ஓம்நமசிவய!
ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.
#*#*#*#*#
15.திருமண இணைப்பு!
12 வயதிற்குட்பட்ட பெண்களை கன்யகா என்பர். அதற்குமேல் பூப்பெய்திய பெண்ணை ரஜஸ்வலா என்பர். பூப்பெய்திய பெண்ணை தந்தையானவர் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்து கொடுக்க வேண்டும். பெண்ணுக்கு தன் விருப்பம்போல் சுதந்திரமாக கணவனைத் தெரிந்தெடுக்கும் உரிமை உண்டு.
இருபக்க பெற்றோரும் தேர்தெடுத்து, உற்றோர் ஆசிகூற தந்தை மகளை ஆபரணங்களால் அலங்கரித்து சீலமுள்ள வரனுக்குத் தாரை வார்த்துக் கொடுப்பது-பிரம்ம விவாஹம்
தந்தை மகளை ஆபரணங்களால் அலங்கரித்து யாகம் நடந்து கொண்டிருக்கும்போது ருத்விக்கு யாகதட்சனையாக கொடுப்பது-தைவம்
மணக்கப்போகிறவன் நேரில் வந்தோ அல்லது உறவினர் மூலம் பெண் கேட்கப்பட்டால், மணமகனை பூஜித்து நீங்களிருவரும் தர்மத்தை குறைவில்லாமல் அணுஷ்டிக்க ஆசீர்வதித்து தன் பெண்ணைக் கொடுப்பது –ப்ராஜாபத்யம்.
மணமகனிடமிருந்து ஒரு காளையையும், பசுக்களையும் மற்றப் பரிசுப் பொருட்களையும் வாங்கிக்கொண்டு தன் பெண்ணை முறைப்படி மணம் செய்து கொடுப்பது –ஆர்ஷம்.
மணமகன் மணப்பெண்ணுக்கும் அவளது முக்கிய உறவினர்களுக்கும் தன்னால் இயன்ற தனத்தை கொடுத்து அல்லது தந்தை பணம் பொருளுக்கு பெண்ணை விற்று விடுவது- விவாஹம் செய்வது- ஆசுரம்.
மணப்பெண்ணும் மணமகனும் ஒருவரையொருவர் விரும்பி தாங்களே கணவனும் மனைவியுமாக வாழ்வது - மணம் புரிவது- காந்தர்வ விவாகம்
போட்டியில் வெற்றி பெற்று அல்லது பலவந்தப் படுத்தி பெண்ணை அவளது உறவினர்களிடமிருந்து கவர்ந்து சென்று அவள் விருப்பமின்றி மணம் புரிவது-ராக்ஷஸ விவாகம்.
பெண்ணை ஏமாற்றியோ, உறங்கும்போதோ, மயங்கி கிடக்கும்போதோ அவள் அறியாமல் திருட்டுத்தனமாக மனைவியாக்கிக் கொள்வது –பைசாசம்
தர்மம் நான்கு கிளைகளாகப் பரவி, கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் அறிஞர் பெருமக்கள் மதிக்கப்படும் உத்தமமான தேசத்திலிருந்து நல்ல குணவதியான பெண்ணை அடைய வேண்டும்.
திருமணம் நல்ல நாட்களில் நல்ல நேரத்தில் மங்கல வாத்தியம் முழங்க நடைபெற வேண்டும்.
திருமணம் என்றதும் உள்ளம் குதூகலிக்கும். எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடும்போது அதன் ருசிமட்டுமே தெரியும். பின்னர் வயிற்று வலி ஏற்படும்போதுதான் அதன் தன்மை புரியும். திருமண உற்சாகம் எதிர்கால சிந்தனைகளைத் தோற்று விக்காது. பொறுப்பற்ற நிலையில் நடந்த திருமணத்தின் எதிர்காலம் பொறுப்பைச் சுமக்கும் குடும்ப வாழ்க்கையாகும். கண்முன்னே தோன்றும் பெண்ணின் அழகு, சீர் வரிசைகள், நண்பர்களின் பரிகாசம், உறவினர்களின் மகிழ்ச்சி, மற்றவர்களின் வாழ்த்துக்கள் எல்லாம் கொண்ட திருமணகால சந்தோஷம் என்றும் தொடராது. குடும்ப வாழ்க்கையில் குழந்தைகள் பிறந்து அவர்களின் வளர்ச்சிக்காக நினைவு கொள்ளும்போதுதான் அப்போதைய நேரமும் சூழலும் தெரியவரும். அந்த நேரம் கர்மவினைகளின் நிர்ணயமாகும்.
