குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
சிவவழிபாடு! (38)
ஓம்நமசிவய!
முக்கண் ஒருத்தன் மற்றென்னுள வாரி முயங்குதலான்
மிக்க வெண்கோடொன்று மேசிதையா நிற்கும் வெள்ளறிவை
உக்க கருமத மேகரு மாசை ஒழிக்கும் அருள்
புக்கம் செம்மேனி மனஞ் செம்மையாகப் புணர்த்திடுமே
இன்பக்காத்தல் துன்பக்காத்தல்!
இறைவனது ஐந்து தொழில்களில் காத்தல் என்பது இருவகைப்படும். இன்பக்காத்தல், துன்பக்காத்தல் எனப்படும். உயிர்கள் செய்த தன்வினைக்கு ஏற்ப இன்பப் பயன்களைக் கொடுத்து அவ்வுயிர்களுக்கு அருளுதல் அறக்கருணையாகிய இன்பக்காத்தல் எனப்படும். இன்பக்காத்தல் தொழிலைக் குறிக்கும் நடனம் புஜங்கலளித நடனம் எனப்படும். ஆன்மாவைக் குறிக்கும் குறியீட்டுப் பொருளான பாம்பினைக் கையில் ஏந்தி அதனை மகிழ்வுறச்செய்யும் வகையில் ஆடும் நடனமே புஜங்கலளித நடனமாகும்.
இவ்வாறே உயிர்கள் செய்த பாவ வினைகளுக்கு ஏற்ப துன்பங்களைக் கொடுத்து அவற்றின் வினைகளை அழித்து காத்தல் துன்பக்காத்தல் எனப்படும். சிவனின் மறக்கருனையாகிய துன்பக் காத்தல் செயலைக் குறிக்கும் நடனம் புஜங்கத்திராச நடனம் எனப்படும்.
&&&&&
ஓம்நமசிவய!
அருளெனும் கடல்முகந் அடியர் சிந்தையாம்
பொருள் பெருநிலஞ் சிவபோக முற்றிட
வரமழை உதவி செவ்வந்து யானையின்
திருவடி இணைமலர் சென்னி சேர்த்துவோம்
உயர்வானவன்!
ஒரு மரம் ஒரு வித்திலிருந்து முளைவிட்டு தோன்றுகின்றது. மரத்தை நாம் காண்பதற்கு முன்பாக அது வித்தாக ரூபாருபமாக வித்து வடிவத்தில் இருந்தது. வித்தில்லாமல் எந்தப் பயிர்வகைகளும் இல்லை. சக்தியை உள்ளடக்கி நின்ற சிவம் வித்தாய் விளங்கும். விதைத்த வித்து முளைத்தெழும்போது சக்தி சிவத்தை வளர்க்கும். கடைசியில் வளர்ந்தபின் சக்தி அடங்கும் இடம் சிவம் என்ற வித்தேயாகும். அம்மரமே வித்தாக தோன்றுவதற்கு முன் எவ்வித ரூபமில்லாமல் இருக்கின்றது. ஒரு விதை இவ்வாறு அரூபமாயிருந்து ரூபாருபமாகிய ரூபத்தை பெறுகின்றது.
இது போன்றே ஒரு குட்டியும் ஒரு பிள்ளையும் ஒரு பிண்டத்தில் தோன்றும். பிண்டமும் எவ்வித ரூபமற்ற ஒன்றிலிருந்து உண்டாகும். இவ்வாறு எல்லாவற்றையும் நோக்குங்கால் இப்பூவுலகில் அண்ட சராசரங்கள் எல்லாம் உருவங்கள் பெறுமாறு இயக்கும் இறைவனும் இவ்வகையிலே திருவுருவம் கொண்டிருந்திருக்க வேண்டும் என்பது புலனாகும். அருவுருவான இறைவனே தன்னை உணர்த்த பல திரு வுருவங்கள் மேற்கொண்டுள்ளான்.
சங்கரன்= சம்+ கரன், சம்- மங்களம் / ஆனந்தம். சிவம் / சம்பு என்றாலும் மங்களம். தன்னிடம் இருக்கும் மங்களத்தை பிறருக்கு அளிப்பவர் சிவம். ஆனால் சிவபெருமான் சம்ஹார மூர்த்தி என்பதால் அவரால் எப்படி மங்களத்தை தரமுடியும் என கேள்விகள் எழலாம். உலகத்து உயிர்களுக்கு மரணம் என்பது துக்கம். உயிர்க்கு ஞானம் ஏற்பட்டால் பிறவியிலிருந்து விடுதலை செய்வது மங்களகரமான செயல்தானே. அதை அருள்பவன் சிவசங்கரனே ஆகும். எல்லாவற்றிற்கும் ஆரம்பம் முடிவு இருக்கும். அதுபோல் பிறப்பு என்றிருந்தால் இறப்பு என்பது கட்டாயமானது. சிவத்திடம் மனதை வைத்து ஞானம் பெற்றால் மறு ஜென்மம் கிடையாது. அதாவது இனி பிறப்பில்லா நிலை ஏற்படும். வேதங்களில் சிவனே எல்லா கடவுள்களுக்கும் மேலான பரமேஸ்வரன் எனச் சொல்லப்பட்டிருக்கின்றது.
விஸ்தீரண அளவில் பூமியைவிட நீர்பரப்பு அதிகம். ஒளி நீரைப் போன்றல்லாமல் எங்கும் வியாபித்துள்ளதால் நீரைவிட உயர்ந்ததாகின்றது. வாயு இல்லாத இடமே இல்லையாதலால் ஒளியைவிடக் காற்றும், காற்றை தன்னுள் அடக்கிய ஆகாயமே அதவிட உயர்ந்ததாகவும், ஆகாயத்தைக் கடந்து செல்லும் வலிமை பெற்ற மனமே உயர்ந்தது என்றானாலும் மனம் லயிக்கும் விஷயங்களில் உள்ள தத்துவத்தை புரிந்து கொள்ளும் வலிமை கொண்ட அறிவு உயர்ந்தது என்ற நிலையில் காலம் காட்டும் வழியில் அறிவு செல்ல வேண்டியிருப்பதால் அறிவுக்கு மேம்பட்டது காலம், இந்த காலத்தை வெல்லும் பிரபஞ்சமே தன்னுள் எல்லாவற்றையும் அடக்கி வைத்திருப்பதால் அதுவே உயர்ந்தது. அந்த பிரபஞ்சத்தை இயக்கும் வல்லமை பெற்ற ஈசுவரனே எல்லாவற்றையும் விட உயர்வானவன்.
முதல், நடு, முடிவு என்ற மூன்று நிலைகளும் அற்றதனால் ஆதிமத்யாந்தம் எனப்படுபவன்.
&&&&&
ஓம்நமசிவய!
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.
ஞானம்!
1.பக்தி ஞானம் என்பது சரியை –தேடுவது என்றாகும்,
2.கர்ம ஞானம் என்பது -கிரியை-தேடியதை அடைவது,
3.தியான ஞானம் என்பது – ஞானம் தேடி அடைந்ததை உபயோகிப்பது,
4.ஞான ஞானம் என்பது - ஞானத்தை உபயோகித்ததால் ஏற்படும் தெளிவு.
