அகப்பேய் சட்டமுனி சித்தர்
திருவள்ளுவர் பரம்பரையில் தோன்றியவர். இயற்பெயர் நாயனார். நெசவுத்தொழில் செய்து வந்தார். நிறையப் பொருள் ஈட்டமுடிந்தாலும் அந்த ஆசை குறைந்து அருள் பெற விரும்பினார். தனக்கு சரியான குருவைத்தேடினார். காட்டில் ஒருநாள் ஒரு சோதி மரத்தைக் கண்டார். அங்கிருந்த பொந்தில் புகுந்து கொண்டு வியாசரை நினைத்து தவம் இருந்தார். வியாசர் நேரில் தோன்றி தவப்பயனையும் அரிய மந்த்ர உபதேசங்களையும் அருளினார். அன்று முதல் அகப்பேய் சித்தர் எனப்பட்டார்.
மனிதர்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றி வாழும் முறை, தீய எண்ணங்கள் ஆகியன நீக்க ‘அகப்பேய்ச் சித்தர் பாடல்கள் 90’ மற்றும் அகப்பேய் பூரண ஞானம் என்ற நூல்களை எழுதினார்.
“அங்கும் இங்கும் ஓடும் மன அலையை மட்டுப்படுத்தினால், நஞ்சுண்ணவும் வேண்டாம், நாதியற்றுத்திரியவும் வேண்டாம். அந்த இறைவன் உன்முன் தோன்றுவான்” என்பது இவரின் கருத்து.
அகப்பேய்சித்தர் தியானப்பூசைக்கு
இலை உடையுடன் கலை உருவாய் காட்சிதரும் காரியசித்தி சுவாமியே
மாறாத சித்தியை மரப்பொந்தினில் பெற்ற மங்காச் செல்வரே
அசைகின்ற புத்தியை இசைகின்ற சித்தியால்
இனிதுகாப்பாய் அகப்பேய் சித்தரே.
தேக சுத்தியுடன், அதற்கென்று உபயோகிக்ககூடிய விதத்தில் ஒரு பலகையை சுத்தமாக கழுவி அதில் அகப்பேய் சித்தர் திரு உருவபடத்தை வைத்து குத்து விளக்கு தீபமேற்றி கலசம் அல்லது சொம்பில் ஊற்று அல்லது ஆற்று நீர் நிரப்பிவைத்து மலர்களாலும் வில்வம், துளசி, கதிர்பச்சை, விபூதி பச்சை ஆகிய பச்சிலைகளாலும் கீழ்கண்ட போற்றிச் சொல்லி தீப ஆராதனைக் காட்டி வழிபடவும்.
உயிர்களைக் காப்பவரே போற்றி
உலக ரட்கரே போற்றி
கஜபூஜை செய்பவரே போற்றி
சங்கீதப்பிரியரே போற்றி
சந்தான தோஷத்தைப் போக்குபவரே போற்றி
சாந்தமானவரே போற்றி
சூரிய சந்திர பிரகாசமுடையவரே போற்றி
பித்ருப்ரியரே போற்றி
பேய் பிசாசுகளை விரட்டுபவரே போற்றி
வன சஞ்சாரியே போற்றி
ஹஸ்த தரிசனம் செய்தவரே போற்றி
ஸ்ரீ சக்ர சுவாமியே போற்றி போற்றி
நிவேதனமாக பழங்கள், பால், வடிகட்டிய இளநீர் இவற்றுடன் மஞ்சள் வஸ்திரம் வைத்து வியாழக்கிழமை வழிபடின் சிறப்பு,
தியானபூசைப்பலன்கள்
வியாழன் கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஆகையால் குருபகவானல் ஏற்படக்கூடிய தோஷங்கள் அகலும். பணப்பிரச்சனை, புத்திரப் பாக்கிய கோளாறு, அரசாங்க பிரச்சனை ஆகியவை நீங்கும். வியாபாரநஷ்டம் விலகி லட்சுமி கடாட்சம் பெருகும். குடல் சம்பந்தமான நோய்கள் நீங்கும். கொடுக்கல் வாங்கல் வழக்குகள் தீரும். வறுமை அகல வேலை வாய்ப்பு கிட்டும்.-குருஸ்ரீ பகோரா.
“ஓம் ஸ்ரீ சக்ர அகப்பேய் சட்டமுனி சுவாமியே போற்றி”
******
சித்தர்கள் பதினெட்டுபேர் என வரையறுக்கப்பட்டவர்கள்
அகத்தியர் / அகப்பேய்சித்தர் / இடைக்காட்டுச்சித்தர் / உரோமரிஷி / கோரக்கர் / கருவூரார் / காகபுசண்டர் / குதம்பைச்சித்தர் / கொங்கணர் / சட்டைமுனி /சிவவாக்கியர் / சுந்தரானந்தர் / திருமூலர் / தேரையர் / பதஞ்சலிமுனிவர் / பாம்பாட்டிசித்தர் / புலிப்பாணி / போகர்