வசிஷ்டர்- அருந்ததி, அகத்தியர்- லோபாமுத்ரை, யாக்ஞவல்யர்- மைத்ரேயி, கச்யபர்- அதிதி ஆகிய ரிஷி தம்பதியினரும், துஷ்யந்தன் –சகுந்தலை, நளன்- தமயந்தி, அஜன்-இந்துமதி போன்ற அரச தம்பதியினரும் தாம்பாத்திய இணைப்பின் செழிப்பில் மகிழ்ச்சி கொண்டவர்கள். அக்னி ஸ்வாஹாவை தன்னுடன் ஐக்கியப்படுத்தியும், பெருமாள் தன் மனைவி இலட்சுமிக்கு மார்பில் இடம் கொடுத்தும், சிவனோ தன்னில் பாதி கொடுத்தும் அர்த்தநாரீஸ்வராக புகழ் பெற்றார். தம்பதியரின் மன ஒற்றுமைக்கு அவர்களின் உடல் நெருக்கத்தை சிறப்பாக சொல்கின்றது புராணங்கள். அறம் ஆற்ற திருமணத்தில் ஒன்றாகும் தம்பதியினர் பிரிவு கொண்டால் அங்கு அறம் அல்லல் படுவதை அனுபவ வாயிலாக கண்டிருக்கின்றோம்.
திருமணத்தை அறம் என்ற நோக்கில் வரவேற்று ஏற்றுக்கொள்ளவேண்டும் திருமணம் ‘இல்லறமே நல்லறம்’ என்ற பொருள் கொண்டது. பொதுவாக அழகு, மற்றும் திறமையுடன் கூடிய அழகு கொண்ட ஆண் அல்லது பெண் ஆகியோரிடம் ஆணவம் தோன்றுவது இயல்பு. அந்த ஆணவம் மேலோங்கினால் அகங்காரமாகி திருமண இணைப்பைத் துண்டிக்கும். எனவே திருமண இணைப்பை பாதுகாக்க அறமும் அடக்கமும் இரு பாலரிடையே வேண்டும். பிறவி என ஒன்றிருந்தால் வரும் பிறவிகளில் இவரே என் கணவன் என்று ஓர் பெண்ணுக்கும், இவளே என் துணைவி என்று ஓர் ஆணுக்கும் தோன்றும் வகையில் இல்லறம் பரிமளிக்க வேண்டும். திருமண இணைப்பு மகிழ்வான வாழ்க்கைக்கு தேவையான ஒன்று என்பதால் அதன் பெருமைகளைப் பேணிக் காத்து அதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தினர் முன்னோர்.
பிரிக்க கூடாத ஒன்றைப் பிரிக்கும் துணிவுடன் தங்களது செயல்பாடுகள் இருக்கும் வண்ணம் ஒரு ஆணோ / பெண்ணோ தன் செயல்களில் செயலாக்கம் கொள்ளக்கூடாது. தொடர் வண்டியான ஆண் பெண் உறவு துண்டிக்கப்பட்டால் அந்த வாழ்க்கைக்கு தீமைகளே அதிகம். திருமணத்தில் ஆணும் பெண்னும் இணைவது சேர்ந்து வாழ்வதற்காக. வாழ்நாள் பூராவும் இணந்திருப்பதற்காக சேர்ந்தவர்கள் இடையில் பிரிவதென்றால் அது சரியன்று. அதற்கு ஆரம்பத்தில் சற்று யோசித்து இணையாமலே இருந்திருக்கலாம். இணைந்தபின் எக்காராணத்தை முன்னிட்டும் பிரிதல் கூடாது. பிரிதல் என்ற நினைவே தவறானது. பிரிவு ஏற்படும் எண்ணங்களைத் தவிர்த்து வாழ்க்கையை சீர்படுத்த பெரியோர்களின் ஆலோசனைகளை நாடவேண்டும்.