சத்குருவை தேடுவது சரியை, அவரிடம் உபதேசம் பெறுவது கிரியை, அதன்படி நடப்பது யோகம். அதனில் கிடைப்பது ஞானம். எரியும் விளக்கினை உற்றுப் பார்த்தால் திரிக்கும் எரியும் ஜோதிக்கும் இடையே கொஞ்சம் இருள் அதாவது கருமை ஒளிந்திருப்பது தெரியும். சிறியதாக இருக்கும் அந்த இருட்டு தீபஒளி அனைந்தால் முழுவதுமாக வளர்ந்து அந்த இடத்தை ஆக்கிரமித்துக் சூழ்ந்து கொள்ளும். ஞானமாகிய தீ எறியும்வரைதான் அஞ்ஞானம் ஒளிந்திருக்கும். ஞானம் நீங்கினால் அங்கே இருள் சூழும். அது அஞ்ஞானமாகும். ஞானஒளி என்பது அஞ்ஞான இருளைப் போக்கி அந்த இடத்தைப் பிரகாசிக்கச்செய்யும். உள்ளத்தின் உள்ளே ஒளிந்திருக்கும் இருட்டாகிய அஞ்ஞானத்தினைப் போக்க அந்த இடத்தில் அதாவது மனதில் ஞானவிளக்கு ஏற்ற வேண்டும். பக்தி எனும் நெய்யினை ஊற்றி உயிர்கள் மீது அன்பு என்ற திரியை அதில் இட்டால் இறைவன் தீபமாகத் தோன்றி சுடர்விடுவான். இந்த ஞானவிளக்கு மனதில் உள்ள அஞ்ஞான இருளை அகற்றும். அந்த ஞானஒளியானது அந்த முகத்தில் பொலிவையும் அகத்தில் நித்தம் நித்தம் சந்தோஷத்தையும் ஆனந்தத்தையும் தரும். பார்பவை எல்லாம் உயர்வாகவும் நடப்பன எல்லாம் நல்லவையாக இருக்கும். இருளாகிய வினைகள் சூழாமல் நிம்மதி நிறைந்த வாழ்வாக மலரும்.
முக்திபெற: நான்கு வழிகளை சொல்கின்றது வேதங்கள்.
1.சரியை (தாசமார்க்கம்) பலதொண்டுகள் செய்து இறைவன் அருளை பெறுதல்.
2.கிரியை (சத்புத்ரமார்க்கம்) இறைவனை அகமும் புறமும் பூஜித்து அருளைப் பெருதல்.
3.யோகம் (சகமார்க்கம்) தியானத்தின் மூலம் வீடுபேற்றை அடைவது.தகாது என்று வகுப்பது யமம், தகும் என்பது நியமம் என்ற விதிக்களுக்குட்பட்டது.
4.ஞானம் (சன்மார்க்கம்) குருவிடம் உபதேசம் பெற்று ஞானத்தால் ஆராதனை செய்து அருள். குருவின் மூலம் கற்பது-சிரவணம், கற்றவற்றை நினைவில் கொண்டுவருவது மனனம், அவற்றை தியானத்திருப்பது நிதித்தியாசனம் என 3 வித ஞான மார்க்கங்கள்.
&&&&&
ஓம்நமசிவய!
வெள்ளம்போல் துன்பம் வியனுலகில் சூழ்ந்திருக்க
கள்ளம் கபடம் கவர்ந்திழுக்க- உள்ளம்
தளர்ந்திருக்கும் எங்கள் தயக்கத்தை நீக்க
வளரொளி விநாயகனே வா!
யோகம்!
பொதுவாக யோகம் 1.மந்திரயோகம், 2.பரிசயோகம், 3.பாவயோகம், 4.ஞானயோகம், 5.மகாயோகம் என ஐந்து வகைப்படும்.
1.மந்திரயோகம்- பரமேஸ்வரனை அருமறை மந்திர ஜபத்தால் தியானம் செய்வது மந்திர யோகமாகும்.
2.பரிசயோகம்- தூய மாசு மருவற்ற உள்ளத்துடன் இரேசகம், பூரகம் இவற்றை யோகத்தில் செய்து கும்பக யோகத்தில் ஆத்மாவை நிறுத்துவது பரிசயோகம்.
3.பாவயோகம்- இரேசகம் என்பது மூச்சை மூக்கினால் புறத்தே விடுதல். பூரகம் என்பது பிராணாயாமம் செய்யும் முறையில் மூச்சை உள்ளுக்குள் இழுத்தல் ஆகும். உலக இச்சையானது மனதை அலைக்கழிக்கும். அதில் மனதை அலையவிடாமல் ஒருநிலைப்படுத்தி ஈசனைக் காணும்படி பயிலும் யோகம் பாவயோகம்.
4.ஞானயோகம்- தன்னையும் உலகத்தையும் பிரித்துப் பாராமல் ஒன்றான ஐக்கியத்தில் உள்ளும் புறமும் தன்னைக் காண்பது ஞானயோகம்.
5.மகாயோகம்- ஆதியாய் உறையும் பொருளை ஜோதியாய், நிர்மலமாய், ஆனந்தமயமாகி அப்பழுக்கற்ற தூயநெறியில் உணர்வது மகாயோகம்.
யோகத்தின் இந்த ஐந்து நிலைகளையும் உணர்ந்தால் அஷ்டமா சித்திகளை அறிந்த நிலையை அடையமுடியும். இத்தகைய யோக மார்க்கத்தை தெரிந்து கொள்வதற்கு தியான நிலையில் இருப்பவர்கள் முதலில் நான்முகனையும் நாராயணனையும் மனதில் தியானித்து பின்னர் ஈசனை உள்ளத்தில் இருத்தி தியானம் செய்ய வேண்டும்.
&&&&&
ஓம்நமசிவய!
இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து \
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்றுக் கணபதியே போற்றியென போற்றுகின்றேன்!
இறைவன் ஏன் சின்முத்திரையுடன் காட்சி!
கட்டைவிரல்- இறைவன்
சுட்டுவிரல்- ஆன்மா
நடுவிரல்- ஆணவம்
மோதிரவிரல்- கன்மம்
சுண்டுவிரல்- மாயை
ஆணவம், கன்மம், மாயை என்ற இந்த மூன்றையும் கடந்தால் ஆன்மா இறைவனை அடையும் என்பதன் சுருக்கம் சின் முத்திரை.
&&&&&
கோவிலுக்கு எந்த காலத்தில் (நேரம்) போக உத்தமம். எந்த காலத்தில் தியானம் செய்ய பலன் தரும்!
Written by குருஸ்ரீ பகோராஓம்நமசிவய!
பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!
கோவிலுக்கு எந்த காலத்தில் (நேரம்) போக உத்தமம். எந்த காலத்தில் தியானம் செய்ய பலன் தரும்!
கோவிலுக்கு போக இந்த நேரத்தில் பலன் உண்டு என்றில்லை. எல்லா காலங்களிலும் வழிபாடு செய்யலாம்.
குறிப்பாக பக்தர்கள் ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கு ஏற்றுவது .வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வது என்ற பழக்கம் சிறப்பு.
திங்களில் வரும் அம்மாவசை ராகு காலத்தில் சிவ பெருமானை தரிசனம் செய்தால் மன வியாதிகள் மற்றும் குழப்பமான சூழ்நிலைகள் மாறும்.
செவ்வாய் கிழமை எமகண்ட நேரத்தில் சிவ பெருமானை தரிசனம் செய்தால் கடன் தொல்லைகளில் இருந்து விடு பட முடியும் .
