெற்றிருந்த ரோமானியப் பேரரசு இருந்த இடம் தெரியாமல் அழிந்ததற்கு அந்த மக்கள் காமக் களியாட்டத்திலும் இன்ப போகங்களிலும் ஈடுபட்டு குறிக்கோள் இல்லா வாழ்வுதனை வாழ்ந்ததுதான் என ஆராய்சியாளர் கருதுகின்றனர். சோழப்பேரரசனாகிய அனபாயயச் சோழனும் அவன் காலத்து மக்களும் சிற்றின்பத்தை மிகுந்து கூறும் சிந்தாமணியை படித்து மயங்கியிருந்த காலத்தே தம் தமிழ் மக்கள் சமுதாயத்திற்கு ஏற்படவிருந்த அழிவினை முன்கூட்டியே அறிந்து சேக்கிழார் பெருமான் தொண்டு, தியாகம், தூய்மை, சத்தியம் ஆகிய நெறிகளில் மக்களை ஆற்றுப்படுத்தும் வகையில் இதை வெளிப்படுத்தினார்.
இந்த தொண்டர் வரலாற்றை பாடப்பணிந்த அனபாய மன்னனிடம் தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகல் கடிதம் அளித்து தில்லைவந்து அம்பலவாணரைப் பணிந்து ‘உலகெலாம்’ என சிவன் அடியெடுத்துக் கொடுக்க 4286 பாடல்களைப் பாடி முடித்துள்ளார். மன்னன் ஆர்வமுடன் அவ்வப்போது நூல் பற்றிய விவரங்களைத் தெரிந்து முற்றுப் பெற்றதும் எல்லா புலவர்களையும் பண்டிதர்களையும் சாத்திர வல்லுநர்களையும் தில்லைக்கு வரவழைத்து சித்திரை திருவாதிரை நாளில் ‘திருத்தொண்டர் புராணத்தை’ அரங்கேற்ற ஆரம்பித்து அடுத்த சித்திரை திருவாதிரை நாளில் முடிவுற்றது.
தொகை அடியார்கள்- 9 பேர்
1.தில்லை வாழ் அந்தனர்கள்
ஆதியாய் நடுவும் ஆகி அளவிலா அளவும் ஆகிச்
சோதியாய் உணர்வும் ஆகித் தோன்றிய பொருளும் ஆகிப்
பேதியா ஏகம் ஆகிப் பெண்ணுமாய் ஆணும் ஆகிப்
போதியா நிற்கும் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி
கற்பனை கடந்தசோதி கருணையே உருவமாகி
அற்புதக் கோல நீடி அருமறைச் சிரத்தின் மேலாம்
சிற்பரவியோமமாகும் திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடம் செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி.
திருத்தொண்டர் புராணத்தின் முதலில் பேசப்படுபவர் தில்லையில் உள்ள தீட்சிதர்கள். உலகெலாம் நிறைந்தும், அறிவித்தும் ஐந்தொழில் கூத்து போற்றப் பெறுவது திருநடனம். அந்நடனம் புரியும் பூங்கழல்கள் எனப் போற்றப்பெறுவது, போற்றி வாழ்பவர்கள் தில்லைவாழ் அந்தணர்கள். திருவடித்தொண்டு செய்பவர்கள். மூன்று எரி விதிப்படி வளர்ப்பவர்கள். துன்பம் வராதிருக்க வேள்வி செய்பவர்கள். திருநீற்றின் செல்வமே பற்று என்றும், சிவனின் அன்பே பேறு எனவும் நினைப்பவர்கள். ஞானம் முதலிய நான்கும் உணர்ந்தவர்கள்.
2. பொய்யடிமையில்லாத புலவர்
அடியார்களும், சிவனருட் செல்வர்களும் ஆவர். மெய்யன்புடன் சிவனடிக்கே தொண்டு பூண்டு திருவருள் நெறி நின்றவர்கள். கயிலைப் பெருமானுக்கே உரியவர்கள். பாடல்களின் சொற்களுக்கு நன்கு தெளிவாக பொருள் கூருவர். அறிவு நிறைந்தவர்கள். நூல் பல கற்று நுண்மதி படைத்தோர் மெய்யுணர்வு கொண்டவர்கள் பெருமானையன்றி ஒருபொருளை பெரிதாக நினையாதவர்கள். அடிமை பூண்டு நூல்களை ஓதி உணர்ந்து உருகி ஒருமைப்பட்டு நிற்பவர்கள்.