குறைகளை மறக்கும் மனோபாவம் வளர்க்க வேண்டும். எதையும் மன்னிக்கும் மனப்பக்குவம் வேண்டும். விட்டுக் கொடுக்கும் எண்ணங்களை வளர்த்துக் கொள்ளவேண்டும். இரு கூறுகளான ஆணும் பெண்ணும் இணைந்தால்தான் முழுமை என்பதை உணரவேண்டும். இணைவது இயற்கையின் தூண்டுதல் மட்டுமல்ல, இயற்கையோடு இணைந்து வாழப் பழகுவதே வாழ்க்கையின் தத்துவம் என்பதை புரிதல் வேண்டும். கணவனோடு இணைந்து வாழ்வது நமது நாட்டின் உயர்ந்த பண்பாட்டின் அடையாளம். வாழ்வில் ஏற்படும் துயரங்களை சந்திக்க இருமனங்களின் சங்கமத்தின் தோன்றும் மகிழ்வே உதவும். அந்த மகிழ்விற்கு மனங்களின் சங்கமத்திற்கு தாம்பத்திய இணைப்பு வலுவாக இருத்தல் அவசியம்.
திருமண இணைப்பு என்பது சிற்றின்பத்திற்காக மட்டுமல்ல அதற்கு மேலான அலாதியான வாழ்க்கைப் பாதையின் இன்ப உணர்வுகளுக்கு என்பதை ஆத்மாக்களே புரிந்து செயல் படுங்கள்.
ஆணின் குறையை மறைத்தும், ஏற்கனவே திருமணமான பெண் என்ற உண்மையை மறைத்தும் திருமணம் செய்வித்தல் கூடாது.
அக்னியை வலம் வந்து அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல் ஏன்!
மணமகளின் வலது காலை அம்மி மீது வைத்து மணமகன் மெட்டி அணிவிப்பார். இல்லற வாழ்வின் இருகண்களில் ஒன்றான கற்பில் நான் இந்தக் கல்லைப் போல் உறுதியாக இருப்பேன் என்று மணமகளும், மற்றதான ஒழுக்கத்தில் என் மனம் காற்றில் ஆடும் இலைபோலில்லாமல் இந்தக் கல் போன்று நிலையாக இருக்கும் என மணமகனும் உறுதி கூறுவது ஆகும். இதுவே அம்மி மிதித்தல் நிகழ்வு.
சப்த ரிஷி மண்டலத்தில் இருக்கும் வசிஷ்டரின் பத்தினி அருந்ததி. அவரை விட்டுப் பிரியாமல் வானத்தில் கூட அவருடன் இருக்கும் பேறு பெற்றவள் அருந்ததி. அவளைப் போன்றே கற்பிலும், பெருமையிலும் சிறந்து விளங்க வேண்டும், கணவனை ஒருநாளும் பிரியக்கூடாது என்பதை உணர்த்தவே அருந்ததி பார்த்தல் நிகழ்வு.
மேலும் வாழ்க்கையில் 1. உணவுக்கு எந்த விதமான குறைவும் வராமல் இருக்கவும், 2. உடல் ஆரோக்கியமும் வலிமையும் கிடைக்கவும், 3. விரத காலங்களில் மன உறுதியும் கட்டுப்பாட்டையும் அருளவும், 4. சுகமும், மன அமைதியும் இல்வாழ்வில் நிறைந்திருக்கவும், 5. இல்லத்தில் பசுக்கூட்டமும், தானியங்களும் மிகுந்திருக்கவும், 6. தங்களது இல்லம் பல நல்ல உயிர்களுக்கு புகலிடமாக விளங்கி இல்லற தர்மத்தை கடைபிடித்து விருந்தோம்பி வாழவும், 7.இதுவரை இணைந்து நடந்த நாம் இனி இனிய நண்பர்கள், நம் வாழ்வில் நமக்கு ஏற்படும் இன்ப துன்பங்களை இணைந்து அனுபவித்து எந்த கணத்திலும் நாம் பிரியாமல் இருக்கவும் இறைவனை பிரார்த்தித்து வேண்டுதலே அக்னியை வலம் வருதல் நிகழ்வு.
#*#*#*#*#