புதன் கிழமை சிவ பெருமானை முதல் தரிசனம் செய்ய அல்லது அபிஷேகம் செய்ய தொழில் உத்யோகம் வளர்ச்சி உயர் பதவி கிடைக்கும் .
வியாழன் இரவு கடைசி தரிசனம் (பள்ளியறைக்கு பெருமானை அனுப்புதல்) செய்தால் இணையில்லா செல்வம் கிடைக்கும் .
வெள்ளியும் பௌர்ணமியும் சேரும் காலத்தில் மாலை 4.30 முதல் 6.00 மணிக்குள் சிவ பெருமானை தரிசனம் செய்தால் மஹா லக்ஷ்மி அருள் கிடைக்கும்.
சனி கிழமை ராகு காலத்தில் கர்மங்கள் களைந்து விடும்.
ஞாயிறு அன்று ராகு காலத்தில் எதிரிகள் விலகி தைரியம் ஏற்படும்
&&&&&
ஓம்நமசிவய!
அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலி
ஒப்பிலா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்து
எப்பொழுதும் வணங்கிடவே எனையாள வேண்டுமென
அப்பனுக்கு முந்திவரும் அருட்கனியே கணபதியே!
எப்படி வணங்க வேண்டும்!
1.கோபுரம்-நீ உடம்பு அல்ல ஆண்மா என உணர்ந்து வணங்கவும்.
2.பலிபீடம்-நீ இச்சையல்ல என உணர்ந்து இச்சைகளை பலிகொடுத்ததாக பாவித்து அஷ்டாங்கங்களும் நிலத்தில் படும்படி விழுந்து வணங்கவும்.
3.கொடிமரம்-நீ மனமல்ல தத்துவங்களுமில்லை என புரிந்து வணங்கவும்.
4.வாகனம்-இறைவனை வழிபட அனுமதி கேட்டு வணங்கவும்.
5.கர்ப்பகிரகம்-நீ ஜீவாத்மா என்பதை உணர்ந்து நான் எனது என்ற உணர்வுகளை நீக்கி இறைநினைவோடு இரண்டறக்கலந்து வணங்கவும்.
6.மூர்த்தங்கள்-வலம்வந்து வணங்கும்போது இயற்கைநிலை இன்னதென அறியவும். வடிவங்கள் மாறுபடுவதுபோல் மாறிடும் மனிதனின் குணமும் மாறுவதை மாற்றவேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும். எண்ணங்கள் மாறுபட்டலும் தெய்வீகநிலை மாறக்கூடாது.
7.அமர்ந்துநிலை-உன்மிருகத் தன்மையை ஒதுக்கி தெய்வீக சிந்தனையுடன் சிந்தித்து அவசரமின்றி அமைதியுடன் நல்வழியில் செல்ல.
&&&&&
ஓம்நமசிவய!
மங்களத்து நாயகனே மண்ணாளும் முதல் இறைவா!
பொங்குதன வயிற்றானே பொற்புடைய ரத்தினனே!
சங்கரனார் தருமதலாய்ச் சங்கடத்தைச் சங்கரிக்கும்
எங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!
ஆலயங்கள் உடல் அமைப்பில்!
சிவ சின்னங்கள். திருநீறு, ருத்திராட்சம், பஞ்சாட்சாரம். வில்வம், லிங்கம், என்பதை அனைவரும் அறிவீர். திருநீறு, ருத்திரம் அணிந்து பஞ்சாட்சாரம் ஓதி, வில்வம் சார்த்தி, ஸ்தூல / மானஸ மலர்களால் லிங்கவடிவ பெருமானை வழிபடல் வேண்டும்.
கோவிலின் அமைப்பு இறைவன் சயனித்து இருக்கும் நிலையை வைத்து கட்டப்படுவதாகும். ஒவ்வொரு பகுதியையும் அது இறைவனின் பகுதியாக நினைந்து முன்னோர்கள் வகுத்தபடி வழிபடுதல் சிறப்பு. ராஜகோபுரம்- பாதம், பலிபீடம்- முழங்கால், கொடிமரம்- இனக்குறி, மண்டபம்- வயிறு, உதரம், பிரகாரம்- கைகள், கருவரை- திருமுகம்,கழுத்து, விமானம்-சிகரம்,தலை, கலசம்-சிகை. என உடல் அமைப்பில் இறை ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளது
1.மூலாதாரம்-32முதுகுதண்டு-கொடிமரம்-32வளயங்கள்,
2.தொப்புள்ஸ்தானம்-நந்திபிரதிஷ்டை-எண்ணங்களை அடக்கி மனதை தூய்மைப் படுத்த சிந்தனை,
3.இதயம்-பலிபீடம்-காமம், பொறாமை, ஆணவம் நீங்க,
4.பிரம்மகபாலம்-கர்ப்பகிரகம்-மூலஸ்தானம்,
5.புருவமத்தி-லிங்கம்-ஆண்மஒளி,
6.1000இதழ்கொண்டமூளை-1000கால்மண்டபம்,
7.மூளையின்நீர்நிலை-தீர்த்தம்,
8.தலை-கர்பகிரகம்,
9.முகம்-அர்த்தமண்டபம்,
10.கழுத்து-அந்தராணமண்டபம்,
11.மார்பு-மகாமண்டபம்,
12.வயிறு-மணிமண்டபம்,
13.தோள்கள்-உள்சுற்று,
14.கைகள்-வெளிசுற்று,
15.ஆன்மா-மூர்த்தங்கள்,
16.கண்-கருவறைத்தூண்,
17.விலாஎழும்புகள்-சுவர்கற்கள்,
18.எழும்புகள்-தூண்கள்.
&&&&&
ஓம்நமசிவய!
திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமதுள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்!
பலிபீடம்!
மூன்று அடுக்கு பீடம் மீது தாமரை மலர் வடிவம் போன்றது. ஆகம விதிகளின் படி அமைக்கப்பட்ட தலங்களில் உள்ள பலிபீடங்கள் நம் வாழ்வை மேம்படுத்தும் ஒன்றாகும். பலி பீடத்தின் அருகில் சென்றதும் ஆன்மாவில் உள்ள ஆணவம், மாயை, கன்மம் ஆகிய மும்மலங்களையும் நான் என்ற அகங்காரத்தையும் பலியிட வேண்டும் மேலும் அந்த இடத்தில் நம்மிடம் உள்ள மோசமான குணங்களை பலியிடவேணும் என்பதாகும். இது ஆலயவழிபாட்டில் மிகவும் முக்யமானது.
மனித உள்ளங்களில் போட்டி, பொறாமை, காமம், குரோதம், கோபம், தாபம், சூது, வாது, வஞ்சனை, ஆகிய குணங்கள் நீக்க முடியாதவனவாக இருக்கலாம். இக்குணங்கள் ஒருவரின் மனதில் இருந்தால் அதனால் வேண்டாத எண்ணங்கள் குழப்பங்கள் இருந்து கொண்டே இருக்கும் அவற்றிலிருந்து விடுபட பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிட மனம் தெளிவாக இருத்தல் வேண்டும் அப்போது தான் கோவிலில் நிறைந்துள்ள இறை அதிர்வுகள் நம்மீது பரவி நம் பிரச்சனைகளுக்கு நம்மால் தீர்வு காண இயலும். எனவே மனதில் உள்ள தீய குணங்களை வெளியேற்ற அந்த பலிபீடத்தில் தீய குணங்களை எண்ணங்களை பலிகொடுக்க வேண்டும் என்று நிறுவப்பட்டுள்ளது.
