ஓம்நமசிவய!
தேவர் தொழுங் கருணைச் செல்வனே சிறந்தொளிரும்
மங்கள சொரூபனே ஓவறு சித்திகளனைத்தும்
உதவுவோய் ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்
மேவியொளிர் சரணே மததாரை விரவியதிண் கபோலனே
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!
#####
பிரத்தியாகாரம்!
578. வெளியே செல்லும் இயல்புடைய மனத்தை உள்ளே பொருத்தும்படி செய்வதால் சிறிது சிரிதாய் இருள் நீங்கி ஒளி காணலாம். பழைய மறைபொருளான பரம்பொருளை உடலில் உள்ளே கண்டு மகிழ்ந்து இருக்கலாம்.
579. கொப்பூழுக்கு கீழ் 12 அங்குலத்தில் உள்ள குண்டலினியை மேலெழுப்பும் பிரசாதமாகிய மந்திரத்தை யாரும் அறியவில்லை. அதை அறிந்தபின் சிவன் நாதமயமாய் தலையில் விளங்குவான்.
580. மூலாதரத்திற்கு இரண்டுவிரல் மேலேயும் பார்வைவுடைய குறிக்கு இரண்டு விரல் கீழேயுமுள்ள இடத்தில் வட்டமாய் இருக்கும் குண்டலியினுள் எழும் சுடர் உடலில் கொப்பூழ் தாமரைக்கு கீழ் நான்கு விரல் அளவில் உள்ளது.
581. நாசிக்கு கீழ் பன்னிரண்டு அங்குல அளவில் உள்ள இதயத்தில் மனதை இழுத்து வைத்து செஞ்சுடரை நினைத்தால் அஷ்ட பெருஞ்சித்திகளும் அரச யோகமும் வந்துசேரும். இந்த தியானம் உடலுக்கு எப்போதும் தீமை செய்யாது.
582. மின்னல் பின்னி செல்வதுபோல் ஒளி தோன்றினால் குற்றமில்லா சிறப்பான ஆனந்தம் உண்டாகும். நேர்மையான கழுத்துப் பகுதியில் நிலவொளி தோன்றினால் பிரத்தியாகாரம் செய்பவர் உடலில் ஆனந்த பரவசம் உண்டாகும்.
583. மூலாதாரத்தை –குதத்தை மேல் எழும்படி அடைத்திருத்தலான ஆகுஞ்சன்ம் செய்யும் புருவ நடுவிலுள்ள நடுநாடித் துளையில் மனதை பதித்து வைத்து வேல் போன்ற கண்ணை வெளியில் விழித்திருப்பதே காலத்தை வெல்கின்ற வழியாகும்.
584. மலம் கழிக்கும் வாசலான குதத்திற்குமேலே இரண்டு விரல் அளவும், கருவுண்டாகும் வாயிலான கோசத்திற்கு இரண்டு விரல் அளவு கீழ் உள்ள இடத்தில் உருவாகும் குண்டலினியை நினைப்பவர்க்கு மகேசுவரன் பேரொளி வடிவாகக் கலந்து தோன்றுவான்.
585. சுழுமுனையில் மலக்காரியமான இருளால் ஏற்படும் அவத்தையும் புருவத்தின் நடுவில் விளங்கும் ஜோதியினின்று பிரிந்துள்ள நிலை மாறுதலை ஒழித்து உணர்வு மயமாய் விளங்கும் என்று எண்ணி உருகி மனதை ஒருமைப் படுத்தினால் அதுவே பெருமையுடைய பிரத்தியாகாரம்.
586. வெளியே போன வாயுவை மீளவும் புகமுடியாதபடி திறமையாக உள்ளொயில் பொருத்தி நிற்பின் உள்ளம் வலிமை அடையும். அப்போது இறைவனும் அவ்வொளியிலே புறப்பட்டு போகாதவனாய் நிலைபெற்று திகழ்வான்.
587. பிரத்தியாகாரத்தில் உலகம் முழுவதுமே இருந்த நிலையில் அறியப்படும். வெறுக்கத்தக்க அறியாமையான இருளை நீக்கி வேறுபாட்டைச் செய்யும் இறைவனை நாடுங்கள். சிவானை விரும்பும் சிந்தையில் உறுதியாக இருந்தால் சிவஞானம் பெற்ற தேவர் ஆகலாம்.
#####