3. பத்தராய்ப் பணிவார்
நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும்
மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும்
மன்றாடும் மலர்ப்பாதம் ஒருகாலும் மறவாமை
குன்றாத உணர்வுடையார் தொண்டராக் குணமிக்கார்.
பத்தராய்ப் பணிவார்என்பார்கள் தாய்ப் பசுவினைக் கண்ட கன்றுபோல் இறைவனை அனைந்து இனியவே பேசுவார். சிவன் வழிபாட்டை விழாக்களைக் கண்டு இன்புறுவர். சிவனையும் அடியார்களையும் சிந்தை களிப்படைய வணங்குவர். செய்யும் தொண்டுகளின் பலன்களை சிவனுக்கே அர்ப்பளிப்பார்கள். சிவன் புகழ் கேட்டு சிந்தை மகிழ்வர். நின்றாலும், நடந்தாலும், உறங்கினாலும், இமைத்தாலும் சிவனடிகளை ஒருபோதும் மறவாதவர்.
4. பரமனையே பாடுவார்
புரமூன்றுஞ் செற்றானைப் பூணாகம் அணிந்தானை
உரணில்வரும் ஒரு பொருளை உலகனைந்தும் ஆளானைக்
கரணங்கள் காணாமல் கண்ணார்ந்து நிறைந்தானைப்
பரமனையே பாடுவார் தம் பெருமை பாடுவாம்
பரமனையே பாடுவர் என்பவர்கள் ஓரு கூட்டத்தார் தொகையடியார். அவர்கள் வடமொழி, தென் திசை மொழிகளைக் கற்றறிந்தவர்கள். அளவற்ற அன்பினை ஆண்டவன்பால் கொண்டவர்கள். இறைவன் புகழை பாடுபவர்கள். உள்ளம் நைந்துருகி பாடுவார்கள். தங்களுடைய கருவி கரணங்களை ஒடுங்கச் செய்து பக்தியுடன் பாடுவார்கள்.
5. சித்தத்தை சிவன்பாலே வைத்தார்
சித்தத்தை சிவன்பாலே வைத்தார் என்பவர்கள் இடைபிங்கலை வழியே உச்வான நிச்வாணமாகச் சென்று மீளும் பிராணவாயுவை அடக்கி, முதுத்தண்டின் இடையே ஒடும் தாமரை நூல் போன்ற நுண்ணிய சுழுமுனை நாடி வழியே அதைச் செலுத்தி, நிறுத்தி குரங்குபோல் ஓடி அலைகின்ற மனத்தை அடக்கி மூலாதாரம், சுவதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகிய ஆறு ஆதாரங்களையும் மனத்தினால் கண்டு அவற்றில் வீற்றிருக்கின்ற அதி தேவதைகளான விநாயகர், பிரம்மா, திருமால், உருத்திரர், மகேசுரர், சதாசிவர் ஆகிய மூர்த்திகளைத் தரிசித்து பிரமந்திரம் சென்று ஜெப நிலை கடந்த அஜபா நலமுற வேண்டி அதன்மேல் கீழ்நோக்கியுள்ள ஆயிரம் இதழ் தாமரையை சகஸ்ரராமை சோதிபத உச்சரிப்பால் தோன்றும் சிவ சூரியனால் மலரச்செய்து அதன் நுனியில் உள்ள சந்திர மண்டலத்தை சுருக்குதலில் மூலாக்கினியை அக்கினி பீஜமந்திரத்தால் எழுப்பி நாடி சக்கரத்தைப் பிளந்து கொண்டு அவ்வக்கினியாலே சந்திரமண்டலத்தை இளகச் செய்து பொங்கி வரும் அமிர்தத்தை எல்லா நாடிகளிலும் நிரப்பி ஞானாமிர்தம் உண்டு அந்த சிவஞான ஒளியில் சூரிய சந்திர ஒளி அடங்க கடலாடி அச்சிவ ஒளியில் நிற்றலே நாயன்மார் ஆவர்.
6. திருவாருர் பிறந்தார்
அருவாகி உருவாகி அனைத்துமாய் னின்றபிரான்
மருவாங் குழலுமையாள் மணவாளன் மகிழ்ந்தருளும்
திருவாரூர்ப் பிறந்தார்கள் திருத்தொண்டு தெரிந்துணர
ஒருவாயால் சிறியேனால் உரைக்காலாம் தகைமையதோ
திருவாருர் பிறந்தார் என்பார் சிவலோகத்தில் பிறந்தவர்கள் போன்றவர்கள். அது ஞான வயல். கயிலை சிவகணங்கள் உலகை உய்விக்கும் பொருட்டு இவ்வூரில் பிராந்தார்கள். அங்கு பிறந்தவர்களது பெருமையை யார் ஒருவராலும் உரைக்க முடியாது என்பதாகும்.