பாதுகா, ஜகதி, குமுதம், குமுத பத்திகம், கலா கம்பம், நிதிரவம், சுபோதன், அசுரபத்தி, பத்மம் என்று பலவகை பலிபீடங்கள் இருந்தாலும் அவைகள் பத்ர லிங்கம் என்றழைக்கப்படும்.
மூலவருக்கு அபிஷேகம் நடைபெறும்போதோ நைவேத்தியம் படைக்கும் போதோ பலிபீடத்தை வழிபடக்கூடாது.
பலி பீடத்தை வணங்கியபின் நம் மனதில் தீயவைகளை பலியிட்டு விட்டதால் நம் மனதில் மேலான சிறப்பான எண்ணங்கள் இருப்பதாக நினைவு கொள்ளல் என்பது முக்கியம். அதே நல்ல மனநிலையுடன் இறைவனை வழிபடும்போது அவர் அருள் நம்மை கண்டிப்பாக நம்மை ஆக்ரமித்து ஆசீர்வதிக்கும்.
பிறப்பி இறப்பு எனும் மாயச் சக்ரமாக பலிபீடத்தைக் கருதி வழிபடும் போது ஸ்தூல சூட்சம காரண சரீரங்களிலிருந்து என்னை விடுவித்துவிடு என்பதற்குச் சமமாகும்.
பலிபீடத்தில் உப்பும் மிளகும் போட்டு வழிபடுவது உப்பாகிய உடம்பையும் மிளகாகிய ஆணவத்தையும் இறைவனிடம் அர்ப்பணித்து விட்டேன் என்பதன் அடையாளம். இதனால்தான் மாரியம்மன் திருவிழாவில் தேருக்கும், கம்பத்திற்கும், உப்பும் மிளகும் போடுவது வழக்கமானது.
பொதுவாக கோவில்களில் எட்டு மூலைகளிலும் எட்டு பலிபீடங்கள் வைப்பது இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்ற எட்டு திக் பாலகர்களைக் குறிக்கும்.
பலிபீடங்கள் அருகில் நின்று நிதானமாக வழிபடுங்கள். மனித குணங்களை மேம்படுத்தும்.
#####
ஓம்நமசிவய!
நாரணன் முன் பணிந்தேத்த நின்று எல்லை நடாவிய அத்
தோரணவும் திரு நாரையூர் மன்னு சிவன்மகனே,
காரணனே, எம் கணபதியே, நற் கரிவதனா,
ஆரண நுண்பொருளே, என்பவர்க்கில்லை அல்லல்களே!
சிவராத்திரி!
புனித நீராடி பக்தி சிரத்தையுடன் உபவாசமிருந்து மனதில் இறைவனின் நாமங்களைச் சொல்லிக்கொண்டு சிவராத்திரி கண்விழித்தல் என்பது, நான் அழிவற்ற ஆன்மா, பரமாத்மாவின் குழந்தை, எந்த ஒரு பாவமும் செய்யாமல் புண்ணிய செயல்களையே செய்வேன் என்ற உறுதியான உணர்வுகளோடு இருக்கும் உணர்விலிருத்தல் நிகழ்வாகும். மனதிற்கு தீய வீணான விகாரமான எண்ணங்களை அளிக்காமல் இருக்கவே விரதம் இருப்பதாகும். எக்கணமும் இறைவன் நினைவில் அவர் துணையிலேயே இருப்பதே உபவாசம் ஆகும்.
சிவராத்திரி சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனை அர்ச்சிக்கும் ராத்திரி ஆகும். சைவத்தின் பெருவிழா- சிவபெருமானுக்காக கொண்டாடப்படுவது சிவராத்திரி.
சிவராத்திரி- நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி. மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி, முக்கோடி சிவராத்திரி, உத்தம சிவராத்திரி, யோக சிவராத்திரி எனப்படும்
நித்ய சிவராத்திரி-தினமும் ஈசனைப் பணிந்து மாலை நேரத்தில் வழிபடுதல்.
பட்சசிவராத்திரி-அமாவாசையும் பௌர்ணமியும் மாறிமாறி வரும்போது பிரதோஷமும் வரும் அப்போது நடத்தப்படும் மாலைநேர அபிஷேக ஆராதனைகள் பட்சசிவராத்திரி.
மாத சிவராத்திரி-மாதந்தோறும் சுக்கிலபட்ச தேய்பிறை சதுர்த்தசி/ கிருஷ்ணபட்ச பிரதோஷம் முடிந்த உடன் அன்றைய இரவு தேய்பிறை சதுர்தசி-மாத சிவராத்திரி. மாத சிவராத்திரிகளில் வழிபட்ட தெய்வம்.
1.சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி-உமாதேவி,
2.வைகாசி மாத வளர்பிறை அஷ்டமி-சூரியன்,
3.ஆனி மாத வளர்பிறை சதுர்த்தசி-தன்னைத்தானே,
4.ஆடி மாத தேய்பிறை பஞ்சமி-முருகன்,
5.ஆவணி மாத வளர்பிறை அஷ்டமி-சந்திரன்,
6.புரட்டாசி மாத வளர்பிறை திரயோதசி-ஆதிசேக்ஷன்,
7.ஐப்பசி மாத வளர்பிறை துவாதசி-இந்திரன்,
8.கார்த்திகை மாத வளர்பிறை சப்தமி+தேய்பிறை அஷ்டமி-சரஸ்வதி,
9.மார்கழி வளர்பிறை+தேய்பிறை சதுர்தசிகள்-லட்சுமி,
10.தைமாத வளர்பிறை த்ரிதியை-நந்திதேவர்,
11.மாசிமாத தேய்பிறை சதுர்த்தசி-தேவர்கள்,
12.பங்குனி மாத வளர்பிறை த்ரிதியை-குபேரன்
மகாசிவராத்திரி: மாசிமாத கிருஷ்ணபட்ச தேய்பிறை சதுர்த்தசி திதியே மகா சிவராத்திரி விரத தினம். இந்நாளில் இரவு 1130 முதல் 0100 மணிவரை உள்ள காலம் லிங்கோத்பவ காலம். இந்த நேரத்தில்தான் சிவன் ஜோதிலிங்கமாக ஆகாயத்திற்கும் பூமிக்குமாய் தோன்றி முழுமுதற் கடவுள் என உணர்த்தினார். பன்னிருகோடி லிங்க தரிசனம் தரும் பலனை சிவராத்திரியன்று ஒரு லிங்கத்தை பூஜிப்பதால் பெறலாம். நான்கு யுகத்திலும் உலகம் தோன்றிய தினம். ஜோதிர்லிங்கத்தல வழிபாடு கோடி புண்ணியம்.
முக்கோடி சிவராத்திரி- மாசிமாத தேய்பிறை சதுர்தசி செவ்வாய் அல்லது ஞாயிறு அன்று அமைந்தால் அது முக்கோடி சிவராத்திரி என்பர்.
உத்தம சிவராத்திரி-மார்கழி மாத சதுர்தசி திருவாதிரை நாளில் அமைந்தால் அது உத்தம சதுர்தசி சிவராத்திரி ஆகும்.
யோக சிவராத்திரி- அமாவாசையும், சோமவாரமும் கூடிய தினம்- திங்கட்கிழமையில் தேய்பிறை சதுர்தசி அமைந்தால் அல்லது அன்று 60 நாழிகை இருந்தால் அது யோக சிவராத்திரி எனப்படும். திங்கள் சூரிய அஸ்தமனம் முதல் செவ்வாய் காலை சூரிய உதயம் வரை வரும் கிருஷ்ணபட்ச தேய்பிறை சதுர்த்தசி-3கோடி விரதபலன்.
சிவராத்திரி நாளில் சிவன் நாமங்கள்
1.பவாயநம, 2.ருத்ராயநம, 3.உக்ராயநம, 4.பசுபதயேநம, 5.பீமாயநம, 6.மகாதேவாயநம, 7.சர்வாயநம, 8.சிவாயநம, 9.ஈசனாயநம, 10.சம்புவேநம, 11.சதாசிவாயநம.
சிவராத்திரியன்று சிறப்பு
1வதுஜாமம்- படைக்கும் தொழில் புரியும் பிரம்மன் செய்வதாக ஐதீகம். அம்பிகை சிவபூஜை செய்த அடையாளமாக பஞ்சகவ்ய அபிஷேகம், சந்தனம், வில்வம், தாமரைப்பூ அலங்காரம், அர்ச்சனை, பச்சைப்பயறு பொங்கல்/பால்சாதம் நிவேதனம், மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தல். நெய் தீபம், ரிக்வேத பாராயாணம். சந்தன தூபம். பலன் – முன்வினை மற்ரும் பிறவிப் பிணிகளில் இருந்து விடுபட்டு நற்பலன்கள் அடையலாம்.
2வதுஜாமம்-காக்கும் தெய்வம் விஷ்ணு செய்வதாக ஐதீகம். முருகன் வழிபட்ட காலம்-சர்க்கரை, பால், தயிர், நெய்கலந்த ரஸபஞ்சாமிர்த அபிஷேகம், பச்சைக்கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்து சார்த்துதல், துளசி அலங்காரம். தாமரைப்பூ அர்ச்சனை, நிவேதனமாக பாயாசம், வெண்பட்டு ஆடை அணிவித்தல். நல்லெண்ணெய் தீபம். யஜூர்வேத பாராயணம். குங்கிலிய தூபம். பலன்–தனதான்ய சம்பத்துக்கள் சேர்ந்து லட்சுமி கடாட்சம் நிலவும். அன்ன பஞ்சம் ஏற்படாது.
3வதுஜாமம்- அம்பிகை இறைவனை பூஜிப்பதாக ஐதீகம். கணபதி பூஜித்த காலம்- தேன் அபிஷேகம், பச்சைக் கற்பூரம் சார்த்துதல், மல்லிகைப்பூ அலங்காரம், வில்வ/அறுகு அர்ச்சனை, எள் சாதம் நிவேதனம், சிவப்பு வஸ்திரம். இலுப்ப எண்ணெய் தீபம். சாமவேத பாராயணம். சாம்பிராணி தூபம். இது லிங்கோத்பவகாலம் எனப்படும் சிறப்பு பெற்றது. இந்த காலத்தில்தான் சிவபெருமானின் திருமுடி, திருவடி காணப் பிரம்மனும் விஷ்ணுவும் முயற்சித்தது. பலன்– எந்தவித தீய சக்தியும் அண்டாமல் இருப்பதோடு சிவசக்தி அருள் கடாட்சம் கிட்டும்.
4வதுஜாமம்- முப்பத்தி முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூத கணங்களும், மனிதர்களும் மற்றுமுள்ள அனைத்து ஜீவராசிகளும் பூஜிப்பதாக ஐதீகம். மகாவிஷ்னு சிவபூஜை காலம். கருப்பஞ்சாறு அபிஷேகம், நந்தியாவட்டை மலர், அல்லி, நீலோற்பல மலர் அலங்காரம், அர்ச்சனை, நிவேதனமாக சுத்தமான அன்னம், தீப ஆராதனை அதர்வணவேத பாராயாணம். அகில்புகை தூபம். பலன் - மிகச் சிறந்த பலன்களையும் அருளையும் தரவல்லது.
நாள் முழுவதும் உண்ணாமலிருந்து வில்வ இலைகொண்டு அர்ச்சனை செய்து சிவ தோத்திரங்களை சொல்வது என்பது தான தர்மங்கள் செய்வது, யாத்திரை செல்வது, நோன்புகள் மேற்கொள்வது, விரதங்கள் இருப்பது ஆகியவற்றால் ஏற்படும் நற்பலன்கள், புண்ணியங்களை விடவும் மேலான புண்ணியங்களும் நற்பலன்களும் கிட்டும் என்கின்றது வேதங்கள்.
1. ஒவ்வொரு கல்பத்திலும் பிரளயத்தின்போது உயிர்கள் அனைத்தையும் தன் வயப்படுத்திக் (ஒடுங்குதல்) கொள்ளும் சிவன் யோக சமாதியில் ஆழ்ந்துவிட அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு சக்தி தியானம் மற்றும் பூஜை செய்து வழிபட தன்னுள் ஒடுங்கியிருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்த வேளை-சிவராத்திரி.
2. பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை உண்டு தியாகராஜராக தோன்றிய காலம்-சிவராத்திரி.
3. பார்வதி கண்ணை மூடியதால் ஒளி இழந்த சூரியன், சந்திரன், அக்னி மூவரும் ஒளி பெற்ற இரவு-சிவராத்திரி.
4. வில்வ இலைகளை லிங்கத்தின் மேல் உதிர்த்ததால் குரங்கு-முசுகுந்த சக்ரவர்த்தியாக பிறக்க அருள் பாலித்த இரவு-சிவராத்திரி.
5. ஜோதிவடிவாக லிங்கோத்பவமூர்த்தியாக ஈசன் தோன்றியநாள்.
6. பரமனின் பாதி இடத்தை பார்வதி பிடித்தநாள்.
7. உமா மகேசனிடம் ஆகம உபதேசம் பெற்றநாள்.
8. வேடன் தனது கண்ணை லிங்கத்திற்கு அப்பி கண்ணப்பநாயனார் ஆனநாள்.
9. பகீரதனால் கங்கை பூமிக்கு வந்தநாள்.
10. மார்க்கண்டேயனுக்காக ஈசன் எமனை உதைத்தது மார்கண்டேயன் என்றும் 16 என வரம் பெற்றநாள்.
11. கிருஷ்னர் நரகாசுரனை வதம் செய்த நாள்.
12. கிரகங்கள் இயங்கத் தொடங்கிய நாள். குருதீட்சை பெற்றிட சிறந்த நாள்.
13. அர்ஜுனன் தவம் செய்து பாசுபதம் பெற்ற நாள்.
சிவராத்திரியன்று சிறப்பு தரிசன தலங்கள்
1.ஓமாம்புலியூர், 2.காஞ்சிபுரம், 3.காளஹஸ்தி, 4.கோகர்ணம், 5.திருக்கடவூர், 6.திருக்கழுக்குன்றம், 7.திருவண்ணாமலை, 8.திருவைகாவூர், 9.ஸ்ரீசைலம், 10.தேவிகாபுரம்
மகாசிவராத்திரி விரதம்
விரதங்களில் உயர்ந்தது மகாசிவராத்திரி விரதம். விரதம் இருப்போர் சிவராத்திரிக்கு முதல் ஒருபொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசம் இருந்து காலை ஸ்நானம் செய்து, சிவசிந்தனையுடன் கண் விழித்திருந்து இரவு நான்கு கால வழிபாடும் செய்தல் வேண்டும். சிவபுராணம் படித்தல், கேட்டல், சொல்லுதல், துதிகளைச் சொல்லுதல், பஞ்சாட்சரம் ஓதுதல், எழுதுதல் சிறப்பு. அடுத்த நாள் காலை நீராடி தரிசனம் செய்து அடியவர்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்திடல் வேண்டும்.