7. முழுநீறு பூசிய முனிவர்
முழுநீறு பூசிய முனிவர் என்பார்கள் விதிப்படிச் செய்த திருநீற்றைத் திருமுறைகளைக் கூறி அணிவதால் பிணி, இடர், முதலியன நீங்குவதுடன் பூசுவோர் எல்லா நலன்களையும் பெற்று இன்புறுவர். திருநீறு அணியும்போது சிவாயநம என ஐந்தெழுத்தை ஓத வேண்டும். திருநீறு அகற்பம், கற்பம், அநுகற்பம், உபகற்பம் என நான்குவகை. அகற்ப திருநீற்றினை அணியக்கூடாது. விதிப்படி திருநீறு அணிந்தால் காமம் முதலிய அறுபகை நீங்கும்.கன்றையுடைய பசுஞ்சாணத்தை ஏற்றுப் பஞ்ச கவ்யம் விட்டுப் பிசைந்து உருண்டைகளாகச் செய்து உலர்த்திச் சிவமந்திர ஓம மந்திர ஓம நெருப்பிலுள்ள அக்கினியால் சிவ சிந்தையுடன் எரித்து எடுத்த திருநீறு கற்பகம். காட்டில் உலர்ந்த பசிவின் சாணத்தைக் கொணர்ந்து பொடித்துக் கோநீர் விட்டுப் பிசைந்து அஸ்திர மந்திரம் கூறி உருட்டி உலர்த்தி ஓம் நெருப்பினால் எரித்து அநுகற்பம். காட்டுத் தீயில்வெந்த நீறும், பசுந்தொழுவத்தில் வெந்த நீறும், வேள்வியில் வெந்த நீறும் எடுத்து கோநீர் விட்டுப் பிசைந்து மந்திரம் கூறி உருட்டி உலர்த்தி திருமடங்களில் சிவாக்கினியால் எரித்து எடுத்தது உபகற்பம்.இப்படி அல்லாது எல்லாம் அகற்பம்.
8. முப்போதும் திருமேனி தீண்டுவார்- ஆதிசைவர்
முப்போதும் திருமேனி தீண்டுவார் என்பார்கள் சிருஷ்டிக் காலத்தில் அநாதி சைவராகிய சதாசிவ மூர்த்தியின் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்ற ஐந்து திருமுகங்களினின்று கௌசிகர், காசிபர், பரத்துவாசர், கௌதமர், அகத்தியர் என்ற ஐந்து முனிவர்கள் தோன்ற அவர்கள் மரபில் வந்தவர்கள் ஆதிசைவர் எனப்படுவர்.
சமய தீட்சை, விசேட தீட்சை, நிர்வாண தீட்சை ஆசார்ய அபிஷேகங்களைப் பெற்றவர்கள். சிறந்த இவர்கள் பூஜை செய்ய பெரிதும் உதவியவர்கள். பரார்த்தப் பிரதிட்டை, பரார்த்த பூஜை செய்ய உகந்தவர்கள். வேகாமங்களை ஓதி சிவலிங்கப் பெருமானை செல்காலம், நிகழ்காலம், எதிர்காலம் என முப்போதும் தீண்டிப் பூசிக்க உரியவர்கள்.
9. அப்பாலும் அடிசேர்ந்தார்
அப்பாலும் அடிசேர்ந்தார் என்பார்கள் இங்கு குறிப்பிட்ட அடியார்கள், நாயன்மார்கள் காலத்திற்கு முன்னேயும் பின்னேயும் வாழ்ந்து தொண்டு செய்தவர்கள். சைவ சமயம் பரந்தது காலத்தால் மூத்தது. தொன்மையானது. தழிழ்நாட்டில் வாழ்ந்த தமிழர்கள் அல்லாமல் சைவ தொண்டு செய்தவர்கள் மற்றவர்கள் ஏராளம். அப்படிப்பட்ட அடியவர்கள் எல்லாம் இந்த திருத்தொண்டத் தொகையில் இடம் பெறாமையால் இருந்ததனால் அவர்களையும் போற்றவேண்டும் வணங்கவேண்டும் என்ற முறையில் அப்பாலும் அடிசேர்ந்தார் அடியார்க்கும் அடியேன் என்றார்.
அறுபத்துமூவர்
1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்/ 9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்/ 56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்
******