&&&&&
More...
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன! முயலகன் யார்!
Written by குருஸ்ரீ பகோராஓம்நமசிவய!
மருப்பையொரு கைக்கொண்டு நாரையூர் மன்னும்
பொருப்பையடி போற்றத் துணிந்தால் - நெருப்பை
அருந்த எண்ணுகின்ற எறும்பன்றே அவரை
வருத்த எண்ணுகின்ற மலம்!
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன! முயலகன் யார்!
வேத ஞானமிக்க முனிவர்கள் தாருகா வனத்தில் வாழ்ந்திருந்தனர். நால்வகை வேதம் சாஸ்திரம் எல்லாம் கற்றதனால் கர்வம் மிகக் கொண்டிருந்தனர். கர்ம மார்க்கமே சிறந்தது. அவரவர் செய்த கர்மங்களே பலன்களை அளிப்பதால் உயிர்கள் தாங்களாகவே கர்மபலன்களை அனுபவிப்பதாலும் ஈஸ்வரன் என்ற ஒருவர் தேவையில்லை என்று கர்வம் கொண்டனர்.
அந்தக் கர்வத்தினால் தங்களால் எல்லாம் செய்ய முடியும் தங்களால் செய்ய முடியாததையா சிவன் செய்யப் போகின்றார் என்றிருந்தனர். அவர்களின் கர்வத்தை ஒடுக்க பெருமான் பிட்சாடனார் கோலத்தில் விஷ்ணுவை மோகினி வடிவில் கூட்டிக் கொண்டு தாருகாவனம் வந்தார். பெண்கள் பிட்சாட்னர் அழகில் மயங்கி அவர் பின் செல்ல பல முனிவர்கள் மோகினியின் அழகில் மயங்கினர்.. இதனால் யாகங்கள் பாதிக்க மற்ற முனிவர்கள் இந்நிலையை சரிசெய்ய அபிசார வேள்வி நடத்தினர். அதிலிருந்து புலி ஒன்று தோன்ற அதை பிட்சாடனர் மேல் ஏவினர். பெருமான் அந்தப் புலியைக் கொன்று அதன் தோலை இடையில் உடுத்திக் கொண்டார். அடுத்து வேள்வியிலிருந்து மான், நெருப்பு என்று அனுப்ப அவற்றின் வீரியத்தைக் குறைத்து அவைகளைக் தன் கைகளில் தாங்கிக் கொண்டார். மீண்டும் யாகத்தில் தோன்றிய யானையை ஏவ அதன் தோலை உரித்து மேலாடையாகப் போர்த்திக் கொள்ள இதைக் கண்ட முனிவர்கள் தங்களின் முழு ஞானத்தையும் பிரயோகித்து வேள்வியிலிருந்து அரக்கன் முயலகனை உருவாக்கி பிட்சாடனர்மேல் ஏவினர். அவர் அவனை தன் காலடியில் போட்டு அமுக்கிவிட, செய்வது அறியாது விழித்த முனிவர்கள் வந்திருப்பது தங்களை மீறிய சக்தியான ஈசன் என்றுணர்ந்து மன்னிக்க வேண்டினர். அங்கு வந்த நந்தி மத்தளம் வாசிக்க மோகினியான விஷ்ணு புல்லாங்குழல் வாசிக்க கடவுள் இல்லை கர்மாவே பெரியது என்ற எண்ணம் கொண்ட தாருகாவனத்து முனிவர்களின் அறியாமையை நீக்க பேரருள் கொண்ட சிவபெருமான் நடராஜ மூர்த்தியாக ஆனந்த தாண்டவம் ஆடினார்.இதைக் கண்ணுற்ற தாருகாவனத்து முனிவர்கள் மற்றும் அனைவரும் புண்ணியம் அடைந்தனர்.
ஒருநாள் இந்த நிகழ்வை நினைத்து பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த பரந்தாமன் தன்னை மறந்து ஆனந்தித்து இருப்பதைகண்ட ஆதிசேஷடன் அது பற்றி விசாரிக்க தாருகாவனத்தில் நடந்த நிகழ்வுகளையும் அங்கு சிவபெருமானின் அற்புத நடனம் பற்றியும் திருமால் சொல்லக்கேட்ட ஆதிசேஷனுக்கு அந்த அற்புத நடனத்தைக் காண ஆவல் ஏற்பட்டது. பாதி உடல் மனிதனாகவும் மீதி பாம்பாகவும் தோன்றி பூவுலகில் தவம் புரியத்தொடங்கினார். அந்த தவத்தின் பயனாக அவர்முன் தோன்றிய ஈசன் பதஞ்சலி உன்னைப் போன்றே வியாக்ரபாதனும் என் ஆடலைக் காண ஆவல் கொண்டுள்ளான். நீங்கள் இருவரும் தில்லைவனம் என்ற சிதம்பரத்திற்கு வாருங்கள் அங்கே உங்கள் ஆவல் நிறைவேறும் என்றார்.
மார்கழிமாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று வானில் முழு நிலவு பிரகாசிக்கும் நான்னாளில் மீண்டும் அந்த ஆனந்த நடனத்தை சிவபெருமான் தில்லையில் ஆடிக்காட்டினார். அந்த ஆனந்த நடனத்தினை உலக மக்கள் அனைவரும் கண்டு களிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அத்திருவுருவை முனிவர்கள் சிலையாக வடித்தெடுத்தனர். உடுக்கை ஏந்திய திருக்கை-படைத்தல், அபய திருக்கை-காத்தல், தி ஏந்திய திருக்கை அழித்தல், ஊன்றிய திருவடி –மறைத்தல் தூக்கிய திருவடி-அருளல் என தில்லை நடராஜப் பெருமானின் நடனம் உலகத்தின் இயக்கத்தை குறிக்கும்.
திருவாதிரை நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்பது மருவியதால் ஆருத்ரா எனப்பெயர்.ஆருத்ரா எனப்பெயர். மேலும் திருவாதிரை நட்சத்திரம் ருத்ர அம்சம். திருவாதிரை நட்சத்திரத்தன்று சிவபெருமானின் நடன தரிசனக் காட்சி கிடைத்ததால் அது ஆருத்ரா தரிசனம் என்றானது. விரத நோம்பிருந்து வழிபட்டு ஆருத்ரா தரிசனம் கிடைக்கப் பெற்றவர்கள் சகலவிதமான மங்களங்கள் பெற்று பிறவிப் பிணி நீங்கப் பெறுவர் என்கிறது புராணங்கள்.
தீயகுணமுடைய முயலகன் அறியாமை என்ற அஞ்ஞானத்தைக் குறிக்கும். தட்சிணாமூர்த்தி மற்றும் நடராஜப்பெருமானின் திருவுருவச் சிலைகளின் கீழே காலில் மிதிபட்டவாறு இருக்கும் அசுரன் முயலகன் என்பது அனைவரும் அறிந்ததே. முயலகன்- அபஸ்மாரம் (தீய குணமுடையோன்) எல்லோர்க்கும் எல்லா குணங்களும் உண்டு. அவற்றில் நல்லதை வெளிப்படுத்தி தீயதை அடக்க வேண்டுமென்பதே முயலகனை திருவடியில் இருத்திய தத்துவம்.
திருவாதிரைக்களி- சேந்தனார் பட்டினத்தாரிடம் தலைமைக் கணக்கராக பணிபுரிந்து வந்தார். பட்டினத்தார் துறவறம் பூண்டபோது தம்மிடமிருந்த எல்லாவற்றையும் சேந்தனாரிடம் அளித்தார். ஆனால் அவற்றையெல்லாம் அரசன் கவர பட்டினத்தாரின் ஆலோசனைப்படி சேந்தனார் சிதம்பரம் வந்து விறகு வெட்டி அதை விற்று அன்னம் செய்து அடியவர்க்கு அமுது செய்தார். ஒருநாள் நல்ல மழை. விறகு விறகவில்லை. வீட்டில் மீதியிருந்த மாவினைக் கொண்டு களியாகக் கிளறினார். சிவனுக்கு படைத்துவிட்டு அடியாருக்கு அளிக்க எதிர் பார்த்திருந்தார். யாரும் வரவில்லை. மனம் வருந்தியபோது சிவன் அடியாராக வந்து களி அமுதைப் பெற்றார். அன்று மார்கழி திருவாதிரை திருநாள். அன்று முதல் களி அமுது ‘திருவாதிரைக் களி எனச் சிறப்பு பெற்றது.
திரேதாயுகா என்றபெண் அம்பிகையின் தீவிர பக்தை. அவருக்குத் திருமணம் நடைபெற்றது. அந்த காலத்திய வழக்கப்படி திருமணம் நடந்த நான்காவது நாள்தான் சாந்தி முகூர்த்தம் நடைபெறும். கர்ம விதிப்படி மூன்றாம் நாள் அவளின் கணவன் இறந்து விட்டான். திரேதயுகா, அன்னையே உன்னை வழிபட்டு வந்ததன் பலனா இது என்று அழுது புலம்ப அம்பிகை அப்பெண்ணுக்கு உதவ பெருமானிடம் வேண்டுகோள் வைக்க, பெருமான் யமதர்மனை நோக்க அவள் கணவன் உயிர்பெற்றான். சிவபார்வதி தரிசனம் அவர்களுக்கு கிட்டிய நாள் மார்கழி திருவாதிரை நாள்.
திருவாதிரையன்று சேந்தனாருக்கும் திரேதாயுகா விற்கும் சிவபெருமான் தரிசனம் தந்த மார்கழி திருவாதிரை நட்சத்திர நாளே ஆருத்ரா தரிசனம் எனக் கொண்டாடப்படுகின்றது.
முயலகன் இறைவனை தாக்க தருகாவனத்து முனிவர்களால் அபிசார வேள்வி செய்து அனுப்பப்பட்டவனை அடக்கி அவன் முதுகின்மீது நின்று நடன மாடிய தலம்- தலையாலங்காடு.தி.த-210+அ-76. சிமிலி, நடனேஸ்வரர் நர்த்தனபுரீஸ்வர்(சு), ஆடவல்லநாதர்-உமாதேவி. திருமடந்தையம்மை. திருவாரூர்-18, குடவாசல்-8,
&&&&&
ஓம்நமசிவய!
மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே
கழியவரும் பொருளே, கண்ணே - செழிய
கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை
அலாலயனே, சூழாதென் அன்பு!
பஞ்சமுக தரிசனம்!
‘திகட சக்கரச் செம்முகம் ஐந்துள்ளான்’ என்பது காஞ்சியில் பிறந்த கச்சியப்ப சிவாசாரியரின் கந்தபுரணத்தின் காப்புச் செய்யுளின் முதல் அடியாகும். திகழ், தசக்கரம் என்ற சொற்களின் இனைப்பே திகடசக்கரம் என்றானது. அதாவது ஒளி பொருந்திய பத்துக் கரங்களுடன் செந்நிற முகங்கள் ஐந்தும் உள்ளவன் என்று சிவனைக் குறிப்பிடுகின்றார். அந்த முகங்களே பஞ்சமுகம்.
பஞ்சமுகம்- ஸ்ரீ ருத்ரமஹன்யாச மந்திரத்தில் சத்புருஷம், அகோரம், சத்யோஜாதம், வாமதேவம், ஈசானம் என்ற வேத மந்திரங்களில் ஈசனின் பஞ்ச முகங்களே குறிபிடப்பட்டுள்ளதால் அவற்றை தரிச்சிப்பதும் பெரும் பலனைத் தரும். அன்றில் இந்த முகங்களுக்குரிய சிவனின் உருவங்களை தரிசித்து வழிபடுவதும் சிறப்பாகும்.
சிவ அடியவர் ஒவ்வொருவருக்கும் சிவனின் பஞ்சமூர்த்த தரிசனம் கிடைக்க வேண்டும். பஞ்சமூர்த்தம் என்பது சத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், அகோரரூபம், ஈசானம் ஆகும்.
பிரம்மன் ஒவ்வொரு கற்ப யுகத்திலும் சிவனை நினைந்து தவமிருந்து ஒவ்வொரு முகமாக தரிசனம் கண்டு இன்புற்றார்.
சுவேதலோகித கற்பத்தில் பிரம்மன் தவமிருக்க, சிவன் காலை இளம் சூரியனைப் போன்ற பேரேழில் பொங்கும் பச்சிளம் பாலகனாய் காட்சி தந்து அருளினார். இந்த தோற்றப் பொலிவே சத்யோஜாதம் எனப்படும். சத்யோஜாதம் தோற்றத்திற்குகந்த முகங்கள் ஐந்து. அவை இலிங்கோத்பவர், சுகாசனர்-நல்லிருக்கை நாதர், ஹரிஹரர்- கேசவார்த்தமூர்த்தி- மாலொருபாகர், அர்த்தநாரீஸ்வரர்- உமைபங்கன், உமாமகேசர்- உமேசர், சத்யோஜாதம்- பிருதிவித் தத்துவம் அதிலிருந்து தோன்றிய நந்தினி என்ற பெயருள்ள கபிலவர்ணமுள்ள கோவின் கோமயத்தால் தயாராகும் பஸ்மம்- விபூதி
ரத கற்பத்தில் பிரம்மன் தவமிருக்க, சிவன் மானும் மழுவுடன் காட்சி அருள். இந்த வாமதேவ திருத் தோற்றத்தை தரிசித்து வழிபடுவோர் பிறப்பு இறப்பு இன்றி இறைவனின் பாத கமலங்களை அடையும் பேரின்ப வாழ்வுதனை அடைவர். வாமதேவ தோற்றத்திற்குகந்த முகங்கள் ஐந்து. அவை கங்காளர், சக்ரதானர், கஜாந்திகர்-கஜாந்திக மூர்த்தி, சண்டேசானுக்ரஹர், ஏகபாதர்- ஏகபாத மூர்த்தி, வாமதேவம்- நீர்த் தத்துவம் அதிலிருந்து தோன்றிய பத்ரை என்ற பெயருள்ள கருப்பு நிறமுள்ள பசுவின் கோமயத்தால் தயாராகும் பஸ்மம்- பஸிதம்
பீதகற்பத்தில் ஈசனைப் பணிந்து தியானம் செய்ய, சிவன் கொன்றைப்பூ அணிந்த திருச்சடையில் இளஞ்சந்திரனை தரித்தவராகக் காட்சி- இதுவே தத்புருஷ தோற்றம் ஆகும். இந்த தோற்றத்தில் காயத்திரி தேவியை சிருஷ்டித்து நான்முகனுக்கு அளித்தார். இந்த தத்புருஷ தோற்றத்தையோ, காயத்திரி தேவியையோ சிவமந்திரம் சொல்லி வழிபட்டால் பிறவிக் கடலை கடந்து சிவபதவி கைகூடும் என்றார். தத்புருஷ தோற்றத்திற்குகந்த முகங்கள் ஐந்து. அவை பிட்சாடனர்-பலிதிரி /பலிகொள் செல்வர், காமாந்தகர்-காமதகனமூர்த்தி, காலசம்ஹாரர்-காலனைக் காய்ந்த பொம்மான்-காலாரி, சலந்தராரி-சலந்திரவத மூர்த்தி, திரிபுராந்தகர்.தத்புருஷம்- வாயுத் தத்துவம் அதிலிருந்து தோன்றிய ஸுசீலா என்ற பெயருள்ள வெளுப்பு நிற பசுவின் கோமயத்தால் தயாராகும் பஸ்மம்- க்ஷாரம்
நீலகற்பத்தில் கடும் தவமிருந்து பிரம்மன், தீச்சுடரும், வாளும் ஏந்திய திருக்கரத்துடன் கருமை நிற மேனியுடன் காட்சி பெற்றார். இது அகோர தோற்றம். பஞ்சமாபாதங்கள் புரிந்தோரும் தங்கள் தவறை உணர்ந்து சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தை மீண்டும் மீண்டும் ஜபித்து வந்தால் அவர்களைப் பற்றிய தோஷம் விலகும். அகோர தோற்றத்திற்குகந்த முகங்கள் ஐந்து. அவை கஜசம்ஹாரர்-கஜயுக்தமூர்த்தி, வீரபத்திரர், தட்சினாமூர்த்தி-ஆலமர்செல்வர், நீலகண்டர்-நீலகண்ட மூர்த்தி, கிராதகர்-கிராத மூர்த்தி.அகோரம்- தேஜஸ் தத்துவம் அதிலிருந்து தோன்றிய ஸுரபி என்ற பெயருள்ள சிவப்பு நிற பசுவின் கோமயத்தால் தயாராகும் பஸ்மம்- பஸ்மா
விசுவரூப கற்பத்தில் தவமிருந்து கங்கையும் திங்களும் தாங்கிய திரிசடை, கோரப்பற்கள், நெற்றிக்கண்ணும் கொண்டு இருபக்கமும் இரு மாதர்களுடன் காட்சி தந்து அருள். இது ஈசான தோற்றம். சிந்தையில் இறைவனை வைத்து தவம் புரிந்து பிறவா வரம் அடையலாம். உச்சிமுக ஈசான தோற்றத்திற்குகந்த முகங்கள் ஐந்து. அவை சோமாஸ்கந்தர், நடராஜர், இடபாரூடர்-ரிஷபாரூடர்-விருஷபவாகனன், கல்யாணசுந்தரர்-மணவழகர், சந்திரசேகரர்-பிறை சூடிய பொம்மன்.ஈசானம்- ஆகாசத் தத்துவம் அதிலிருந்து தோன்றிய ஸுமனா என்ற பெயருள்ள பல நிற பசுவின் கோமயத்தால் தயாராகும் பஸ்மம்- ரக்ஷா
&&&&&
ஓம்நமசிவய!
களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க் குதவும் - அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்!
ஜோதிர்லிங்கங்கள்!
குணமும் குறியும் கடந்த பேரொளியாகிய இறைவனைக் குறியின்கண் வைத்து வழிபடும் பொருட்டு திகழ்ந்திருப்பது சிவலிங்கமாகும். சிவம் என்ற சொல்லுக்கு நன்மை, முக்தி, மங்களம், செம்மை, உயர்வு, களிப்பு, அருவுருவ நிலை எனப் பலப்பொருள் கூறலாம். செம்மையும், நன்மையும், மங்கலமும் உடையான் என்பதற்காகச் சிவனைச் சிவம் என அழைத்தனர். எண் குணத்தானாகிய சிவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன் ஆவான். நான்முகனும் திருமாலும் அடிமுடி காணாதவாறு அனைத்து அண்ட உலகங்களையும் அளந்து நின்ற அரும் பெரும் ஜோதிதான் லிங்கம்! சோதி வடிவினனாகச் பரஞ்சோதியாய் சிவன் தோன்றிக் காட்சி கொடுத்த தலங்களே ஜோதிர்லிங்கத் தலங்கள். அவை திரியம்பகம், குசுமேசுவரம், நாகேசுவரம், வைத்தியநாதம், பீம்சங்கரம், மகாகாளம், ஓங்காரேசுவரம், கேதாரம், விசுவேசம், சோமநாதம், ஸ்ரீசைலம், இராமேஸ்வரம் ஆகும்.
&&&&&
ஓம்நமசிவய!
ஏத்தி எனதுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல் போல்
செக்கர் திருமேனிச் செம்பொற் கழலைங்கை
முக்கட் கடாயானை முன்!
சகஸ்ரலிங்கம்!
உத்திரகோசமங்கை திருத்தலத்தில் தவம் புரிந்த ஆயிரம் முனிவர்களுக்கு காட்சியளித்து தன்னிடமிருந்த சிவ ஆகமங்களை தந்து தான் திரும்பி வரும் வரை பாதுகாக்கும்படி சொல்லி மறைந்தார் ஈசன். குழந்தை வடிவில் தன்னை தரிசிக்க விரும்பி தவமிருந்த மண்டோதரிக்கு அருள்புரிய இலங்கை சென்று காட்சி அருளியபோது வந்திருப்பது யார் என்பதை அறிந்த மண்டோதரி ஆனந்தப்பட்டு சிவ குழந்தையை எடுத்துக் கொஞ்ச அங்கு வந்த சிவநேசனான இராவணன் உண்மையறிந்து - குழந்தையை எடுக்க முற்படும்போது இறைவன் மேனியை இலங்கேஸ்வரன் தீண்டிய உடன் மறைந்து இங்குத் தீர்த்தக் குளத்தில் தீப்பிழம்பாக தோன்ற ஒரு முனிவர் நீங்கலாக 1000 முனிவர்கள் பரவசமடைந்து குளத்தில் குதிக்க, அந்த முனிவர் இறைவனின் ஆகமங்களைக் காப்பது தன் கடமை என அப்படியே அமர்திருந்தார். அவர்க்கு ரிஷிபாரூடராக காட்சி. அவரை பாண்டிய நாட்டில் மீண்டும் பிறந்து சைவமும் தமிழும் தழைத்தோங்க தொண்டு செய்ய அருள் - அவரே மாணிக்கவாசகர். குளத்தில் குதித்த முனிவர்கள் லிங்கங்களாய் மாற அவர்களின் நடுவே தானும் லிங்கமாய் வீற்று சகஸ்ரலிங்கமாய் காட்சி அருள்.
&&&&&
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.